Sunday, December 30, 2007

ஹலோ புஷ்...



எதேச்சையாக மதுபானக் கூடத்தில் நுழைந்த அந்த இளைஞனுக்கு ஒரு எதிர்பாராத அதிர்ச்சி.
உற்சாக பானத்தில் மிதந்து கொண்டிருந்த அந்த இரு ஆசாமிகளும் அசப்பில் ஜார்ஜ் புஷ்ஷைப் போலவும்... அவரது பாதுகாப்பு அமைச்சரைப் போலவும் தெரிய வரவே... பரிமாறிக் கொண்டிருந்த ஆளை அழைத்து... அது அவர்கள்தானா? என்று விசாரிக்க...

‘‘அதுகளேதான்’’ என்றபடி நகர்ந்தார் பரிமாறுபவர்.

உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்த அந்த இளைஞன்........

‘‘ஹலோ புஷ்........நீங்கள் இரு வரும் எதைப்பற்றி இவ்வளவு சீரியசாக விவாதித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?’’ என்றான்.

‘‘நாங்கள் இருவரும் அடுத்து வரப்போகும் மூன்றாம் உலகப் போரைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்’’ என்றது புஷ்.

‘‘அட... அப்படியா? சரி, இந்த முறை அமெரிக்காவின் கைங்கர்யமாக என்ன செய்வதாக உத்தேசம்?’’ என்றான் இளைஞன்.

‘‘இந்த முறை நாங்கள் ஒரு கோடி ஈராக்கியர்களைக் கொல்வோம். அத்தோடு கூடவே அழகி ஒருத்தியையும் கொல்லப் போகிறோம்’’ என்றது புஷ்.

அதிர்ந்து போன அந்த இளைஞன்... ‘‘என்னது..? அழகி ஒருத்தியைக் கொல்லப் போகிறீர்களா? எதற்காக?’’ என்று ஆத்திரத்துடன் வினவ... புஷ் தனது பாதுகாப்பு அமைச்சரின் தோளில் கை போட்டபடி.. ‘‘மச்சான்... இவனுக எவளோ அந்த ஒரு பொம்பளையப் பத்தித்தான் கவலைப்படுவானுக........ஆனா அந்த ஒரு கோடி ஈராக்கியர்களைப் பற்றி கவலையே படமாட்டானுக....ன்னு நான் அப்பவே சொன்னேன் கேட்டியா..?’’ என்றது புஷ்.

அப்படித்தான் ஆயிற்று நமது நிலையும்.

ஈராக்கில் அமெரிக்கப்படைகள் நுழைந்தபோது

ஆர்ப்பாட்டம்........

தர்ணா........

கொடும்பாவி எரிப்பு........

உண்ணாவிரதம்........

மறியல்........

என்று ஆர்ப்பரித்ததோடு சரி.

இப்போது அவரவர் வழியில் அவரவர்.

ஆனால் இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது ஈராக்கின் துயரம்.

மொத்த உலகமும் இவைகளுக்கு மௌன சாட்சியாய்........

நீச்சல் தெரியாதவர்களை துப்பாக்கி முனையில் ஆற்றில் குதிக்கச் சொல்லி துடிதுடித்துச் சாவதை ரசிப்பது........

கைகள் கட்டப்பட்ட ஈராக்கியர்களை மிக உயரமான மாடிகளின் மேல் இருந்து குதிக்கச் சொல்வது........

ஹெலிகாப்டரில் இருந்தபடியோ... ட்ரக்குகளில் ஊர்ந்தபடியோ... கண்ணில் பட்டவர்களை எல்லாம் சாவகாசமாக சுட்டுக் கொல்வது...

கொன்றதற்குப் பிற்பாடு அவர்களுக்கு...

கிரிமினல்கள்...

ஊடுருவல்காரர்கள்........

தீவிரவாதிகள்........

பயங்கரவாதிகள்........

எனப் பட்டம் சூட்டுவது........

(பேசாமல் சுருக்கமாக ‘அமெரிக்கர்கள்’ என்று சொல்லி இருக்கலாம்)

‘நோக்கம் எதுவுமில்லாமல் மனம் போன போக்கில் மனிதர்களைச் சுடுவது ஜாலியாக இருக்கிறது’ என்கிறான் ஒரு அமெரிக்க வீரன்.

நேற்றுவரை இப்படி ஜாலியாகக் கொல்லப்பட்ட ஈராக்கியர்கள் எண்ணிக்கை வெறும் பதினோறு லட்சத்து பதினெட்டாயிரத்து எண்ணூற்றி நாற்பத்தி ஆறே பேர் மட்டுமே

இந்த இதழ் அச்சாகி உங்கள் கைகளில் தவழும்போது இன்னும் சில நூறு உயிர்கள் நம்மிடம் இருந்து விடை பெற்றிருக்கும். அவ்வளவே.

நாமோ, இந்த வார டாப் டென்னில் ‘பில்லாவா?’ அல்லது ‘மிருகமா?’ என்கிற கவலையில்.

இன்றல்ல என்றுமே மௌனம் தான் நமது எதிரி.

நன்றிங்க

//‘‘மச்சான்... இவனுக எவளோ அந்த ஒரு பொம்பளையப் பத்தித்தான் கவலைப்படுவானுக........ஆனா அந்த ஒரு கோடி ஈராக்கியர்களைப் பற்றி கவலையே படமாட்டானுக....ன்னு நான் அப்பவே சொன்னேன் கேட்டியா..?’’ என்றது புஷ்.//

:)))

பெநஸீரை முஷாரப் அரசுதான் கொன்றது

பெனாசிரை நாங்கள் கொல்லவில்லை, முஷாரப் அரசுதான் கொன்றது: அல் கொய்தா

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 30, 2007

இஸ்லாமாபாத்: பெனாசிர் பூட்டோவா அல் கொய்தா அமைப்பு கொல்லவில்லை. பாகிஸ்தான் அரசுதான் திட்டமிட்டுக் கொன்று விட்டு எங்கள் மீது பழி போட முயலுகிறது என்று அல் கொய்தா அமைப்பு அறிவித்துள்ளதால், பெனாசிர் சாவில் மர்மம் நீடிக்கிறது.

ராவல்பிண்டி அருகே 27ம் தேதி இரவு பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் இறந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அடுத்த நாள் பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சீமா செய்தியாளர்களிடம் பேசுகையில், பெனாசிர் பூட்டோவை நோக்கி ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டான். அப்போது மனித வெடிகுண்டும் வெடித்தது.

இந்த அதிர்ச்சி அலைகள் பெனாசிரைத் தாக்கியதால், உயிர் தப்புதவற்காக அவர் வேகமாக வேனுக்குள் குணிந்தார். அப்போது வேனின் மேற்கூரை கம்பி தலையில் பலமாக இடித்ததில் அவர் மரணமடைந்தார் என்று கூறினார். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

மேலும் இந்த சம்பவத்திற்கு அல் கொய்தா அமைப்புதான் காரணம் என்றும் கூறிய சீமா அதுதொடர்பான அல் கொய்தா அமைப்பினரின் தொலைபேசி உரையாடலையும் வெளியிட்டார். இக்ரமுல்லா, பிலால் ஆகிய இருவரே பெனாசிரைக் கொன்றவர்கள் என்றும் கொலைச் சம்பவத்திற்குப் பின்னர் அல் கொய்தா அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான பைதுல்லா மசூத்துடன் அல் கொய்தா தீவிரவாதி ஒருவர் உரையாடியதும் அதில் இருந்தது.

முஷாரப் அரசே காரணம்:

இந்த நிலையில் நேற்று அல் கொய்தா அமைப்பு இந்த கூற்றை மறுத்தது. முஷாரப் அரசுதான் பெனாசிர் சாவுக்குக் காரணம் என்று அல் கொய்தா அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மசூத்தின் உதவியாளரான மெளலவி மெளலானா உமர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பாகிஸ்தான் தலைவர்கள் யார் மீதும் நாங்கள் தனிப்பட்ட முறையில் விரோதம் கொண்டிருக்கவில்லை. அவர்களை எதிரிகளாகவும் கருதியதில்லை.

எங்களது ஒரே எதிரி அமெரிக்கா மட்டுமே. பாகிஸ்தான் தலைவர்களைக் கொல்ல நாங்கள் ஒருபோதும் திட்டமிட்டதில்லை.

பெனாசிரை நாங்கள் கொல்லவில்லை. அதிலும் ஒரு பெண்ணை கொல்வதற்கு இஸ்லாமிய பழங்குடியின சமுதாயமும், பாரம்பரியமும், கலாச்சாரமும் ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

பெனாசிர் கொலை தொடர்பாக மெளலவி மசூத்துடன், அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பேசியதாகவும், அதை தாங்கள் ஒட்டுக் கேட்டதாகவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது கட்டுக்கதையாகும்.

அவர்களது தவறை மறைக்க எங்கள் மீது குற்றம் சாட்டப் பார்க்கிறார்கள். இது முழுக்க முழுக்க பாகிஸ்தான் அரசு, முஷாரப் அரசு செய்த செயலாகும்.

பெனாசிர் பூட்டோ பாகிஸ்தான் தலைவர் மட்டுமல்ல, சர்வதேசப் புகழ் பெற்ற ஒரு உலகத் தலைவர் ஆவார். அவரது பாதுகாப்பு வளையத்திற்குள் ஊடுறுவுவது என்பது சாதாரண விஷயமல்ல. எனவே இதில் அரசு மட்டுமே நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளது.

பெனாசிர் மறைவுக்கு அல் கொய்தா சார்பில் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார் உமர்.

அல் கொய்தா அமைப்பின் இந்த திடீர் மறுப்பால் பெனாசிர் மரணம் எப்படி நடந்தது, யாரால் நிகழ்த்தப்பட்டது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சுட்டுத்தான் கொல்லப்பட்டார் - பெனாசிர் உதவியாளர்

இதற்கிடையே, பெனாசிர் பூட்டோ சுட்டுத் தான் கொல்லப்பட்டார். அவரது தலையின் பின்புறம் குண்டு பாய்ந்து, முன்புற வழியாக துளைத்துச் சென்ற அடையாளத்தை நான் பார்த்தேன் என்று பெனாசிர் பூட்டோவின் உதவியாளரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான ஷெர்ரி ரஹ்மான் கூறியுள்ளதால் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.

பெனாசிருடன் எப்போதும் கூடவே இருப்பவர் ஷெர்ரி. சம்பவ நாளன்றும் அவர் பெனாசிரின் காரில்தான் இருந்தார். நடந்தது என்ன என்று அவர் கூறுகையில், சம்பவத்தின்போது நான் காரில்தான் இருந்தேன். அப்போது சில அடையாளம் தெரியாத நபர்கள் என்னை சுற்றி நின்று கொண்டனர். இதனால் காருக்குள் நின்றபடி மேலே தொண்டர்களை நோக்கி பெனாசிர் கையாட்டிக் கொண்டிருந்தபோது என்ன நடந்தது என்று எனக்கு சரியாக தெரியவில்லை. மேலும் கொலையாளியின் முகமும் எனக்குத் தெரியவில்லை.

துப்பாக்கியால்தான் முதலில் சுட்டனர். பிறகுதான் குண்டு வெடித்தது. அப்போது நான் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டேன். எனது காலில் காயம் ஏற்பட்டது. பிறகு எனது காரில்தான் பெனாசிரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.

பெனாசிர் மரணத்திற்குப் பின்னர் அவரது உடல் மத வழக்கப்படி குளிப்பாட்டப்பட்டது. நானும் அப்போது உடன் இருந்து குளிப்பாட்டுவதற்கு உதவினேன்.

அவரது வயிற்றில் எந்தக் காயமும் இல்லை. ஆனால் தலையில் பெரிய குண்டுக்காயம் இருந்தது. அதாவது தலையின் பின்னால் பாய்ந்த கண்டு முன்புறம் வழியாக வெளியே பாய்ந்திருந்தது.

குண்டு பாய்ந்ததால் ஏற்பட்ட ரத்தப் பெருக்கு நிற்காமல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அதிக ரத்தம் வெளியாகியதும் பெனாசிரின் மரணத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

உண்மை இப்படி இருக்க, பெனாசிர் கார் மேற் கூரைக் கம்பி இடித்து இறந்ததாக பாகிஸ்தான் அரசு கூறுவது மிகவும் மோசமான கற்பனை, கேலிக்கூத்தாகும். முட்டாள்தனமான இந்த கூற்றைப் பார்க்கும்போது அவர்கள் உண்மையை மூடி மறைக்க முயற்சிப்பதாக தெரிகிறது என்று கூறினார் ஷெர்ரி.

இப்படி மாறி மாறி குழப்பங்கள் தொடர்வதால் பெனாசிர் உண்மையில் எப்படி இறந்தார் என்பதற்கு இன்னும் விடை கிடைக்காத நிலை உள்ளது.

நன்றிங்க

பெநஸீர் படுகொலை செய்யப்பட்ட மர்மம் நீடிக்கிறது!

Saturday, December 29, 2007

புது தகவல் (!?)

பெனாசிர் கார் மேற்கூரை கம்பி இடித்து இறந்ததாக புது தகவல்

சனிக்கிழமை, டிசம்பர் 29, 2007

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மனித வெடிகுண்டினாலோ அல்லது துப்பாக்கி குண்டு பாய்ந்ததாலோ மரணமடையவில்லை. மாறாக, தனது காரின் இரும்புக் கம்பி தலையில் பலமாக பட்டதால் படுகாயமடைந்தே அவர் இறந்ததாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராவல்பிண்டி அருகே படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் உடல் நேற்று மாலை அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தந்தை சுல்பிகர் அலி பூட்டோவின் சமாதிக்கு அருகே பெனாசிரின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் பெனாசிர் கொல்லப்பட்டது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பெனாசிரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதனால்தான் அவர் மரணமடைந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த ராவல்பிண்டி அரசு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவேத் சீமா கூறுகையில், சம்பவத்தன்று, பெனாசிர் பூட்டோ தனது காரின் மேல் பகுதியில் நின்றபடி தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் பெரும் கூட்டம் கூடியிருந்ததால் அதைப் பயன்படுத்தி கொலைகாரன் துப்பாக்கியால் சுட்டுள்ளான். ஆனால் துப்பாக்கி குறி தவறியதால் பெனாசிர் உடலில் குண்டு பாயவில்லை. இதையடுத்து அந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளான்.

இதனால் ஏற்பட்ட பெரும் அதிர்ச்சி அலைகள் பெனாசிரைத் தாக்கியது. அவர் தப்பிப்பதற்காக வேகமாக காருக்குள் புக முயன்றுள்ளார். அப்போது காரின் மேல் கூரை கம்பிகள், அவரது தலையில் பலமாக மோதியுள்ளன.

இதில் அவரது தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. மேலும் அந்தக் காயம் மூளையையும் தாக்கியது. இதுவே அவரது மரணத்திற்குக் காரணமாக அமைந்தது என்றார்.

பெனாசிருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறுகையில், மனித வெடிகுண்டு வெடித்தபோது அதில் இருந்து வந்த வெடிகுண்டுச் சிதறல்கள், பெனாசிரின் தலையைத் தாக்கியுள்ளன. இதனால்தான் அவர் மரணமடைந்தார். அவரது உடலில் குண்டுகள் எதுவும் பாயவில்லை என்று கூறியுள்ளார்.

பெனாசிர் சுடப்பட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. அதில் இரண்டு பேர் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகளும், பெனாசிர் தப்பிக்க முயல்வதும் தெரிய வருகிறது.

ஆனால் அரசு மற்றும் டாக்டர்களின் கூற்றை பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் மறுக்கிறார்கள். பெனாசிர் துப்பாக்கியால் சுடப்பட்டுத்தான் இறந்தார் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இப்படி மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெனாசிர் மரணம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நன்றிங்க

இது என்னய்யா புது கதை... (!?)

Friday, December 28, 2007

பெனாசிர் 'இ-மெயில்'

நான் இறந்தால் முஷாரப்பே பொறுப்பு: பெனாசிர் 'இ-மெயில்'

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 28, 2007

வாஷிங்டன்: நான் ஒருவேளை கொல்லப்பட்டால் அதற்கு முஷாரப்தான் காரணமாக இருக்க முடியும். பாதுகாப்பற்ற நிலைக்கு என்னைத் தள்ளியுள்ளார் முஷாரப் என்று மரணத்திற்கு முன்பு பெனாசிர் பூட்டோ அனுப்பிய இமெயில் தகவல் வெளியாகியுள்ளது.

ரால்பிண்டியில் நேற்று நடந்த பயங்கர தாக்குதலில் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் 8 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் திரும்பிய பின்னர் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின்போது நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு அக்டோபர் 26ம் தேதி பூட்டோ அனுப்பிய ஒரு இ மெயில் வெளியாகியுள்ளது.

