Tuesday, September 25, 2007

3. வேதாந்தி தலையைத் துண்டித்தால் 6 பைசா!

வேதாந்தி தலையைத் துண்டித்தால் 6 பைசா!



செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 25, 2007

சேலம்:

சேலத்தில் பல இடங்களில் நக்சல் இயக்கங்கள் சார்பில் இந்து மதத் தலைவர்களின் தலைக்கு விலை நிர்ணயித்து பகிரங்கமாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்பியும், விஎச்பியைச் சேர்ந்தவருமான ராம்விலாஸ் வேதாந்தி என்பவர், ராமரை பற்றி தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்காக, அவரின் நாக்கையும், தலையையும் துண்டித்து வந்தால் அதற்கு எடைக்கு எடை தங்கம் கொடுக்கப்படும் என்று 'பாத்வா' விடுத்தார்.

இதற்கு தமிழகத்தில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. இதன் விளைவாக சென்னை உட்பட பல இடங்களில் உள்ள பாஜக அலுவலகங்கள் தாக்கப்பட்டன. இந்நிலையில், வேதாந்தி நான் யாருக்கும் பாத்வா விடுக்கவில்லை. நான் சொல்லியதை பத்திரிக்கையாளர்கள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளனர் என்று அந்தர் பல்டி அடித்தார் சாமியார்.

அதே போல பாஜகவும் யாரோ ஒரு வேதாந்தி என்பவர்சொன்ன கருத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. ஏன் எங்களை தாக்குகிறீர்கள் என அழாத குறையாக அறிக்கை விடுத்தது.

இது தொடர்பாக சேலத்தில் விவசாயிகள் முன்னேற்ற முன்னணி, புதிய ஜனநாயக முன்னேற்ற முன்னணி போன்ற நக்சல் ஆதரவு இயக்கங்கள் சார்பில் இந்து மதத் தலைவர்களின் தலைகளுக்கு விலை அறிவித்து போஸ்டர் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

இதில், அயோத்தி ராமன் தலையை கொண்டு வந்தால் 2 பைசாவும், பாஜக மூத்தத் தலைவர் அத்வானி தலையை கொண்டு வந்தால் 5 பைசாவும், அசோக் சிங்காலின் தலைக்கு 6 பைசாவும் கொடுக்கப்படும். விஎச்பி தலைவர் பிரவீன் தொகாடியா தலைக்கு 6 பைசாவும், தமிழக முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்த ராம்விலாஸ் வேதாந்தி தலைக்கு 6 பைசா நிர்ணயம் செய்துள்ளனர்.

ஆனால் தமிழகத்தை சேர்ந்த இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன் தலையை கொண்டு வந்தால் எதுவும் தர மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். மொத்தம் 25 பைசா பரிசாக கொடுக்கப்படும் என்று அறிவித்து சேலத்தின் பல இடங்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது மிகவும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இந்த போஸ்டர் எங்கு அச்சடிக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. போலீசார் இந்த போஸ்டர் ஒட்டியவர்கள் குறித்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

நன்றிங்க

என்னத்தே சொல்ல!!!

No comments: