Saturday, February 25, 2006

அவலம்.

சுய மரியாதை முன்னேற்றத்தில் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு மனித பண்பாடுகள் உயர்ந்திருக்கிறது. அதனால் என்ன? சமூகத்தில் பழைய பண்பாட்டு மரபு - கலாச்சாரத்தை!? கட்டிக் காப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள் எனும்போது பெருமையாக!? இருக்கிறது. 20ம் நூற்றாண்டில் - 1996ல் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட சமூக அவலம் செய்தியாக கீழே. அவலம் நிறைவேற தீர்ப்பு வழங்கிய புண்ணியவான்களில் பள்ளி ஆசிரியரும் ஒருவர், அடடா... வாழ்க (கட்டாய) காலில் விழ வைக்கும் கலாச்சாரம்.

செய்தி

விஜயகுமாரி(32) என்ற நர்ஸ் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி ஆரம்ப சுகாதர நிலையத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கும் தீரன் சின்னமலைப் போக்குவரத்துப் பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றிய திருமலைச்சாமி என்பவருக்கும் சென்ற ஆண்டில் திருமணம் நடந்தது.

விஜயகுமாரி கொண்டு வந்த வரதட்சணையில் திருமலைச்சாமி திருப்தி அடையவில்லை. ''இன்னும் 25 ஆயிரம் ரூபாய் கொண்டு வா'' என்று கொடுமைப்படுத்தினார். அந்த அளவு பணம் கொண்டு வர இயலாததால், அந்தப் பெண்ணை எரித்து விடவும் முயற்சி செய்தனர். 16.01.96ல் இந்த சம்பவம் நடந்தது. அதிலிருந்து தப்பி தனது பிறந்த வீடு சென்று வாழ்ந்து வந்தார் விஜயகுமாரி.

இதைத் தொடர்ந்து உச்சக்கட்டக் கொடுமை அரங்கேறியது.

அந்தக் கணவன் சார்பாக பச்சப் பெருமாள் கிராமத்தில் பஞ்சாயத்து கூடியது. அங்கு அப்பாவிப் பெண் விஜயகுமாரி வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டாள்.

விஜயகுமாரிதான் குற்றவாளி என்று ஒரு சார்பாக பஞ்சாயத்து முடிவு செய்து ''கணவனுடன் நீ சேர்ந்து வாழ வேண்டும், இல்லையென்றால் நீ ரூபாய் 45ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும்'' என்று 'தீர்ப்பு' கூறப்பட்டது. ''என்னால் அவருடன் சேர்ந்து வாழ முடியாது. அபராதப் பணம் கட்டுவதற்கும் எனக்கு வசதியில்லை'' என்று கூறி அழுதிருக்கிறார் அந்தப்பெண்.

''நீ அபராதம் கட்ட வேண்டும், இல்லையென்றால் ஒவ்வொருவர் காலிலும் விழுந்து வணங்க வேண்டும். நீ ஒவ்வொரு முறை விழும் போதும் அபராதத்தில் ரூபாய் 5 குறைப்போம்'' என்று இரக்கமில்லாமல் கூறினார்கள் பஞ்சாயத்து 'நீதிபதிகள்'

அந்தப் பெண் தொடர்ந்து 4 மணி நேரம் காலில் விழுந்து எழுந்தார். அப்படியும் 4800 தடவை காலில் விழுந்து 24 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையைத்தான் அவரால் கழிக்க முடிந்தது. ரூபாய் 21ஆயிரம் பாக்கி இருந்ததாம். அந்தத் தொகையைக் கட்டாயப்படுத்திப் பிடுங்கிக் னொண்டார்களாம்!

போலீசுக்குப் போனால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதால் பிப்ரவரியில் நடந்த இந்த சம்பவத்தைப் பற்றி விஜயகுமாரி போலீசிலும் புகார் செய்யவில்லை. அதையும் மீறி உப்பிலியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தாராம். அவர்கள் வழக்குப் பதிவு செய்யாமல், பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி பஞ்சாயத்தாரிடம் கூறியிருக்கிறார்கள். அவர்கள் அப்படிச் செய்யாமல் நாட்களைக் கடத்திக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

இனி பொறுக்க முடியாது என்ற நிலையில் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் அனார்கலி பேகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். விஜயகுமாரியின் கணவன், நாத்தனார்கள், பஞ்சாயத்து தலைவர்களில் ஒருவரான பள்ளி ஆசிரியர் ரங்கராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் 8 பேர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Monday, February 20, 2006

கார்ட்டூன் விவகாரம்.

முகம்மது நபிகள் கார்ட்டூன் விவகாரம்: மன்னிப்பு கோரியது டென்மார்க் நாளிதழ்


துபை, பிப். 20: முகம்மது நபிகளின் கார்ட்டூனை வெளியிட்டதற்காக டென்மார்க்கைச் சேர்ந்த பத்திரிகையான 'ஜைலாண்ட்ஸ் - போஸ்டன்' ஞாயிற்றுக்கிழமை மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக, கொட்டை எழுத்துகளில் ஒருபக்க அளவில் மன்னிப்பு கோரும் விளம்பரத்தை அரபு நாடுகளில் வெளியாகும், 'அஷர்க் அல்-அவாசத்' என்னும் நாளிதழில் டென்மார்க் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

"அந்தப் படங்கள், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மனத்தைப் புண்படுத்திவிட்டது. நடந்துவிட்ட சம்பவங்களுக்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவ்வாறு நடக்க வேண்டும் என்பது எங்களது எண்ணமில்லை்"

"எந்த மதத்தையும் அவமானப்படுத்த வேண்டும் என்பதோ, அவமதிக்க வேண்டும் என்பதோ எங்களது நோக்கமல்ல. நாங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டோம். அதற்காக மன்னிப்பு கோருகிறோம். யாரையும் குறிவைத்து அந்தப் படங்களை வெளியிடவில்லை என்பதை வலியுறுத்தித் தெரிவித்துக்கொள்கிறோம். கருத்து வேறுபாட்டை அகற்றுவதற்கு இது உதவும் என நம்புகிறோம்; கடவுள் ஆசீர்வதிக்கட்டும்'' என்று அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் இறுதியில், ஜைலாண்ட்ஸ் - போஸ்டன் நாளிதழின் தலைமை ஆசிரியர் கார்ஸ்ட்டன் ஜஸ்ட் கையொப்பம் இட்டுள்ளார்.

ஜைலாண்ட்ஸ்-போஸ்டன்' இதழின் இணையப் பக்கத்திலும் அதே மன்னிப்புக் கடிதம் அரபி மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில் அந்த கார்ட்டூன்கள் முதன்முதலாக டென்மார்க் நாட்டு நாளிதழான 'ஜைலாண்ட்ஸ்-போஸ்டனி'ல் பிரசுரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியாகும் பல்வேறு இதழ்களும் அதை மறுபிரசுரம் செய்தன. அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அதற்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கினர். லிபியா, நைஜீரியா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் நடந்த போராட்டங்களில் இதுவரை 32 பேர் பலியாகி உள்ளனர். இந் நிலையில், அந்த கார்ட்டூன்களை வெளியிட்டதற்காக மன்னிப்பு கோரியுள்ளது, டென்மார்க் நாளிதழ்.

செய்தி - தினமணி

Thursday, February 09, 2006

முனைவர் மங்கள முருகேசன் பேட்டி!

(மக்கள் உரிமை வாரப் பத்திரிகையிலிருந்து)

'உண்மையைச் சொல்லியே தீர வேண்டும்'
முனைவர் மங்கள முருகேசன் பேட்டி


தமிழக அரசு 12ம் வகுப்பு வரலாற்றுப் பாடநூலில் 19வது பாடமான 'விடுதலைக்குப் பின் இந்தியா' என்ற பாடத்தில் சில முக்கியமான வரலாற்றுக் குறிப்புகளை திடீரென்று நீக்கியது. ''மகாத்மா காந்தி, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த நாதுராம் விநாயக் கோட்சே என்ற இந்து வெறியனால் கொலை செய்யப் பட்டார்'' என்பதே தமிழக பாடநூலிலிருந்து நீக்கிய முக்கியமானப் பகுதியாகும். இதைக் கடந்த வாரம் எழுதியிருந்தோம்.

பன்னிரெண்டாம் வகுப்பு வரலாற்றுப் பாடநூல் 7 வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்டு, நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்ட பிறகே வெளியிடப்பட்டது. அப்போதெல்லாம் கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்புலம் குறித்து ஏதும் சொல்லாமல், பாஜகவும் - சங்பரிவார இயக்கங்களும் மிரட்டல் விடுத்த பிறகு, கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்னணி பற்றியக் குறிப்புகளை அரசு நீக்கியது சரியல்ல. கல்வியில் காவியைப் புகுத்துவது ஆபத்தானது என்றும் எச்சரித்திருந்தார், இந்தப் பாடநூல் ஆசிரியர் குழுவின் தலைவர் டாக்டர் மங்கள முருகேசன்.

இவர் 100க்கும் மேற்பட்ட வரலாற்று நூல்களை எழுதியவர். இரண்டு பிஎச்.டி பட்டங்களைப் பெற்றவர். (காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றிருப்பது ஒரு சுவையானத் தகவல்.)

இவருக்கு சங்பரிவார சக்திகள் மிரட்டல் விடுத்துள்ளன. அவற்றையெல்லாம் துச்சமாய் மதிக்கும் இவர் கடவுள் மறுப்பாளர் அல்ல, பக்திமிக்க இந்துதான்.

கொல்கத்தாவில் சென்ற வாரம் நடைபெற்ற இந்திய வரலாற்றுக் குழுவின் (Indian History Congress) சிறப்புக் கூட்டத்தில் தமிழகக் கல்வித்துறை, கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்ன ணியை நீக்கியிருப்பதை எடுத்துரைத்து தமிழக அரசின் வரலாற்றுத் திரிபுக்கு எதிராகத் தீர்மானமும் நிறைவேற்றச் செய்துள்ளார்.

IHCன் சிறப்புக் கூட்டத்தை முடித்து சென்னை திரும்பியவுடன் முதலில் நம்மிடம் மனம் திறந்தார் டாக்டர் மங்கள முருகேசன். அவரோடு உரையாடியதிலிருந்து...

மக்கள் உரிமை: காந்தியடிகளைக் கொன்ற கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்புலம் குறித்து நீங்கள் வரலாற்றுப் பாடநூலில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?

மங்கள முருகேசன்: இந்தியா விடுதலை அடைந்த பிறகு நடைபெற்ற மிகமுக்கியமான வரலாற்றுச் சம்பவம் காந்தியடிகளின் படுகொலை. இதைப் பற்றிய உண்மைகளை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் 35 ஆண்டு காலம் கல்லூரியில் பேராசிரியராக மாணவர்களுக்குப் பயிற்றுவித்தவன். காந்தியடிகள் படுகொலைப் பற்றிய பாடத்தை நடத்தும் போது மாணவர்களுக்கு இயல்பாக ஏற்படும் சந்தேகம், காந்தியடிகள் கடவுள் பக்திமிகுந்த ஓர் ஆச்சாரமான இந்து. அவரைப் பிற மதத்தை சேர்ந்த யாராவது கொன்றிருந்தால் கூட அதை மதக் காழ்ப்புணர்ச்சி என்று கூறலாம்.

உலகத் தலைவர்களால் போற்றிப் புகழப்பட்ட, இந்து சமயத்திற்குப் பெருமையை சேர்த்த ஆச்சாரமான இந்துவான காந்தியடிகளை, ஏன் ஒரு இந்துவே படுகொலை செய்தார் என்பதுதான் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகம்.

மதவெறி முற்றினால் சொந்த மதத்துக்காரரையே படுகொலை செய்யுமளவுக்கு மூர்க்கத்தனம் பெருகும். மதவாதம் மிக ஆபத்தானது என்பதுதான் கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்னணியை வெளிப்படுத்துவதன் மூலம் நாங்கள் கூறவரும் கருத்து.

மக்கள் உரிமை: கோட்சே ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து விலகிய பிறகே காந்தியடிகளைக் கொன்றார். காந்தியடிகளைக் கொன்றபோது கோட்சே ஆர்எஸ்எஸ்காரர் அல்ல என்று அத்வானி போன்றவர்களும், பாஜக பரிவாரங்களும் இப்போது சாதிக்கிறார்களே?

மங்கள முருகேசன்: நாதுராம் கோட்சே ஆர்எஸ்எஸ்காரர் இல்லை என்று சொல்பவர்கள் (அத்வானி) கோழைகள் என்று கோட்சேவின் உடன்பிறந்த சகோதரரான கோபால் கோட்சே பதிலடி கொடுத்துள்ளார்.