இந்த இ மெயிலில் தான் ஒருவேளை பாகிஸ்தானில் கொல்லப்பட்டால் அதற்கு முஷாரப்தான் பொறுப்பாவார் என்று கூறியுள்ளார் பெனாசிர்.

இந்த இ மெயிலை தனது அமெரிக்க செய்தித் தொடர்பாளரும், ஆலோசகருமான மார்க் சீகலுக்கு அனுப்பியுள்ளார் பெனாசிர். அந்த மெயிலில் நான் பாகிஸ்தானில் ஒருவேளை கொல்லப்பட்டால் அதற்கு முஷாரப்தான் காரணம் என பெனாசிர் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் தற்கொலைப்படைத் தாக்குதலுக்குப் பிறகு எனக்கு கூடுதல் பாதுகாப்பு தருமாறு நான் கோரியும் கூட முஷாரப் அரசு அதை ஏற்கவில்லை. இதுவரை எனது உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எது நடந்தாலும் கடவுள் விருப்பப்படியே நடக்கட்டும்.

எனக்கு எது நடந்தாலும் அதற்கு முஷாரப்தான் பொறுப்பாவார். அவரது ஆட்சியில் நான் மிகவும் பாதுகாப்பற்றவளாக ஆகியுள்ளேன். எப்போதும் பயத்துனேடேய வாழும் நிலைக்கு முஷாரப் ஆட்சியாளர்கள் தள்ளியுள்ளனர் என்று கூறியுள்ளார் பெனாசிர்.

பெனாசிரின் இந்த இமெயிலை சீகல், சிஎன்என் தொலைக்காட்சியின் உல்ப் பிளிட்சருக்கு அனுப்பி வைத்திருந்தார். பூட்டோ கொல்லப்பட்டால் மட்டுமே இந்த மெயிலை வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையையும் அவர் விதித்திருந்தார்.

பாகிஸ்தானுக்கு திரும்புவதற்கு முன்பே தனக்கு கொலை மிரட்டல்கள் இருப்பதாக சிஎன்என்னுக்கு அளித்த பேட்டியில் பெனாசிர் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் அரசில் மிகவும் உயரிய பதவியில் இருக்கும் சிலரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அப்போது பெனாசிர் கூறியிருந்தார். மேலும் தனது இந்த பயத்தை வெளிப்படுத்தி முஷாரப்புக்கும் கடிதம் எழுதியிருந்தார் பெனாசிர்.

தற்போது சீகலுக்கு அனுப்பிய மெயிலில், முஷாரப்தான் தனது கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என பெனாசிர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், தனக்கு பாகிஸ்தானில் உள்ள தலிபான், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான், அல் கொய்தா, கராச்சியைச் ேசர்ந்த ஒரு தற்கொலைப் படை தீவிரவாத அமைப்பு ஆகியவற்றால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பெனாசிர் முன்பே கூறியிருந்தார்.

அக்டோபர் தற்கொலைப் படைத் தாக்குதலுக்குப் பிறகு தனக்கு கவச பாதுகாப்பு வாகனங்கள், செல்போன் ஜாமர் கருவிகளுடன் கூடிய பாதுகாப்பு வாகனங்கள், தனியார் பாதுகாவலர்கள் ஆகியோரைக் கொண்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி முஷாரப்புக்கு பெனாசிர் கடிதம் எழுதியிருந்தார். அவருக்கு ஆதரவாக அமெரிக்க எம்.பிக்கள் மூன்று பேரும் முஷாரப்புக்குக் கடிதம் எழுதியிருந்தனர் என்ர தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

பெனாசிருக்கு இருந்து வந்த மிரட்டல் குறித்து முஷாரப் அரசு கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்ததால்தான் அவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்று சீகல் கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், கராச்சிக்கு அவர் வந்தபோது ஏற்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலின் பின்னணி குறித்து முஷாரப் அரசு சரிவர விசாரணை நடத்தவில்லை.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஸ்காட்லாந்து யார்டு மற்றும் அமெரிக்காவின் எப்.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என பெனாசிர் கோரினார். அதையும் முஷாரப் ஏற்கவில்லை.

செல்போன் குண்டுகளை தடுக்கும் வகையில், தனக்கு செல்போன் ஜாமர் வாகனம் தரப்பட வேண்டும் என்று பெனாசிர் கோரியிருந்தார். அவரது கணவர் ஆசிப் அலி சர்தாரியுமும் இந்தக் கோரிக்கையை வைத்திருந்தார்.

முன்னாள் பிரதமர் ஒருவருக்குரிய பாதுகாப்பை முஷாரப் அரசு தரவில்ைல என்ற ஆதங்கமும் பெனாசிரிடம் இருந்தது. ஆனால் எந்தவித அடிப்படைப் பாதுகாப்பும் பெனாசிருக்குத் தரப்படவில்லை. சாதாரண போலீஸ் பாதுகாப்பே அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அதுவே அவரது உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார் சீகல்.

சி.என்.என். தொலைக்காட்சியைச் சேர்ந்த டான் ரிவர்ஸ் கூறுகையில், பெனாசிர் கராச்சிக்குத் திரும்பியபோதுஅந்த செய்தியை நாங்கள் சேகரித்தபோது, பாதுகாப்பு குளறுபடிகளை நேரில் காண முடிந்தது. பெனாசிர் இருந்த வாகனத்திற்கு மிக அருகே நாங்கள் செல்ல முடிந்தது. எங்களை யாரும் தடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

சீகல் தொடர்ந்து கூறுகையில், அக்டோபர் தாக்குதலுக்குப் பிறகு ஹெலிகாப்டரைப் பயன்படுத்திக் கொள்ள காவல்துறை பெனாசிருக்கு அனுமதி அளித்தது. ஆனால் அவர் அதை நிராகரித்து விட்டார். எப்போதும் மக்களுடனேயே இருப்பதை விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் பெனாசிர். மக்களிடைேய நெருக்கமாக இருக்கவே அவர் விரும்பினார். நடந்த குற்றத்திற்கு பெனாசிர் எந்த வகையிலும் காரணமில்லை.

பெனாசிரையும், தேர்தலில் போட்டியிடும் பிற வேட்பாளர்களையும் காக்க வேண்டியது முஷாரப் அரசின் கடமையாகும்.

பெனாசிர் எப்போதும் ஜன சமுத்திரத்தின் மத்தியில்தான் இருந்தார். அதை ஜனநாயகத்ைத விரும்பும் எந்த அரசியல் தலைவராலும் தவிர்க்க முடியாது என்றார் சீகல்.
பாக். தூதர் மறுப்பு

இதற்கிடையே, அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் முகம்மது அலி துரானி இதை மறுத்துள்ளார். பெனாசிருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

முஷாரப்பையும் குறி வைத்துக் கொண்டிருக்கும் தீவிரவாதிகள்தான், பெனாசிரையும் குறி வைத்துள்ளனர். தீவிரவாதிகள்தான் பெனாசிர் படுகொலைக்குக் காரணம்.

பெனாசிருக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு தேவையோ அனைத்தும் அளிக்கப்பட்டிருந்தது. அவர் கராச்சிக்கு வந்தபோது பெருமளவிலான போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் அப்போது நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தின்போது அவர் பாதுகாப்புப் படையினர் அதிகம் இருந்ததால் உயிர் தப்பினார். இல்லாவிட்டால் அப்போதே அவர் உயிரிழந்திருக்கக் கூடும்.

தனிப்பட்ட பாதுகாவலர்களை நியமிக்கவும் பெனாசிர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது கட்சியைச் சேர்ந்தவர்களும் கூடவே இருந்து வந்தனர்.

பெனாசிர் பாதுகாப்புக்காக 8000 பாதுகாவலர்கள் வரை நியமிக்கப்பட்ட அவருடேனேயே இருந்து வந்தனர். உலகில் யாருக்குமே இப்படி ஒரு பாதுகாப்பு கொடுக்கப்பட்டதில்லை.

அவர் கொல்லப்பட்ட விதத்தைப் பார்க்க வேண்டும். வெடிகுண்டு வைத்தோ அல்லது வாகனத்தை தகர்த்தோ கொல்லப்படவில்லை. நேருக்கு நேர் சுட்டுக் கொன்றுள்ளனர். எனவே பாதுகாப்பு குறித்த புகார்கள் எல்லாம் சரியல்ல என்றார் அவர்.

நன்றிங்க

முஷ்ராப் ஒரு குள்ள நரி என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

அரசியலில் யாரையும் யாரும் நம்பி இருக்கக்கூடாது, சொந்தக் காலில் நிற்க வேண்டும். பாதுகாப்பும் தன்னைத்தானே பலமாகக் காத்துக்கொள்ள வேண்டும்.

உலகை உலுக்கிய படுகொலைகள்.

உலகை உலுக்கிய மோசமான படுகொலைகள்

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 28, 2007

டெல்லி: உலகை உலுக்கிய மோசமான படுகொலைச் சம்பவ வரிசையில் பெனாசிர் பூட்டோவின் கொலைச் சம்பவம் சேர்ந்துள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் உலகம் சந்தித்த மிக மோசமான சில படுகொலைச் சம்பவங்களின் பட்டியல்.

1948, ஜனவரி, 30.

தேசத் தந்தை மகாத்மா காந்தியை, நாதுராம் கோட்சே, நேருக்கு நேர் சுட்டுப் படுகொலை செய்தார்.

1951, அக்டோபர், 16.

பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி கான், சுட்டுக் கொல்லப்பட்டார்.

1975, ஆகஸ்ட், 15.

வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் ராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்டார்.

1981, மே, 30.

வங்கதேச அதிபர் ஜியா உர் ரஹ்மான் ராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்டார்.

1981, அக்டோபர், 6.

எகிப்து அதிபர் அன்வர் அல் சதாத் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.

1984, அக்டோபர், 31.

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, தனது மெய்க்காவலர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

1986, பிப்ரவரி, 28.

ஸ்வீடன் பிரதமர் ஓல்ப் பால்மே, ஸ்டாக்ஹோமில் கொல்லப்பட்டார்.

1991, மே, 21.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூர் அருகே மனித வெடிகுண்டுத் தாக்குதலில் பலியானார்.

1991, நவம்பர், 4.


இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ரபீன் டெல் அவிவ் நகரில் யூத தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1993, மே, 1.

இலங்கை அதிபர் ரணசிங்கே பிரேமதாஸா, கொழும்பில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

2001, ஜனவரி, 16.

காங்கோ அதிபர் லாரன்ட் கபிலா, மெய்க்காவலரால் படுகொலை செய்யப்பட்டார்.

2001, ஜூன், 1.

நேபாள மன்னர் பிரேந்திரா, ராணி ஐஸ்வர்யா, இளவரசர் நிரஞ்சன் ஆகியோர் பட்டத்து இளவரசர் தீபேந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2003, மார்ச், 12.

செர்பிய பிரதமர் ஸோரன் ஜின்ஜிடிக் பெல்கிரேடில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2003, செப்டம்பர், 10.

ஸ்வீடன் வெளியுறவு அமைச்சர் அன்னா லிண்ட், கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

2005, பிப்ரவரி, 14.

லெபனான் பிரதமர் ரபீக் ஹரிரி பெய்ரூட்டில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

இந்த வரிசையில் சதாம் உசேன் மரணத்தையும் கூட சேர்க்கலாம். காரணம், இந்த படுகொலைகள் எல்லாவற்றையும் விட ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கிய சம்பவம் அது.

நன்றிங்க

//எகிப்து அதிபர் அன்வர் அல் சதாத் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.//

//இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ரபீன் டெல் அவிவ் நகரில் யூத தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.//

//தேசத் தந்தை மகாத்மா காந்தியை, நாதுராம் கோட்சே, நேருக்கு நேர் சுட்டுப் படுகொலை செய்தார்.//

இந்துத்வ பயங்கரவாதிகளால் காந்தி படுகொலை செய்யப்பட்டார்னு சொல்ல வேண்டியதுதானே!

அது என்னய்யா ஒரு கண்ணுல வெண்ணையும், இன்னொரு கண்ணுல சுண்ணாம்பும் தடவும் ஓரவஞ்சனை நல்லாவா இருக்கு?

Thursday, December 27, 2007

பெனாசிர் பூட்டோ படுகொலை

மனித வெடிகுண்டு தாக்குதல்-பெனாசிர் பூட்டோ படுகொலை

வியாழக்கிழமை, டிசம்பர் 27, 2007

ராவல்பிண்டி: ராவல்பிண்டி நகரில் நடந்த மனித குண்டு தாக்குதலில் அந் நாட்டின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பெனாசிர் புட்டோ கொல்லப்பட்டார்.

பர்வேஸ் முஷாரப் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து தனது கணவர் ஆசிப் சர்தாரியுடன் லண்டனில் தஞ்சம் புகுந்தார் பெனாசிர். சமீப காலமாக பாகிஸ்தான் அரசியலில் ஏற்பட்டு வரும் அதிவேக மாற்றங்களைத் தொடர்ந்து முஷாரப்பின் வேண்டுகோளை ஏற்று பாகிஸ்தான் திரும்பினார்.

ஆனால், முஷாரப்புக்கு எதிரான தனது அரசியல் நிலைப்பாட்டை அவர் கைவிடவில்லை. தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டங்கள், பேரணிகளை நடத்தி வந்தார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இன்று தனது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் ராவல்பிண்டியில் மாபெரும் பேரணியை பெனாசிர் நடத்தினார். மேடையில் பேசி முடித்துவிட்டு பெனாசிர் கிளம்பியபோது அவர் மீது துப்பாக்கச் சூடு நடந்தது. இதில் அவரது கழுத்தில் குண்டு பாய்ந்தது.

அதைத் தொடர்ந்து மிக சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
அதில் பெனாசிர் படுகாயமடைந்தார். மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்படும்போதே அவர் பலியானார். மனித வெடிகுண்டு மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மாலை 6.15 மணியளவில் இச் சம்பவம் நடந்தது.

பெனாசிருக்கு பாகிஸ்தானின் பழமைவாதிகளும், அல்-கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ராணுவத்திலும் அவருக்கு எதிரிகள் அதிகம்.

இந்த குண்டுவெடிப்பில் மேலும் 20 பேர் பலியாகியுள்ளனர்.


thatstamil 27/12/07

இரங்கல்.

பயங்கரவாத செயலுக்கு கண்டனம்.

Friday, December 21, 2007

விபரமறிந்த ஆண்டி!

மக்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை: ஜெ. தாக்கு

சனிக்கிழமை, டிசம்பர் 22, 2007

சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. யாரும் மக்களுக்கு உதவி செய்யவில்லை. கேட்பாரற்றுக் கிடக்கிறது தமிழகம். இங்கு ஒரு அரசாங்கம் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக இளைஞரணி மாநாடு பயங்கர அராஜகத்தோடும், அதிகார துஷ்பிரயோகத்தோடும் எவ்வளவு தீமைகளை நடத்த முடியுமோ அவ்வளவு தீமைகளோடும் நடந்து முடிந்துள்ளது.

மாநாடு என்ற பெயரில் கருணாநிதி தனது மகனுக்கு முடிசூட்ட விரும்பி நடத்தப்பட்ட இந்த மாநாடு, பெரும் தோல்வியில் முடிந்துள்ளது. மு.க.ஸ்டாலின் தான் இனி முதல்வர் அல்லது துணை முதல்வர் என்று அறிவிக்க விரும்பியே திருப்புமுனை மாநாடு என்று கூவிக்கூவி அழைத்தார்கள்.

ஆனால் கருணாநிதி குடும்பத்து அண்ணன் 'செங்குட்டுவனால்' மாநாட்டின் முடிவு முறியடிக்கப்பட்டதால் எனக்கு பிறகு ஸ்டாலின் என்று அடையாளம் காட்டும் விழாவாக மட்டுமே நடந்து முடிந்திருக்கிறது.

பேரப் பிள்ளைகளை பெற்று தாத்தாவாகி விட்ட ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவதற்காக இந்த இளைஞர் மாநாடு நடத்தப்பட்டிருப்பதாக மக்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மாநாடு என்ற பெயரில் அறுவறுக்கத்தக்க அராஜக நிகழ்ச்சிகள்தான் நடந்துள்ளன. மாநாடு நடந்த இரண்டு நாட்களும் போக்குவரத்து வசதியின்றி மக்கள் அடைந்த துன்பங்கள், வீண் ஆடம்பரம், கலாச்சார சீர்கேடுகள் ஆகியவை தான் அரங்கேறியிருக்கின்றன.

தனியார் பஸ்கள் சேதம்:

மாநாட்டுக்காக தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பேருந்துகள் நெல்லைக்கு வரவழைக்கப்பட்டன. அரசு பேருந்துகளும் பெருமளவில் இயக்கப்பட்டன.

