Friday, August 22, 2008

காலத்தின் சுழற்ச்சி...

நாடகம் இனிதே முடிந்திருக்கிறது. சரியாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தான் அணிந்து கொண்ட வேடத்தை அவரே கலைக்கத் தொடங்கினார். தற்போது முற்றிலுமாகக் கலைத்திருக்கிறார் பர்வேஸ் முஷரஃப். ஆம். கடந்த திங்கள்கிழமை தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் உள்ளிட்ட அத்தனை தேசங்களையும் தன்னை நோக்கித் திருப்பியிருக்கிறார்.

பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை அதிரடியாக நகர்த்திவிட்டு ஆட்சிக்கு வந்த முஷரஃப், தற்போது திடீரென பதவி விலகியதற்கு என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் காலச் சக்கரத்தைக் கொஞ்சம் பின்னோக்கிச் சுழற்றவேண்டும். ஆகஸ்டு 11, 1943. பழைய டெல்லியில் ஒரு சாதாரண மத்தியதர முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் முஷரஃப். பிரிவினையின்போது, பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுள் அவருடையதும் ஒன்று. சாதாரண ஜவானாகத் தன்னை பாகிஸ்தான் ராணுவத்தில் இணைத்துக்கொண்ட முஷரஃப் பிறகு கமாண்டராக, மேஜராக, மேஜர் ஜெனரலாக, லெஃப்டினண்ட் ஜெனரலாக என்று படிப்படியாக ராணுவப் பதவிப் படிக்கட்டுகளில் மேலேறி வந்து, ராணுவத் தளபதி ஆனார்.

உள்நாடு மற்றும் அக்கம்பக்கத்து நாடுகளில் மாத்திரமே பெயரளவில் அறிமுகம் ஆகியிருந்த முஷரஃப், அக்டோபர் 12, 1999 அன்று பாகிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை அதிரடியாகக் கைப்பற்றிய நாளில்தான் உலகம் முழுவதும் பிரபலமானார். அனைத்து ஊடகங்களும் அவருடைய பெயரை உச்சரிக்கத் தொடங்கின.

மூன்று ராணுவ உயரதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு ஒத்தாசையாக சுமார் நூறு ஜவான்கள் கும்பலாக பிரதமர் நவாஸ் ஷெரீபின் அலுவலகத்துக்குள் ஒருநாள் நுழைந்தனர். `என்ன விஷயம்?' என்று கேட்டார் பிரதமர். `மன்னிக்க வேண்டும். உங்களைக் கைது செய்கிறோம்'. ராணுவப் புரட்சி நடந்திருப்பதை ஷெரீப்பால் உணர்ந்துகொள்ளமுடிந்தது. இப்படித்தான் அதிரடியாகத் தனது கணக்கைத் தொடங்கினார் முஷரஃப்.

இந்தியா தொடங்கி அத்தனை தேசங்களும் ராணுவப் புரட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. சிலர் மெல்லிய குரலில். வேறு சிலர் உரத்த குரலில். ஆனாலும் அடுத்த இரண்டாண்டுகளுக்கு பாகிஸ்தானில் ராணுவ ராஜாங்கம்தான் நடந்துகொண்டிருந்தது. சட்டாம்பிள்ளையான முஷரஃப் நினைத்ததுதான் சட்டம். போட்டதுதான் கையெழுத்து. சகலம் முஷரஃப் மயம். சாவகாசமாக இரண்டாண்டுகள் ஆட்சி செய்து முடித்தவர் 2001-ல் `பாகிஸ்தானுக்கு புதிய அதிபரை நியமித்திருக்கிறேன். பெயர், பர்வேஸ் முஷரஃப்' என்ற ரீதியில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஆம். அவரே அதிபராகவும் ஆனார்.

என்னதான் பாகிஸ்தானுக்கு அதிபர் என்றாலும்கூட அமெரிக்காவுக்கு செல்லப்பிள்ளையாக மாறுவது முக்கியம் என்பதால் அதற்கான வாய்ப்புகள் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து, `அல்காயிதாவை அழிக்கிறேன், பின்லேடனைப் பிடிக்கிறேன்' என்று ஆப்கனுக்குள் அமெரிக்கப் படைகள் நுழைய, இதுதான் சமயம் என்று தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்துக்கு என்னுடைய பரிபூரண ஆதரவு என்று அறிவித்தார். பாகிஸ்தான் அதிபரா இப்படிப் பேசுகிறார் என்று எல்லோருமே வாய் பிளந்தனர். இதன்மூலம் அமெரிக்காவிடம் அவருக்கு நல்ல பிள்ளை என்ற அந்தஸ்து கிடைத்தது.

கிடைத்த இமேஜைப் பயன்படுத்தி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தன்னுடைய அதிபர் பதவியை நீட்டிக்கொள்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவர முயற்சி செய்தார் முஷரஃப். எதிர்க்கட்சிகள் கொந்தளித்துவிட்டன. இது கடைந்தெடுத்த மோசடி என்று சீறின. ஆனாலும் சாம, பேத, தான, தண்ட முறைகளைப் பயன்படுத்தி மசோதாவை நிறைவேற்றிவிட்டார் முஷரஃப்.

இது பலத்த சர்ச்சைகளைக் கிளப்பவே, `முறைகேடுகள் நடந்தது வாஸ்தவம்தான். அதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்' என்றார் முஷரஃப். இதன்மூலம், தான் எத்தனை தேர்ந்த அரசியல்வாதி என்பதை எல்லோருக்கும் நிரூபித்தார்.

அதிபராக இருந்துவிட்டுப் போங்கள். ஆனால் நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்துங்கள் என்று உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம். அதற்கேற்ப 2002-ல் தேர்தல் நடந்தது. அவருடைய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (காயிதே அஜம்) கட்சி களத்தில் இறங்கியது. ஆனால் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தபோதும் தன்னுடைய அதிபர் பதவியைத் தக்கவைக்க முடிந்தது. அந்த சமயத்தில் தான் விரைவில் ராணுவப் பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக அறிவித்தார். வெறும் வாய் வார்த்தையாக மட்டுமே அதை நினைத்தாரே தவிர அதை அந்த நிமிடமே மறந்துவிட்டார்.
இடையிடையே முஷரஃப் மீது இரண்டு கொலை முயற்சிகள் நடத்தப்பட்டன.

தப்பித்துவிட்டார். ஆண்டுகள் கடந்தன. 2007-ல் மீண்டும் ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடத் தயாரானார் முஷரஃப். திடுதிப்பென உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இஃப்திகார் முகமது சௌத்ரி தன்னுடைய அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என்றுகூறி அவருக்கு சஸ்பென்ஷன் உத்தரவைப் பிறப்பித்தார் முஷரஃப். இது எதற்கான முயற்சி என்ற சந்தேகம் பாகிஸ்தான் முழுக்கப் பரவியது.

இதற்கிடையே லால் மசூதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் மீது பாதுகாப்புப்படை தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இது மிகப்பெரிய கலவரமாக உருமாறி பாகிஸ்தானைத் திக்குமுக்காடச் செய்தது. இந்த வெப்பம் அடங்குவதற்குள் முஷரஃப் கொடுத்த சஸ்பென்ஷனை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய, எப்போது வேண்டுமானாலும் மீண்டும் எமர்ஜென்ஸி அமலாகலாம் என்று வதந்தி பரவத் தொடங்கியது. ஆனால் அப்படியொரு விபரீத முடிவை முஷரஃப் எடுக்கவில்லை.

இதன்பிறகு நடந்த அதிபர் தேர்தலில் முஷரஃப் வெற்றி பெற்றார். ஆனால் அந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைக்க, ஆத்திரமடைந்த முஷரஃப் மீண்டும் எமர்ஜென்ஸியை அமல்படுத்தினார். நாடு முழுக்க அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பிறகு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட முஷரஃப், தான் இத்தனை நாளும் வகித்துவந்த ராணுவப் பொறுப்பை ஜெனரல் கயானியிடம் ஒப்படைத்துவிட்டு நாடாளுமன்றத் தேர்தலை அறிவித்தார்.

அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வெளிநாடுகளில் இருந்த பெனாசிர் பூட்டோவுக்கும் நவாஸ் ஷெரீப்புக்கும் அனுமதி வழங்கப்பட்டன. அவர்களும் களத்தில் குதித்தனர். ஜனநாயகம் மலரப்போகிறது என்ற நம்பிக்கையுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பெனாசிர் பூட்டோ ராவல்பிண்டியில் படுகொலை செய்யப்படவே, பாகிஸ்தான் அரசியலில் மீண்டும் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது.

எல்லாவற்றையும் கடந்து ஒருவழியாக பிப்ரவரி 2008-ல் தேர்தல் நடந்தது. தேர்தலில் முஷரஃப் கட்சி தோல்வியைச் சந்தித்தது. பெனாசிர் கட்சியைச் சேர்ந்த யூசுஃப் ராஸா கிலானி என்பவர் பிரதமரானார். அவருக்குப் பல கட்சிகளும் ஆதரவளித்து வருகின்றன. இந்நிலையில் அதிபர் முஷரஃப் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்ற சூழல் உருவானது. இதன்மூலம் அவருடைய பதவிக்கு ஆபத்து ஏற்படவே, தர்மசங்கடத்தைத் தவிர்க்கும் விதமாக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார், அதுவும் உருக்கமான உரையோடு.

`நான் எந்தத் தவறும் செய்யவில்லை. பாகிஸ்தானுக்கு தேவைகள் ஏற்பட்டபோதெல்லாம் உதவி செய்து இருக்கிறேன். என் மீது எந்த குற்றச்சாட் டும் கூற முடியாது. என் மீது ஒரு குற்றச்சாட்டைக் கூட அவர்களால் நிரூபிக்க முடியாது. ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது சரியான நடைமுறைதானா? ஈகோ காரணமாக இதைச் செய்கிறார்கள். ஜனாதிபதி பதவியை விட பாகிஸ்தான்தான் எனக்குப் பெரிது.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் நான் நீக்கப்பட்டால் அது பாகிஸ்தானுக்கு பெரிய இழப்பாக இருக்கும். நான் யாரிடமும் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. எனவே ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன். இந்த முடிவை எனது ஆதரவாளர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைப்பேன். அடுத்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை மக்களிடமே விட்டு விடுகிறேன்.

நன்றிங்க

காலச் சக்கரம் என்ன வேகமாக சுழல்கிறது!

நவாப் ஷெரிஃபை நாடு கடத்திய முஷ்ரப்பு நாடு கடத்தப்படுவரா...?

அமெரிக்கவுக்கா? சவூதிக்கா? பொறுத்திருங்கள், விரைவில்...

Friday, August 01, 2008

பெண்மைக்குப் பெண்ணே எதிரி!

சென்னை. பரபரப்பான நந்தனம் சிக்னல். பச்சை விளக்குக்காகக் காத்திருக்கிறேன். விர்ர்ரூம்ம்ம் விர்ர்ரூம்ம்ம் சத்தத்துடன் என் காரை உரசிவிடுவது மாதிரி பக்கத்தில் வந்து நின்றது அந்த பைக். ஓட்டி வந்த இளைஞனின் பின் இருக்கையில் ஒரு பெண். இரண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்திருந்தாள். காற்றைக் கிழிக்கும் கூந்தல். ஸ்லீவ்லெஸ் லோகட் டாப்ஸ் - ஜீன்ஸில் இருந்தாள். முதுகுப்பக்கம் டாப்சுக்கும் ஜீன்சுக்கும் இடைவெளியில் பளீர் எனத் தேகம் தெரிய, கூடவே அவள் அணிந்திருந்த பேன்ட்டீஸின் லேபிளும் எட்டிப் பார்த்தது. தோள்பட்டையிலும் இடுப்பிலும் டாட்டூஸ் மின்னல்கள். சிக்னலில் நின்ற வாகனங்களின் கண்கள் அந்தப் பெண்ணையே மொய்த்தன. பச்சை சிக்னல் விழுந்து சில விநாடிகள் கழித்துத்தான் சக்கரங்கள் சுழலவே ஆரம்பித்தன. இது போன்ற நிகழ்வுகள் தொடர்வது வாடிக்கையாகிவிட்டது.
 
இன்னொரு சம்பவம். 'தனது அப்பா மீது ரொம்பப் பாசமுடையவன் சதீஷ். அவனின் திருமணத்துக்குப் பிறகு அப்பா ஏனோ மகனிடம் அதிகம் பேசுவதில்லை. மருமகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. வீட்டைவிட வெளியில் இருப்பதையே விரும்பினார். சதீசுக்கு அப்பாவின் மனநிலை குறித்து சந்தேகம். தனியாக விசாரித்தபோது, அப்பா சொன்னார்: ''எப்படிச் சொல்றதுன்னு தெரியலைப்பா. உன் அம்மா செத்து இருபது வருஷமாச்சுப்பா. நான் ரொம்ப யோக்கியமாவே வாழ்ந்துட்டேன். உன் வொய்ஃப் எப்பப் பார்த்தாலும் நைட்டியிலயே திரியுது. அது ரொம்ப ஸ்டைலா வளர்ந்த பொண்ணு போல. எனக்குத்தான் மனசுக்கு ரொம்பக் கூச்சமா இருக்குப்பா!'' என்றார். அப்பா இப்போது இருப்பது முதியோர் இல்லத்தில்.

'இந்தியா சுதந்திர நாடு. நாங்கள் சுதந்திரப் பிரஜைகள். நாங்கள் எப்படி வேண்டுமானாலும் உடுத்துவோம்' என்பது சரிதான். ஆனால், அதற்கு ஓர் எல்லை உண்டு. எங்களுக்கு இது வசதியாக இருக்கிறது என்று உடுத்துவது எதையும் யாரும் மறுக்க மாட்டார்கள். கட்டுப்பாடு, கலாசாரம் என்றிருந்த நம் வீடுகளுக்குள் நம் வீட்டுப் பெண்களின் விருப்ப உடைகளான சுடி தார், நைட்டி, ஜீன்ஸ் என எல்லாம் உள்ளே அனுமதித்தோமே... அதுதான் மனப் பக்குவம்.
ஆனால், நாகரிகம் என்ற பெயரில் ஒரு சிலர் இப்படி அரைகுறையாக ஆபாசமாக ஆடை உடுத்துவது, மற்றவர்களின் கவனம் ஈர்ப்பதற்காக. இந்த மனநிலைக்கு 'attention drawing behaviour'என்று பெயர். பத்து பேரின் கவனத்தை ஈர்த்தேன் என்று கர்வம்கொள்ளும் அதே நேரத்தில், பத்து பேரின் தவறான அபிப்ராயத்தையும் சம்பாதிக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
 
நீங்கள் எப்படி நடக்கிறீர்களோ அப்படித்தான் மற்றவர்கள் உங்களிடம் நடந்துகொள்வார்கள். எதைக் கொடுக்கிறோமோ,அது தான் திரும்பக் கிடைக்கும். யாரும் அரை குறை உடையுடன் கோயிலுக்குப் போவது இல்லையே. நேர்முகத் தேர்வு என்றால், ஃபார்மல் டிரெஸ். திருமணம் என்றால் பட்டுப்புடவை என எல்லாவற்றுக்கும் முறை ஒன்று இருக்கிறது. பொது இடங்களுக்கு வரும்போது மட்டும் ஏன் அரைகுறையாக உடுத்த வேண்டும்?
நாகரிகம் என்கிற பெயரில் இப்படியெல்லாம் பெண்கள் ஆடை உடுத்துவதற்கு மனப் பக்குவம் இல்லாததே காரணம். மனப் பக்குவம் இருக்கிற எவரும் இப்படி உடுத்த மாட்டார்கள்!