''நானும், எனது சகோதரர் நாதுராம் கோட்சேவும் எங்கள் வீட்டில் வளர்ந்ததை விட, ஆர்எஸ்எஸ்ஸில் வளர்ந்ததே அதிகம். ஆர்எஸ்எஸ் தான் எங்களுடைய குடும்பம்'' என்று கூறியுள்ளார்.

காந்தியடிகள் கொலை வழக்கில் கோபால் கோட்சேவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. நாதுராம் கோட்சே தூக்கில் தொங்குவதற்கு முன்பு, ஆர்எஸ்எஸ்ஸின் தேசியப் பாடலை பாடிவிட்டுத்தான் தூக்கில் தொங்கினான். கோட்சேவின் சாம்பலை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அகண்ட பாரதம் அமைந்த பிறகுதான் கரைக்கப் போவதாக எடுத்து வைத்துள்ளார்கள்.

இந்தியா டுடே, ஃபிரண்ட் லைன் போன்ற ஏடுகள் காந்தியடிகளைப் படுகொலை செய்த கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்னணி குறித்து பலமுறை எழுதியுள்ளன.

நீங்கள் மிகமுக்கியமான ஒரு செய்தியை கவனிக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினர் முறை என்பதே கிடையாது. உறுப்பினர் கட்டணம், உறுப்பினர் அட்டை, சந்தா எதுவுமே ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு கிடையாது. இந்தியாவில் சட்டப்பூர்வமான எந்த இயக்கமும் இப்படி இயங்குவதில்லை.

ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் எத்தனைப் பேர் என்று அதன் தலைவரால் கூட சொல்ல முடியாது. இன்றுவரை உறுப்பினர் அட்டையே இல்லாமல் இயங்கிவரும் ஒரு கூட்டத்தில் ஒருவரை உறுப்பினர் என்றோ, உறுப்பினர் இல்லை என்றோ எப்படிக் கூறமுடியும்?

கோட்சே ஆர்எஸ்எஸ் இல்லை என்கிறது பாஜக. இறுதிவரை அவர் ஆர்எஸ்எஸ்தான் என்று ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறார் அவரது உடன்பிறந்த சகோதரர் கோபால் கோட்சே.

தெருவில் போகிறவர்கள் கூறுவதை விட உடன்பிறந்தவர் கூறும் செய்தியே உண்மையென்று ஏற்க முடியும்.

மக்கள் உரிமை: காந்தியடிகளைக் கொன்ற கோட்சே ஆர்எஸ்எஸ்காரர் இல்லை என்று பாஜகவும், சங்பரிவாரங்களும் மறுப்பதற்குக் காரணம் என்ன?

மங்கள முருகேசன்: அன்றைய ஆர்எஸ்எஸ்காரர்கள் வெளிப்படையானவர்கள். வெறிமிகுந்தவர்கள். உறுப்பினர்களும் குறைவு. ஆகவே, காந்தியடிகளைக் கொன்ற பழியை அவர்கள் பெருமையாகவே கருதினர்.

இன்றைய ஆர்எஸ்எஸ்காரர்கள் பசுத்தோல் போர்த்திய நரிகள். தங்களை சமூக சேவகர்களாக அடையாளப் படுத்துகின்றனர். அதன் அரசியல் கரமான பாஜக பல மாநிலங்களிலும் மத்தியிலும் ஆட்சிக்கு வந்துள்ளது. தேசத்தந்தையைப் படுகொலை செய்த இவர்களின் உண்மை முகம் வெகுமக்களுக்குத் தெரியவந்தால், இவர்களால் மக்கள் ஆதரவைப் பெற முடியாது. ஆகவே, காந்தியடிகளைப் படுகொலை செய்ததை இப்போது மூடிமறைக்க முயலுகிறார்கள்.

மக்கள் உரிமை: இந்தியா டுடே, ஃபிரண்ட்லைன் உள்ளிட்ட பத்திரிகைகள் கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்னணி குறித்து எழுதியபோது மவுனமாக இருந்த பாஜகவும், சங்பரிவாரமும் மாணவர்கள் மட்டுமே படிக்கின்ற பாடநூல்களில் இடம்பெற்ற கருத்துகளுக்காக ஏன் கொந்தளிக் கிறார்கள்?