இவற்றில் 186 அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பயங்கரமாக நாசம் செய்யப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. மேலும் பல பேருந்துகள் இதுபோல நாசம் செய்யப்பட்டுள்ளாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து எதிர்க்கட்சிகளுக்குத் தெரிய வந்து பேருந்து உரிமையாளர்களிடம் புகார் தருமாறு கூறியபோது, சேதமடைந்ததற்கான இழப்பீட்டுப் பணத்தைக் கொடுத்து விட்டனர். மீறி புகார் செய்தால், பேருந்துக்கான பெர்மிட்டையே ரத்து செய்து விடுவார்கள் என்று கூறி உண்மையை மறைத்து விட்டனர்.

ஜெனரேட்டர் போட்டுதான் மின்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பெயருக்குக் கூறி விட்டு, பெரும்பாலான இடங்களில் கொக்கி போட்டுத்தான் மின்சாரத்தை எடுத்துள்ளனர்.

திமுகவினரை தங்க வைக்க பல பகுதிகளில் உள்ள பள்ளிகளின் நிர்வாகிகள் மிரட்டப்பட்டிருக்கிறார்கள். இதனால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் மாணவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர்.

திமுகவினர் தங்க இடம் மறுத்த காரணத்திற்காக பல பள்ளிகள் பெரும் நாசத்திற்கு ஆளாகியுள்ளன.

மழையால் மக்கள் பாதிப்பு:

நாட்டில் இன்று யாத மழை, தொடர் வெள்ளப்பெருக்கு, சாவு எண்ணிக்கை 40க்கு மேல் உயர்ந்துவிட்டது. வீடுகளை இழந்த மக்கள் தங்கும் இடம், உணவு, குடிதண்ணீர் ஆகியவற்றிற்கு ஆலாய் பறக்கிறார்கள்.

வீடுகளில் கழிவுநீர், வெள்ள நீர் புகுந்து அவற்றை வெளியேற்ற முடியாமல் திணறுகின்றனர். சாலைகள் சேதமடைந்து வெள்ளத்தால் பாலங்கள் உடைபட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. யாரும் மக்களுக்கு உதவி செய்யவில்லை.

கேட்பாரற்று தமிழகம் கிடக்கின்றது. தமிழகத்தில் ஒரு அரசாங்கம் நடைபெறுகிறதா என்று சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. என்னுடைய ஆட்சியாக இருந்தால் இந்நேரம் மழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டிருப்பேன்.

ஓய்வெடுக்கும் ஸ்டாலின்:

ஆனால் மாநாடு நடத்திய களைப்பில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.லின் கேரளாவில் சுற்றுலா தலமான குமரக்கோமில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். கருணாநிதியோ டெல்லிக்குப் பறந்திருக்கிறார்.

வெள்ளப் பகுதிகளை எந்த அமைச்சரும் எட்டிப் பார்க்கவில்லை. மக்களைப் பற்றி இவர்களுக்கு என்ன கவலை? இவர்கள் செய்கின்ற அக்கிரமங்களை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது. கூடிய விரைவில் மக்கள் இவர்களை தூக்கி எறிவார்கள் என்பது திண்ணம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

நன்றிங்க

நேரந்தெரிஞ்சி சங்கூதுறவன் தான் வெவரந்தெரிஞ்ச ஆண்டின்னு சொல்லுவாங்க.

தத்துப் பிள்ளைக்கு கோலகலமாக கல்யாணம் நடத்தியதை ஜெ ஆன்ட்டி மறந்திட வேண்டாம்.

நீங்க எல்லாரும் ஒரு குட்டையில் ஊறின மட்டைகள் என்பதை அப்பாவி பொது மக்கள் மறக்கவில்லை!

உங்கள் கருத்துக் கணிப்பில்...

சிறந்த முதல்வர் எம்.ஜி.ஆர். - கருணாநிதிக்கு 3வது இடம்!

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 21, 2007

சென்னை: தமிழகத்தில் இதுவரை இருந்த முதல்வர்களிலேயே மறைந்த எம்.ஜி.ஆர்தான் சிறந்தவர் என லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. கருணாநிதிக்கு 3வது இடமும், ஜெயலலிதாவுக்கு 4வது இடமும் கிடைத்துள்ளது.

சென்னை லயோலா கல்லூரியின் சார்பில் அவ்வப்போது கருத்துக் கணிப்பு நடத்தப்படும். நடப்பு அரசியல், சமூக பிரச்சினைகளை மையமாக வைத்து இந்தக் ககருத்துக் கணிப்புகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு கருத்துக் கணிப்பை லயோலா கல்லூரி நடத்தியுள்ளது. பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் தமிழகத்தில் 350 இடங்களில் 3281 பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இதன் முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் வெளியிட்டார். இதில் தமிழகத்தில் இதுவரை இருந்த முதல்வர்களிலேயே சிறந்தவர் எம்.ஜி.ஆர்.தான் என்று பெருவாரியான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடத்தை பெருந்தலைவர் காமராஜர் பெறுகிறார். 3வது இடத்தில் முதல்வர் கருணாநிதி உள்ளார். 4வது இடத்தில் ஜெயலலிதா இருக்கிரார். பேரறிஞர் அண்ணாவுக்கு 5வது இடம் கிடைத்துள்ளது.

திமுக ஆட்சி மீது திருப்தி:

கடந்த ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சி நன்றாக உள்ளதாக 51.2 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக ஆட்சியின் பல்வேறு நலத் திட்டங்களுக்கும் மக்களிடையே நல்ல ஆதரவு இருப்பதும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அதேசமயம் திமுகவுக்கு கடந்த கருத்துக் கணிப்பில் இருந்ததை விட இம்முறை கணிசமாக மக்கள் ஆதரவு குறைந்துள்ளதாகவும், அதிமுகவுக்கு கடந்த முறையை விட இந்த முறை கணிசமான ஆதரவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்து அரவணைத்துச் சென்றால்தான் திமுக அரசு முழுமையாக பதவிக்காலத்ைதப் பூர்த்தி செய்ய முடியும் என 18.5 சதவீதம் பேர் கருத்து ெதரிவித்துள்ளனர்.

சாதிப்பார் விஜயகாந்த்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களிடையே நல்ல ஆதரவு காணப்பட்டது. எதிர்காலத்தில் அவர் பெரும் சாதனை படைப்பார் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுளாக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தேமுதிக செயல்படுவதாக 48.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசியலில் விஜயகாந்த் பெரும் சக்தியாக வருவார் என்று 47.9 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், சரத்குமாருக்கு மக்களிடையே ஆதரவு இல்லை. அவர் அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார் என வெறும் 4.3 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர். கார்த்திக்குக்கு 4.1 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. டி.ராஜேந்தருக்கு 1.3 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அடுத்த முதல்வர் ஜெயலலிதா:

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு 32.1 சதவீதம் பேர் ஜெயலலிதா என்று கூறியுள்ளனர். மு.க.ஸ்டாலினுக்கு 27.9 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. விஜயகாந்த் 24.3 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது. தயாநிதி மாறனுக்கும் இதில் இடம் கிடைத்துள்ளது. அவருக்கு ஆதரவாக 6.2 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் பட்டியலில் டாக்டர் ராமதாஸுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.

ரஜினி வர மாட்டார்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அவர் சினிமாவிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டும் என 45.2 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆன்மீகத்தில் ஈடுபடுவார் என 23.8 சதவீதம் பேரும், அரசியலுக்கு வர வேண்டும் என 11.3 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அன்புமணிக்கு ஆதரவு:

கட்டாய கிராமப்புற சேவையை அறிமுகப்படுத்த தீவிரம் காட்டும் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.

இந்த திட்டம் சரியானதே என்று 82.7 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இது நிச்சயம் பாமக தரப்புக்கு சந்தோஷம் கொடுக்கும் செய்தியாகும்.

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என 72.4 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே ராமர் பாலம் தொடர்பான சர்ச்சையில், மக்கள் சேது சமுத்திரத் திட்டம் பக்கம் இருப்பது தெரிய வருகிறது.

அடுத்த பிரதமர் சோனியா:

சோனியா காந்திதான் அடுத்த பிரதமராக வருவார் என 40 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 10.6 சதவீதம் பேரும், அத்வானிக்கு 6.6 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்திற்கு இடைத் தேர்தல் வருவதை தைரியமாக ஆதரிக்கும் கட்சிகள் எதுவும் இல்லை என்று 53.8 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என 53.4 சதவீதம் பேர் கருதுகின்றனர். 19.3 சதவீதம் பேரின் ஆதரவே பாஜக கூட்டணிக்குக் கிடைத்துள்ளது.

நன்றிங்க

போட்டி பொறாமையை வளர்த்து வன்முறையில் இறங்கியாவது அடுத்தவனை வெற்றி கொள்ள வேண்டும் என்ற வெறியை வளர்ப்பது இந்த கருத்துக் கணிப்பு.

உங்கள் கருத்துக் கணிப்பில் தீயை வைக்க...!

ஒட்டகம் வெட்ட தடை இல்லை!

பக்ரீத்: ஒட்டகம் வெட்ட தடை இல்லை

வியாழக்கிழமை, டிசம்பர் 20, 2007

சென்னை: பக்ரீத் பண்டிகையொயைட்டி ஒட்டகத்தை பலி கொடுக்க தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பக்ரீத் பண்டிகையின்போது, ஆடுகள், ஒட்டகங்களை பலியிடப்படுவது வழக்கம். குர்பானி என்று இதற்குப் பெயர்.

கடந்த ஆண்டு தமிழகத்தில் ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டு குர்பானி கொடுக்கப்பட்டன. இதை எதிர்தது பிராணிகள் நலவாரியம், பல்வேறு அமைப்பினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஒட்டகம் வெட்ட தடை விதித்தது. பின்னர் சில நிபந்தனைகளுடன் ஒட்டகத்தைப் பலி கொடுக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போதும் ஒட்டகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தவ்ஹீத் ஜமாத் கட்சி சார்பில் நான்கு ஒட்டகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன

இதையடுத்து கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்த வக்கீல் ராஜேந்திரன் ஏற்கனவே இந்த வழக்கு நிலுவையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகி இதுதொடர்பாக முறையிட்டார்.

அவர் கூறுகையில், இந்த ஆண்டு 80 ஒட்டகங்களை குர்பானி கொடுக்க கொண்டு வந்துள்ளனர். எனவே இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், இதை அவசர மனுவாக கருதி விசாரிக்க வேண்டும் எனவும் கோரினார்.

ஆனால் ஒட்டகம் வெட்டி குர்பானி கொடுப்பது மத வழக்கம் என்பதால் இதற்குத் தடை விதிக்க முடியாது. மேலும் இதை அவசர வழக்காகவும் விசாரிக்க முடியாது என்று கூறி நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சசீதரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

நன்றிங்க

வளர்ப்பு பிராணிகளில் ஆடுகள், மாடுகள் போல் ஒட்டகமும் ஒரு வளர்ப்புப் பிராணி.

மதசார்பற்ற பாரத நாட்டில் அவரவர் மதத்தைப் பின்பற்ற எல்லா மதத்தினருக்கும் சுதந்திரம் உண்டு. பக்ரீத் பெருநாளில் ஆடு, மாடுகளைப் பலியிடுவது போல ஒட்டகத்தையும் பலியிடலாம் என்பது இஸ்லாமிய மதத்தின் வழிமுறை என்பது வழக்கு தொடுத்த வழக்குரைஞர் ராஜேந்திரனுக்குத் தெரியாமல் போய்விட்டது.

என்னவோ அவர் வீட்டு ஒட்டகத்தை அநியாயமாக அபகரித்து பலியிடுகிற மாதிரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

முஸ்லிம்கள் விலை கொடுத்து வாங்கிய பிராணிகளையே பலியிடுகிறார்கள் இதில் தலையிட்டு தடை செய்ய எவருக்கும் எந்த உரிமையும் இல்லை! இதை ராஜேந்திரன் போன்றவர்கள் உணர வேண்டும்.

Thursday, December 20, 2007

தண்ணீர் தேசம.

தண்ணீர் தேசமான தமிழகம் - மழைக்கு 33 பேர் பலி - இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

வியாழக்கிழமை, டிசம்பர் 20, 2007

சென்னை: தமிழகம் முழுவதும் கொட்டித் தீர்த்த கன மழையால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகி விட்டன. மழைக்கு இதுவரை 33 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

வட கிழக்குப் பருவ மழைக் காலம் தொடங்கியது முதல் சரிவர மழை பெய்யாமல் இருந்து வந்தது. ஆங்காங்குதான் மழை பெய்து வந்தது. ஆனால் பருவ மழைக் காலம் முடியப் போகும் தருவாயில், வானம் உடைப்பெடுத்து, தமிழகத்தை தத்தளிக்க வைத்து வருகிறது.

கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தின் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழை புரட்டி எடுத்து வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 4 நாட்களாக நிற்காமல் பெய்து வரும் பலத்த மழையால் தமிழகமே தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நகரமே தண்ணீரில் மிதக்கிறது. பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடிக் கொண்டிருக்கிறது. புறநகர்ப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து தீவுகள் போல மாறியுள்ளன.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான,பூண்டி நீர்த்தேகம் நிரம்பியுள்ளது. இதையடுத்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் தொடர்ந்து தாமதமாகவே வந்து கொண்டுள்ளன. இதேபோல, திருச்சி, மதுரை, நெல்லையிலும் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கண்ணீரில் மிதக்கும் காவிரி விவசாயிகள்:

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி விட்டன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையும், சோகமும் அடைந்துள்ளனர். லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.

சீர்காழி, நாகப்பட்டனம், பூம்புகார், தலைநகர், கோடியக்கரை ஆகிய பகுதிகளில் பல கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு தீவுகள் போல ஆகியுள்ளன.

பல கிராமங்களில் வீடுகள் இடிந்தும், சுவர்கள் இடிந்தும் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

வயர்கள் அனைத்தும் குளங்கள் போல மாறிக் கிடக்கின்றன. தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் மட்டும் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கின்றன.

மிதக்கும் விருத்தாச்சலம் பஸ் நிலையம்:

காவிரி டெல்டா மாவட்டங்களுக்குப் பிறகு அதிக பாதிப்பை சந்தித்துள்ள மாவட்டம் கடலூர்தான்.

இங்கு பெரும்பாலன பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. நெய்வேலி அணல் மின் கழகத்தில், சுரங்கத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

விருத்தாச்சலத்தில் வெள்ளம் மக்களை பாதித்துள்ளது. அங்குள்ள பேருந்து நிலையம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மணிமுத்தாறில் வெள்ள் கரைபுரண்டோடுகிறது. இதனால் மணிமுத்தாறில் உள்ள தரைப்பாலம் மூடி விட்டது. இதன் காரணமாக கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 250 கிராமங்களுக்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது நீர்மட்டம் 46 அடியாக உள்ளது. ஏரியின் கரைகள் பலவீனமாக இருப்பதால் கரை உடைந்து பெரும் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள பெரிய ஏரி நிரம்பி விட்டது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது அருகில் உள்ள 5 கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் வெள்ளம் மக்களைப் பாதித்துள்ளது. திருவண்ணாமலையில், உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்குள் நீர் புகுந்தது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் மீட்பு நடவடிக்கைக்கு ஒரு அதிகாரியும் வராததால் அவர்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்தனர்.

ரிஷிவந்தியம் பகுதியில் ஏரி, குளங்கள் மழையால் நிரம்பி வழிகின்றன. பகண்டையை அடுத்த எகால் கிராமத்தில் ஏரி உடைந்து, நூறு ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது.

கரையாம்பாளையம் கிராமத்தில் குளம் உடைந்ததால், தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. ஏழு வீடுகள் இடிந்து தரைமட்டமானது. அறுவடை செய்து அடிப்பதற்கு தயாராக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் கட்டுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

மரூர் பாப்பாந்தாங்கள் ஏரியில் இருந்து வழிந்த தண்ணீர் திருக்கோவிலூர் -சங்கராபுரம் சாலையில் கடம்பூர் அருகே ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பெருக்கெடுத்து ஓடியது. திருக்கோவிலூரில் இருந்து சங்கராபுரம் சென்ற ஒரு அரசு பஸ் வெள்ளத்தில் சிக்கியதால், இப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

உடுமலைப்பேட்டையில் இருவர் பலி:

உடுமலைப்பேட்டையில் வீடு இடிந்து முறுக்கு வியாபாரிகளான நாகராஜன், பிரபு ஆகியோர் பலியானார்கள். தேனி மாவட்டம் அழகாபுரியில் மின்சாரம் தாக்கி தாயும், மகனும் உயிரிழந்தனர்.

சென்னை அருகே ஆ.முல்லைவாயில் என்ற இடத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கோபி என்பவர் உயிரிழந்தார். திருவள்ளூர் மணலி புதி நகர் பகுதியில் மாடி வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் பலியானார்.