நன்றிங்க - இந்தவார ஆனந்த விகடனில் டாக்டர் டி. நாராயண ரெட்டி

முன்னேற்றம் என்ற போர்வையில் பண்பாட்டுக் கலாச்சாரத்துக்கு வேட்டு வைத்து, முன்னோர்கள் பின்பற்றியொழுகிய நற்பண்புகளும் நடமுறைப் பழக்கவழக்கங்களும் பின்பற்றத் தகுதியற்றவையாக புறக்கணிப்பட்டு ''சுதந்திரம்'' எனும் பெயரில் மறைக்கப்பட வேண்டிய பெண்கள் எதற்கெடுத்தாலும் சமநிலை முழக்கத்தோடு உடை சுதந்திரத்தைக் கையிலெடுத்துள்ளனர். புதியவை நல்லவையென்றும் பழையவை காலங்கடந்தவையென்றும் நிர்வாண நாகரீகத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றனர் பெண்கள்.

முன்னேற்றம் எல்லாக் காலங்களிலும் ஏற்படுவது தான். அதில் நடுநிலையைக் கைவிடும் போதுதான் குழப்பங்களும் சர்ச்சைகளும் ஏற்படுகின்றன. சதீஷின் அப்பா ஒழுக்கமுள்ளவர் அதனால் அரை குறை உடையில் காட்சி தரும் மருமகளிடமிருந்து ஒதுங்கிக்கொண்டார். ஒழுக்கமுடன் இருந்தாலும் அரை குறை ஆபாச உடையால் கவனத்தை ஈர்த்து சபலத்தை ஏற்படுத்துவதால் சில குடும்பங்களில் மருமகள் மாமனாரால் பலவந்தப்படுத்தும் அவலமும் அங்காங்கே நிகழ்கிறது.

நம்மைச் சுற்றி எல்லாரும் நம்மையே கவனிக்க வேண்டும் என்று மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக கவர்ச்சியாக உடை உடுத்தும் பெண்கள் - நீங்கள் எப்படி நடக்கிறீர்களோ அப்படித்தான் மற்றவர்கள் உங்களிடம் நடந்துகொள்வார்கள். அரை குறை ஆபாச உடைகளால் அபாயம் பெண்களுக்குத்தான். பெண்மைக்கு பெண்களே எதிரியாக இருக்கின்றனர் இதை கவனத்தில் வைத்து உங்கள் ஆடை சுதந்திரத்தைப் பேணிக்கொள்ளுங்கள்!

ஜனநாயக நாடகம்.


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், "இந்திய அமைதிப் படையினரால் ஈழத்தில் கொல்லப் பட்டதாக" தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தியை அவரே படித்தார். அவர் மரணமடைந்த செய்தியை அவரே படித்துக் கொண்டிருப்பதை நக்கீரன் இதழ் அட்டைப் படத்தில் வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

தம்மைக் "காவல் துறை வலைவீசித் தேடி" வருவதாக அன்று காலைச் செய்தி வெளியிட்ட தினமணி நாளிதழை அதே மாலையில் சென்னை மண்ணடியில் மாநகரக் காவல் துறை ஆணையரது அனுமதி பெற்று, நூற்றுக் கணக்கான காவலர்களின் பாதுகாப்போடு நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பழனி பாபா படித்துக் காட்டினார்.

இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களது பெயர், முகவரி, புகைப்படம் அனைத்தும் அச்சு ஊடகங்களிலும் தொலைக் காட்சியிலும், "தீவிரவாதி கைது!" என்ற தலைப்புச் செய்தியோடு வெளிவந்தால் நீங்கள் சிரிப்பீர்களா? அழுவீர்களா?

கேரள மாநிலம் பெரும்பாவூரைச் சேர்ந்த இஸ்மாயீலுக்கு அதுதான் நடந்தது.

கடந்த 29 ஜூலை 2008 செவ்வாய்க்கிழமை "பெங்களூர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி காவல்துறையின் பிடியில்" என்ற கைரளி மக்கள் தொலைக் காட்சிச் செய்தியை அதே இஸ்மாயீல் தன் குடும்ப சகிதம் தன் வீட்டில் அமர்ந்து தன் வீட்டிலுள்ள தொலைக் காட்சியில் பார்த்திருக்கிறார்.

அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்?

மறுநாள் 30 ஜூலை 2008 புதன்கிழமை அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் செய்தியனுப்பி, தன் மனைவி, குழந்தைகள் சகிதம், "நிம்மதியாக வாழ முடியவில்லை; வீட்டில் நிம்மதியாகத் தூங்கக்கூட முடியவில்லை. நிம்மதியான வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும்" என்ற கோரிக்கையோடு பத்திரிக்கையாளர் சந்திப்பில் காட்சியளித்தார்.

இவ்வாறு அவர் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் கூட்டி அறிவித்ததற்கு அடிப்படைக் காரணம் உண்டு.

கைரளி மக்கள் தொலைக் காட்சியின் "கைது"ச் செய்தியை உண்மையா பொய்யா என்று விசாரிக்காமல் அச்செய்திக்குக் கண்ணும் காதும் வைத்துத் தன்னை தீவிரவாதியாகவே சித்தரித்து விட்ட, ஜனநாயகத்தின் நான்காவது தூண்களான நாளிதழ்கள் - கேரளத்தை ஆளும் மார்க்ஸிஸ்ட் கட்சியின் ஊதுகுழலான 'தேசாபிமானி' உட்பட அனைத்து நாளிதழ்கள் - மீதும் தன் உள்ளக் குமுறலை அவர் கொட்ட வேண்டியிருந்தது.

எர்ணாகுளம் பத்திரிகையாளர் மன்றத்தில், காவல்துறை தன்னைத் தீவிரவாதியாக்கியக் கதையையும் பத்திரிகைகள் பொய் செய்திகளைப் பரப்பித் தன்னை அவமானப் படுத்தியதையும் அவர் விவரித்தார்.

"கடந்த செவ்வாய்கிழமை இரவு வீட்டில் இருக்கும்போது கைரளி பீப்பிள்ஸ் தொலைக் காட்சியில் என்னை பெங்களூர் காவல்துறை கைது செய்து, கஸ்டடியில் எடுத்திருப்பதாகச் சொன்ன செய்தியினைப் பார்த்தேன். அதைத் தொடர்ந்து மறுநாள் புதன்கிழமை ஜென்மபூமி உட்பட பல முக்கிய பத்திரிகைகளும் நான் பெங்களூர் காவல்துறையில் பிடியில் உள்ளதாகச் செய்தி வெளியிட்டன. அவர்களைத் தொடர்பு கொண்டு, அச்செய்தி பொய் என நான் தெரிவித்த பின்னரும் எந்தப் பத்திரிகையும் என்னைப் பற்றிய அவதூறுச் செய்தியைத் திருத்தவோ வருத்தம் தெரிவிக்கவோ முன்வரவில்லை. எனவே உண்மையை வெளிப்படுத்துவதற்காகவே இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பைக் கூட்ட முயன்றேன்" எனக் கூறும் பொழுது இஸ்மாயீலின் முகத்தில் அநியாயமாகப் பாதிக்கப்பட்டவனின் வேதனை தெரிந்தது.

1990இல் கேரள மாநிலக் காவல்துறையில் இணைந்த பெரும்பாவூரைச் சேர்ந்த இஸ்மாயீல், காவல்துறையில் சிறப்புக் கமாண்டோ பயிற்சி பெற்றவர்.

அப்துல் நாசர் மஅதனியைக் கொலை செய்யும் நோக்கோடு அவர் மீது சங் பரிவாரத்தினரால் வீசப் பட்ட வெடி குண்டு வெடித்து, அவர் ஒரு காலை இழந்த பின்னர், 1992இல் மஅதனியின் சுய பாதுகாப்புக்காக அவர் உருவாக்கிய 'பூனப் படை'யினருக்கு இஸ்மாயீல் பயிற்சி அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததுதான் அவர் எதிர் கொள்ளும் தொல்லைகளின் தொடக்கம். தம் மீது தனிப்பட்ட முறையில் விரோதம் கொண்டிருந்த சகப்பணியாளர்களில் சிலரே இத்தகையப் பொய்க் குற்றச்சாட்டுகளைத் தொடங்கி வைத்தவர்கள் என அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் இவர் மீது விசாரணை நடத்திய பொழுது அக்குற்றச்சாட்டு பொய்யானது எனத் தெளிவானது.

அதன் பின்னரும் அவர் காவல்துறை பணியில் இருந்து கொண்டே தீவிரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததாகப் பல பொய்க் குற்றச்சாட்டுகள் எழும்பியிருந்தன. இதனால் எதிர்கொள்ள வேண்டி வந்த பல விசாரணைகளில் மனம் வெறுத்துப் பணிக்குத் தொடர்ச்சியாகச் செல்ல இயலாமல் இருந்தார். அதைக் காரணம் காட்டி, 1996இல் இஸ்மாயீல் காவல்துறை பணியிலிருந்து நீக்கம் செய்யப் பட்டார்.

"காவல்துறை பணியிலிருந்து மனரீதியாகத் என்னைக் கொடுமைப் படுத்தி வெளியேற்றியவர்கள்தான் இப்பொழுதும் எங்காவது எந்தக் குற்றச் செயல் நடந்தாலும் அதற்கும் எனக்கும் எந்தவித முகாந்திரமோ தொடர்பு ஆதாரமோ இல்லா விட்டாலும் அதனுடன் என்னைத் தொடர்பு படுத்தி, மேன்மேலும் கொடுமைப் படுத்த முயல்கின்றனர்" என்று காவல்துறையின் 'லின்க்' கொடுக்கும் தந்திரத்தை அம்பலப் படுத்தி குற்றம் சுமத்துகிறார் இஸ்மாயீல்.

காவல்துறை பணியிலிருந்து வெளியேறிய பின்னர் கேரளத்தில் என்ன சம்பவம் நடைபெற்றாலும் காவல்துறை தம்மைத் தேடி வருவது வழக்கமாகவே ஆகி இருந்தது என்று இஸ்மாயீல் நினைவு கூர்ந்தார். காலடி என்ற ஊரில் மக்கள் ஜனநாயக் கட்சி அணிவகுப்பில் நடைபெற்றத் தாக்குதலில் தம்மைக் காவல்துறை அநியாயமாக எதிரியாகச் சேர்த்து வழக்குத் தொடுத்து, தற்பொழுது அவ்வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

புல்வெளி என்ற ஊரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேருந்துகளைத் தீயிட்ட வழக்கிலும் இஸ்மாயீல் எதிரியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். வீட்டில் இருந்த தம்மை அநியாயமாகப் பிடித்துக் கொண்டு போய் இவ்வழக்கில் சேர்த்தக் காவல்துறை, வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமது மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று பஸ் எரிக்கப்பட்ட புல்வெளியில் கொண்டு போய் போட்டு, பொய் ஆதாரங்களை உருவாக்கியது என்றும் பின்னர் இவ்வழக்குப் புனையப் பட்டது என நீதிமன்றம் தீர்ப்பளித்துத் தம்மை விடுவித்ததையும் விளக்கினார்.

இதே போன்று களமச்சேரி என்ற ஊரிலும் தமிழ்நாட்டுப் பேருந்து ஒன்றைத் தீயிட்ட வழக்கிலும் ஈ.கே.நாயனாரைக் கொல்ல முயன்றதாகப் புனையப் பட்ட வழக்கிலும் தம்மைக் காவல்துறை இணைக்க முயன்றதாக அவர் மேலும் கூறினார்.

கடந்த நாட்களில், "பெங்களூர் குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக ஊடகங்களில் செய்தி வந்த பின்னர் என்னைக் காவல்துறை தொடர்ந்து தொலைபேசியிலும் நேரிலும் தொந்தரவு செய்து வருகின்றது. பெங்களூரில் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தி பொய்ச் செய்தி; நான் வீட்டில்தான் இருக்கின்றேன் என்ற விவரத்தை அறிவித்தப் பின்னரும் எந்த ஊடகமும் அதனை வெளியிட்டு நடந்த தவறில் திருத்தம் வெளியிட முன்வரவில்லை. காவல்துறையும் ஊடகங்களில் சிலவும் என்னைக் குறி வைத்துத் தொடர்ந்து செய்யும் இத்தகைய தொந்தரவுகளால் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ இயலா நிலை ஏற்பட்டுள்ளது. தயவு செய்து என்னையும் என் குடும்பத்தையும் நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டும்" என அவர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வேதனையுடன் கோரிக்கை வைத்தார்.

ஜனநாயகத் தூண்கள் இரண்டும் சேர்ந்து இஸ்மாயீலுடைய வேதனையைப் போக்குமா?

அதிரடிப்படை வீரராகப் பணியாற்றிய கமாண்டோ இஸ்மாயீலுக்கே இந்த கதி என்றால், "தீவிரவாதிகள் உருவாகக் காரண கர்த்தாக்கள் காவல் துறையும் ஊடகங்களும்தாம்" என்ற பரவலான குற்றச் சாட்டில் உண்மை இருப்பதாகவே கருத வேண்டியதுள்ளது.

ஜனநாயகத் தூண்கள் இரண்டும் தம் மீது படிந்துள்ள கறைகளை நீக்குமா?

காத்திருப்போம்!

நன்றிங்க

Monday, July 28, 2008

ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை!

சகுந்தலா நரசிம்ஹன்

'ஹிஜாபை அணிந்தால்தான் உள்ளே வரமுடியும்' என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.

சவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு "பெண்கள் பகுதி" க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன். செல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது!

சவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.

மறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள்.

"சவுகரியமா? இதன் மூலமா?" என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.

எனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன்!. ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.

நோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும் சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.

மறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த "பிரின்ஸ் சுல்தான் க்ராண்ட் செரமோனியல் ஹால்" இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

பூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர். ஒரு முழு ஆண்டின் பெரும்பகுதி நேரத்தினை நியூயார்க்கில் செலவழிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவியும் ஜே ஆர் டி டாட்டாவின் நெருங்கிய தோழி என்று அறியப் பட்டவருமான ஒரு பெண்மணி எனது இடப்பக்கத்திலும் அவருக்கு அருகில் இளம் பத்திரிகையாளர் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். ஜித்தாவிலிருந்து வந்திருந்த 'மிகப் பெரும் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்' என்று அறியப் பட்ட ஒரு பெண்ணும் எங்களோடு அமர்ந்திருந்தார்.

சரி, இதில் வியக்க என்ன உள்ளது என்கிறீர்களா? அவர்கள் அனைவருமே அணிந்திருந்தது கறுப்பு நிற ஹிஜாப் உடை தான்.

என்னருகில் அமர்ந்திருந்த பெரும் நிறுவன உரிமையாளரான அந்த இளம் பெண் விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்த டிவி கேமராக்கள் எங்களை நோக்கித் திரும்பும் நேரத்தில் எல்லாம் விலகியிருக்கும் தன் முகத்திரையினை சரி செய்து முகத்தை மூடிக் கொண்டார். புதிராகப் பார்க்கும் என் பார்வையினைப் புரிந்தவராக என் பக்கம் சாய்ந்து, "கேமராக்கள் நம்மைப் படம்பிடிப்பதை விட்டும் விலகி விட்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்!" என்றார்.

நிகழ்ச்சிக்கு வந்த மற்ற அனைத்துப் பெண்களைப் போலவே இவரும் மிக அழகிய ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு வியப்பு விலகாமல் ஆர்வத்துடன் நெருங்கி கேட்டேன்: "எதனால் தங்கள் முகத்தினைக் கேமராமுன் காண்பிக்க மறுக்கிறீர்கள்?"

அதற்கு அவர், "நீங்கள் இப்போது அணிந்துள்ள புடவை, ஏதேனும் ஒன்றில் சிக்கி, உங்கள் முழங்கால் வெளியே தெரிவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா? அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை!" என்றார்.

"முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவிக்கப்பட்டு அடிமைப்படுத்தப் படுகிறார்கள்" என்ற சொல்லையே இந்தியாவில் திரும்பத் திரும்ப கேட்டிருந்த என் மனதினுள் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

என் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தனது கைகளுக்கும் விரல்களுக்கும் உதட்டுக்கும் கண்களுக்கும் தேர்ந்த ஒப்பனை செய்திருந்ததையும் கவனித்தேன். மனதில் எழுந்த கேள்விகளை அடக்க முடியாமல் அவர் பக்கம் நெருங்கினேன்.

"இத்தனை அற்புதமான அலங்காரங்களைச் செய்துள்ள உங்கள் அழகை இந்த புர்கா சிதைக்கவில்லையா?" பொருளாதார நிபுணரான அப்பெண் மென்மையாக சிரித்தவாறே கூறினார்.

"இல்லவே இல்லை! இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். நம் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி...!" என்றார்.

அத்துடன் நில்லாமல், "இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே? பின்பு ஏன் கவலை?" என்றார்.
அப்படியென்றால் இத்தனை காலம் மேற்கத்திய மற்றும் கீழத்தேய எழுத்தாளர்கள் அனைவரும், "புர்கா என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூறி வந்தது பொய்யா?" என்ற பெரிய கேள்வி ஒன்று பூதாகரமாக என் மனதில் உருவாவதை உணர்ந்தேன்.

என் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாரிசுதாரரான ஜித்தாப் பெண்ணிடமும் இது பற்றி உரையாடினேன்.

"உங்களுக்குத் தெரியுமா?" என்று என்னிடம் கேள்வி எழுப்பினார் செல்வச் சீமாட்டியான அந்த பெண். "மேற்கத்திய நாடுகளின் என் பயணங்களில் கவனித்திருக்கிறேன். அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் உடல் முழுமையாக மறையும் வண்ணம் பிஸினஸ் சூட் அணிந்து வரும் மேற்கத்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையோரின் உடைக்கும் ஹிஜாபுக்கும் பெருத்த வித்தியாசம் ஏதுமில்லை!" என்றார்.

"கறுப்பு நிறக் கலாச்சார உடையினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளுதல்" என்று பலரை இதுநாள் வரை கேலி செய்திருந்த எனக்கு, யதார்த்தமான இப்பதில் வெகுவாக யோசிக்க வைத்தது.

பொறுமையின் எல்லையைக் கடந்தவளாக ஆர்வம் மிகுதியில் என் கையில் கொண்டு வந்திருந்த புர்காவை எடுத்து அணிந்து பார்த்தேன். எடுத்த எடுப்பில் சற்றே வெறுப்பாய் உணர்ந்த நான், அடுத்த சில நாழிகைகளில் எனது வெறுப்புத் தளர்வதை உணர ஆரம்பித்தேன். பிற்பாடு ஹிஜாப் அணிந்தவண்ணம் வெளியே செல்லவும் ஆரம்பித்தேன்.

என் போன்றே ஹிஜாப் அணிந்து பார்த்த, மருத்துவத்துறைக்கான பரிசினை வென்ற அமெரிக்கர் ஒருவரின் மனைவி பெண்களின் கூட்டத்திற்கிடையே பேசுகையில், "தான் அணிந்துள்ள ஹிஜாப் மூலம், தான் மிகவும் சவுகரியமாகவே உணர்வதாக"க் குறிப்பிட்டார். "சுருக்கங்கள் நிறைந்த, அடிக்கடி விலகும் எனது ஸ்கர்ட் பற்றி இனிக் கவலையில்லை!" என்று கூறி அங்குள்ள பெண்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார்.

வியப்பில் என் விழிகள் அகலும் வண்ணம் நாங்கள் பார்வையிடச் சென்ற தேசியக் கண்காட்சி மையம், பல்கலைக் கழகம், மருத்துவ-ஆராய்ச்சி மையம் என்று எங்கு, எப்பணியில் நோக்கினாலும் பெண்கள் தடங்கலின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்தவண்ணம் பணிகளில் ஈடுபட்டிருந்ததைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா?

அறிவியல், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பப் பணிகளிலும் அநாயசமாகவும் எளிமையாகவும் அப்பெண்கள் ஹிஜாபுடன் எவ்வித இடைஞ்சலுமின்றி செயற்படுவதைக் கண்டு வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.

இந்தியத் தூதர் M.O.H ஃபாரூக் அவர்கள் எங்களுக்காக அவர் வீட்டில் அளித்திருந்த உயர் ரக விருந்தில்கூட பெண்கள் (அதிகாரிகளின் மனைவிகள்) அனைவருக்குமான தனித்த இடத்தில் விருந்து நடந்தது.

அதன் பிறகு ஒரு நாளில், கோல்டு மார்க்கெட் எனப்படும் தங்க நகைகள் விற்கும் கடைவீதிக்குச் சென்று வந்தேன். (பார்ப்பதற்கு மும்பையின் ஜாவேரி பஜார் போன்று ஆனால் அதைவிடச் சிறப்பாக இருந்தது இப்பகுதி) அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் ஹிஜாபுடன் ஏறி இறங்க எனக்கு மிக மிக எளிமையாகவே இருந்தது.

அந்நேரத்தில் அப்பகுதிகளில் சவூதி நாட்டு படித்த இளம் பெண்கள் பலரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படி பார்த்த பல பெண்கள் தங்கள் கைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து, தன் மொபைல் ஃபோனில் டயல் செய்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அணுகினேன்.

அந்தப் பெண், நவீன கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர் என்பது பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. படித்த, பகட்டான உடையணிந்த பெண் என்பதால் ஹிஜாப் குறித்த மாற்றுச் சிந்தனையை எதிர்பார்த்து அணுகினேன்."நீங்கள் ஹிஜாபை விரும்பித்தான் அணிகிறீர்களா?" என்று கேட்டு விட்டேன்.

நொடிக்கூட தாமதிக்காமல் பதில் வந்தது: "இது எனக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் ஒரு உள்ளாடையை அணிவது போன்று எளிமையாகவும் இருக்கிறது" என்றார்.

என்னை ஏறிட்டு நோக்கியவர், என் மனதில் உள்ள குழப்பங்களைப் படித்தது போன்று எதிர்கேள்வி ஒன்றையும் என்னிடமே போட்டார்:

"செரினா வில்லியம்ஸ், இப்போது அணிந்துள்ள ஸ்கர்ட்டை விடச் சிறிய, பிகினி உடையினை அணிந்தால் இன்னும் வேகமாக அவரால் ஆட முடியும்தான். ஆனால் அது அவருக்கு சவுகரியமாக இருக்காது என்பதால் அவர் செய்ய மாட்டார் இல்லையா?" என்றார். இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத சில விடைகள் சரசரவென்றுக் கிடைக்க ஆரம்பித்தன.

இச்சூழலில், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒருமுறை நான் கலந்து கொண்ட திருமண டின்னர் பார்ட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. மணமகளாக அலங்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தி, பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து சிகை அலங்காரம் செய்திருந்தாலும் Ghoonghat எனப்படும் முக்காடு கொண்டு தலைப்பகுதியினை நிகழ்ச்சி முழுவதும் தன்னை மறைத்திருந்தாள். அவளது அலங்கரித்த தலைமுடியை மறைத்திருப்பது பற்றி நான் எழுப்பிய வினாவிற்கு, "கூன்கட் எனப்படும் தலையினை மறைப்பதுதான் பெரியோர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். இது எங்கள் பாரம்பரிய கலாச்சாரமாகும்; நான் ஏன் அதை மீற வேண்டும்?" என்று பெருமையாகக் கூறுயதே விடையாகக் கிடைத்தது.

எனவே எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவத்திலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.

மும்பையில் ஒரு சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக ஒரு பெண் தலையை மறைப்பது பெருமையாக கருதப்படுவதும் அது ஆண்களிடையே 'அடிமைத்தனம்' என்ற கூக்குரலாக வெளியே வருவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிகையில் மட்டும் 'பெண்ணடிமை'த் தனமாக உருவகப்படுத்தப் படுவது ஏன்? என்ற நெருடல் அவ்வேளையில் எழுந்தது.

ஒவ்வொரு நாட்டிலும் பெண்ணின் உடை அளவிலான கோட்பாடுகள் என்பது உள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் அது அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்று மாறுபடுகிறது. செரினா வில்லியம்ஸின் உதாரணம் உட்பட.

என்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

இந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா?

பெண்ணுரிமைக்காக கடுமையாகப் போராடுபவள் என்ற உணர்வில் இருந்து சற்றும் மாறுபடாமல் என் அடிமனதில் இருந்து எழுந்த பதில்,

இல்லை. எனக்கு எந்தச் சிரமமும் இல்லவே இல்லை!

சவூதி அரேபியாவுக்குச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! அங்கே ஹிஜாப் அணிந்து வலம் வந்தபோதும்!

நன்றிங்க

Thursday, June 26, 2008

தீவிரவாதத்ததைச் சொல்லி...

தீவிரவாதத்தை எதிர்த்து போரிட
பாகிஸ்தானுக்கு ரூ.24ஆயிரம் கோடி அமெரிக்கா கொடுத்தது
மிகக்குறைவான தொகையே செலவிடப்பட்டது கண்டுபிடிப்பு



வாஷிங்டன், ஜுன்.26-

தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதற்காக பாகிஸ்தானுக்கு ரூ.24 ஆயிரம் கோடியை அமெரிக்கா கொடுத்தது. ஆனால் மிகக்குறைவான தொகையே அதற்காக செலவிடப்பட்டதை அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு

அமெரிக்காவில் உள்ள நிïயார்க் நகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதத்துக்கு எதிரான போரை அமெரிக்கா தொடங்கியது. இந்த போரில் அமெரிக்காவின் பங்காளியாக இருக்கும் பாகிஸ்தானும் தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதற்காக அந்த நாட்டுக்கு அமெரிக்கா நிதி உதவி அளித்தது. 2001-ம் ஆண்டு முதல் அந்த நாட்டுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் உதவி அளிக்கப்பட்டது. இந்த நிதியை பாகிஸ்தான் எவ்வாறு செலவிட்டது என்பதை கண்டுஅறிவதற்காக அமெரிக்க அதிகாரிகள் அந்த நாட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர். அமெரிக்க அரசாங்க அக்கவுண்டபிளிட்டி அலுவலக அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். ஆய்வுக்கு பிறகு அவர்கள் அறிக்கை கொடுத்தனர். அந்த அறிக்கையில் எந்த நோக்கத்துக்காக நிதி உதவி அளிக்கப்பட்டதோ அந்த நோக்கத்துக்கு மிக குறைந்த அளவு தொகையே செலவிடப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.

அமெரிக்க எம்.பி.க்கள் ஆத்திரம்

இநத அறிக்கையை பார்த்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆத்திரம் அடைந்தனர். வெளிநாட்டு விவகாரங்களுக்கான குழு தலைவரும் ஜனநாயக கட்சி உறுப்பினருமான ஹோவர்டு பெர்மன் தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட உதவித்தொகை தீவிரவாதிகளை எதிர்த்து போரிட பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக மரபுரீதியான ராணுவ வசதிகளை பெருக்கி கொள்வதற்காக அந்த தொகை செலவிடப்பட்டு உள்ளது. அல்கொய்தாவிடம் விமானப்படையே கிடையாது. விமானங்களில் அவர்கள் பயணம் செய்வதும் கிடையாது. ஆனால் விமானப்பாதுகாப்பு ராடார் பராமரிப்புக்காக பல கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கூறி, அந்த தொகையை பாகிஸ்தானுக்கு திரும்ப செலுத்தவேண்டும் என்றும் அமெரிக்காவை பாகிஸ்தான் கேட்டுக்கொண்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றிங்க

அல்கொய்தாவின் பெயரைச் சொல்லி...

Saturday, June 14, 2008

அறியாப் பொருள் பேசி...

பலமுறை சொன்னதுதான்; மீண்டும் சொல்வதில் தவறில்லை: எந்த ஒன்றைப் பற்றி எழுதத் துணிந்தாலும் அதைப் பற்றி முழுக்கத் தெரிந்திருக்காவிட்டாலும் அடிப்படை அளவாவது தெரிந்து கொண்டு எழுதுதல் நலம். இல்லையெனில், சென்ற வாரத் திண்ணையில் 'ஹிட்லிஸ்ட்-ல் பெயர் வருவதற்கு' எழுதிய கார்கில் ஜெய்யும் மலர் மன்னனைப் போலவே இறுதிவரை 'அங்கீகாரம் இல்லாத' வரிசையில் நின்று கொண்டே இருக்க வேண்டியதுதான்.

தனக்கு அறிவில்லாத ஒன்றைப் பற்றி எழுதாமல் இருப்பதே உத்தமம். அதை விடுத்து, "தஸ்லீமா அக்காவிடம் போய்க் கேள்; ரஸூல் அண்ணனிடம் கேள்" என்றெல்லாம் எழுதி, தன் அறியாமையைத் தானே வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டுமா? அவ்விருவரைக் குறித்து அலசி ஆராயா விட்டாலும் குறைந்த பட்சம் திண்ணையில் மட்டுமாவது என்ன பேசப் பட்டிருக்கிறது என்று அறிந்து கொண்டு ஜெய் எழுதியிருக்கலாம்.

போகட்டும்.

ஹிட் லிஸ்ட் உருவாகும் அடிப்படையைப் பார்ப்போம்:

இலங்கைக்கு நமது அமைதிப் படையை அனுப்பிய 'குற்றம்' செய்ததால் நமது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஹிட் லிஸ்ட்டில் வந்தார்.

சீக்கியரின் பொற்கோவிலில் இராணுவத் தாக்குதலுக்கு உத்தரவிட்ட 'குற்றம்' செய்ததால் இந்தியாவின் இரும்பு மனுஷி என்றழைக்கப் பட்ட இந்திராகாந்தி ஹிட் லிஸ்ட்டில் ஏறினார்.

இவ்விரு பிரதமர்களின் பின்னால் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு பெயரும் ஹிட் லிஸ்ட்டில் ஏற்றப் பட்டது. அப்பெயருக்குச் சொந்தமானவர் காந்திஜி.

"இந்த நாடு இந்துக்களுக்கு மட்டுமின்றி எல்லாருக்கும் சொந்த நாடு. அனைவரும் ஒற்றுமையாக வாழுங்கள்" என்று கூறிய 'குற்றம்' செய்ததால் அவரும் ஹிட் லிஸ்ட்டில் இடம் பெற்றார்.

இதுபோல் நிறைய காட்டுகள் உள. அவை அனைத்தும் சொல்லும் ஒரேயொரு செய்தி என்னவெனில், "ஹிட் செய்பவர்களின் பார்வையில் 'குற்றம்' செய்பவர்களாகக் கருதப் படுபவர்கள்தாம் ஹிட் லிஸ்ட்டுக்குள் கொண்டுவரப் படுவார்கள்" என்பதே.

முஸ்லிம்களின் அடிப்படைக் கொள்கை என்பதே, "எங்கள் வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே" என்பதுதான். "ஒருவனே" என்றபோதே, "இரண்டாமவர் இல்லை - அவர் எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமாக இருப்பினும்" என்பது அடக்கம்.

இந்த அடிப்படையைக்கூட அறியாமல், "எங்கள் இறை தூதரை நாங்கள் வணங்க மாட்டோம்; அவர் எங்கள் வணக்கத்திற்குரியவர் அல்ல என்று இப்னு பஷீரோ அவரது ஆதரவாளர்களோ அறிவிப்பார்களா? அப்படி அறிவித்தால் அவர்களின் பெயர்களேகூட ஜிஹாதிகளின் 'ஹிட் லிஸ்ட்' பெயர்ப் பட்டியலில் வந்துவிடாதா?" என்று மலர் மன்னர் திண்ணையில் சவால் விட்டதற்குச் சில சகோதரர்கள் பதில் எழுதினர்; நானும் அவரது கூற்றிலுள்ள அறியாமையைச் சுட்டிக் காட்டி விளக்கம் எழுதி இருந்தேன்.

முஸ்லிம்களின் கொள்கையைச் சொல்வது 'குற்றம்' என்று கருதும் 'ஜிஹாதி'களுக்கு அவ்வாறு சொல்லும் இபுனு பஷீர் வகையறாக்களை ஹிட் லிஸ்ட்டில் வைக்கும் சாத்தியம் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், அது மலர் மன்னனுக்கு எப்படித் தெரியும்? இதே ஐயத்தை ஜெய் கிளப்பியிருக்கிறார்.

ஒரேயொரு வாய்ப்புள்ளது.

மலர் மன்னனுக்கு வடநாட்டில் நிறைய 'முக மதிய' நண்பர்கள் இருப்பதாக அவரே திண்ணையில் தெரிவித்திருக்கிறார். அவர்கள் ஒட்டுத் தாடியை உடைய 'ஜிஹாதி'களாக இருப்பதற்கும் அவர்களது ஹிட் லிஸ்ட்டில் இபுனு பஷீருடைய பெயரும் அவரைப் போலவே அறிவிப்புச் செய்யும் என் போன்றோரது பெயர்களும் ஏறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

அல்லது, "எங்கள் வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே" என்ற கொள்கையை ஏற்றுச் செயல்படும் 'குற்றம்' செய்பவர்களைத் தமிழக அளவில் அழித்தொழிக்கும் எண்ணத்தோடு தென்காசியில் குண்டு வைத்த 'ஜிஹாதி'களது ஹிட் லிஸ்ட்டில் எங்களுடைய பெயர்கள் இருப்பதற்கோ ஏறுவதற்கோ வாய்ப்புகள் உள்ளன.

***

அடுத்து, முஸ்லிம்களைத் தடுக்கும் காவல்துறையின் கதி என்னவாகும் என்பது கார்கில் ஜெய்யிக்குத் தெரியாது என்பதால் அதைக் கோவை அல்-உம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார்.

கோவையில் அல்-உம்மா என்ற அமைப்பே துடைத்தெறியப் பட்டதைக்கூட அறியாமல் எழுதும் ஜெய்யிக்குக் கோவைக் கலவவரங்கள் குறித்து நிறைய செய்திகள் சொல்ல வேண்டும்.

கோவை நிகழ்வுகளைச் சுருக்கமாகவும் அதேவேளை சரியாகவும் அறிந்து கொள்ள வேண்டுமாயின் அவற்றை மூன்றாகப் பிரித்துக் கொள்தல் நலம்:

1.உக்கடம் போக்குவரத்துக் காவலர் செல்வராஜின் அநியாயப் படுகொலை.

2.காவல்துறையும் காவிகளும் கைகோர்த்துக் கொண்டு கோவையின் முழுமுஸ்லிம்
சமுதாயத்துக்கே எதிராக ஆடிய கோரத்தாண்டவம்.

3.தொடர் குண்டு வெடிப்புகள்..


1. காவலர் செல்வராஜின் அநியாயப் படுகொலை

கடந்த 1997 நவம்பர் மாதம் 29ஆம் நாள் சனிக்கிழமையன்று ஒரு பைக்கில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் பயணித்ததற்காகக் போக்குவரத்துக் காவலர் செல்வராஜினால் தடுக்கப் பட்டு, அபராதம் செலுத்துமாறு பணிக்கப் பட்டனர்.

செய்த தவறை உணர்ந்து ஒப்புக் கொண்டு அபராதத் தொகையை அம்மூவரும் செலுத்தியிருந்தால் கோவை கொழுந்து விட்டு எரிந்திருக்காது. சாத்தானின் ஆணவக் குணம் மேலோங்கியதால் அம்மூவரும் தம் சகாக்கள் சிலரைத் துணைக்கழைத்துக் கொண்டு வந்து, கடமையைச் செய்தக் காவலர் செல்வராஜை நடுரோட்டில் வெட்டிக் கொன்றனர்.

அதனைத் தொடர்ந்து கோவை மாநகரக் காவல்துறை ஆணையாளர் இராஜேந்திரன் தலைமையில் கோட்டைமேட்டிலுள்ள அல்-உம்மா அலுவலகத்திற்குக் காவல்துறையினர் வந்தனர். செல்வராஜ் படுகொலை குறித்துத் தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் ஆனால் அதற்குத் தனது இயக்கத்தினர் காரணம் என்றால் விசாரித்து அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைப்பதாகவும் அல்-உம்மாவின் பொதுச் செயலாளர் அன்சாரீ தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அப்பாஸ்(22), ஷபி(22), மற்றும் ஷஃபி(20) ஆகிய மூன்று முஸ்லிம் வாலிபர்கள் காவல்துறையிடம் சரணடைந்தனர்.

சரணடைந்தவர்களை விசாரித்து, நீதியின் முன் நிறுத்தி, உரிய/உச்சபட்ச தண்டனை வழங்கியிருந்தால் 19 அப்பாவி முஸ்லிம் உயிர்களைப் பலிவாங்கிய கொடுமையையும் முஸ்லிம்களின் கோடிக்கணக்கானச் சொத்துகளின் நாசத்தையும் முஸ்லிம் பெண்களின் மானபங்கத்தையும் கோவை சந்தித்திருக்காது.

***

2. கோவை முஸ்லிம்களுக்கு எதிரான காவி-காவலர்களின் போர்

காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட மறுநாள் (30.11.1997) கோவை நகர் முழுதும் காவி-காவலர்களின் கோரத் தாண்டவம் அரங்கேறியது. காவலர் செல்வராஜின் உடல் வைக்கப் பட்டிருந்த கோவை அரசு மருத்துவமனையின் வளாகத்திலும் கலவரம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனை வளாகத்தில் நின்றிருந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த பலர் அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியும் தீவைத்தும் எரித்தனர். அந்தப் பரபரப்பான சூழ்நிலையின்போது உக்கடத்தில் நடந்த கலவரத்தில் காயம் அடைந்த சிலர் ஒரு வேனில் கொண்டுவரப்பட்டனர். அந்த வேனைப் பார்த்த காவிக் கலவரக் கும்பல் நேராக அந்த வேனுக்குச் சென்று வேனில் இருந்த ஹபீப் ரகுமான் என்பவரைக் கத்தியால் குத்திக் கொன்றது.

சற்று நேரங் கழித்து, மருத்துவமனை வளாக நிலவரம் தெரியாமல் உக்கடப் பகுதிக் கலவரத்தில் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அயூப்கான் என்பவரைப் பார்ப்பதற்காக அவருடைய தம்பி ஆரிஃபும் சுல்தான் என்பவரும் ஒரு ஸ்கூட்டரில் வந்தனர். அவ்விருவரையும் கொல்வதற்குக் காவிப்படை ஓடிவந்தது. அவ்விருவரும் அரசு மருத்துவமனை வாசலிலேயே ஸ்கூட்டரைப் போட்டுவிட்டு ஓடினர். ஆனால் வன்முறைக் காவிகள் அவர்களை விரட்டிப் பிடித்துத் தாக்கினர். ஆரிஃபை அடித்துக் கொன்றனர். சுல்தான் பலத்த காயங்களுடன் தப்பி ஓடி விட்டார்.

மருத்துவமனை வளாகத்தில் கொலைவெறிக் காவிகள் குவிந்திருப்பதை அறியாமல் லியாகத் அலிகான் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு வந்தபோது அவரை மருத்துவமனையின் வசலிலேயே வன்முறைக் கும்பல் தடியால் அடித்துக் கொன்றது.

அந்தக் கலவரத்தில் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மட்டும் ஹபீப் ரகுமான், ஆரிஃப், லியாகத் அலிகான் ஆகிய மூவர் கத்தியால் குத்தப் பட்டும் அடித்தும் கொலை செய்யப் பட்டனர்.

ஹாரிஸ் என்ற இளைஞர் உயிருடன் தீயிட்டுக் கொளுத்தப் பட்டான்.

அந்தக் கொடுமையை ஜூனியர் விகடன் [7 டிசம்பர் 1997] நம் கண்முன் கொண்டு வருகிறது:




"கோவையில் நடைபெற்ற கலவரத்தின்போது, கொடூரமான தாக்குதலிலும் சாகாமல் ஓர் ஆள் மட்டும் துடித்துக் கொண்டே இருந்தார். அப்போது ஒரு போலிஸ்காரர் ஓடினார். பக்கத்தில் இருந்த போலிஸ் வாகனம் ஒன்றில் இருந்து பீர் பாட்டிலில் பெட்ரோலைப் பிடித்துக் கொண்டு வந்து அந்த ஆள் மீது ஊற்றினார். அந்த இளைஞர் எழுந்து உட்கார்ந்து அதிர்ச்சியுடன் பார்க்க... யாரோ ஒருவன் ஓடிவந்து தீக்குச்சியைச் சுண்டிப் போட்டான். அவ்வளவுதான்... அந்த இளைஞர் தகதகவென்று எரியத் தொடங்கினார். ஒரு டாக்டர் தீயை அணைக்க முயன்றார். உடனே சுற்றி நின்றவர்கள் அந்த டாக்டரைப் பார்த்து சத்தம் போட - வேறு வழி தெரியாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து டாக்டர் பின்வாங்கி ஓட வேண்டியதாகி விட்டது."

காவிக் கொலைவெறியர்களோடு காவலர்களும் கைகோர்த்துக் கொண்டு நடத்திய கோவைக் கொலைகளுள் அரசு மருத்துவமனை வளாகக் கொலைகள் தொடர்பாக மட்டும் 14 காவியரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது கோவை 2-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதி எம்.பூபாலன் இந்த வழக்கை விசாரித்து, பிரபாகரன், மகேஸ்வரன், விவேகானந்தன், உமாசங்கர், நாராயணன், குமரன், குருநாதன், மணிகண்டன், சீனிவாசன், மாணிக்கம், நாகராஜ் ஆகிய 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கினார். சி.எஸ்.ராஜு, சம்பத், ஆனந்தன் ஆகிய மூவர் விடுதலை செய்யப் பட்டனர்.

ஆயுள் தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து மேற்காணும் 11 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் எம்.கற்பகவிநாயகம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து, "11 பேர் மீதும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் படவில்லை" என்பதாகக் கூறி அனைவர் மீதும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்தனர். கோவை மருத்துவமனை வளாகக் கொலை பாதகர்கள் அனைவரும் அந்த வழக்கிலிருந்து ஒட்டு மொத்தமாக விடுதலையானபோது நீதிதேவதை கண்களை மட்டுமின்றி முகத்தையே மூடிக் கொண்டாள். இது, 30.11.1997இல் நடந்தேறிய கோவை அரசு மருத்துவமனை வளாக வன்முறைக் கொலைகளும் அவை சார்ந்த வழக்குகள் மட்டுமே.

கோவை நகர் முழுதும் நடந்தேறிய காவி-காவலர்கள் ஆடிய கோரத் தாண்டவம் குறித்து பிரண்ட் லைன் மாதமிருமுறை இதழில் (13-26 டிசம்பர் 1997) அதன் சிறப்புச் செய்தியாளர் டி.வி.என்.சுப்பிரமணியன் பின்வருமாறு வருணிக்கிறார்:

"மறுநாள் ஞாயிற்றுக்கிழமையன்று (30.11.1997) வன்முறை பூகம்பம் போல் வெடித்தது. போக்குவரத்துக் காவலர்கள் மட்டுமல்லாமல், காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய காவலர்களும் தங்கள் பொறுப்புகளை விட்டு வெளியேறினர். அவர்கள் கருப்புப் பட்டைகளை அணிந்து திருச்சிசாலை-டவுன்ஹால் சந்திப்பில் அமர்ந்து மறியல் செய்ததுடன் முழக்கங்களையும் எழுப்பினர். பணிக்குத் திரும்புமாறு அவர்களுக்கு அறிவுறுத்திய மூத்த அதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்பதற்கு அவர்கள் மறுத்தனர். காவல் துறையினரின் மனைவியரும் குழந்தைகளும் காவல் பயிற்சிப் பள்ளியில் இருந்து காவல்துறை ஆணையாளர் அலுவலகம்வரை ஊர்வலமாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர்.

உடனடியாக உக்கடம், ராஜ வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி ஆகிய இடங்களில் கலவரம் வெடித்தது. முஸ்லிம்கள் மற்றும் ஹிந்து குழுக்களுக்கு இடையே சண்டை மூண்டது. பரஸ்பரம் சோடா புட்டிகள், கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. முஸ்லிம்களை நோக்கிக் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. சுமார் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், ரங்கையக் கவுண்டர் வீதி, ஒப்பனக்கார வீதி, வெரைட்டி ஹால் சாலை, ராஜ வீதி, பெரிய கடை வீதி மற்றும் உக்கடத்தில் உள்ள முஸ்லிம் வணிக நிறுவனங்கள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டன. கட்டிடங்கள் தரைமட்டமாயின. ஆயத்த ஆடைகள், துணிக் கடைகள், கடிகாரக் கடைகள், காலணிக் கடைகள், சைக்கிள் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. சூறையாடியபின் எடுத்துச் செல்ல முடியாத பொருட்களைத் தெருவில் போட்டுத் தீக்கிரையாக்கினர். நடைபாதை கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளிவாசல்களும் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.