மங்கள முருகேசன்: ஒரு நாட்டில் புரட்சி ஏற்பட வேண்டுமானால் புரட்சியை உருவாக்கும் கருத்துக்கள் இரு குறிப்பிட்ட வர்க்கங்களைச் சென்று சேர்ந்தால் போதுமானது. ஒன்று தொழிலாளர் வர்க்கம், மற்றொன்று மாணவர் வர்க்கம்.

மாணவர் வர்க்கத்தின் மனதில் பதியும் கருத்துக்கள் மாபெரும் மாற்றங்களுக்கு வழிகோலும். செய்தி ஏடுகளில் இடம் பெறும் கருத்துகளை விட பாடநூல்களில் இடம்பெறும் கருத்துகளுக்கு கனம் அதிகம். இரண்டாம் வகுப்பில் நாம் படித்த மனப்பாடச் செய்யுளும், அதன் கருத்தும் இப்போதும் நினைவிருக்கும்.

அத்தகைய மாணவ உள்ளங்களில், மதவாதம் கொடியது, அந்த மதவாதம் தான் நமது தேசத்தந்தையின் உயிரைப் பறித்தது என்ற கருத்து அழுத்தமாகப் பதியுமானால் அது மதவாத அரசியல் செய்பவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். அதனால்தான் கொதிக்கிறார்கள், துடிக்கிறார்கள்.

மக்கள் உரிமை: மதவாதம் கொடியது என்பதை தேசத்தந்தை காந்தியைப் படுகொலை செய்த கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்னணியைக் கூறித்தான் நிறுவ வேண்டுமா?

மங்கள முருகேசன்: வரலாற்று உண்மைகளைக் கூடுதல் குறை வில்லாமல் உள்ளது உள்ளபடி பதிவு செய்ய வேண்டியது ஒரு கல்வியாளரின் கடமை. மேலும், பாஜக தலைமையிலான முந்தைய மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்த NCERT (NATIONAL COUNCIL FOR EDUCATIONAL RESEARCH AND TRAINING) வெளியிட்ட பாடநூல்களில், மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவமே மறைக்கப்பட்டு, 'காந்தியடிகள் இறந்து போனார்' என்று இயற்கை மரணம் போல எழுதினார்கள்.

NCERT வெளியிட்ட வரலாற்றுப் பாடநூல்களில் இடம்பெற்ற ஏராளமான பிழைகளைக் கண்டுபிடித்து ஒரு தனி புத்தகம் எழுதியபோது 130 பக்கங்களுக்கும் மேலாக அது அமைந்தது. 51 ரூபாய் அதற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு புத்தகத்தின் பிழைகளே இன்னொரு புத்தகமாக உருவாகுமென்றால், அந்தப் பிழைகள் எல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்டவைதானே...

ஆகவே, வருங்காலத் தலைமுறைக்கு வரலாற்று உண்மைகளைச் சொல்லியே தீர வேண்டும் என்பதற்காகவே, கோட்சேவின் ஆர்எஸ்எஸ் பின்னணியை பாடநூல்களில் இடம்பெறச் செய்தோம்.

Wednesday, February 08, 2006

வாருங்கள் நண்பரே!

வாருங்கள் அரவிந்தன் நீலகண்டன்!

தமிழோவியத்தில் நல்லடியாரின் கட்டுரையில் பின்னூட்டப் பெட்டியில் இருவரும் கருத்துக்களை இட்டு வந்தோம். சம்பந்தப்பட்ட பின்னூட்டப் பெட்டியில் திடீரென்று தமிழோவியம் பெரிய பூட்டாகப் போட்டு நிரந்தரமாக மூடிவிட்டது. இப்படித்தான் நமது பின்னூட்டங்கள் துண்டிக்கப்பட்டன.

நிற்க!
திரட்டியில் இல்லாத உங்கள் வலைப்பூவை நான் எப்படிப் பார்த்திருக்க முடியும் என்று கருதுகிறீர்கள்?. சிந்தித்துப் பாருங்கள் நவம்பர் 11.2005லிருந்து, நவம்பர் 12.2005வரை சிலமணித்துளி நேரங்களே கால வித்தியாசம் இருக்கும், இதை பெருங்குறையாக எடுத்துக்கொண்டு, நவம்பர் 12வரை.. பதிலளிக்கவில்லை என்ற ஆர்ப்பாட்டம் தேவைதானா?.