இதுவரை மழைக்கு 33 பேர் பலியாகியுள்ளனர். சென்னை, திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேரும், தஞ்சை, திருவண்ணாமலையில் தலா 3 பேரும், விழுப்புரம், மதுரை, திருவள்ளூர், சேலம், தேனி, கோவையில் தலா 2 பேரும், புதுக்கோட்டை, தர்மபுரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:

இதற்கிடையே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, திருவாரூர், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

இதற்கிடையே மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும், தரைக்காற்று பலமாக இருக்கும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

நன்றிங்க

Tuesday, December 18, 2007

இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

யு.ஏ.இவில் தவித்த ஹஜ் பயணிகள்

புதன்கிழமை, டிசம்பர் 19, 2007

துபாய்: மெக்காவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இறக்கி விடப்பட்ட கிர்கிஸ்தான் ஹஜ் யாத்ரீகர்கள், அங்கிருந்து மெக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கிர்கிஸ்தானைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் அந்நாட்டைச் சேர்ந்த பயண ஏற்பாட்டாளரால் ஏமாற்றப்பட்டு சுற்றுலா விசாவில் புஜைராவில் இறக்கி விடப்பட்டனர்.

புஜைராவில் இறக்கி விடப்பட்ட அவர்கள் தாங்கள் வந்திருப்பது புனித மக்கா என நினைத்து அல்லாஹ¤ அக்பர் எனும் முழக்கத்துடன் வெளியே வந்தவர்களுக்கு ஏமாற்றம்.

பின்னர் இதனையறிந்த செம்பிறைச் சங்கம் அவர்களை பல்வேறு இடங்களில் தங்க வைத்து உணவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அளித்தது. மேலும் சவுதி அரேபியா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. இதற்கு ஷேக் கலீபா பவுண்டேஷன் மற்றும் சில தனவந்தர்கள் உதவி புரிந்தனர்.

தாங்கள் அமீரக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்த பயணிகள் நாடு திரும்பியதும் தங்களை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்படும் என தெரிவித்தனர்.

நன்றிங்க

மக்களின் ஆன்மீக ஆர்வத்தைப் பயன்படுத்தி வணக்க வழிபாடு என்ற பெயரால் ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்யும் கயவர்களை வன்மையாக தண்டிக்க வேண்டும்.

Saturday, December 15, 2007

வம்சாவளி இந்தியர் கைது விவகாரம்...

வம்சாவளி இந்தியர் கைது விவகாரம்: `எங்கள் நாட்டு சட்ட நடவடிக்கைகளில் தலையிட வேண்டாம்' அமெரிக்காவுக்கு மலேசிய துணை பிரதமர் பதில்

கோலாலம்பூர், டிச.16-

வம்சாவளி இந்தியர்கள் 5 பேரை கைது செய்தது தொடர்பாக அமெரிக்கா தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த மலேசிய துணை பிரதமர் நாஜிப் ரசாக், `எங்கள் நாட்டு சட்ட நடவடிக்கைகளில் தலையிட வேண்டாம்` என்று மலேசிய துணை பிரதமர் நாஜிப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா கருத்து

மலேசியாவில் வாழும் வம்சாவளி இந்தியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை முன் நின்று நடத்திய `இந்த்ராப்` அமைப்பைச் சேர்ந்த 5 பேரை `உள்நாட்டு பாதுகாப்பு சட்ட`த்தின் கீழ் மலேசிய அரசு கைது செய்தது. இந்த சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களை விசாரணையே இல்லாமல் குறைந்தது இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கலாம்.

இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது. வாஷிங்டனில் கடந்த வியாழன் அன்று பேட்டி அளித்த அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் சீன் மெக்கார்மக், "மலேசியாவில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் சட்டப் பூர்வமாக வாதாடும் உரிமை வழங்கப்படும் என்று நம்புகிறோம். அவர்கள் மீதான விசாரணை விரைவாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்'' என்றார்.

துணை பிரதமர் பதில்

அமெரிக்காவின் இந்த கருத்துக்கு மலேசிய துணை பிரதமர் நாஜிப் ரசாக், கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையை `நியு ஸ்ட்ரைட்ஸ் டைம்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
போராட்டத்தை ஆரம்பித்த போதே, மலேசியாவில் உள்ள மக்கள் சட்டத்துக்கு கீழ் பணிந்து நடக்க வேண்டும் என்றும் சட்டத்தை விட மேலானவர்கள் யாரும் கிடையாது என்றும் கூறினோம். இதை அறிவுரையாகவும் பின்னர் எச்சரிக்கையாகவும் தெரிவித்தோம். எனவே உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் பாய்ந்ததில் ஆச்சரியம் எதுவும் கிடையாது.

குவாண்டனமோ சிறை

கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரும் தங்களை சட்டப்பூர்வமாக பாதுகாத்து கொள்ள மலேசிய சட்டப்படி தேவையான வாய்ப்புகள் தரப்படும். பிற மலேசிய குடி மக்களுக்கு அளிப்பது போலவே அவர்களுக்கும் அனைத்து உரிமைகளும் தரப்படும். அந்த உரிமைகளும் விரைவாகவும் வெளிப்படையாகவும் நடைபெறும்.

எனவே, அமெரிக்கா எதுவும் கூறத் தேவையில்லை. முதலில் `குவாண்டனமோ கடற்படை தள'த்தில் அவர்கள் அடைத்து வைத்துள்ள அனைவருக்கும் நியாயமான விசாரணையை வழங்கட்டும். அதன் பிறகு அவர்கள் கூறும் கருத்துகளுக்கு நாங்கள் மரியாதை அளிக்கிறோம். இவ்வாறு நாஜிப் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் வெளிநாட்டினரை கிïபா நாட்டில் உள்ள `குவாண்டனமோ வளைகுடா கடற்படை தள'த்தில் அமெரிக்கா அடைத்து வைத்துள்ளது. அங்கு அடைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு எந்த விசாரணையும் கிடையாது. அதைத்தான் நாஜிப் குறிப்பிட்டு, மலேசிய விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் உறுதி

இதற்கிடையே, மலேசிய இந்து கவுன்சில் என்ற அமைப்பின் தலைவர் நடராஜா தலைமையில் 14 அமைப்புகளை சேர்ந்த வம்சாவளி இந்தியர்கள், மலேசிய பிரதமர் அப்துல்லா படாவியை நேற்று முன்தினம் சந்தித்தனர். கைது நடவடிக்கைக்கு பிறகு இந்த சந்திப்பு நடந்தது.

அப்போது அவர்களிடம், வம்சாவளி இந்தியர்களின் குறைகளை கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். சந்திப்புக்கு பிறகு, நடராஜா இந்த தகவலை தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது மலேசிய மந்திரியும் வம்சாவளி இந்தியருமான சாமிவேலு உடன் இருந்தார்.

நன்றிங்க

அடுத்தவருக்கு அறிவுரை சொல்வதற்கு முன் முதலில் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும்.

என்ன நாஞ்சொல்றது...!

என்னதான் நடக்கிறது மலேசியாவில்...?

திரு. வீரபாண்டியன் (சன் டி.வி அரசியல் விமர்சகர்) சிங்கப்பூர் வானொலி முன்னாள் தயாரிப்பாளர்)

இந்தியாவைப் போலவே மலேஷியாவும் பிரிட்டிஷ் காலனி நாடாயிருந்தது. பின்னர் 1957 ஆகஸ்டில் விடுதலை பெற்றது. மலாயாவுக்கு (மலேஷியாவின் பழைய பெயர்) விடுதலை கொடுத்து விட்டு நாட்டை விட்டு வெளியேறும் போது, ஆங்கிலேயர்கள் ஒரு முக்கிய மான நிபந்தனையை விதித்தனர். 'உழைப்புக் கூலிகளாக இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் கொண்டு வரப்பட்டு மலாயா மண்ணையே தங்கள் வாழ்விடமாக ஏற்று வாழ்ந்து வரும் இந்திய, சீன வம்சா வழி மக்களுக்கும் பூர்வீக மலாய் மக்களைப் போல குடியுரிமை வழங்க வேண்டும்' என்பது தான் அந்த நிபந்தனை. மலாயாவின் அன்றைய தேசியத் தலைவர்கள் இதனை மனமுவந்து ஒப்புக் கொண்டனர். அதன்படி சுதந்திரத்துக்கு முன்னர் யார், யாரெல்லாம் மலாயாவில் வாழ்ந்து வந்தார்களோ அவர்கள் அனைவருக்கும் இனப் பாகுபாடின்றி குடியுரிமை வழங்கப்பட்டது.

பிரிட்டீஷ் ஆட்சியின் போது இந்தியாவிலிருந்து கப்பலில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்ட தமிழ் தொழிலா ளர்கள் ஏராளமான உரிமைகளையும் வாழ்க்கை வசதிகளையும், மேம்பாடு களையும் அடைந்து மேன்மையோடு வாழத் தலைப்பட்டனர். அந்த நாட்டின் பூர்வீகத் தாய்மொழியான மலாய் மொழி தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறவியிலேயே மொழி வல்லமை மிக்குடையவர்களான தமிழர்கள் மலாய் மொழியைக் கற்றுத் தேர்ந்து பூர்வீகக் குடிகளோடு இரண்டறக் கலந்தனர். பள்ளிகளில் சீனமொழியும், தமிழும் பாடமொழியாகப் பயிற்றுவிக்கப் பட்டது. சிறுபான்மைச் சமுதாயமான மலாய் அல்லாதார் தங்கள் மொழியை ஒரு பாடமாகப் பயில அனுமதிக்கப் பட்டனர். தமிழ் வானொலியும், தொலைக் காட்சியும் இருபத்து நான்கு மணிநேரமும் இன்னிசை முழங்கி இன்பத்தில் ஆழ்த்துகின்றன. திரையரங்குகளில் தமிழ்ப்படங்கள் கொடிகட்டிப் பறக் கின்றன. தமிழ்நாட்டுக் கலைஞர்களும், பேச்சாளர்களும் அடிக்கடி அங்கே சென்று பைந்தமிழ் முழங்கிப் பரவசப் படுத்தி விருந்துண்டு வெற்றியோடு திரும்புகின்றனர்.

இந்தியத் தமிழர்கள் ஏராளமானோர் இப்போது மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாவும் கொடிகட்டிப் பறக்கின்றனர். அந்த நாட்டின் மிகச் சிறந்த கல்விமான்களில் பலர் தமிழர்கள் என்பது உலகறிந்து உண்மை. நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் வார்த்தையில் சொல்வதாயிருந்தால் 'தாய் நாட்டுத் தமிழனை விட மலேஷியத் தமிழன் மகிழ்ச்சியாயிருக்கிறான்'. அந்தச் சின்னஞ்சிறு நாட்டில் வெளிவரும் தமிழ் நாளிதழ்களின் எண்ணிக்கை மட்டும் 3. தமிழ் வார இதழ்கள் ஆறும், மாத இதழ்கள் ஏழும் வெளிவருகின்றன. மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் மட்டும் 14க்கும் மேற்பட்ட திரையரங்கு களில் தமிழ்ப்படங்கள் திரையிடப்படு கின்றன. நாடு முழுவதும் ஏறத்தாழ 30 அரங்குகளில் தமிழ்ப்படங்கள் வருடம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கின்றன.

மலேஷியத் தமிழர்களின் நலனுக்காகவே தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் மலேஷிய இந்தியன் காங்கிரஸ் (ம.இ.கா) இதன் புகழ் பூத்த தலைவராயிருக்கும் டத்தோ ஸ்ரீ சாமிவேலு, அந்த நாட்டின் கேபினட் மந்திரியாயிருக்கிறார். இவரோடு திரு. பழனிவேலு போன்ற மேலும் மூன்று பேர் துணை அமைச்சர்களாயிருக்கின்றனர். இவர்களை அல்லாமல் 3 பேர் நாடாளு மன்ற உறுப்பினர்களாகயிருக்கின்றனர். சிற்றூர்களிலும், நகராட்சிகளிலும் பல முக்கியமான பொறுப்புகளைத் தமிழர்கள் வகிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். அந்த நாட்டின் தலைமை நீதிபதியாகவே 'அஜித் சிங்' என்னும் இந்தியர் பணியாற்றி ஓய்வு பெற்றார். மேலும் பலர் நீதிபதிகளாக இப்போதும் பணியாற்றுகின்றனர். நாடாளுமன்ற செயலர்களாக (parliment secreatary) நம்மவர்கள் பலர் சிறப்பாகச் செயலாற்றுகின்றனர்.

1965ஆம் ஆண்டு வரை ஒரு மாநில மாயிருந்த சிங்கப்பூர், தனி நாடாகப் பிரிந்து சென்றது. அது முதல் உலக வரைபடத்தில் சிங்கப்பூர் குபேரபுரியாகக் கோலோச்சத் தொடங்கியதைக் கூறத் தேவையில்லை. சிங்கப்பூரில் தமிழ் ஓர் அதிகார மொழியாக அங்கீகரிக்கப் பட்டது. நாணயத்தில் தமிழ் பொறிக்கப் பட்டது. சீனர்களுக்கு மட்டுமல்ல: எல்லா இன மக்களுக்கும் பொதுவான நாடு' என்று சிங்கப்பூர் பிரதமர் சொல்லி மகிழ்ந்தார். ஆனால், மலேசியா தனது மலாய் மொழியையே ஆட்சி மொழி யாக்கி அழகு பார்த்தது. அந்த மொழியைக் கற்றவர்கள் மட்டுமே அதிகாரத்துக்கும், அரசுப் பதவிகளுக்கும் வர முடியும் என்ற நிலை வந்தது.

மலேஷியாவின், மண்ணின் மைந்தர் கள் (பூமி புத்ரா) எனப் பூர்வீகக் குடிமக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டனர். அவர்கள்,
1. பரம்பரை, பரம்பரையாக மலேஷியா வில் வாழ்வோராயிருக்க வேண்டும்.
2. மலாய் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டிருக்க வேண்டும்.
3. இஸ்லாத்தைச் சேர்ந்தவர்களா யிருக்க வேண்டும்.
இந்த விதிகளுக்குள் வருவோர் மட்டுமே, 'பூமி புத்ரா' என அழைக்கப் படுவர். இந்த விதிகளை வகுத்ததோடு மட்டுமின்றி, மலேஷிய அரசாங்கம், தங்களுடைய நாட்டை ஓர் இஸ்லாமிய நாடு எனப் பிரகடனப்படுத்திக் கொண்டது. சட்ட பூர்வமான மத வழிப்பட்ட இஸ்லாமிய நாட்டில் அரசாங்கத்தின் மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே முன்னுரிமை பெறுவது உலகெங்கும் நடைமுறையில் உள்ளதுதான்.

நிலைமை இவ்வாறிருந்தும், பூர்வீகக் குடிமக்களான மலாய் மக்கள் மத்தியில் மன நிறைவு இல்லாமலிருந்தது. அதற்குக் காரணம் அந்தச் சமூக மக்கள் பெரும் பாலும் கடற்கரை ஓரங்களில் மீன்பிடித் தொழிலைச் செய்து படிப்பும், முன்னேற்ற முமில்லாமல் வாழ்ந்ததுதான். இயற்கையி லேயே ஊக்கம் மிகுந்த சமூகமான சீனர்களும் இந்தியர்களும் வர்த்தகத் திலும், வேலை வாய்ப்பிலும் மிக முன்னணிக்கு வரத் தொடங்கினர். பொதுத் தேர்தல்களில் நகர்ப் புறங்களில் சீனர்களே வெற்றி பெற்றனர். இவற்றைக் கண்ட மலாய் சமூகத்தினரை தங்கள் எதிர்காலம் பற்றிய அச்சம் ஆட் கொண்டது. கல்வியிலும், வேலை வாய்ப் பிலும் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை வேண்டுமெனப் போராடினர்.

1969 ஆம் ஆண்டு மே 13 அன்று மலேசியாவில் மிகப்பெரிய இனக்கலவரம் வெடித்தது. பெரும்பான்மை மலாய் மக்களுக்கும், சீனர்களுக்கும் ரத்தவெறி கொண்ட யுத்தம் நடந்தது. தெரு வெல்லாம் பிணங்கள் விழுந்தன. இறுதியில் அரசாங்கம் மலாய் மக்களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 30 விழுக்காடு இட ஒதுக் கீட்டைச் செய்தது. 26 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் எட்டு விழுக்காட்டினராயிருக்கும் இந்தியர் களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் 4 சதவீதம் ஒதுக்கியது மலேசிய அரசு. கலவரம் நடந்த அந்த நாளை இன்று வரை மலேசிய வரலாற்றில் 'கறுப்பு நாள்' என்று அழைக்கின்றனர்.