காவலர் செல்வராஜ் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் ஏராளமானவர்கள் அங்கே குழுமியிருந்தனர். கோவை மேற்குச் சட்டமன்ற உறுப்பினர் சி.டி.தண்டபாணி மற்றும் அவரது மகன் சி.டி.டி.ரவி அங்கே வந்த போது காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க ஹிந்துத் தீவிரவாதிகள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தனர். சி.டி தண்டபாணிக்குத் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காரும், மற்றொரு காரும் எரிக்கப்பட்டன. (தான் தேர்தலில் ஜெயித்தால் "முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளைப் போலக் கண்காணிக்கிற உக்கமேடு செக்போஸ்ட் உட்பட பல செக்போஸ்ட்களை நீக்குவேன்" என்று உறுதியளித்து அதை நிறைவேற்றியுமிருந்தார் தலித் சமூகத்தைச் சேர்ந்த தண்டபாணி).

காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முஸ்லிம்களை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோது வன்முறைக் கும்பலின் கோபம் அவர்கள் பக்கம் திரும்பியது. பல முஸ்லிம்கள் கத்திக்குத்திற்கு இலக்காகினர்; அல்லது எரித்துக் கொல்லப்பட்டனர். ஹபீபுர் ரஹ்மான் என்ற 21 வயது வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு அவர் எரிக்கப்பட்டார். இதைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தாததினால் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். கோட்டைமேட்டில் நடைபெற்றத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அய்யூப்கான் மருத்துவமனைக்கு வந்தபோது கும்பல் அவரை விரட்டியது. வார்டு பாய் ஒருவர் அவரை ஓர் அறையில் மணிக்கணக்கில் பூட்டி வைத்து அவரது உயிரைக் காப்பாற்றினார்.

தனது ஆயுட்காலச் சேமிப்பான ரூபாய் அறுபதாயிரம் நெருப்பில் எரிந்ததை இன்னொரு வியாபாரி நம்மிடம் தெரிவித்தார். ஊனமுற்ற இவரது சகோதரரின் பிரத்தியேகப் பயன்பாட்டிற்கான சைக்கிளையும் வன்முறைக் கும்பல் விட்டு வைக்கவில்லை. ஒரு குடும்பத் தலைவி அழுது கொண்டே 'எனது கல்யாணப் பட்டுச்சேலை எரிந்து விட்டது. உடுத்தியிருக்கும் துணிகளைத் தவிர வேறு எதுவும் எங்களிடம் இல்லை' என்று நம்மிடம் சொன்னார். 'அருகிலுள்ள பி1 காவல் நிலையத்திற்குத் தகவல் தந்த போதிலும் அவர்கள் தங்களுக்கு உதவ முன்வரவில்லை' என்று பலரும் நம்மிடம் தெரிவித்தனர்."


பிரபலப் பத்திரிகையாளரும் நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினருமான குல்திப் நாய்யார் 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழில் 'எ காங் இன் தி வீல்' என்ற தலைப்பில் 3 ஜனவரி 1998இல் எழுதியுள்ள கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

"நான் அந்த நகரத்திற்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடியிருப்புகள் எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டன; அல்லது சூறையாடப்பட்டன; கொளுத்தப்பட்டன என்பதை நேரில் கண்டேன். சுமார் 24 முஸ்லிகள் கொல்லப்பட்டனர். சொத்துகள் இழப்புக் கோடியைத் தாண்டும். இதனை ஹிந்து-முஸ்லிம் கலவரம் என்று சொல்ல முடியாது. இது காவல் துறையின் கைங்கர்யத்தினால் நடந்தது. இதன் காரணமாகத்தான் சமூக விரோதிகளுக்கு தைரியம் வந்தது. காவல் துறையினர் ஹிந்து முன்னணியினர் மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் பரஸ்பரம் கலந்து பேசி இக்கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தினர் என்று கோவை மாவட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை குற்றம் சாட்டுகின்றது. ராஜ்ய சபையில் நடைபெற்ற விவாதங்கள் உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்கலாம். இதனைத் தமிழகமே பார்த்துக் கொள்ளட்டும் என்று கருதும் அளவிற்கு இது சிறிய பிரச்சினை அல்ல. 12 வயது பாலகன் அபுபக்கர் சித்திக் கொல்லப்பட்ட காட்சி, தனது அண்ணன் அய்யூப்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி கேட்டு அங்குச் சென்ற அவரின் தம்பி முஹம்மது ஆரீப் கர்ண கொடூரமாக மருத்துவமனையில் கொல்லப்பட்ட காட்சிகள் எல்லாம் மறைக்க முடியாதவை."


தி வீக் ஆங்கில வார இதழின் செய்தியாளர் இ. விஜயலட்சுமி 14 டிஸம்பர் 1997 இதழில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்:

''நவம்பர் 29 இரவே உக்கடம் சந்திப்பில் கலவரம் தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட (முஸ்லிம்) சமூகத்தின் நடைபாதைக் கடைகள், முதல்தாக்குதல்களுக்கு உள்ளாகின. காவல்துறையினர்தான் தீ வைப்புச் சம்பவங்களுக்குத் தலைமை தாங்கினர். சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் என்னிடம் பேசுகையில், 'உக்கடம் சந்திப்பை நான் கடந்த சென்று கொண்டிருந்தேன். தனது சகாக்கள் உற்சாகம் ஊட்ட, சில காவல்துறையினர் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோலை எடுத்து நடைபாதை கடைகளை எரித்தனர்' என்று என்னிடம் தெரிவித்தார்''


காவிகளோடு காவலர்கள் கைகோர்த்துக் கொண்டு கோவை முஸ்லிம்களைக் கொடூரமாகக் கொன்றும் அவர்தம் சொத்துகளைச் சூறையாடியும் ஆடிய கோரத் தாண்டவம் வீடியோவாகப் பதிவு செய்யப் பட்டு, டெல்லியில் இயங்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் தேசியச் சிறுபான்மை ஆணையத்திடமும் சமர்ப்பித்து முறையாக நீதி கோரப் பட்டது. அப்போது கிடைக்க வேண்டிய நீதி கிடைத்திருந்தால் கோவை குண்டுவெடிப்பு நாசம் தவிர்க்கப் பட்டிருக்கும்.

***

3. கோவை குண்டு வெடிப்பு

1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக தலைவர் அத்வானி கோவை வந்தார். அவர் வருவற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு கோவை நகரில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன.

காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், அரசு மருத்துவமனை உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கோவை நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கில் முதல் குற்றப் பத்திரிகை 1998ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இறுதிக் குற்றப்பத்திரிக்கை 1999ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 7.4.2000இல் குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 2001ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

வழக்கில் 180 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 166 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்குத் தொடர்பாக 1,300 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சாட்சிகள் விசாரணை 7.3.2002இல் தொடங்கியது.

சிறையில் அடைக்கப்பட்ட 166 பேரில், 3 முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்ளை உறுதிப் படுத்தியோ மறுத்தோ, விசாரிக்கப் பட்ட 1,300 சாட்சிகளுள் ஒருவர்கூட சாட்சியம் அளிக்கவில்லை. இதன் அடிப்படையில் தங்களை வழக்கில் இருந்து விடுவித்து, சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என அம்மூவரும் கோரியதை, கோவை குற்றவியல் நீதிமன்றம் எவ்விதக் காரணமும் கூறாமல் நிராகரித்தது.

இவ்வழக்கில் கைதான சர்தார் மற்றும் அப்துல்லாஹ் (எ) சிவக்குமார் ஆகிய இருவர் மீதும் FIR பதிவு செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிக்கையின் எந்த இடத்திலும் இவர்களது பெயர்கள் இல்லை. எந்த ஒரு சாட்சியோ, ஆவணமோ இவர்களுக்கு எதிராக இல்லை. ஆவணங்கள் அல்லது சாட்சிகளின் அடிப்படையில்தான் ஒருவரைக் குற்றவாளி/நிரபராதி என்று உலகெங்கிலும் உள்ள நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றன. FIR பதிவு செய்யாமல், எந்தவித ஆவணமும் இல்லாமல், சாட்சிகளும் இல்லாமல் சர்தாரும் அப்துல்லாஹ்வும் சிறைவாசம் அனுபவித்த கொடுமையும் இவ்வழக்கில்தான் நடந்தேறியது.

45 முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, நான்கே நான்கு பேர்தான் சாட்சியம் அளித்துள்ளனர். இந்த நான்கு சாட்சியங்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்து முன்னணியின் உறுப்பினர்கள்.

இக்குண்டு வெடிப்பு தொடர்பாகக் கேரளாவைச் சேர்ந்த அப்துல் நாசர் மஅதனி மீது, சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனாலும், அதற்கான சாட்சியம் நீதிமன்றத்தில் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. இதையடுத்து, தனக்குப் பிணை வழங்காவிட்டாலும் கூட, கேரளத்தில் மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தன்னை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் மஅதனி மனுக் கொடுத்தார். மஅதனியின் மனுவை உச்சநீதி மன்றம் காது கொடுத்துக் விசாரிக்கக்கூட மறுத்துவிட்டு, விசாரணையின்றியே தள்ளுபடி செய்தது.

முஸ்லிம் 'தீவிரவாதி' மஅதனியிடம் இப்படிக் கறாராக நடந்து கொண்ட இதே உச்சநீதி மன்றம், சங்கரராமன் கொலை வழக்கில் தனக்குப் பிணை வழங்க வேண்டும் என முறையீடு செய்த ஜெயேந்திரருக்கு, அவ்வழக்குத் தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, அவ்வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட சதிக் குற்றச்சாட்டில் இருந்தே அவரை விடுதலை செய்தது.

"மஅதனியை வெளியே நடமாட அனுமதித்தால், சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விடும். எனவே, அவரைப் பிணையில்கூட வெளியே விடக் கூடாது'' என அ.தி.மு.க. ஆட்சியின் பொழுது தனிஅரசாணை போடப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட இந்த அரசாணை, தி.மு.க. ஆட்சியிலும் நீக்கப்படவில்லை.

சிறைக்குச் செல்லும்போது 90 கிலோ எடையிருந்த மஅதனியின் தற்போதைய எடை 48 கிலோ. அவருக்குப் பொருத்தப்பட்டிருந்த செயற்கைக்கால்கள் உடல் எடைக்குறைவால் பிரச்சினையானபோது அவரைக் குறைந்தபட்சம் மருத்துவச் சிகிச்சைக்காகப் பிணையிலாவது விடுதலை செய்யவேண்டுமென்று பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

சில மாதங்களுக்கு முன் தமிழக எழுத்தாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஓர் அறிக்கையை அரசுக்கு அனுப்பினர். அவ்வறிக்கையில் பேரா. அ.மார்க்ஸ், சாருநிவேதிதா, 'புதியகலாச்சாரம்' தோழர் வீராசாமி, கவிஞர் சுகிர்தராணி, வழக்கறிஞர் ரத்தினம், கோ.சுகுமாரன், பேரா.திருமாவளவன் உட்படப் பலரும் பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை போன்ற அமைப்புகளும் கையெழுத்திட்டிருந்தனர். ஆனாலும் மஅதனி பிணையில் விடுவிக்கப்படவில்லை. (அந்த அறிக்கையையும் அதில் கையெழுத்திட்டவர்களையும் "தீவிரவாதிகளுக்குப் பால்" வார்ப்பதாகச் சாடி திண்ணையில் ஒரு கட்டுரையும் வந்தது).

ஆனால் இப்போது மஅதனி குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஒன்பது ஆண்டுகாலம் எந்தக் குற்றமும் செய்யாமல் சிறையிலிருந்த மஅதனியின் மன உளைச்சல், உடல்நலக் குறைபாடு, பொருளியல் இழப்பு ஆகியவற்றை அரசு, நீதிமன்றம், சட்டம், போலீஸ் ஆகியவை எப்படி ஈடுகட்டும்? இது மஅதனிக்கு மட்டுமல்ல, நிறுவனங்களால் குற்றவாளிகளாக்கப்பட்ட அனைவருக்குமான கேள்வி.

கோவை குண்டு வெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்டபோது சிறுவன் அப்பாஸுக்கு வயது 16. அவனுக்குச் சிறைச்சாலையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. அறுவைச் சிகிச்சைக்கு முன் அவனுக்கு நடத்தப்பட்ட இரத்தப் பரிசோதனையில், அவன் எவ்வித நோய்த் தொற்றும் இன்றி உடல் நலத்தோடு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகோ, 'எய்ட்ஸ்' நோயைத் தோற்றுவிக்கும் வைரஸ் கிருமிகள் அவனது இரத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை மருத்துவமனையின் அலட்சியம் என்பதா, அல்லது மருத்துவத் துறையிலும் புகுந்து கொண்டு பழி தீர்த்துக் கொள்ளும் காவிவெறி என்பதா?.

இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட இம்முஸ்லிம்கள் அனைவரின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்கூட, அவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரைதான் தண்டனை வழங்க முடியும். ஆனால், பிணைகூட கிடைக்காமல் ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகளைச் சிறையில் கழித்து விட்டனர். விசாரணையின்றித் தண்டிக்கப்பட்டுள்ள இந்த அரசு பயங்கரவாதத்தை என்னவென்று அழைப்பது?.

'தடா'சட்டத்தின்கீழ் விசாரணை நடைபெற்ற மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில்கூட, நடிகர் சஞ்சய்தத் உள்ளிட்டுப் பலருக்குப் பிணை வழங்கப்பட்டது. ஆனால், சாதாரணக் குற்றவியல் சட்டங்களின்கீழ் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 166 பேரில் ஒருவருக்குக் கூடப் பிணை வழங்கப்படவில்லை. எவ்விதக் குற்றமும் நிரூபிக்கப் படாத மஅதனிக்குப் பிணையே வழங்கக்கூடாது என அ.தி.மு.க. ஆட்சியில் உத்தரவு போடப்பட்ட விநோதமும் இந்த வழக்கில் நடந்தது.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில், ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகள் கழித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அல்உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 69 பேர் மீது சதிக் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் 84 பேர் மீது சதிக் குற்றச்சாட்டு அல்லாத வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் தீர்ப்பளித்துள்ள சிறப்பு நீதிமன்றம், மஅதனி உள்ளிட்ட 8 பேரின் மீதான எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறியிருக்கிறது.

இத்தீர்ப்பின்படி, 84 பேர் மீதான சதிக் குற்றச்சாட்டு — அதிகபட்சமாக தூக்கு தண்டனைத் தரக்கூடிய குற்றம் — நிரூபணமாகவில்லை. ஆனால், இவர்கள் ஏற்கெனவே விசாரணைக் கைதிகளாக ஒன்பதரை ஆண்டு்கால 'தண்டனையை' அனுபவித்து விட்டதால், இவர்களைக் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்து வெளியேவிட்டால், அரசின் நடுநிலையான நீதி பரிபாலனை முறை அம்மணமாகிவிடும். அதனாலேயே இவர்கள் அனுபவித்த தண்டனைக் காலத்தை ஈடு செய்யும் வகையில, தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாக எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்.