முஸ்லிம்களை விட, இஸ்லாத்தின் மீது உங்களுக்கு அக்கறை அதிகம் அதனால் தமிழ்மணம் வலைப்பூவின் திரட்டிக்கு கண்டிப்பாக மீண்டும் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

கணினிப் பொறியோடு எனக்குள்ள தொடர்பு, அள்ளி சாப்பிடுவது போல் இல்லை, தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் மாதிரிதான். நேரம் கிடைக்கும்போது தமிழோவியப் பின்னூட்டங்களின் கருத்துக்களை மீண்டும் இங்கே புதுப்பித்துக்கொள்ளலாம் சரிதானா நண்பரே?

அன்புடன்,
முஸ்லிம்

அம்மாடி இதுதான் அரசியலா?

(மக்கள் உரிமை பிப்ரவரி, 03-09,2006 வாரயிதழில் வெளிவந்த செய்தி!)

காந்தியடிகளைக் கொன்ற கோட்சே, ஆர்எஸ்எஸ் இல்லையாம்...!

தமிழக அரசு முடிவு! கல்வியாளர்கள் அதிர்ச்சி!!

தேசத் தந்தை காந்தி படுகொலை தொடர்பான பாடத்தில் தமிழகக் காவல்துறை செய்த திடீர் திருத்தம் வரலாற்றாய்வாளர்களையும், கல்வியாளர்களையும் பொங்கியெழ வைத்துள்ளது.

மேல்நிலைப் பள்ளிகளுக்காக தமிழக பள்ளிக் கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள பாடத்திட்டத்தில் காந்தியடிகள் படுகொலை பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. அதில், மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் வினாயக் கோட்சே, ''ஒரு இந்து வெறியன், ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர்'' என்ற தகவலும் இடம்பெற்றிருந்தன.

அக்.3, 2005 தேதியிட்டு, பள்ளிக் கல்வி இயக்கம் அனுப்பிய சுற்றறிக்கையில், காந்தியாரைக் கொன்ற கோட்சேயின் ஆர்.எஸ்.எஸ் பின்னணியை பாடத்திட்டத்தில் இருந்து நீக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆர்எஸ்எஸ் கும்பலின் நெருக்கடிக்கு தமிழக கல்வித்துறை பலியாகி விட்டதோ என்ற சந்தேகத்தை இந்நடவடிக்கை கிளப்பியுள்ளது. பாடப்புத்தகங்களில் வரலாற்றுத் திரிபுகளுக்கெதிரான கூட்டு நடவடிக்கைக் குழுவின் உயர்நிலை நிர்வாகிகள், முன்னாள் துணைவேந்தர்கள் சே.சாதிக், பி.ஜெகதீசன், வே.வசந்திதேவி ஆகியோர் இதற்கெதிராக நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர். இதன் உறுப்பினரான ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியரும், அண்ணா ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநருமான எம்.எப்.கான், ஆர்.எஸ்.எஸ் நெருக்கடிக்கு அரசு பலியாகி இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.

பாடப்புத்தகங்களில் கோட்சே ஓர் ஆர்.எஸ்.எஸ் வெறியர் என்று எழுதப்பட்டதற்கு பாஜக முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. பாஜக எம்.எல்.ஏ எச்.ராஜா இதுகுறித்து பாடநூல் குழுவினருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். பாடநூல் குழுவினர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கோரினார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர் எஸ் எஸ்ஸும் இதற்காக ஒரு வழக்கு போட்டுள்ளது. ஆனால் பாடநூல் குழுவினர் இதற்கெல்லாம் அசரவில்லை. பாடநூலாசிரியர் குழுவின் தலைவரான திரு. என்.கே. மங்கள முருகேசன், ''ஆர் எஸ் எஸ் பற்றியும், கோட்சே பற்றியும் பாடநூல்களில் நாங்கள் எழுதியுள்ள தகவல் அசைக்க முடியாத உண்மை. அதற்கு வலுவான ஆதாரங்களும் உண்டு. அவற்றை நீக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆர்.எஸ்.எஸ் விடுக்கும் மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை என்று கூறினார்.