போராட்ட உணர்ச்சியோடு போர்க் கோலம் பூண்ட பூர்வீகக் குடிமக்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்த மலேசிய அரசு, இந்திய சீன சிறுபான்மை மக்களுக்கும் நியாயம் வழங்கித்தானிருக்கிறது. இலங்கையைப் போலவோ, ஏனைய உலக நாடுகளில் தமிழர்களுக்கு நிகழ்ந்ததைப் போலவோ 'இன ஒதுக்கல்' எதுவும் அங்கே நடைபெறவில்லை. திரைகடலோடித் திரவியம் தேடச் சென்ற நமது தமிழர்கள் இன்று வரை இங்கே வந்து போய்க் கொண்டிருக்கின்றனர். சம்பாதிக்கிற செல்வத்தைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் தான் சொத்துகளை வாங்குகின்றனர். கூத்தாநல்லூர், கடைய நல்லூர், தோப்புத்துறை போன்ற வட்டாரத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் தமிழ் மண்ணுக்கு ஏராளமான வருவாயை ஈட்டிக் கொடுக்கின்றனர். அந்த நாட்டில் சம்பாதிப்பதை வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது என்கிற எந்த நிபந்தனையும் மலேசிய அரசு விதிப்பதில்லை என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இதுதான் மலேஷியாவின் பூர்வ கதை. இப்போது அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை இனி நாம் சற்று ஆழமாய்ப் பார்ப்போம்.

மலேஷியாவின் பிரதானமான தொழிலாய் இருந்த ரப்பர் தோட்டங்கள் லாபகரமாய் இல்லாததால், அவை இப்போது செம்பனைத் தோட்டங்களாக மாற்றப்படுகின்றன. பல தனியார் தோட்டங்கள் அரசுடைமையாக்கப் படுகின்றன. அவ்வாறு அரசுடைமையாக் கப்படும்போது அங்கே குடியிருப்பு வசதிகளை அரசே செய்து கொடுக்கிறது. அந்த இடத்தில் இருந்த கோவில்களோ, பள்ளிவாசல்களோ அகற்றப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. புதிய குடியிருப்புகளில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைத் தொழிலாளர்கள் அமைத்துக் கொள்ள அரசு அறிவுறுத்தியது. பத்து கோவில்கள் இருந்த இடத்தில் ஒரே ஒரு கோவிலுக்கு இடம் கொடுப்பதாக அரசு சொல்கிறது.

உருவ வழிபாட்டில் நம்பிக்கையில்லாத இஸ்லாமிய அரசு, உருவ வழிபாடு கொண்ட இந்து சமயக் கோவில்களைத் தடை செய்ததில்லை. 'செந்தூர் முருகன்' கோவிலும், 'பத்துமலை முருகன் கோவிலு'ம் தைப்பூசவிழா கொண்டாடி மகிழ்கின்றன. நாடெங்கும் ஏராளமான சிறுதெய்வ வழிபாட்டுக் கோவில்களும் பரந்து காணப்படுகின்றன. 59 சதவீத மலாய் முஸ்லிம்கள் இருக்கும் நாட்டில் 4,000 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் 8 சதவீத இந்தியர்கள் வாழும் நாட்டில் 17,000 இந்துக் கோவில்கள் அனுமதிக்கப் பட்டிருக்கின்றன என்பது உன்னதமான வரலாறு அல்லவா? (அரசாங்கமே நிதியுதவி கொடுத்துக் கட்டப்பட்ட மாரியம்மன் கோவில்களில் குடமுழுக்கு நடத்தி பிரதமர் பரிவட்டம் கட்டிக் கொண்ட காட்சியை நாமே பார்த்து ரசித்திருக்கிறோம். இதற்கிடையில் அரசாங்கத்தின் பொது இடங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும் கட்டப்படும் கோவில்களை அரசு அப்புறப்படுத்தத் தானே செய்யும்? அவ்வாறு அத்துமீறிக் கட்டப்பட்ட கோவில்களும் பள்ளிவாசல் களும் ஆயிரக்கணக்கில் அப்புறப் படுத்தப்பட்டதைக் கடந்த காலம் கண்டிருக்கிறது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் அங்கே வாழும் குடியுரிமை பெற்ற தமிழர்கள், இதுநாள் வரை இதைப் பிரச்சினை ஆக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகக் கணினி விற்பன்னர் களாகவும், உயர் தொழில் நுட்பக்காரர் களாகவும் அங்கே சென்ற இந்தியர் சிலர் 'இந்துக் கோவில்களுக்கு ஆபத்து' என்கிற விஷ விதையை ஊன்றத் தொடங்கியிருக்கின்றனர். அவர்களது இந்தக் கருத்தின் உள்நோக்கம் புரியாத பூர்வீகத் தமிழர்களும் இதற்குப் பலிகடா ஆகியிருப்பதுதான் பரிதாபமான செய்தி. மலேஷிய பல்கலைக் கழகத்தில் இந்தியப் பிரிவு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே 'தமிழ் கலை, இலக்கியத்திற்கே இதுகாறும் முக்கியத்துவம் தரப்பட்டு மேம்பாடு காணப்பட்டது. அங்கே அண்மைக் காலத்தில் 'பாரதீயப் பண்பாட்டு விழா' என்கிற விழாவை ஏற்படுத்தி அதில் இந்துத்துவச் சாயல் கொண்ட நிகழ்ச்சிகளையெல்லாம் நடத்தத் தொடங்கினர். 'பாரதீயம்' என்கிற வார்த்தை எத்தகைய பூர்வீகம் கொண்டது என்பதை நாம் விளக்கத் தேவையில்லை. கடந்த 2006 ஆம் ஆண்டில் இப்படிப் பட்ட ஓர் விழாவை ஏற்பாடு செய்து தமிழ்நாட்டிலிருந்து இந்துத்துவச் சிந்தனையாளர்கள் சிலரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்துப் போயிருக்கின்றனர். தமிழகத்திலிருந்து போனவர்கள் 'சமஸ்கிருத ஸ்லோகம்' பஜனைஆன்மீகப் பயிற்சி என்ற வரிசையில் ஆர்.எஸ்.எஸ்.பாணியில் விழாவை நடத்தியிருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேஷியா விலிருந்து தமிழர்கள் சிலரைக் கலாச்சாரப் பயிற்சி கொடுக்கிறோம் என்று சொல்லித் திருச்சிக்கு அழைத்து வந்திருக்கின்றனர். அங்கே அவர்கள் நடத்திய வகுப்புகளில் சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் தமிழர் பண்பாட்டுக்கெதிரான ஆரியத்தின் கூரிய ஆயுதங்கள் என்பதைக் கண்டு கொண்ட மலேஷியத் தமிழர்கள் வகுப்பைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு மலேஷியா திரும்பி விட்டனர். (பெயர்களைச் சொல்வது நல்லதல்ல என்பதால் விடுகிறோம்)

இந்தியர்கள் நலனுக்காகப் போராடுவதாகக் கிளம்பியிருக்கும் இவர்கள் தங்கள் அமைப்புக்கு வைத்திருக்கும் பேர் என்ன தெரியுமா? 'ஹிண்ட்ராஃப்' என்பதுதான். (இந்து மக்கள் உரிமை படை) அதாவது, 'மொழிவழி மக்களான தமிழர்களுக்கான போராட்டமெனில் 'தமிழர் கோரிக்கைக் குழு' எனப் பெயர் சூட்டியிருக்கலாம் அல்லது 'இந்தியர் நலம் நாடும் சங்கம்' எனச் சொல்லியிருக்கலாம். இடையில் 'ஹிந்து உரிமை', எங்கிருந்து வந்தது. ஓர் இஸ்லாமிய நாட்டில் இந்து மதத்தின் பெயரால் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கினால் ஓர் தேசிய அரசு அதை எவ்வாறு பொறுத்துக் கொள்ளும்? துபாய் போன்ற அரபு நாடுகளில் இப்படிப்பட்ட அமைப்பு ஒரு நிமிடம் உயிர் வாழ முடியுமா என்பதை எண்ணிப்பாருங்கள், தென் கிழக்கு ஆசியாவிலேயே மதத்தின் பேரால் ஆளும், மிகச் சிறந்த ஜனநாயக நாடு என மலேஷியா பேர் பெற்றிருக்கிறது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது பிரிட்டிஷ் தூதரகத்திடம் புதிய கோரிக்கை ஒன்றை வைத்துப் போராடு கின்றனர். தங்கள் மூதாதையர்களைத் தமிழ்நாட்டிலிருந்து கப்பலில் உழைப்புக் கூலிகளாக அழைத்து வந்து பிரிட்ஷ் அரசு ஏமாற்றிவிட்டது என்றும், அதற்காக ஒரு தமிழருக்கு 1 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். ஆங்கிலேய ஏகாதிபத்தியம் மலேஷியாவை விட்டுப்போய் அரை நூற்றாண்டாகிவிட்டது. இப்போது இப்படியொரு வினோதமான கோரிக்கை: உலக நாடுகள் இதைப் பார்த்து எள்ளி நகையாடாதா? இந்தக் கோரிக்கையோடு இங்கிலாந்து தூதரகத்திற்கு ஊர்வலம் புறப்பட்ட போதுதான் மலேஷியக் காவல்துறை அவர்களைத் தடுத்து நிறுத்தியது. கலவரம் வெடித்தது. முன் அனுமதி மறுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை ஓர் அரசு எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும்? கடந்த தீபாவளிக்கு முதல் நாள் (2007 அக்டோபர்), அத்துமீறிக் கட்டப்பட்ட ஒரு கோவில் ஒரு பள்ளிவாசல் முப்பத்திரண்டு வீடுகளை அரசு அப்புறப்படுத்தியது. இதுகுறித்தும் 'ஹின்ட்ராஃப்' அமைப்பு ஆத்திரப்படுகிறது.

அன்னிய மண்ணில் வாழப் போன வர்கள் அந்த அரசின் சட்ட திட்டங்க ளுக்கு உட்பட்டே வாழ்க்கை நடத்த வேண்டும். அத்துமீறினால் அல்லல்தான். இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களவர்கள் செய்யும் கொடுமையைப் போன்றதல்ல மலேஷிய நிலை. இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டமும், போர்ப்பாட்டும் தொடரு மானால் எதிர்காலத்தில் இந்தியர்கள் யாருக்கும் அங்கே விசாவோ குடியுரிமையோ கிடைக்காமல் போகலாம். இது கொள்ளிக்கட்டையால் தலையில் எடுத்துச் சொறிந்து கொள்ளும் முயற்சி.

நன்றி: ஜனசக்தி நாளிதழ்

நன்றிங்க

Monday, December 10, 2007

போலி என்கவுண்டரில் 22 பேர் கொலை!!

குஜராத்: போலி என்கவுண்டரில் 22 பேர் கொலை!!

திங்கள்கிழமை, டிசம்பர் 10, 2007

டெல்லி: சொராபுதீன் ஷேக் மட்டுமல்லாது குஜராத்தில் 22 பேர் போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு குஜராத்தை மட்டுமல்லாது நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவம் சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம். அத்தோடு அவரது மனைவியும் கடத்தப்பட்டு உயிரோடு எரித்துக் கொடூரமாக கொல்லப்பட்டதாக பின்னர் தகவல்கள் வெளியாகின

இதுதொடர்பாக ஷேக்கின் சகோதரர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சொராபுதீன் ஷேக் கொல்லப்பட்டது நியாயமானதுதான் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசப் போக இப்போது தேர்தல் பிரச்சினையாக ஷேக் படுகொலை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த நிலையில் ஷேக் மட்டுமல்லாது மொத்தம் 22 பேர் போலி என்கவுண்டர் மூலம் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பதாக புதுத் தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷேக்கைக் கொன்றதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள டிஐஜி வன்சாரா மற்றும் அவரது தலைமையிலான தீவிரவாத தடுப்புப் பிரிவுதான் மற்றவர்களையும் கொன்று குவித்துள்ளது.

அனைவருமே மோடியைக் கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சமீர் கான் பதான், சாதிக் ஜமால், இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக் என மொத்தம் 22 பேர் இந்த போலி என்கவுண்டர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

திரைப்பட இயக்குநர் சுப்ரதீப் சக்ரவர்த்தி என்பவர் Encountered On Saffron Agenda என்ற பெயரில் ஒரு டாக்குமெண்டரியை உருவாக்கியுள்ளார். அதில்தான் இந்த திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சக்கரவர்த்தி கூறுகையில், குஜராத் போலீஸார், லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முஹம்மது தீவிரவாதிகள் என்ற பெயரில் கொன்றவர்கள் அனைவருமே அப்பாவிகள். மோடியைக் கொல்ல முயன்றதாக கூறி இவர்களை குஜராத் போலீஸார் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இதை கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கொடுத்த வாக்குமூலங்கள், அவர்களின் வக்கீல்கள், தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளேன் என்றார்.

இவர்களில் இஷாந்த் ஜஹாவுக்கு 19 வயதுதான் ஆகிறது. மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் இவர். அதேபோல ஜாவேத் ஷேக் என்கிற பிரணீஷ் பிள்ளை, புனேவைச் சேர்ந்த தொழிலதிபர். இருவரும் 2004ம் ஆண்டு ஜூன் மாதம் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.

இந்த டாக்குமெண்டரியில் பேசியுள்ள ஜாவேத் ஷேக்கின் தந்தை கோபிநாதன் பிள்ளை கூறுகையில், சம்பவத்தன்று நான்கு தீவிரவாதிகள் சேர்ந்து போலீஸ் படையினரை சரமாரியாக சுட்டதாக போலீஸார் கூறுகின்றனர். இது எப்படி சாத்தியமாகும். நான்கு பேர் சேர்ந்து மிகப் பெரிய போலீஸ் படையை சுட முடியுமா?

ஜாவேத் வண்டியை ஓட்டியபடியே போலீஸாரை சுட்டாராம். அவருடன் இருந்த ஒரு பெண்ணும் சுட்டாராம். மற்ற இருவரும் கூட போலீஸாரை நோக்கி சரமாரியாக சுட்டார்களாம். ஆனால் இத்தனை பேர் சுட்டும் ஒரு நாய் கூட அன்று சாகவில்ைல என்று கோபத்துடன் கேட்கிறார்.

இஷ்ராத் ஜஹானின் சகோதரி முஸாரத் கூறுகையில், காரில் ஒரு பெண் அமர்ந்திருந்த நிலையில் சுடப்பட்டால், அந்தப் பெண்ணின் கை, வயிறு, உடலின் பக்கவாட்டுப் பகுதிகளில் குண்டு பாய்ந்திருக்க வேண்டும். ஆனால் எனது சகோதரியின் கால்களில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளன.

எனது சகோதரியை போலீஸார் கற்பழித்துள்ளனர். இதை மறைக்க அவளை சுட்டுக் கொன்றுள்ளனர் என்று குமுறுகிறார்.

இதேபோல மும்பையைச் சேர்ந் சாதிக் ஜமால் கடந்த 2003ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். வன்சாராதான் இவரைக் கொன்றார்.

சாதிக்கின் உறவினரான மூசா பாய் கூறுகையில், ஒரு என்கவுண்டர் நடக்கும்போது அதை யாருமே பார்த்திருக்க மாட்டார்களா?. குறைந்தது குண்டு சத்தத்தையாவது யாரும் கேட்டிருக்க மாட்டார்களா? என்றார்.

இந்த டாக்குமெண்டரி குஜராத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து குஜராத் அரசும், காவல்துறையும் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

நன்றிங்க

சும்மாவா மோடியை மரண வியாபாரின்னு சொல்றங்க!!!

Saturday, December 08, 2007

வயதான பெற்றோரை கவனிக்காமல் கைவிட்டால் சிறை!

வயதான பெற்றோரை கவனிக்காமல் கைவிட்டால் சிறை

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 7, 2007

டெல்லி: வயது முதிர்ந்த பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளைத் தண்டிக்கும் வகையிலான சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் வயதான காலத்தில் பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளுக்கு 3 மாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

வயது முதிர்ந்தவர்கள் கடைசிக்காலத்தில் நிராதரவாக விடப்படும் அவல நிலையை களையும் வகையில், மத்திய அரசு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த சட்ட மசோதா நேற்று நாடாளுமன்ற ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.

மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய சமூக நலம் மற்றும் அமலாக்கத் துறை அமைச்சர் மீரா குமார் பேசுகையில், வயது முதிர்ந்த பெற்றோரை புறக்கணித்து வீடுகளில் வைத்துப் பராமரிக்காமல் இருக்கும் பிள்ளைகளுக்கு இந்த சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும். இதுதவிர 3 மாத சிறைத் தண்டனையும் கிடைக்கும். அல்லது இரண்டு தண்டனைகளும் ஒரே நேரத்தில் விதிக்கப்படும்.