மஅதனி உள்ளிட்ட 8 பேர் மீது அரசால் சாட்டப்பட்ட எந்தக் குற்றச்சாட்டும் நிரூபணமாகவில்லை. ஆனாலும், இவர்களை உடனடியாக விடுதலை செய்ய மறுத்துவிட்ட சிறப்பு நீதிமன்றம், விரும்பினால் இவர்கள் பிணையில் வெளியே போகலாம் என உத்தரவிட்டது. விசாரணை நீதிமன்றத்தாலேயே நிரபராதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள், விசாரணைக் கைதிகளைப் போலப் பிணையில் வெளியே வந்துள்ள அதிசயமும் இந்த வழக்கில்தான் நடந்தது. தண்டனை அல்லது விடுதலை என்ற நீதி பரிபாலனமுறைக்கு இது எதிரானது என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் இத்தீர்ப்பைக் கண்டித்துள்ளனர்.

ஐந்து பேர் மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்திருந்த சிறப்பு நீதிமன்றம், "இவர்கள் மீது அரசால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லையென்றாலும், இவர்கள் மீது வேறு குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரம் உள்ளதாக"க் 'கண்டுபிடித்து'த் தீர்ப்பளித்தது. "இந்த ஐந்து பேர் மீது புதிதாகக் குற்றம் சுமத்தப்பட ஆதாரம் இருந்தால், அக்குற்றச்சாட்டுகளை தனியாக விசாரணை நடத்திதான் தீர்ப்பளிக்க வேண்டும்" என எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் கூறியதை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், "இந்நீதிமன்றம் குற்றவியல் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் தீர்ப்பு அளிப்பதாக" எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் திருமலைராசனும், ப.பா.மோகனும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

சிறப்பு நீதிமன்றம் சார்புத்தன்மையோடு, கொஞ்சம் பச்சையாகச் சொன்னால் காவித் தன்மையோடு நடந்து கொண்டதை நிரூபிக்கும் ஆதாரங்கள் இவை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சட்டபூர்வ உரிமைகளை மறுத்ததன் மூலம், அவர்களை எப்படியாவது தண்டித்துவிட வேண்டும் என்பதில் போலஸும் நீதிமன்றமும் கள்ளக் கூட்டாளிகளாகச் செயல்பட்டதை இவ்வழக்கு விசாரணை நெடுகிலும் காண முடியும்.

கோவை குண்டு வெடிப்பை, கோவை கலவரத்தோடு தொடர்பில்லாத தனித்ததொரு நடவடிக்கையாகப் பிரித்துப் பார்க்க முடியாது. கோவை கலவரத்தின் எதிர்வினைதான் கோவை குண்டு வெடிப்பு. இந்தியக் குற்றவியல் சட்ட நடைமுறையின்படி, கோவைக் கலவரத்தைதான் கோவை குண்டு வெடிப்பின் தூண்டுதல் வழக்காகவும், எதிராளியை வம்புச் சண்டைக்கு இழுத்த வழக்காகவும் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.

"இக்கோவைக் கலவரம் கூட, செல்வராஜ் என்ற போக்குவரத்துக் காவலர் சில முஸ்லிம் இளைஞர்களால் கொல்லப்பட்டதையடுத்து, தன்னெழுச்சியாக நடைபெற்றதல்ல; மாறாக, இந்துத் தீவிரவாதிகளும் போலீஸும் கைகோர்த்துக் கொண்டு நடத்திய வன்முறை" என அக்கலவரத்தைப் பற்றி விசாரணை நடத்திய கோகுலகிருஷ்ணன் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.

கோவை கலவரத்தைத் தூண்டுதல் வழக்காக நிர்ணயித்து, குண்டு வெடிப்பு வழக்கை நடத்தியிருந்தால், குண்டு வெடிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்; அல்லது, குறைந்தபட்ச தண்டனைதான் கொடுத்திருக்க முடியும். இச்சட்ட பூர்வ உரிமை முஸ்லிம்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே, கோவை கலவரத்தைப் பற்றி சிறப்பு நீதிமன்றம் வாய் திறக்கவே மறுத்துவிட்டது.

குற்றச்சாட்டு வனையப்படும் பொழுதே 'அக்குற்றச் சாட்டுகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரும் மனு கொடுத்து, அதன் மீது விசாரணை நடத்தக் கோரும் உரிமை' குற்றம் சாட்டப்பட்டோருக்கு உண்டு. "குற்றப்பத்திரிகை 17,000 பக்கங்களைக் கொண்டிருப்பதால், அதைப் படித்து விடுவிப்பு மனு தாக்கல் செய்யக் கால அவகாசம் அளிக்க வேண்டும்" என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கோரினர். ஆனால், "உச்ச நீதி மன்றம் இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு இட்டிருப்பதாக"க் கூறி, கால அவகாசம் அளிக்க மறுத்து விட்டது, சிறப்பு நீதிமன்றம்.

இவ்வழக்கில் 9 ஆவது குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்படிருந்த ஓம்பாபு என்பவருக்கு எதிராக, அவரது தம்பி முனாஃபைச் சாட்சி சொல்ல போலீஸார் அழைத்து வந்தனர். முனாஃப் நீதிமன்றத்திலேயே, "தன் அண்ணனுக்கு எதிராகச் சாட்சி சொல்ல போலீஸார் தனக்கு இலஞ்சம் கொடுத்ததை" அம்பலப் படுத்தியதோடு, போலீஸார் கொடுத்த பணத்தையும் நீதிமன்றத்திலேயே ஒப்படைத்தார்.

விசாரணையின்போது, சாட்சிகள் குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியாமல் தடுமாறியபோது, போலீஸாரே சாட்சிகளுக்குக் குற்றவாளிகளை அடையாளம் காட்டி 'உதவி' செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதியோ, போலீஸாரின் இந்த அத்துமீறலைக் கையைக்கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்.

குற்றவாளிகளைச் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போதும் சிறைச்சாலை வாசலில் சாட்சிகளை நிற்க வைத்து, அவர்களுக்குக் குற்றவாளிகளை போலீஸார் 'அடையாளம் காட்டி' இருக்கின்றனர். போலீஸாரின் இந்தச் சட்டவிரோத நடவடிக்கையைக் குற்றவாளிகள் நீதி மன்றத்தில் முறையிட்ட பிறகும்கூட, சாட்சிகளை போலீஸார் தயார் படுத்துவதை நீதிபதி தடுக்கவில்ல.

கோவை மேட்டுப்பாளையம் சாலையையொட்டி அமைந்துள்ள கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்த 38 பேர் மீது குண்டு வெடிப்பு வழக்கு பாய்ந்தது. "இவர்களுக்கும் குண்டு வெடிப்பிற்கும் சம்பந்தம் இல்லை; குண்டு வெடித்த நாளன்று மாலையில் இந்து முன்னணியினர் கருணாநிதி நகரினுள் புகுந்து, கலவரம் நடத்தி, இந்த 38 பேரைப் பிடித்துச் சென்று போலீசில் அன்றே ஒப்படைத்ததையும் போலீஸார் அவர்களை இரண்டு நாட்கள் கழித்து 16.02.92 அன்று கைது செய்ததாகக் காட்டிய பொய்யையும் அந்த 38 பேருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்த வி.என்.ராஜன், இந்து முன்னணியைச் சேர்ந்த முழுநேர ஊழியர் என்பதையும் 'கைது செய்யப் பட்ட' 38 முஸ்லிம்களுக்கும் எதிராகச் சாட்சியம் அளித்த அனைவரும் வீ.என். ராஜனின் சொந்தக்காரர்கள் என்பதையும் எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் விசாரணையின் பொழுது நிரூபித்துள்ளனர். எனினும், ஒரு இந்து முன்னணி குடும்பத்தின் பொய் சாட்சியத்தை நம்பி, 38 முஸ்லிம் குடும்பங்களைத் தண்டித்திருக்கிறது, நீதிமன்றம்.

அத்வானியின் பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த பி.பி.ரோடு, சம்பந்தம் சாலை உள்ளிட்ட மூன்று 'வெவ்வேறு இடங்களில்' குண்டு வைத்த தீவிரவாதிகளை 'நேரில் பார்த்த சாட்சியாக' விஜயகுமார் என்ற ஒரே ஆள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இவரைப் போல 62 சாட்சிகள், 'வேறுபட்டப் பல இடங்களில்' குண்டு வைத்துவிட்டுப் போன குற்றவாளிகளை 'நேரில் பார்த்த சாட்சிகளாக' நிறுத்தப்பட்டனர். சினிமா கதாநாயகர்களைப் போல இந்த சாட்சிகள், 'இரண்டு மூன்று ரோல்களில் பிறந்திருந்தால்' மட்டுமே இது சாத்தியம் என்பதால், இந்த 62 சாட்சிகளை மட்டும் மீண்டும் விசாரிக்க வேண்டும் என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கோரியதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இந்த வழக்கின் மிக முக்கியமான குற்றவாளியாக முன் நிறுத்தப்பட்ட மஅதனிக்கு எதிராக அழைத்து வரப்பட்ட 23 சாட்சியங்களுள் ஒருவர்கூட, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக சாட்சியம் அளிக்கவில்லை. இதிலிருந்தே போலீஸாரின் புலன் விசாரணை எந்த இலட்சணத்தில் நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த வழக்கில் சாட்சியம் அளித்த 1,300 சாட்சியங்களுள் பெரும்பாலானவை, போலீஸ் தயார்படுத்திக் கொண்டுவந்த பொய்சாட்சியங்கள்; அல்லது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதை விசாரணையின்போதே எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் நிரூபித்துள்ளனர். எனினும், அச்சாட்சியங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை நடுநிலையான, நியாயமான தீர்ப்பாக எடுத்துக் கொள்ள முடியுமா?

காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் மீதான கொலை வழக்கின் விசாரணை தொடங்கும் முன்பே, அவர் சதிச் செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என நற்சான்றிதழ் வழங்கியது நீதிமன்றம். ஆனால், மஅதனி மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித சாட்சியமும் இல்லை என்று வழக்கு விசாரணையில் நிரூபிக்கப்பட்ட பிறகும் கூட, அவருக்குப் பிணை வழங்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது.

அமெரிக்கா, அல்கொய்தா தீவிரவாதிகளை விசாரணையின்றித் தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதை எழுதிய இந்தியப் பத்திரிகைகள், தமிழ்நாட்டில் 166 முஸ்லிம்கள் பிணைகூட வழங்கப்படாமல் துன்புறுத்தப்பட்டதைக் கண்டுகொள்ளவேயில்லை.
***

நாட்டையே உலுக்கிய கோவை குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து அல்-உம்மா, அகில இந்திய ஜிகாத் கமிட்டி ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப் பட்டது.

அல்-உம்மாவின் தலைவர் கோவை பாஷாவுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் பொதுச் செயலாளர் அன்ஸாரீக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப் பட்டது.

தங்களின் ஆணவத்தால் தங்களையே அழித்துக் கொண்டது மட்டுமின்றி, தங்கள் சொந்தச் சமுதாய மக்களின் விலை மதிப்பற்ற 19 உயிர்களையும் கோடிக்கணக்கில் உடமைகளையும் தம் சமுதாயப் பெண்கள்தம் மானத்தையும் இழந்து வீதியில் நிற்பதற்கு முதல் காரணமானவர்களான அல்-உம்மாவின் அந்த பைக் வீரர்கள் மூவரும் முஸ்லிம்களின் மன்னிப்புக்குக்கூட அருகதை அற்றவர்கள்.

காவலர் செல்வராஜ் கொலை, கோவைக் கலவரம், குண்டு வெடிப்பு ஆகியவை குறித்து இன்னும் ஏராளம் எழுதலாம். இவற்றையெல்லாம் அறியாமல் வெறுமனே, "கோவை அல்-உம்மாவிடம் கேட்டுக் கொள்" என்று இல்லாத ஓர் அமைப்பிடம் போய்க் கேட்கச் சொன்ன கார்கில் ஜெய் இன்னொன்றும் எழுதியிருக்கிறார். நான் பொய் எழுதியிருக்கிறேனாம். மலர் மன்னன் உண்மையை எழுதியிருக்கிறாராம். இரண்டையும் இனிமேல்தான் நிரூபிக்கப் போகிறாராம்.

போகிற போக்கில் சேறடிக்காமல் ஒவ்வொன்றுக்கும் சான்றுகளை முன்வைத்து எழுதுபவன் என்று திண்ணை வாசகர்களுக்கு வஹ்ஹாபியைப் பற்றி நன்கு தெரியும். உண்மைகளை ஜெய் நிரூபிக்கட்டும். அதற்கு முன்னர் இக்கட்டுரையில் இணைப்பாகவும் ஆறாவது சுட்டியாகவும் கொடுக்கப் பட்டுள்ள உயிரோடு எரிக்கப் படும் இளைஞனையும் அதை ஆசையோடு வேடிக்கை பார்க்கும் கடமை தவறாத காவலரையும் ஒரு முறை பார்த்துக் கொள்ளட்டும்.

நன்றிங்க

Thursday, June 12, 2008

குண்டு வெடிப்பு பின்னணியில்...


மகாராஷ்ட்ர மாநிலம் தானே மாவட்டத்தில் நவி மும்பைப் பகுதியில் கலையரங்கில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கு சங் பரிவார் இயக்கத் தின் துணை இயக் கங்களில் ஒன்றான பஜ்ரங்தள் என்ற பயங்கரவாத இயக் கத்திற்கும் தொடர்பு இருப்பதாக மகா ராஷ்ட்ரா மாநில உளவுத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.

இந்நாட்டின் பழம்பெரும் பயங்கரவாத இயக்கமான சங்பரிவார் சக்திகளுக்கும் நாட்டில் நடைபெற்ற பல்வேறு சதிச் செயல் களுக்கும் தொடர்பு இருப்பதாக கடந்த அறுபதாண்டு காலமாகவே குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் நவி மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பிலும் மேற்படியாளர்களின் கை வரிசை இருப்பதாக மகராஷ்ட்ரா உளவுத்துறை போலிசார் கூறியுள்ளனர்.

Aamhi Pachpute என்ற மராத்தி நாடகம் சஞ்சய் பவார் என்பவரால் இயக்கப்பட்டது. இந்த நாடகம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நவி மும்பையில் காத்கரி ரங்யா தன் கலையரங்கில் திரையிடப்பட்ட போது கடும் வன் முறையில் இறங் கிய பஜ்ரங்தளத் தினர் அந்த நாட கத்தை தடுத்து நிறுத்தினர். அதே கலையரங்கில் தற்போது குண்டு வெடித்துள்ளது.
இந்த குண்டு வெடிப்புகளின் பிண்ணயில் பஜ் ரங்தளம் இருப்ப தாக 'தானே' காவல் துறை இணை ஆணையர் மதுகர் ஷிண்டே சந்தேகம் தெரிவித்திருக்கிறார்.