வரலாற்றாசிரியர் தங்கள் கூற்றில் மிக உறுதியாக நிற்கும்போது பள்ளிக்கல்வி இயக்குனரகம், பாடப்புத்தகத்தில் திருத்தம் செய்யுமாறு சுற்றறிக்கை அனுப்பியது கல்வியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாடநூலாசிரியர் உறுப்பினர் பேராசிரியர் எல்.ராமமூர்த்தி, பள்ளிக்கல்வி இயக்குனர், தான் அனுப்பிய சுற்றறிக்கை குறித்து விளக்கம் தரவேண்டும் என்று கோரியுள்ளார். காந்தியைப் படுகொலை செய்த கோட்சேவின் ஆர்.எஸ்.எஸ் பின்னணி குறித்த வலுவான ஆதாரங்களை பாடநூலாசிரியர் குழுத் தலைவர் மங்கள முருகேசன் சமர்ப்பித்துள்ளார்.

கோட்சே பற்றிய எனது கருத்துக்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை, மன்னிப்பு கேட்கவும் போவதில்லை. வலுவான ஆதாரங்களோடு நான் குறிப்பிட்ட கருத்தை தமிழக அரசு பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கியிருப்பது எனக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது என்கிறார் பாடநூல் ஆசிரியர் மங்கள முருகேசன்.

தேசத்தந்தை காந்தியார் படுகொலை பற்றிய உண்மைகளை ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்ற இந்துத்துவ சக்திகள் மூடிமறைக்க முயலுகின்றன. இந்த வன்முறைக் கும்பலைப் பற்றி வருங்காலத் தலைமுறை அறிந்து கொள்ளக் கூடாது என்பதே அவர்களின் எண்ணம்.

மதவெறிக் கும்பலின் மிரட்டலுக்கு தமிழக அரசு பணிந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கல்வியாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

இந்திய வரலாற்றுப் பேராயம் (ஒய்க்ண்ஹய் ஐண்ள்ற்ர்ழ்ஹ் ஈர்ய்ஞ்ழ்ங்ள்ள் ஒஐஈ) தலைவருக்கு இதுகுறித்து மங்கள முருகேசன் விரிவான கடிதமும் எழுதியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள சாந்தி நிகேதனில் ஜனவரி,28-30, 2005ல் கூடிய இந்திய வரலாற்றுப் பேராயத்தின் கூட்டத்தில், பாஜக - சங்பரிவார் கும்பலின் வரலாற்றுத் திரிபுகளுக்கு எதிரான வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கல்வித் திட்டத்தில் காவித் தலையீடுகளைக் கடுகளவும் அனுமதிக்கக் கூடாது, கல்வியாளர்களுக்கு முழுமையான கருத்துச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஒளரங்கசீப் போன்ற முஸ்லிம் மன்னர்களைக் கொடுமையாளர்களாகவும், அக்பர் போன்ற ஒழுக்கம் கெட்டவர்களை மகா புருஷர்களாகவும் சித்தரிக்கின்ற சங்பரிவார கும்பல், காந்தியடிகளைக் கொன்ற தனது கயமைத்தனத்தை மூடிமறைக்க முழுமூச்சாய் களமிறங்கியுள்ளது.

வரலாற்றுத் திரிபுகள் மூலம் வருங்காலத் தலைமுறையை வஞ்சிக்க முயலும் கொடியவர்களுக்கு மதச்சார்பின்மையைக் காப்பதாகப் பதவிப் பிரமாணம் எடுத்தள்ள அரசு பணிவது அவலகரமானது.

காந்தியைக் கொன்ற கோட்சேவை ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து நீக்குவது தமிழக அரசின் வேலையல்ல. உண்மைகளை மறைப்பதும், அவற்றைத் திரிப்பதும், பொய்களை உண்மைகளாய்ச் சொல்வதும் வரலாற்றுத் திரிப்பின் வகைகள். இவற்றை பாஜக ஆளும் மாநிலங்கள் முழுவீச்சில் நடைமுறைப்படுத்துகின்றன.

சமூக நீதி பூமியான தமிழகத்திலும் சங்பரிவாரின் சதிகள் அரங்கேறுவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசு உடனடியாக வரலாற்றுத் திரிபை சரிசெய்ய ஆவணச் செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

சங்பரிவாருக்கு ஆதரவாக தமிழக அரசு எடுத்த இந்த நடவடிக்கையை தெஹல்கா ஆங்கில வார இதழில் அதன் சென்னை செய்தியாளர் வினோஜ்குமார் அம்பலப்படுத்தியுள்ளார். மற்ற தமிழ் இதழ்கள் இந்தச் செய்தியை கண்டு கொள்ளவேயில்லை.