இந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய முடியாது என்பது இந்த சட்டத்தின் சிறப்பம்சமாகும்.

பிள்ளைகள், தங்களது வயது முதிர்ந்த பெற்றோரை அன்போடு அரவணைத்துக் காக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது.

இந்த சட்டத்தின் கீழ் மாவட்டந்தோறும் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்படும். வயது முதிர்ந்தவர்கள் தங்களைப் பராமரிக்காத பிள்ளைகள் குறித்து இங்கு புகார் அளிக்கலாம்.

இதுதவிர மாவட்டந்தோறும் முதியோர் இல்லங்களும் திறக்கப்படும். ஆனால் இது குழந்ைதகளற்ற முதிய தம்பதிகள், வறுமையில் வாடும் முதியோர்களுக்கானது.

குடும்ப உறவுகள் தற்போது சிதறி வருகின்றன. மூத்தவர்களை வீட்டில் வைத்துக் கொள்வது, மதிப்பது, பராமரிப்பது போன்றவை குறைந்து வருகிறது. இந்தியாவின் முக்கிய சிறப்பம்சமே மூத்தவர்களை மதிப்பதும், கூட்டுக் குடும்ப வாழ்வும்தான். அதைக் காக்கும் வகையிலேயே இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது என்றார் மீரா குமார்.

ஏற்கனவே இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதையடுத்து இந்த சட்ட மசோதா அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அனுப்பி வைக்கப்படும்.

நன்றிங்க

எதுவும் தானாக கனிய வேண்டும்.

பாபர் மசூதியை இடித்ததற்காக பெருமைப்படுகிறேன்!

பாபர் மசூதியை இடித்ததற்காக பெருமைப்படுகிறேன் - கல்யாண்சிங்

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 7, 2007

மதுரா (உத்தரப்பிரதேசம்): பாபர் மசூதியை இடித்ததற்காக பெருமைப்படுவதாக உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் கூறியுள்ளார்.

மதுராவில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறுகையில்,
அயோத்தியில் 15 வருடங்களுக்கு முன்னர் பாபர் மசூதி இடிக்கப்பட்டது எனக்கு பெருமையாக உள்ளது.

தொல்பொருள் ஆய்வாளர்கள் அங்கு ராமர் கோவில் இருந்தது என தெரிவித்துள்ளார்கள். ஆதாரம் இல்லாமல் நான் பேசவில்லை. அதை நிரூபிக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.

பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரித்ததுதான் உ.பியில் பாஜக செய்த மிகப் பெரிய தவறு. எப்போது நான் பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரித்ததில்லை. இப்போது பாஜகவும் அதை உணர்ந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் மாஃபியா கும்பலையும், அடியாட்களையும் வைத்து தான் மாயாவதி ஆட்சி நடத்தி வருகிறார். அக்கட்சியைச் சேர்ந்த பல எம்.எல்.ஏக்கள் மீது கொலை, கற்பழிப்புப் புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

உமா பாரதி மீண்டும் பாஜகவுக்கு திரும்பினால் கட்சி பலப்படும். அதுதொடர்பான வழிமுறைகளை பாஜக தலைமை காண வேண்டும் என்றார் கல்யாண் சிங்.

நன்றிங்க

ஐயா கல்யாண் சிங்!

நீர் ஓர் இந்துத்துவ பயங்கரவாதி என்பதை உம்முடைய வாயால் சொல்லாமலேயே நாட்டு மக்கள் அறிந்து வைத்துள்ளனர்!

மோடி அரசை தூக்கி எறிய வேண்டும்.

மோடி அரசை தூக்கி எறிய வேண்டும்- பூரி சங்கராச்சாரியார்

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 7, 2007

டெல்லி: சிறுபான்மை சமூகத்தினர் மீது துவேசம் கொண்டு நடந்து வரும் நரேந்திர மோடி அரசால், இந்து சமுதாயத்திற்கே கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது. இனியும் மோடி அரசு தொடரக் கூடாது. மோடியை பதவியிலிருந்து தூக்கி எறிய மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என்று பூரி சங்கராச்சாரியார் அதோக்சானந்த் தேவ தீர்த்த சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளதால் பாஜக பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

சொராபுதீன் படுகொலை தொடர்பாக மோடி பேசிய பேச்சால் பாஜகவுக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் பாஜகவின் வெற்றியை இது பாதிக்குமோ என்ற பயம் பாஜகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், பாஜகவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில், பூரி மடாபதி கிளம்பியுள்ளார். மோடியை பதவியிலிருந்து தூக்கி எறிய அனைத்து மதவாசத சக்திகளும் ஒன்று சேர வேண்டும் என்று பூரி மடாதிபதி அதோக்சானந்த தேவ தீர்த்த சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோத்ரா சம்பவத்திற்குப் பின்னர் சிறுபான்மையினரை ஒடுக்கும் முயற்சியில் மோடி தீவிரமாக இறங்கி விட்டார்.

மோடி அரசின் நியாயமற்ற, இரக்கத்தனமர்ற செயல்கள், மத நல்லிணக்கத்தை கேள்விக்குறியாக்கி விட்டது. இந்து சமுதாயத்தினரை பெரும் அவமானத்தில் தள்ளி விட்டுள்ளது.

இந்துக்களின் நலம் விரும்பி, இந்துக்களைக் காக்க அவதரித்தவர் என்று கூறப்பட்ட மோடியால், இந்துக்கள் இன்று தலை குணிந்து நிற்கின்றனர்.

நந்திகிராம் போன்ற விவாகரங்களில் அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து நிற்கின்றனர். ஆனால் அதற்குப் பதிலாக, மோடிக்கு எதிராக அனைவரும் அணி திரள வேண்டும். மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து விட்டு கை கோர்க்க வேண்டும். மோடி அரசை தூக்கி எறிய அனைவரும் முன்வர வேண்டும். அவருக்கு எதிராக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்.

இந்து அமைப்புகள் மோடி விவகாரத்தில் இரட்டை நிலையை மேற்கொள்ளக் கூடாது. மோடி மீது அவர்களுக்கு அதிருப்தி இருந்தால் அதை வெளிப்படையாக தெரிவித்து அவருக்கு எதிராக செயல்பட முன்வர வேண்டும்.

பல்வேறு தீய செயல்களில் ஈடுபட்டும் கூட மோடி கடந்த ஐந்து ஆண்டுகளாக பதவியில் நீடித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் இப்போது குஜராத் மக்களுக்கு சரியான நேரம் வந்துள்ளது. மோடியை விரட்ட இதுதான் சரியான நேரம். அனைவரும் ஒருங்கிணைந்து மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பூரி சங்கராச்சாரியார்.

பாஜகவுக்கு தீவிர ஆதரவு தருபவர்களில் ஒருவரான பூரி சங்கராச்சாரியார் மோடிக்கு எதிராக இவ்வளவு கடுமையாக கருத்து தெரிவித்துள்ளதால் பாஜக தரப்பு ஆடிப் போயுள்ளது.

நன்றிங்க

இப்படி எல்லாரும் மூதியை போட்டு தாக்குனா அந்த ஆளு என்னதாஞ் செய்வாரு!

Wednesday, December 05, 2007

வேப்ப மரத்தில் வடிந்த பால்...

வேப்ப மரத்தில் வடிந்த பால் - மக்கள் பரவசம், பூஜை

வியாழக்கிழமை, டிசம்பர் 6, 2007

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், மக்கள் பரவசம் அடைந்தனர், மரத்திற்கு மஞ்சள் ஆடை கட்டி பூஜைகள் செய்து, பாலையும் பிடித்துச் சென்றனர்.

ஒட்டசத்திரம் அருகேயுள்ள சிந்தலப்பட்டி ராமநாராயணன் என்பவரது தோட்டத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் திடீரென பால் வடிய தொடங்கியது.

இது பற்றி தகவல் அறிந்ததும் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அந்த மரத்தை பார்க்க திரண்டு வந்தனர். மரத்திற்கு மஞ்சள் ஆடை கட்டி பூஜைகள் நடத்தினர்.

மரத்தில் வடியும் பாலை பீரோவில் வைத்து பூஜை செய்தால் பல கோடி ரூபாய்க்கு அதிபதியாகலாம் என்ற தகவலும் பரவியதால் பலர் போட்டி போட்டு பாலை பிடித்து செல்ல முண்டியத்தனர். இதில் ஒரு பெண் காயம் அடைந்தார்.

நன்றிங்க

வேப்பம்பால் வியாபாரம் நல்லா சூடு பிடிக்குமே!

பின்னே, கோடீஸ்வரராக்கும் அதிஷ்ட பால் ன்னா சும்மாவா!

பால் வடியும் வேப்பமரத்தை அரசாங்கம் கைப்பற்றினால் இந்தியா வாங்கிய கடனை அடைத்து விடலாமே..!

என்ன நாஞ்சொல்றது...?

Tuesday, December 04, 2007

ஒட்டகப்பால் குடித்தால் நீரழிவு நோய் வராது.

ஒட்டகப்பால் குடித்தால் நீரிழிவு நோய் வராது
ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு


கொல்கத்தா, டிச.3-

ரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பதன் காரணமாக நீரிழிவு நோயால் அவதிப்படுவோருக்கு ஒட்டகத்தின் பால் சிறந்த மருந்து என்று ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் நீரிழிவு நோய் பிரிவு தலைமை டாக்டர் ஆர்.பி.அகர்வால் தெரிவித்து உள்ளார்.

கடந்த 7 வருடங்களாக நீரிழிவு நோய் பற்றியும், அதற்கான மருந்துகள் பற்றியும் இவர் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த வருடம் முதல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் சேர்ந்து ஒட்டகப்பால் நீரிழிவு நோயை குணப்படுத்துவது பற்றி ஆராய்ச்சி நடத்தி வந்தார். இதில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ஒட்டகப் பால் பெருமளவில் குறைப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

கொல்கத்தாவில் இந்திய நீரிழிவு நோயாளிகளுக்கான ஆராய்ச்சி சங்கம் நடத்திய விழாவில் கலந்து கொண்ட டாக்டர் அகர்வால் இந்த தகவலை வெளியிட்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகப்பால் அருந்தும் மக்களுக்கு நீரிழிவு நோய் வருவதில்லை என்றும் அவர் அப்போது கூறினார்.

ஜெய்பூர், ஜெய்சால்மர், பிகானீர் ஆகிய பகுதிகளில் வழக்கமாக ஒட்டகப்பால் அருந்தும் 2 ஆயிரம் பேரிடம் ஆராய்ச்சி மேற்கொண்டதில் அவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இயல்பான நிலையிலேயே இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது என்றும் அவர் சொன்னார். இதைத் தொடர்ந்து ஒட்டகப்பாலை பவுடராக தயாரிக்க முடிவு செய்து அதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றிங்க

நீரழிவு நோய் உள்ளவர்களெல்லாம் ராஜஸ்தான் மாநிலத்துக்கு குடியேற வேண்டியதுதான்.

Wednesday, November 28, 2007

பிச்சைகாரரின் உல்லாச வாழ்க்கை!

விமானத்தில் பறந்து போய் ரயிலில் பிச்சை * கேரள பிச்சைகாரரின் உல்லாச வாழ்க்கை

கொச்சி: பிச்சை எடுத்து உல்லாசமாக வாழ்கிறார் கேரள பிச்சைக்காரர் ஒருவர். விமானத்தில் பறந்து சென்று பிச்சை எடுத்த அனுபவம் கூட இவருக்கு உண்டு.
காசர் கோட்டைச் சேர்ந்தவர் முகமது அலி. வயது அறுபது. சொந்த ஊரில் அரை ஏக்கர் நிலமும் வீடும் உள்ளது. வங்கி வைப்புத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய் உள்ளது.

ஓட்டல்களில் தினமும் விலை உயர்ந்த உணவைத்தான் சாப்பிடுவார். ஒரு வேளையாவது பிரியாணி சாப்பிடாமல் இருக்க மாட்டார். மிகவும் பிரபலமான மில் தயாரிப்புகளில் 14 ஜோடி ஆடைகளை வைத்திருக்கிறார். சொந்த ஊரில் பெரும் தொழிலதிபர் போல் உடையணிந்துதான் நடமாடுவார். கவுரவமானப் பணியில் இருப்பதாக, ஊர்க்காரர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இவ்வளவு ஆடம்பரமாக வசிக்கும் இவருக்கு வருமானம் எப்படி கிடைக்கிறது. பிச்சை எடுக்கிறார். அதுதான் இவரது தொழில். கேரளாவில் மசூதிகளில் தங்கி புதுப்புது இடங்களில் பிச்சை எடுப்பதில் பணம் சம்பாதித்து உல்லாசமாக வாழ்கிறார். தினமும் 250 ரூபாய் வரை பிச்சை மூலம் பார்த்துவிடுவார். விசேஷ நாட்களில் ஆயிரம் ரூபாய் சாதரணமாகக் கிடைத்துவிடுகிறது.

கந்தல் அழுக்கான உடைகளைக் கட்டிக் கொண்டு பிச்சை எடுப்பார். தொழில் முடிந்ததும், டிப்டாப் உடைக்கு மாறிவிடுவார். கிடைத்த பணத்தை உல்லாசமாக செலவிடுவார்.விமானத்தில் பறக்க வேண்டும் என்று ஆசை இவருக்கு ஏற்பட்டது. கோழிக்கோடு விமான நிலையத்தில் விசாரித்தார். டிக்கெட் வாங்கி, விமானத்தில் பயணம் செய்து கொச்சியில் இறங்கினார். அங்கிருந்து திரும்பி வர போதிய பணம் இல்லாததால், அழுக்கான லுங்கிக்கு மாறி, ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டே ஊர் திரும்பி விட்டார்.


நன்றிங்க, தினமல்ர் 28/11/2007

மிஸ்டர் பிச்சைகாரர் விமானத்தில் பறக்க கூடாதா?

விமானம் உயரே பறந்து ஒரு நிலைக்கு வந்தபின் அடுப்பில் மாட்டியுள்ள பெட்டை கழட்டி விட்டு, அவருக்கு விமானத்திலும் பிச்சை எடுக்கும் உரிமை வழங்க வேண்டும்!

பிச்சைகாரர் லட்ச ரூபாய் வைத்திருந்தால் அவரும் லட்சாதிபதிதான்.

''பிச்சைகார லட்சாதிபதி''

அட ...லாஜிக் இடிக்குதே

Tuesday, November 27, 2007

ஆங்கிலம் செய்த கொலை(!?)

ஆங்கிலம் தெரியாத விரக்தியால் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
விடுதியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்

பூந்தமல்லி, நவ.27-

ஆங்கிலம் தெரியாததால் விரக்தி அடைந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார்.
என்ஜினீயரிங் மாணவர்

தேனி மாவட்டம் பண்ணைபுரத்தை சேர்ந்தவர் நந்தகுமார் என்பவரின் மகன் விது(வயது 18).
இவர் சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் அவர் தங்கி இருந்தார்.

ஆங்கில பாடம் புரியவில்லை

மாணவர் விது மேல்நிலைப்பள்ளி வரையில் தமிழ் வழிகல்வி கற்பிக்கப்படும் பள்ளியில் படித்தவர். பிளஸ்-2 தேர்வில் 1,023 மார்க்கு பெற்று அரசு இடஒதுக்கீட்டில் என்ஜினீயரிங் கல்லூரியில் இடம் கிடைத்து சேர்ந்துள்ளார்.

ஆனால் என்ஜினீயரிங் கல்லூரியில் பாடத்திட்டம் ஆங்கிலத்தில் இருந்ததால் அவரால் அதனை சரியாக புரிந்து கொண்டு படிக்க இயலவில்லை. சமீபத்தில் நடந்த தேர்வுகளில் 5 பாடத்தில் அவர் தோல்வி அடைந்து விட்டார். இதனால் விது சோகமே உருவாக விரக்தியில் இருந்தார்.

தற்கொலை

இதுபற்றி அவர் தந்தையிடம் கூறி இருக்கிறார். அதற்கு அவரது தந்தை, ``எப்படியாவது கஷ்டப்பட்டு படித்து முன்னேறி வா'' என்று அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாணவர் விது விடுதியில் உள்ள குளியல் அறையில் தனது லுங்கியை இரண்டாக கிழித்து அதை கயிறு போல திரித்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உருக்கமான கடிதம்

மாணவர் விது தங்கியிருந்த அறையில் சோதனை நடத்திய போலீசார் கடிதம் ஒன்றை கண்டெடுத்தனர். அதில் விது எழுதியிருந்ததாவது:-

``எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் சிறு வயதில் இருந்தே தமிழ் வழிகல்வியில் படித்தேன். என்ஜினீயரிங் படிப்பில் எல்லாம் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆங்கிலத்தில் படிக்க இயலாத காரணத்தால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்கிறேன்.''