நான்டெட், தென்காசி போன்ற இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு களில் ஈடுபட்ட சங்கும்பலே இந்த சதிச் செயலையும் இழைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட நிலையில் நவி மும்பை குண்டு வெடிப்புகளில் பஜ்ரங்தள் பயங்கரவாத அமைப்பு பின்னணியில் உள்ளதாக கூறப்படும் தகவல்கள் அலட்சியப்படுத்தக் கூடியவை அல்ல!

நன்றிங்க

தெளிவான தீவிரவாதி...!

தெளிவான தீவிரவாதி...!

புதன், 11 ஜூன் 2008

இருபதாம் நூற்றாண்டிற்கு மேற்குலகம் கண்டு பிடித்தளித்து, விசித்திரமாகத் தமிழ்ப் படுத்தப் பட்ட சொற்கள்தாம் Terrorism/Terrorist முறையே தீவிரவாதம்/தீவிரவாதி!




தேர்தலில் "தீவிர"ப் பிரச்சாரம் செய்பவர், அரசியல்வாதி.

என்கவுண்டரில் கொல்லப் பட்ட வீரப்பனை இரு மாமாங்கங்களாகத் "தீவிர"மாகத் தேடியவர்கள், காவல் துறையினர்.

நடிக-நடிகையரின் வீட்டில் கருப்புப் பணத்தைத் "தீவிர" வேட்டையாடுபவர்கள், வருமான வரிச் சோதனையாளர்கள்.

அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றத் "தீவிர" முயற்சியில், மத்திய அரசு.

Terrorism, Terrorist ஆகிய ஆங்கிலச் சொற்களை முறையே தீவிரவாதம், தீவிரவாதி என்று தமிழ்ப் படுத்தினால் மேற்காணும் அரசியல்வாதி, காவல்துறையினர், வருமான வரிச் சோதனையாளர்கள், மத்திய அரசு மட்டுமின்றித் தற்போது தமிழகத்தில் "தீவிர"மாகி விட்ட பருவமழையும் தீவிரவாதிப் பட்டியலில் இடம் பெற்று விடும்.
Terrorism என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, 'பயங்கர ஆட்சிமுறை', 'பயங்கரக் கொள்கை (இயக்கம்)', 'அச்சுறுத்திப் பணிய வைத்தல்' ஆகிய தமிழ்ப் பொருள்களும் Terrorist என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, 'பயங்கரவாதி', 'வன்முறைப் புரட்சிக்காரன்', 'அச்சுறுத்தி ஆள்பவன்' ஆகிய பொருள்களும் அகராதியில் காணப் படுகின்றன.

ஆனால், தமிழில் வெளிவரும் அனைத்து இதழ்களும் Terroristஐத் தீவிரவாதி என்று தமிழ்ப் படுத்தி, "ஈடுபடும் காரியத்தில் தெளிவுடனும் உறுதியுடனும் செயல்படுபவன்" என்ற அகராதி பொருளைப் அர்த்தமற்றதாக்கி, "ஆயுதங்களால் மக்களை அநியாயமாகக் கொல்பவன்" என்ற ஒரே பொருள் சார்ந்த அச்சத்தை மக்களின் மனதில் விதைத்து விட்டன.

இந்தத் 'தீவிரவாதி' என்ற பூச்சாண்டியைக் காட்டியே நாட்டில்-உலகில் "தெளிவான தீவிரவாதிகள்" செய்து முடித்துள்ள, செய்ய எண்ணியுள்ள செயல்களும் திட்டங்களும் எழுத்தில் வடிக்க இயலாதவை.

யார் இந்தத் தெளிவான தீவிரவாதிகள்?.

தீவிரவாதிக்கான புதிய அர்த்தத்தின்படி, "தான் கருவறுக்க நினைப்பவர்களைப் பூண்டோடு அழிப்பதற்கான அனைத்து வேலைகளையும் முறையாகத் திட்டமிட்டு இறுதிவரை அதனைச் செயல்படுத்துவதற்கான எல்லா வேலைகளையும் செய்பவன்"ஐத் தமிழிதழியலின் சம்பிராதயத்தைப் பின்பற்றி, "தெளிவான தீவிரவாதி" என்றே தற்காலிகமாகச் சொல்லி வைப்போம்.

அந்த வகையில் இன்று கண்முன் நிழலாடுபவர்கள் இருவரே. முதலாமவர், இருபதாம் நூற்றாண்டிற்குத் தீவிரவாதத்தைப் பரிசளித்த உலகத் தீவிரவாதி ஜார்ஜ் புஷ். இரண்டாமவர், இந்திய உச்சநீதிமன்றத்தாலேயே "நவீன நீரோ" எனப் புகழ்மாலை சூட்டப்பட்ட இந்தியாவின் ஒரே மாநில முதல்வர் நரேந்திர மோடி.

"இஸ்லாமியத் தீவிரவாதம்" எனத் தீவிரவாதத்திற்கு இஸ்லாத்தை அடைமொழி கொடுத்த புஷ், இஸ்லாமிய மக்கள் நிறைந்து வாழும் ஆப்கான் மற்றும் ஈராக்கில் கொன்று குவித்த அப்பாவி முஸ்லிம்களின் எண்ணிகை மில்லியன்களைத் தாண்டும்

கடந்த சில தினங்களுக்கு முன்னர், இந்தியத் தலைநகரம் டில்லியில் நடந்த மத-அரசியல் தலைவர்களின் சர்வதேசத் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் பங்கெடுத்த தலாய்லாமா, "இஸ்லாம் என்பது சமாதானத்தின் மார்க்கமாகும். அது ஒருபோதும் தீவிரவாதத்தை ஊக்குவித்ததில்லை. அப்படியிருக்கையில் தீவிரவாதத்திற்கு இஸ்லாமிய மார்க்கத்தை மட்டும் குறிவைப்பது வேதனைக்குரியதாகும். முஸ்லிம்கள் உலகில் சமாதானத்தை விரும்புபவர்களாவர். ஓர் உண்மையான முஸ்லிமிற்கு ஒரு போதும் தீவிரவாதி ஆக இயலாது" எனக் கூறினார்.

தலாய் லாமா கூறியதில், "அமைதியைப் போதிக்கும் / விரும்பும் இஸ்லாத்தை வாழ்க்கைத் திட்டமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிமால் தீவிரவாதியாக ஒருபோதும் இயலாது" என்ற சொற்கள் ஊன்றிக் கவனிக்கத்தக்கவை.

ஆனால் இவையெல்லாம் தெளிவான திட்டங்களுடன் அரசு இயந்திரங்களை உபயோகித்து தீவிரவாதத்தில் ஈடுபடும் புஷ் மற்றும் மோடி போன்ற தெளிவான தீவிரவாதிகளுக்கு மூளையில் ஏறப்போவதில்லை.

அந்த மாநாட்டிற்குப் பின்னர் டில்லி ஜுமா மஸ்ஜிதின் இமாம் புகாரி பேசியதில் சில வாசகங்களும் இங்கு கவனிக்கத்தக்கவை..



"நரேந்திரமோடி குஜராத்தில் முதல்வராக இருக்கும்வரை அங்கு இன அழித்தொழிப்பு ஓயாது. இன்றுவரை தீவிரவாதி என்ற பெயரில் பல அப்பாவி இளைஞர்களை மோடி என்கவுண்டர் என்ற பெயரில் அழித்து வருகிறார். ஆனால் உண்மையான தீவிரவாதி மோடிதான்.

குஜராத் இன அழிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதியாக்கப்பட வேண்டும். ஆனால் அது மோடி முதல்வராக இருக்கும்வரை நம்மால் எதிர்பார்க்க இயலாத ஒன்று. தங்களை அநியாயமாக அழிப்பவர்களுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோபமே பலரைத் தீவிரவாதத்தில் கொண்டு சேர்க்கின்றது.

தன் சொந்தச் சகோதர-சகோதரிகள், பெற்றோர், பச்சிளம் பாலகர்கள் தன் கண் முன்னே வைத்து கொடுமைப் படுத்தப்பட்டும் மானபங்கப் படுத்தப்பட்டும் கொல்லப்படும்போது தடுக்க வேண்டிய காவல்துறையே தீவிரவாதிகளோடு கைகோர்த்துக் கொண்டு நிற்பதைப் பார்க்கும் ஒருவன் - இறுதியாக நீதிமன்றக் கதவுகளைத் தட்டி, அங்கும் எவ்வித நீதியும் கிடைக்காமல் போனால் அவன் என்ன தான் செய்வான்ர்?. யாருக்காக வாழ வேண்டுமோ அவர்கள் அனைவரும் தன் கண் முன்னால் அநியாயமாகக் கொலையுண்ட பின்னர், தனக்கு நீதியும் மறுக்கப் பட்ட அத்தகைய நிலையில் அவன் தன் உயிரை ஒரு பொருட்டாக மதிக்காமல் தீவிரவாதச் செயல்களின் பக்கம் திரும்பாமல் இருந்தாலே அது அற்புதமாகும்.

கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கு நீதி உறுதி செய்யப்பட்டால் மட்டுமே தீவிரவாதத்தை ஒழிக்க இயலும்" என இமாம் புகாரி கூறினார்.

இமாம் புகாரியின் கருத்தை நாம் இங்கு எடுத்தெழுதுவதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு.

கடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் தனது தோழர் வாஜ்பாயின் வெற்றிக்காக பாஜகவுக்கு ஓட்டு கேட்டவர்தான் இவர். முஸ்லிம் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட எவனும் இந்தியத் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் ஆர்.எஸ்.எஸ்ஸைத் தலைமையாகக் கொண்ட பாஜகவிற்காக ஓட்டு கேட்க மாட்டான் என்பது திண்ணம்.

அப்படியிருக்க பாஜக அனுதாபியான இவர், அதே பாஜகவின் மாநில முதல்வர் மோடியினைக் குறித்து இவ்வாறு கூறியிருக்கின்றார் எனில் அது கவனிக்கப்பட வேண்டிய விஷயமேயாகும்.

தனது தலைமைபீடம் பயிற்றுவித்த, "முஸ்லிம்களை அடியோடு அழித்தல்" என்ற அடிப்படை அஜண்டாவை அப்படியே உள்வாங்கி, துவக்கம் முதல் மிகச் சரியாகத் திட்டமிட்டு அதனை குஜராத்தில் நடைமுறைப் படுத்துபவர்தான் மோடி.

அதற்காகத் தனது இன மக்களைக்கூட காவுகொடுக்கத் தயாரானவன் தெளிவான தீவிரவாதியல்லாமல் வேறென்ன?



உலகில் இஸ்லாமியர்களின் தலைமீது தீவிரவாதச் சுமையைத் தூக்கி வைத்து, அவர்களை அழிக்கத் தன் சொந்த நாட்டு மக்களையே காவு கொடுக்கும், உலகத்திலேயே தெளிவான தீவிரவாதியான புஷ்ஷை அடியொற்றி, குஜராத் முஸ்லிம்களை அழிக்கத் தன் இன மக்களான "கரசேவகர்களையே ரயிலில் வைத்துப் பூண்டோடு எரித்த" மோடி, தொடர்ந்த முஸ்லிம் மக்களின் இன அழிப்பிற்காகப் பல மாதங்களுக்கு முன்னரே தயாராகி இருந்தது இன்று வெளிக்கொணரப் பட்டுள்ளது.



குஜராத் முதல்வராக மோடி பதவி ஏற்றதிலிருந்து இதுவரை போலி என்கவுண்டர் மூலம் காவல்துறையால் சுட்டுத் தள்ளப் பட்ட - சொஹ்ரப்தீன் தம்பதியினர் உட்பட - முஸ்லிம்களின் எண்ணிக்கை ஐம்பதை நெருங்குகிறது. படுகொலை செய்யப் பட்ட அனைவர் மீதும் "மோடியைக் கொல்லச் சதி செய்தார்கள்" என்ற ஒரேயொரு போலியான குற்றச்சாட்டு சுமத்தப் பட்டது. நாட்டுத் துப்பாக்கிகள் 'வைத்து' எடுக்கப் பட்டன. ஆனால், நேர்மையான சில பத்திரிகைகளாலும் நல்ல மனம் படைத்த நடுநிலையாளர் சிலராலும் உண்மை வெளிச்சத்துக்குக் கொண்டு வரப் பட்டது. போலி என்கவுண்டர்கள் மூலம் முஸ்லிம்களைச் சுட்டுத் தள்ளிய குற்றத்துக்காக மூன்று IPS கொலைகார அதிகாரிகள் கைது செய்யப் பட்ட செய்தி, நாட்டையே ஓர் உலுக்கு உலுக்கி எடுத்தது. பள்ளிப் படிப்பைப் படிப்பதற்குக்கூட வசதியில்லாமல் முஸ்லிம்கள் போட்ட பிச்சையில் படித்தவனும் பதின்மூன்று முஸ்லிம்களைப் போலி என்கவுண்டரில் கொன்றவனுமான டி.பி. வன்சாரா என்ற அயோக்கியக் கொலைகாரன் IPS-க்கு 150 கோடி வரை சொத்துகள் பரிசளிக்கப் பட்டுள்ளன.

கருவறுக்கப்பட்டது போக, அனைத்தையும் இழந்து சொந்த மண்ணில் அகதி முகாம்களில், அடிமனதில் அடங்காத பீதியுடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்குத் தினசரி வாழ்வாதார உரிமைகளைக்கூட கொடுக்காமல் மறுத்து வருவது மோடியின் திட்டத்தின் மற்றொரு கட்டத்தைச் செயல்படுத்துவதன் ஒரு பாகமே.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமல் தடுப்பதும் அதன் மற்றொரு கட்டம்தான். இதனைத் தான் இமாம் புகாரி அடிகோடிட்டுள்ளார்.

இதோ இன்று தனது நாட்டில் நடைமுறைபடுத்திய அதே திட்டத்தைக் கர்நாடகத்திலும் "குஜராத் மாடல் பின்பற்றப்படும்" எனத் தனது மற்றொரு சக சங்கத்தோழனான எடியூரப்பாவிற்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார் மோடி.

இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ் வகுத்தளித்த "முஸ்லிம் இன அழிப்பை"த் திட்டமிட்டு நடைமுறைபடுத்த முயலும் மோடியை இந்தியாவின் நம்பர் ஒன் தெளிவான தீவிரவாதி என்று தாராளமாகக் கூறலாம்.

"கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்" என்ற உவமைச் சொலவடையை உண்மைப் படுத்துவதுபோல் பெரும்பாலும் தீவிரவாதிகளுக்கு இறுதி முடிவு என்பது "என்கவுண்டர்" போன்று ஏதாவது விரும்பத்தகாத துர்முடிவாகவே இருக்கும்.

இன்று உலகிலும் இந்தியாவிலும் தெளிவான தீவிரவாதிகளாக வலம் வரும் புஷ் மற்றும் மோடி தீவிரவாதிகளின் முடிவு...?

இவர்களால் பாதிக்கப்பட்டு இன்றும் நீதி மறுக்கப்பட்டு மனதில் அடங்காக் குமுறலுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு அவர்களுக்கான நீதி கிடைப்பதைப் பொறுத்தே இவ்விருவரின் முடிவும் அமையும்.