இவ்வாறு அவர் கடிதத்தில் எழுதி இருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் ஆல்ட்ரின் ஈஸ்டர், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றிங்க

நெஞ்சு கனக்கிறதய்யா!

மாணவ சமுதாயங்களே கல்வி என்பது வாழ்க்கைக்கு தேவையானதுதான். அதற்காக கல்விதான் வாழ்க்கை என்ற நிலை இல்லை என்பதை உணர்ந்து, பரீட்சையில் தோல்வி அடைந்தால் முனமுடைந்து தற்கொலை செய்வதை கைவிடுங்கள். எல்லா பிரச்சனைக்கும் தற்கொலைதான் தீர்வு என்பது கோழைத்தனம்.

நெஞ்சில் உறுதி வேண்டும்!

பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த போலீஸ்...

மோட்டார் சைக்கிளில் சென்று
பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது
பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்


சென்னை, நவ.27-

மோட்டார் சைக்கிளில் சென்று பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.

தங்கச்சங்கிலி பறிப்பு

சென்னையை அடுத்த அம்பத்தூர் அருகே உள்ள புதூர் செங்குன்றம் சாலையை சேர்ந்தவர் ராயப்பன். தனியார் பள்ளி காவலாளி. இவருடைய மனைவி தெரசம்மாள் (வயது55).
நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அருகில் உள்ள கடைக்கு தெரசம்மாள் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் `ஹெல்மெட்' அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி, தெரசம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.

விரட்டி பிடித்தனர்

இதனால் அதிர்ச்சி அடைந்த தெரசம்மாள், `திருடன்' `திருடன்' என்று சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் நின்ற பொதுமக்கள் கொள்ளையனை விரட்டினார்கள். அந்த ஆசாமி பதட்டமடைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

அந்த ஆசாமியை அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமாரிடம் ஒப்படைத்தனர்
சப்-இன்ஸ்பக்டர்

போலீஸ் விசாரணையில், வழிப்பறி செய்தவர், விருப்ப ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் என்பது தெரிய வந்தது. அவருடைய பெயர் ஜார்ஜ் (வயது 44). சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர்.

முதலில் வழிப்பறி செய்ததை அவர் மறுத்தார். தனது கண்ணெதிரே சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்ததாகவும், நானும் கொள்ளையனை பிடிக்க விரட்டி சென்றதாகவும், கீழே விழுந்த என்னை அவர்கள் தவறுதலாக பிடித்ததாகவும் தெரிவித்தார்.

கைது

போலீசார் இதை நம்பாமல் அவரை சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் இன்னொரு தங்கச்சங்கிலி இருந்தது. இது பற்றி கேட்டபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

போலீசார் துருவித்துருவி விசாரித்தபோது, செங்குன்றம் புழல் பகுதியில் ஒரு பெண் வக்கீலிடம் இந்த தங்கச்சங்கிலியை பறித்ததாக கூறினார். இதையொட்டி ஜார்ஜ் கைது செய்யப்பட்டார். அவர் மேலும் எத்தனை வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றிங்க

வேலியே பயிரை மேய்கிறதுன்ன சொல்வாங்களே...

Monday, November 26, 2007

பணி முடிந்த விமானி!

பணி முடிந்த விமானி - பரிதவித்த பயணிகள்

திங்கள்கிழமை, நவம்பர் 26, 2007

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரிலிருந்து கொல்கத்தா செல்ல வேண்டிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை செலுத்த வேண்டிய விமானி, தனது பணி முடிந்து விட்டதாக கூறி விமானத்தை எடுக்க மறுத்ததால், விமானம் ரத்தாகி பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரிலிருந்து நேற்றிரவு 8.15 மணிக்கு கொல்கத்தா செல்ல வேண்டிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்லவேண்டிய பயணிகள் அனைவரும் தயாராக இருந்தனர். ஆனால் விமானம் புறப்படுவது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

சுமார் 4 மணிநேரம் தாமதத்திற்கு பின்னர், நள்ளிரவு 12-30 மணிக்கு விமானம் ரத்து செய்யப்பட்டது எனகூறிய அதிகாரிகள் பயணிகளை ஹோட்டல்களில் தங்க வைத்தனர்.

என்ன என்று விசாரித்தபோது அந்த விமானத்தை செலுத்த வேண்டிய விமானி ஒருவரின் பணி நேரம் முடிந்து விட்டதாம். இதனால் விமானத்தை செலுத்த முடியாது என்று அவர் கூறி விட்டாராம். இதனால்தான் விமானத்தை எடுக்க முடியாமல் தாமதமாகியதாக தெரிய வந்தது.

நன்றிங்க

வானத்தில் விமானம் பறந்து கொண்டிருக்க எனக்கு பணி நேரம் முடிந்து விட்டது என்று எந்த விமானியும் சொல்லாமல் இருந்தால் சரிதான்.

Sunday, November 25, 2007

தஸ்லிமாவுக்கு லாலு அறிவுரை!

சர்ச்சை எழுப்பக் கூடாது - தஸ்லிமாவுக்கு லாலு அறிவுரை

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 25, 2007

கொல்கத்தா: தஸ்லிமா நஸ்ரின் சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து எழுதுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், லஜ்ஜா என்ற நூலை எழுதி வங்கதேசத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி, 1994ம் ஆண்டு இந்தியாவுக்கு தப்பி வந்தார். கொல்கத்தாவில் தங்கியிருந்த அவரை வெளியேற சொல்லி முஸ்லீம் மதத்தின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் கலவரம் அங்கு வெடித்தது.

இதனை தொடர்ந்து அவர் வெளியேறி ராஜஸ்தானுக்கு சென்றார். ஆனால் அம்மாநில அரசு தஸ்லிமாவுக்கு தங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று கூறிவிட்டதால், அவர் டெல்லிக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் லாலு தஸ்லிமாவுக்கு புது எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், இஸ்லாம் மதத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய விஷயங்களை எழுதி, தேவையில்லாமல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணமாகி விட்டார்.

முஸ்லீம் மதத்திற்கு எதிராக மட்டுமல்ல, இனிமேல் தஸ்லிமா எந்தவொரு மதத்திற்கும் எதிராக சர்ச்சைக்குரிய விஷயங்களை எழுதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

முஸ்லீம் மதத்தை பற்றி அவதூறாக சித்தரித்து எழுதியதற்காக அவரை கண்டிப்பாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும், விசா நீட்டிப்பு கொடுக்கக் கூடாது என்று சில முஸ்லீம் அமைப்புகள் கூறி வருகின்றன.

இதுகுறித்து வெளியுறவு துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய அரசு கூடி ஆலோசித்து தான் முடிவெடுக்க வேண்டும் என்றார் லாலு.

நன்றிங்க

//முஸ்லீம் மதத்திற்கு எதிராக மட்டுமல்ல, இனிமேல் தஸ்லிமா எந்தவொரு மதத்திற்கும் எதிராக சர்ச்சைக்குரிய விஷயங்களை எழுதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.//

நல்லாத்தான் சொல்லியிருக்கார், அம்மணிக்கு உரைக்குமா...?

நன்றி விழா!

சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு நிறைவு தருகிறது: கருணாநிதி

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 25, 2007

சென்னை: சிறுபான்மை சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருப்பது மனதுக்கு நிறைவு தருவதாக அமைந்துள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்ட பெருமிதம் கிடைத்துள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக அரசு சிறுபான்மை சமூகத்தினருக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு அளித்து உத்தரவிட்டதற்காக, முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து சென்னையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் நேற்று விழா நடத்தப்பட்டது.

விழாவில் பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு வீர வாளும், செங்கோலும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், தமிழகத்தில் நன்றி கூறுவார்களா, அடடே ஆச்சரியமாக இருக்கிறதே என்று நான் எண்ணியதுண்டு. இப்போது நன்றி கூறுகிறவர்கள் இவ்வளவு பேரா என்று நான் மகிழ்ச்சி அடையக் கூடிய அளவில் நிலைமை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

சிறுபான்மையினருக்கு - இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு சம நிலையில் அளிப்பது என்று முடிவு செய்து அதை முதன் முதலாக அறிவித்தது 24.5.2006 அன்று ஆளுநர் உரையில். அதற்கு நன்றி கூறும் விழா இன்று 24ம் தேதி. தமுமுக 1995ம் ஆண்டு உதயமானது என்றார்கள். அந்த வருடத்தின் கூட்டுத் தொகை 24. அவ்வளவு ஏன், நான் பிறந்த ஆண்டே 1924. நம்மிடையே எவ்வளவு ஒற்றுமை இயல்பாக அமைந்திருக்கிறது.

நம்மையா பிரித்து விட முடியும் என்று இதை விட சிறப்பாக, எண் கணித ஜாதகம் என்று இல்லாமல், எண்ணத்தை வைத்து இந்த ஜாதகம் கணிக்கப்பட்டிருக்கிறது.

சிறுபான்மை சமுதாயம் முன்னேற வேண்டும், உரிமைகளைப் பெற வேண்டும் என்பதற்காக நீண்ட காலமாக குரல் கொடுத்து, கோரிக்கை விடுத்து, போராடி இந்த உண்மைகளை உணர்ந்து, உணர்வுகளை மதித்து, நாங்கள் செயல்பட்டு தேர்தல் நேரத்திலே அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம் என்றால், மன்னிக்க வேண்டும், இது எங்கள் ரத்தத்தோடு ஊறிய சமாச்சாரம்.

தமுமுக 1995ல் தோன்றியபோது 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டு நலிந்தவர்களுக்கு உதவியதாக கூறினார்கள். இப்போது 31 ஆம்புலன்ஸ்கள் உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த இயக்கத்தின் பணி, ஆக்க வேலை மக்களுக்குத் தொண்டாற்றுவது, சமுதாயத்தில் நலிந்த பிரிவினருக்கு நன்மை செய்வது, கருணை இல்லம், அன்பு இல்லம் போல இந்த இயக்கம் ஏற்றுக் கொண்டு மிகக் குறுகிய காலத்தில் 5 ஆம்புலன்ஸ், 31 ஆக பெருகியிருப்பது பாராட்டத்தக்கது.

என் பொறுப்பில், எனது சொந்தப் பொறுப்பில், இன்னும் 2 ஆம்புலன்ஸ்கள் வாங்க, அதற்குரிய நிதி எவ்வளவு என்று கூறினால், என் சொந்தப் பொறுப்பிலே இந்தத் தொகையை வழங்கி - இந்த நாள் நம் நினைவில் நிற்க வேண்டிய நாள். நலிந்தோருக்காக நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள - நமக்கு வழிகாட்டியாக உள்ளவர்களின் பெயரால் எடுத்துக் கொண்ட சபதத்தை நிறைவேற்றிய நாள் என்ற வகையிலே இது அமையும்.

நான் சிறப்பு விருந்தினர் அல்ல, விருந்தினர்களை வரவேற்கும் உங்களில் ஒருவன். என்னைப் பெருமைப்படுத்துவதாக எண்ணி வேறுபடுத்தி விடாதீர்கள். நீங்கள் வேறு, நான் வேறல்ல.

இளம் பிராயத்திலேயே ஒரு கையில், முஸ்லீம் லீக் பிறைக் கொடியையும், மற்றொரு கையில் திராவிட இயக்கக் கொடியும் பிடித்து வளர்ந்தவன்.


புதுச்சேரியில், நான் அடிபட்டு, உதைபட்டு உயிர் போய் விட்டது என்று அந்தக் கும்பல் விட்டுச் சென்றபோது நான் அங்கிருந்து தப்பிச் சென்று, பெரியாரிடம் அழைத்துச் செல்லப்பட்டபோது, மீண்டும் வேறு யாரும் என்னை அடையாளம் கண்டு தாக்கி விடக் கூடாது என்பதற்காக நான் கட்டிச் சென்ற ஆடை லுங்கிதான்.

பெரியார், அண்ணா, காயிதேமில்லத் இவர்கள் எல்லாம் நம்மை வழிநடத்திச் சென்றிருக்கிறார்கள். இந்த வழியிலே சகோதரர்களாக செல்வோம் என்று குறிப்பிட்டு - நான் ஒரு கூட்டத்தில் சொன்னதைப் போல இந்து முஸ்லீம் சீக் ஈ சாயி - ஆபஸ் மே ஹை பாயி பாயி என்ற அந்த தத்துவத்தை இந்தியாவிலே கடைப்பிடிப்போம் என்றார் கருணாநிதி.

தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், தமிழக அரசு வழங்கியுள்ள இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்தத் தடையைத் தாண்டி, இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளவர்கள் நாளை உச்சநீதிமன்றத்தையும் அணுகக் கூடும். எனவே இந்தத் திட்டங்களை முறியடித்து சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை பாதுகாக்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

நன்றிங்க

//இளம் பிராயத்திலேயே ஒரு கையில், முஸ்லீம் லீக் பிறைக் கொடியையும், மற்றொரு கையில் திராவிட இயக்கக் கொடியும் பிடித்து வளர்ந்தவன்.//

அடிச்சிரய்யா "பஞ்ச்"

மேட்டர கச்சிதமா டச் பண்றதுல இவர விட்ட வேற ஆளு இல்லய்யா!

"நன்றியுடன் நடப்போருக்கு இறைவன் கூலி வழங்குவான்" (அல்குர்ஆன்,3:144)

கூடுதல் கட்டணம் வசூல்...!

கூடுதல் கட்டணம் வசூல் - 33 பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 25, 2007

சென்னை: தமிழகத்தில் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 33 பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டிருப்பதாக தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்த 33 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.

எனவே, ஏஐசிடிஇ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை நாங்கள் ரத்து செய்ய முடியாது. பல்கலைக்கழக இணைப்பு அனுமதியை வேண்டுமானால் ரத்து செய்யலாம். அந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏஐசிடிஇ தான் முடிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகங்கள் மூலமாக புதிதாக 20 பொறியியல் கல்லூரிகள் துவக்கப்படும். அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவான பொது பல்கலைக்கழக சட்டம் வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும். அதற்கான தொடக்கநிலை பணிகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.

நன்றிங்க

சீக்கிரம் நடவடிக்கை எடுங்கப்பா, இவனுங்க லொள்ளு தாங்க முடியல..!

Saturday, November 24, 2007

எப்படியெல்லாம் பொழைக்கிறாங்கப்பா?

குருவுக்காக அல் கொய்தா பெயரில் மிரட்டல் - சிஷ்யர் கைது

சனிக்கிழமை, நவம்பர் 24, 2007

அயோத்தி: அயோத்தி ஸ்ரீராம் ஜென்மபூரி நியாஸ் தலைவரான சாமியார் நிருத்ய கோபால் தாஸுக்கு உயர் மட்ட பாதுகாப்பு பெறுவதற்காக, அல் கொய்தா பெயரில் தாஸுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய அவரது சிஷ்யரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அயோத்தி ராம் ஜென்மபூமி இயக்கத்தில் மிகவும் முக்கியமாக செயல்பட்டு வருபவர் கோபால் தாஸ். இதுதொடர்பான ஸ்ரீராம் ஜென்மபூமி நியாஸ் அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

இவருக்கு சமீபத்தில் ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்தது. அல் கொய்தா அமைப்பின் பெயரில் எழுதப்பட்ட அக் கடிதத்தில், நீங்களும் உங்களது சிஷ்யர்களும் முஸ்லீம்களாக மாறி விடுங்கள். இல்லாவிட்டால் கொல்லப்படுவீர்கள் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே கோபால் தாஸும், அவரது சிஷ்யர்களும் சரயு நதியில் குளிக்கச் சென்றபோது அவர்கள் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. எனவே இந்த மிரட்டல் கடிதத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள விரும்பாத போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் சந்தோஷ் ஜெய்ஸ்வால் என்பவர் சிக்கினார். இவர் கோபால் தாஸின் சிஷ்யர்களில் ஒருவர். தனது குருவுக்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களான அசோக் சிங்கால், பிரவீண் தொகாடியா ஆகியோருக்கு அளிக்கப்படும் அளவுக்கு உயர் மட்டப் பாதுகாப்பு தரப்படவில்லை என்ற கவலை சந்தோஷுக்கு இருந்தது.

எனவேதான், தனது குருவுக்கு உயர் மட்டப் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அல் கொய்தா பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார் சந்தோஷ் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

ஹரித்வாரில் வைத்து சந்தோஷை போலீஸார் கைது செய்தனர்.

நன்றிங்க

அட... இந்த குறுக்கு வழி பரவாயில்லையே!

Friday, November 23, 2007

டாலர் வீழ்ச்சி - ஈரோவுக்கு மாறும் திருப்பூர்.

டாலர் வீழ்ச்சி - ஈரோவுக்கு மாறும் திருப்பூர்

சனிக்கிழமை, நவம்பர் 24, 2007

திருப்பூர்: அமெரிக்க டாலரின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருவதால், இழப்புகளை சமாளிக்க ஈரோவில் தங்களது வியாபாரத்தை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்.

அமெரிக்க பொருளாதாரத்தில் சரிவு காணப்படுகிறது. இதன் காரணமாக டாலரின் மதிப்பும் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 20ம் தேதி முதல் அமெரிக்க டாலரின் மதிப்பை விட இந்திய ரூபாயின் மதிப்பு 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக உயர்வது இந்தியர்களுக்கு பெருமையாக இருந்தாலும் கூட, திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு இது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, திருப்பூரில் பல நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்க ஆரம்பித்துள்ளன. இதன் எதிரொலியாக திருப்பூரில் இதுவரை 8000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனராம்.

இந்தியாவின் மிகப் பெரிய பின்னலாடை ஏற்றுமதி மையங்களில் திருப்பூருக்கு தனி இடம் உண்டு. இங்கிருந்து அமெரிக்காவுக்கு மட்டும் 30 சதவீத ஏற்றுமதி நடக்கிறது. இந்த ஏற்றுமதி வியாபாரத்தில் முக்கால்வாசி அமெரிக்க டாலரில்தான் நடந்து வந்தது. தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதால் நிலைமை மோசமாகியுள்ளது.

நிலைமை இப்படியே நீடித்தால், திருப்பூரில் உள்ள 7 லட்சம் பின்னலாடைத் தொழிலாளர்களில் அடுத்த மார்ச் மாத்திற்குள் 1 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க தற்போது திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் தங்களது வியாபாரத்தை டாலரிலிருந்து ஈரோவுக்கு மாற்றி விட்டனர்.

தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்திருப்பதால் அதை சமாளிக்க ஆடைகளின் விலையை உயர்த்தலாம் என்றால் அதை அமெரிக்க சந்தை ஏற்காது என்ற நிலை உள்ளது.

இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் அது கிடைக்கும் வரை காத்திருக்க விரும்பாத பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள், தங்களது வர்த்தகத்தை டாலரில் மேற்கொள்வதை விட்டு விட்டு ஈரோவுக்கு மாறியுள்ளனர்.
காரணம் இந்திய ரூபாய்க்கு எதிராக ஈரோவின் மதிப்பு 1.4 சதவீதமும், இங்கிலாந்து பவுன்ட்டின் மதிப்பு 7.1 சதவீதமும்தான் குறைந்துள்ளன.

மேலும் உள்ளூர்ச் சந்தைக்கு அனுப்பும் ஜவுளிகளின் எண்ணிக்கையையும் அவர்கள் அதிகரித்துள்ளனர். இதன் மூலம் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க முடியும் என்பது திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் எண்ணம்.

கடந்த ஆண்டு திருப்பூரிலிருந்து ரூ. 11 ஆயிரம் கோடி அளவிலான ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிங்க

சரிதான்...

வியாபாரிகள் எப்போதுமே வர்த்தகத்தில் கண்ணும் கருத்துமாகவே இருக்கிறார்கள்!

06. உயிரி தொழில்நுட்பம் பயன்படுத்தி...





06. உயிரி தொழில்நுட்பம் பயன்படுத்தி முட்டை தயாரிக்க ஆலோசனை

பெங்களூரு: இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 4,450 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

முட்டை உற்பத்தியில் உலகளவில் நான்காவது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. இருப்பினும், தேவைக்கு ஏற்ப முட்டை சப்ளை இல்லை. 2020ம் ஆண்டில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 13 ஆயிரம் கோடி முட்டை தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறை யை போக்க உயிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முட்டை உற்பத்தியை அதிகரிக்கலாம் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகள் மூலம் பெறப்படும் பொருட்களின் உற்பத்தியை பயோ டெக்னாலஜி (உயிரி தொழில்நுட்பம்) மூலம் அதிகரிப்பது தொடர்பான தேசிய கருத்தரங்கு பெங்களூரில் சமீபத்தில் நடந்தது. அதில் பங்கேற்ற இந்திய விவசாய ஆய்வு கவுன்சிலின் துணை பொது இயக்குனர் டாக்டர் புஜபராக் தான் இந்த யோசனையை தெரிவித்தார். இந்த தேசிய கருத்தரங்குக்கு உயிரி தொழில்நுட்பம் பயன்படுத்தும் நிறுவனங்களின் சங்கமும் (ஏ.பி.எல். இ.,) மற்றும் தேசிய பிராணிகளின் புரதசத்து, உடல்கூறு நிறுவனமும் ( என்.ஐ. ஏ.என்.பி.,) ஏற்பாடு செய்து இருந்தன. இந்தியாவில் முட்டைகள் உற்பத்தியை அதிகரிக்க செய்யும் பணியில் என்.ஐ.ஏ.என்.பி., ஈடுபட்டு வரு கிறது. இதன் இயக்குனர் டாக்டர் கே.டி.சம்பத் கூறுகையில், `தமிழகத்தில் நாமக்கலில் உள்ள மூன்றாயிரம் கோழிகளிடம் உயிரி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி முட்டைகள் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து முயற்சி மேற்கொண்டோம். அதில் நல்ல பலன் கிடைத்தது. முட்டைகள் உற்பத்தி 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆய்வை விரிவுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

இடைவெளி விட்டு தான் கோழிகள் முட்டைகள் போடும். இந்த இடைவெளியை குறைப்பதில் தான் உயிரி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. நாட்டு கோழிகளிடம் இருந்து ஒரு ஆண்டுக்கு 60 முதல் 70 முட்டைகள் மட்டுமே கிடைக்கும். ஆனால், பிற வகை கோழிகளிடம் இருந்து ஆண்டுக்கு 325 முட்டைகள் கிடைக்கின்றன. எனவே நாட்டு கோழிகளிடம் தான் முட்டை உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றிங்க, தினமலர் 23/11/2007

சீக்கிரம் கண்டு பிடியுங்கள் இல்லேன்னா 2020ம் ஆண்டில் ஆம்லெட் போட முட்டை கிடைக்காது... :-)))

Wednesday, November 21, 2007

'ஓயாத' கெளடா: 'நாடகம்' தொடர்கிறது!

'ஓயாத' கெளடா: 'நாடகம்' தொடர்கிறது

புதன்கிழமை, நவம்பர் 21, 2007

பெங்களூர்: காங்கிரஸை இரு முறையும், பாஜகவை இரு முறையும் ஏமாற்றி முடித்துவிட்ட மாஜி பிரதமர் தேவெ கெளடா மீண்டும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகிறார்.

காங்கிரஸ் தலைமையிலான தரம் சிங் அரசை கவிழ்த்துவிட்டு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் கெளடாவின் மகன் குமாரசாமி முதல்வரானார்.

ஒத்துக் கொண்டபடி 20 மாதத்தில் பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்காமல் காங்கிரசுடன் கைகோர்த்து குமாரசாமியை முதல்வர் பதவியில் அமர வைக்க முயன்றார்.

காங்கிரசுடன் பேச்சுவார்ததைகள் நடந்து கொண்டிருந்தபோதே மீண்டும் பாஜகவை ஆதரித்தார் கெளடா. இதையடுத்து பாஜக தலைவர் எதியூரப்பா முதல்வரானார்.

ஆனால், ஒரே வாரத்தில் அவரைக் கவிழ்த்தார்.

இந் நிலையில் கர்நாடக சட்டசபையை கலைக்க கவர்னர் ராமேஸ்வர் தாக்கூர் கொடுத்த பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்றது. இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அவையைக் கலைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந் நிலையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவளிக்கத் தயார் என மதசார்பற்ற ஜனதா தளத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் கூறியுள்ளார்.

டெல்லிக்குப் ேபான கெளடாவும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டு காத்துக் கொண்டுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவளிக்கத் தயார் என்பதை சோனியாவிடம் தெரிவிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

ஆனால், ஏற்கனவே கெளடாவால் ஏமாற்றப்பட்டுள்ளதால் சோனியா இதுவரை அவரை சந்திக்க முன் வரவில்லை.

கர்நாடகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர்களான தரம்சிங், மல்லிகார்ஜூன கார்கே, பாட்டீல் போன்றவர்களுக்கு கெளடாவுடன் சேர்ந்து ஆட்சியைப் பிடிக்க ஆசை தான். ஆனால், இரண்டாம் கட்டத் தலைவர்களான சித்தராமையா, சிவக்குமார் போன்ற தீவிர கெளடா எதிர்ப்பாளர்கள் இந்த முயற்சியை எதிர்த்துள்ளனர்.

தங்களது எதிர்ப்பை நேரடியாகவே டெல்லி தலைமையிடம் தெரிவித்துவிட்டனர்.

நன்றிங்க

வெட்கங்கெட்ட ஜென்மங்கள்!

ஏழைக் குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை.

ஏழைக் குழந்தைகளுக்கு அரசு உதவியுடன் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை!

புதன்கிழமை, நவம்பர் 21, 2007

சென்னை: வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்த இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அரசு நிதியுதவியுடன் தனியார் மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை செய்யும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.

இதன்படி இருதய அறுவை சிகிச்சையின் தன்மையைப் பொறுத்து ரூ. 10,000 முதல் ரூ. 70,000 வரை தமிழக அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டு தனியார் மருத்துவமனைகள் இந்த குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்.

இதற்கான ஒப்பந்தத்தில் 17 தனியார் மருத்துவமனைகள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்திட்டன.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

மக்களின் வாழ்க்கையில் தற்போதைய மாறிவரும் சூழ்நிலைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், நடைமுறை வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் மாறுதல்கள் போன்றவை காரணமாக இதய நோயினால் பாதிக்கப்படுவோர் குறிப்பாக, இளம் சிறார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதய நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காகக் குழந்தைகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது முதல்வர் கருணாநிதியின் கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் அரிய உயிர்களைக் காக்கும் பொருட்டுத் தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சைகள் செய்வதற்காக, ஆண்டு வருவாய் ரூ. 50,000க்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்கான புதிய திட்டத்தை முதல்வர் அறிவித்தார்.

அதன்படி இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ரூ. 10,000மும், சாதாரண திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ரூ. 30,000மும், கடினமான இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ரூ. 70,000மும் நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்திற்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தலைமை செயலகத்தில் இன்று கையொழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் தமிழக அரசு சார்பில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குனரும், 17 தனியார் மருத்துவமனைகளின் பிரதிநிதிகளும் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சைக்காகப் பதிவு செய்து கொண்டு காத்திருக்கும் 20 குழந்தைகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள 10 தனியார் மருத்துவமனைகளுக்குத் தமிழக அரசின் சார்பில் அனுமதிகளை வழங்கி இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்திட தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள 17 தனியார் மருத்துவமனைகள் விவரம் வருமாறு:

1. ராமச்சந்திரா மருத்துவமனை, போரூர்

2. அப்பல்லோ மருத்துவமனை, சென்னை

3. பிராண்ட்டியர் லைப் லைன் மருத்துவமனை, சென்னை

4. ஆர்.வே ஹெல்த்கேர் லிமிடெட், சென்னை

5. மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், சென்னை

6. கே.ஜெ.மருத்துவமனை, சென்னை

7. சூரியா மருத்துவமனை, சென்னை

8. மியாட் மருத்துவமனை, மனப்பாக்கம், சென்னை

9. லைப்-லைன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சென்னை

10. செட்டிநாடு மருத்துவமனை, கேளம்பாக்கம், காஞ்சீபுரம்

11. வடமலையான் மருத்துவமனை, மதுரை

12. அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மதுரை

13. மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை

14. பி.எஸ்.ஜி. மருத்துவமனை, கோவை

15. ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை, கோவை

16. கே.ஜி. மருத்துவமனை, கோவை

17. ஜி. குப்புசாமிநாயுடு நினைவு மருத்துவமனை, கோவை.

நன்றிங்க

ஏழைக் குழந்தைகளை காக்கும் அரசின் இவ்வுதவிகள் முறையாக முழுதுமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு போய் சேர வேண்டும் என வாழ்த்துவோம்.

Monday, November 19, 2007

ஏர்-இந்தியாவின் 'மெகா' குளறுபடி.

ஏர்-இந்தியாவின் 'மெகா' குளறுபடி- விமானம் ஒரு நாள் 'லேட்'!!

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 18, 2007

டெல்லி: துபாய் செல்லவிருந்த ஏர்-இந்தியா விமானம் 24 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாகியுள்ளது. இதனால் விமான நிலையத்துக்கு வந்து விமானத்திலும் ஏறி அமர்ந்துவிட்ட பயணிகள் மணிக்கணக்கில் பரிதவித்தனர்.

டெல்லியிலிருந்து நேற்று காலையில் துபாய் செல்லவிருந்த ஏர்-இந்தியாவின் ஏஐ-841 விமானம் தாமதமானதால், அதில் செல்லவிருந்த 150 பயணிகள் பிற்பகலுக்கு மேல் அபுதாபி செல்லவிருந்த விமானத்தில் அமர வைக்கப்பட்டனர்.

பின்னர் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டு 2 மணி நேரத்திற்கு பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கப்பட்டனர். அனைவரும் டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

இன்று காலை 6.30 மணிக்கு துபாய் செல்லவிருக்கும் விமானத்தில் பயணம் செய்வதற்காக அனைத்து பயணிகளையும் இன்று அதிகாலை 2.30 மணிக்கு விமானம் நிலையம் அழைத்து வந்து, சோதனைகளையும் முடித்து விமானத்திற்குள் அமர வைக்கப்பட்டனர்.

ஆனால் விமானம் 6.30 மணிக்கு கிளம்பவில்லை. பின்னர் 8.30 மணிக்கு விமானத்திற்குள் வந்த பைலட், எனது பணி நேரம் முடிந்து விட்டபடியால் தற்போது விமானம் செல்லாது என்று அறிவித்தார்.

இதைக் கேட்ட பயணிகள் அனைவரும் கொந்தளித்து விட்டனர். இதையடுத்து அனைத்து பயணிகளும் மீண்டும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர்.

மூன்று முறை ரத்து செய்யப்பட்ட அந்த விமானத்தைக் கிளப்ப, விமானியின் பணி நேரத்தை அதிகரித்தாக வேண்டுமாம். இதற்காக விமானத்துறையின் டைரக்டர் ஜெனரலிடம் ஏர் இந்தியா அனுமதி கேட்டதாம். அனுமதி கிடைக்க ெபரும் காலதாமதம் ஏற்பட்டு, இப்போது தான் அந்த அனுமதி கிடைத்துள்ளதாம்.

இதனால் அந்த விமானம் எந்த நேரமும் கிளம்பலாம் எனத் தெரிகிறது.

இந்த விமானம் மட்டுமல்ல டொரன்டோ, நியூயார்க், மஸ்கட் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்களும் ஏர் இந்தியாவின் உலகப் புகழ் குளறுபடியால் நேற்று நள்ளிரவில் இருந்து பல மணி நேரம் கால தாமதமாகியுள்ளன.

மேலும் டெல்லியில் உள்ள 22 ஏர் இந்தியாவின் கெளண்டர்களில் 20 கெளண்டர்களில் ஆளே இல்லாததால், யாரிடம் போய் கேள்வி கேட்பது என்று கூட தெரியாமல் பயணிகள் டெல்லி குளிரில் பரிதவித்துக் கொண்டுள்ளனர்.

ஏர்-இந்தியாவின் 'டாக்ஸி சர்வீஸ்':

இதற்கிடையே சனிக்கிழமை காலையில் துபாயிலிருந்து கோழிக்கோடு செல்லும் ஏர்-இந்தியாவின் ஏஐ-980 விமானம் திருவனந்தபுரம்
வந்திறங்கியது.

திருவனந்தபுரம் பயணிகள் இறங்கிவிட்ட நிலையில் மீதமிருந்த 20 பேர் கோழிக்கோடு செல்ல விமானத்திலேயே உட்கார்ந்திருந்தனர்.

ஆனால், இந்த விமானம் கோழிக்கோடு செல்லாது என திடீரென அறிவிக்கப்பட்டது. எரிச்சலான பயணிகள் இறங்க மறுத்தனர்.

ஆனால், ஏசியை ஆப் செய்துவிட்டு வலுக்கட்டாயமாக பயணிகளை இறக்கிய அதிகாரிகள்
அவர்களை டாக்ஸிகளில் கோழிக்கோடு அனுப்பி வைத்தனர்.

திருவனந்தபுரத்திலிருந்து விமானத்தில் 1.15 மணி நேரத்தில் கோழிக்கோடு செல்லும் பயணிகளுக்கு டாக்ஸிகளில்ல் கோழிக்கோடு செல்ல 14 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிங்க

எப்பத்தான் ஏர் இந்தியா நிர்வாகம் திருந்துமோ...?