இந்தத் தெளிவான தீவிரவாதிகளால் அநியாயத்திற்குள்ளாக்கப்பட்டு, மறுக்கப்பட்ட நீதியுடன் உலாவரும் எண்ணிலடங்கா அப்பாவி மக்களை, இவர்களைப் போன்றவர்களுக்கு எதிரான மற்றொரு தீவிரவாதக் கூட்டமாக மாற்றாமல் இருப்பதற்கான கடமை இவ்வுலகில் நீதிமன்றங்களுக்கு மட்டுமே உண்டு.

நன்றிங்க

Wednesday, June 11, 2008

புதைக்கப்பட்ட வெடி குண்டுகள்

கும்மிடிப்பூண்டி: புதைத்து வைக்கப்பட்ட ராக்கெட் குண்டுகள்-2 பேர் கைது

புதன்கிழமை, ஜூன் 11, 2008

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே போலீசார் நடத்திய சோதனையில் ஒரு நிறுவனத்தின் குடவுனில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

சென்னையை அருகே கும்மிடிப்பூண்டியில் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கி தோட்டாக்களை மாணவர்கள் விளையாட்டாக எரித்தபோது அவை வெடித்ததில் 2 மாணவர்கள் காயமடைந்தனர்.

இந்த தோட்டாக்கள் அங்கு எப்படி வந்தன என்ற விசராணை நடந்தபோது சிப்காட் தொழிற்பேட்டை அருகே கிணற்றில் மூட்டை மூட்டையாக துப்பாக்கி தோட்டாக்கள் சிக்கின.

இதையடுத்து தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அந்த தோட்டாக்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட பழமையான தோட்டாக்கள் என்று தெரியவந்துள்ளது.

தொழிற்பேட்டையில் உள்ள ஏதாவது ஒரு பழைய இரும்பு நிறுவனம் அதை உருக்க இறக்குமதி செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பழைய இரும்பு சாதனங்களை இறக்குமதி செய்யும்போது அவற்றுடன் சேர்ந்து இந்த தோட்டாக்கள் வந்திருக்கலாம், போலீசாருக்கு பயந்து இதை அவர்கள் வெளியில் கொட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் 16 இரும்பு நிறுவனங்களில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது விநாயகா அலாய்ஸ் ஸ்டீல் என்ற நிறுவனம் இதை இறக்குமதி செய்தது தெரிய வந்தது. மேலும் இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தான் போலீசுக்கு பயந்து தோட்டாக்களை கிணற்றில் போட்டனர் என்பதும் உறுதியானது.

இதையடுத்து அந்த நிறுவனத்தில் மேலும் சோதனைகள் நடந்தபோது குவியல் குவியலாக கையெறி குண்டுகள், ஏ.கே.47 துப்பாக்கி தோட்டாக்கள், கண்ணிவெடிகள் ஆகியவையும் இருந்தன.

மேலும் அந்த நிறுவனத்தின் குடவுனில் தோண்டிப் பார்த்தபோது ஏராளமாக குண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. இவை மிகப் பழமையான குண்டுகளாகும், பெரும்பாலானவற்றில் அமெரிக்க முத்திரை உள்ளது.

இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்துவரும் இந்த நிறுவனத்தி்ன் அதிபர் அசோக்குமார் ஜெயின் (45), பொது மேலாளர் மனோஜ்குமார் (35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த குண்டுகளை கொதிகலனில் போட்டு உருக்கினால் வெடித்துச் சிதறிவிடும் என்பதால், வெடிமருந்தை நீக்கிவிட்டு பின்னர் உருக்கவும், அதுவரை வெளியாரின் கண்களில் படாமல் இருக்கவும் புதைத்து வைத்ததாக இந்த இருவரும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட எஸ்பி செந்தாமரைக்கண்ணன் நிருபர்களிடம் கூறுகையில்,

இரும்பு உருக்கு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் இரும்பு ஸ்கிராப்புடன் சில நேரம் வெடிபொருட்களும் வருவதுண்டு. அப்படி வந்தால் உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

அதைவிட்டுவிட்டு பதுக்கி, புதைத்து வைத்தாலோ, வெளியே வீசினாலோ அது சட்டப்படி குற்றம் என்றார்.

தீவிரவாத தொடர்பு இல்லை-டிஜிபி:

இந் நிலையில் டிஜிபி ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கும்மிடிப்பூண்டி இருகே சிப்காட் வளாகத்தில் பயன்படுத்தாத ஒரு கிணற்றில் துருப்பிடித்த நிலையில், பழைய பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன. தீவிரவாத செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்றும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பற்றியும் சில தரப்பில் இருந்து (ஜெயலலிதா) குறை கூறப்படுகிறது. இது உண்மைக்குப் புறம்பானது.

கைப்பற்றப்பட்ட பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள், செல்கள், கையெறி குண்டுகள் மிகவும் பழையானவை (1917 முதல் 1967 வரையிலான காலகட்டத்தில் தயாரானவை) என்பதும், அவை இந்தியாவில் தயாரானவை அல்ல என்பதும் தெரிய வந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து இரும்பு கழிவுப் பொருட்களை இறக்குமதி செய்து, அவற்றை உருக்கி கம்பிகளாக மாற்றி விற்பனை செய்து வரும் 14 ஸ்டீல் கம்பெனிகள் சிப்காட் வளாகத்தில் இயங்கி வருகின்றன. இவற்றுள் ஒரு நிறுவனத்துக்கு வந்த கழிவுப் பொருட்களுடன் இந்த துருபிடித்த தோட்டாக்கள் வந்துள்ளதாகவும், அவற்றை கொதிகலனில் பயன்படுத்த முடியாதென்பதால், அந்த நிறுவனத்தினர் அவற்றை கிணற்றுக்குள் போட்டுள்ளனர்.

இது தொடர்பாக விநாயகா அலாய்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவன உரிமையாளர் அசோக்குமார் ஜெயின், மேலாளர் மனோஜ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்படுகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பழமை வாய்ந்த அவை எதுவும் தற்போது பயன்பாட்டுக்கு உகந்தவை அல்ல. எனவே இந்த சம்பவத்தில் தீவிரவாதிகளை தொடர்புபடுத்த எவ்வித முகாந்திரமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

நன்றிங்க

//பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பழமை வாய்ந்த அவை எதுவும் தற்போது பயன்பாட்டுக்கு உகந்தவை அல்ல. எனவே இந்த சம்பவத்தில் தீவிரவாதிகளை தொடர்புபடுத்த எவ்வித முகாந்திரமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.//


பொசுக்குன்னு இப்படிச் சொல்லிட்டா எப்படி?

அசோக், மனோஜ் என்ற பெயருக்குப் பதிலா 2 துலக்கப்பயலுவ பெயரைச் சேத்து எவனாவது இளிச்சவாய துலுக்கப்பயலுக 2 பேரை பிடித்து, அமெரிக்காவிலிருந்து பயங்கர ஆயுதங்களைக் கடத்திய பயங்கரவாதிகள் னு பேட்டி கொடுக்கலாமே, என்ன நாஞ்சொல்றது!

Saturday, May 24, 2008

காத்திருப்போம்.

அறுபது ஆண்டுகால நோன்புக்கு இஃப்தார் எப்போது?

வெள்ளி, 23 மே 2008

கோடை விடுமுறை முடிந்து அடுத்த கல்வி ஆண்டு துவங்க விரல் விட்டு எண்ணக்கூடிய நாட்களே மீதம் உள்ளன. புதிதாகத் தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பர்வர்களும் அடுத்த வகுப்புக்குத் தேர்வாகியவர்களும் பள்ளிப்படிப்பு முடிந்து வசதி வாய்ப்பு உள்ளவர்கள் கல்லூரிகளை நோக்கிப் பயணப்படுபவர்களுமாக மக்கள் கோடை வெப்பத்தோடு கல்வி வெப்பத்திலும் சிக்கிச் சுற்றி வரும் காலகட்டம் இது.

முஸ்லிம் சமுதாயம் அத்தகையக் கல்வி வெப்பத்திற்கு அதிகமாகத் தங்களை உட்படுத்திக் கொள்ளாமல் எப்பொழுதும் போல் இந்த ஆண்டும் மற்ற காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. சமுதாய முன்னேற்றத்திற்காகவும் வாழ்வுரிமைக்காகவும் குரல் கொடுத்து வீறுடன் போராடும் இயக்க/அமைப்புகளும் இடஒதுக்கீடுக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் வீறுடன் போராடிப் போராடி இன்னும் போராட்ட வெப்பத்திலேயே சமுதாயத்தை வைத்துக் கொள்வதில் மும்முரம் காட்டி வருகின்றன.

"சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் நலனுக்காகவும் மட்டுமே நாங்கள் இயக்கம்/அமைப்பு நடத்துகின்றோம்" என உரிமை கொண்டாடும் தலைவர்கள், அந்தச் சமுதாய முன்னேற்றத்திற்குத் தேவையான அடிப்படை விஷயமான கல்வியில் சமுதாயத்தைத் தன்னிறைவு அடைய வைப்பதற்கான தீர்வு என்ன என்பதனைக் குறித்தும் அதனை அடைய வைப்பதற்கான வழிவகைகளைக் குறித்து ஆய்ந்து மக்களிடம் சேர்த்து வைப்பதனைக் குறித்தும் சரியான வழியில் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நேரமிது..

ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு அடிப்படையான கல்வியைப் பெறுவதில் முதல் தேவையானது அக்கல்வியின் முக்கியத்துவதையும் பயனையும் அறிதலும் கல்வியின்மையால் விளையும் தீமைகளையும் நஷ்டங்களையும் புரிந்து கொள்வதற்கான விழிப்புணர்ச்சியுமாகும்.

அத்தகைய சமுதாய விழிப்புணர்வில், சமுதாயம் 90களிலோ 2000களிலோ இருந்த நிலையில் தற்பொழுது இல்லை. இந்தியாவில் தங்களின் வாழ்வுரிமையைத் தக்க வைப்பதற்குக் கல்வியறிவு கட்டாயம் என்பதைத் தற்பொழுது சமுதாயம் 100 சதவீதம் இல்லையெனினும் நன்றாகவே உணர்ந்துள்ளது எனலாம். இப்பொழுது சமுதாயத்திற்குத் தேவை, அந்தக் கல்வியைப் பெறுவதற்கான வழிவகைகளும் அதற்கு வழிகாட்டும் உதவிகளும் மட்டுமே ஆகும்.

சமுதாய முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக விளங்குவதில் பொருளாதாரம் மிக முக்கியப் பங்காற்றுகின்றது. இப்பொருளாதார வசதியின்மை காரணத்தால் சமுதாயத்தில் 90 விழுக்காட்டிற்கு அதிகமான மக்கள் பள்ளிக்குச் செல்லாமலோ பள்ளிப்பபடிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டோ பொருளாதாரத் தேவைக்காகச் சொந்த நாட்டில் வாழவழியின்றி கடல்கடந்து பாலை வெப்பத்தில் தகித்துக் கொண்டிருக்கின்றனர்.

கல்வியைத் தொடர இயலாமல் வெளிநாடுகளுக்கு வண்டி ஏறியவர்கள் கல்வியின்மையினால் அங்கும் அடிமாட்டுக் கூலிக்குத் தங்கள் வாழ்வையும் தங்களின் அடுத்தடுத்தத் தலைமுறையினரின் வாழ்வையும் பலிகொடுத்துக் கொண்டு அந்த அடித்தட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

எனவே, இந்த அவல நிலை மாறுவதற்கு அடிப்படையான கல்வியைப் பெறுவதற்குப் பொருளாதார உதவி என்பது மிக முக்கியத் தேவை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். கல்வி கற்க வேண்டிய விழிப்புணர்வைப் பெற்றுக் கொண்டு அதனைத் துவங்கவோ தொடரவோ இயலாமல் நடுவழியில் நிற்கும் சமுதாயத்திற்குப் பொருளாதார உதவி செய்வது யார்?

சமுதாயத்தில் விரல்விட்டு எண்ணத்தக்க அளவில் உள்ள செல்வந்தர்கள் செய்வார்களா? அல்லது அவர்கள் செய்ய முன் வந்தாலும் கல்விக்குத் தேவையான பொருளாதார உதவிகளை முழுச் சமுதாயத்து அடித்தட்டு மக்களுக்கும் அவர்களால் மட்டும் நிறைவேற்றி விட முடியுமா? நிச்சயம் முடியாது!

சரி, சமுதாய முன்னேற்றத்திற்காக மட்டுமே(!) இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் அதனைச் செய்யுமா? அவர்களே தங்களின் இருப்பிற்கான பொருளாதார தேவைகளுக்கு அவர்களது பத்திரிகைகளிலும் கிடைக்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் துண்டை விரித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர்களால் ஒன்றும் ஆகப் போவதில்லை.

சமுதாயத்திற்குத் தேவையான கல்வி தன்னிறைவு பெறுவதற்கு அவசியமான பொருளாதார தேவையைப் பூர்த்தி செய்வது யார்? இதற்கான வழிகளை ஆய்வதும் அதனைச் சமுதாயத்தின் முன்னிலையில் கொண்டு சேர்ப்பதுமே இத் தலயங்கத்தின் நோக்கமாகும்.

ஒரு நாடு தன் நாட்டில் வாழும் குடிமக்களை எல்லாவிதத்திலும் முன்னேற்றுவதற்கான உதவிகளைச் செய்வதற்குக் கடமைப் பட்டதாகும். அதுவும் கல்வியறிவில் தனது நாட்டு மக்களைத் தன்னிறைவு அடைய வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அந்நாட்டின் தலையாயக் கடமையாகும்.

அதற்காக அந்நாடு பல்வேறு திட்டங்களை அறிவிக்கும். அதில் பொருளாதார உதவி மிக முக்கியமானதாகும். அத்திட்டங்களைக் கூர்ந்து கவனித்து அதனைப் பெற்று முன்னேற முயல வேண்டியது அந்நாட்டுக் குடிமக்களின் கடமையுமாகும்.

இவ்வகையில், தங்கள் நாட்டுக் குடிமக்களின் கல்வியறிவை முன்னேற்றுவதற்காக உதவி செய்யும் நாடுகளில் உலகிலேயே முதல் இடத்தில் இருப்பது இந்தியாதான் என்று கூறினால் ஆச்சரியமாக உள்ளது அல்லவா?. ஆம். அது தான் உண்மை.

ஓரளவு வசதி உள்ள நடுத்தர மக்களின் உயர்கல்விக்காகக் கல்விக் கடன், எதற்குமே வழியில்லாத மக்களுக்கு உதவித்தொகை, மக்களுக்கு இலவசமாக உதவி வகுப்புகள் எடுக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான சம்பள உதவித்தொகை எனப் பல வழிகளில் இந்திய அரசு தனது குடிமக்களின் கல்வி மேம்பாட்டிற்காகப் பல கோடிகளை ஒவ்வோர் ஆண்டும் அறிவிக்கின்றது/செலவழிக்கின்றது.

"கடந்த நிதியாண்டில் மட்டும் இந்திய தேசிய வங்கிகள் முலமாக நாடுமுழுவதும் 12,51,692 மாணவர்களுக்கு ரூ.19,771 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது" எனச் சில நாட்களுக்கு முன்னர் நமது மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்தார்.

அதுமட்டுமின்றி நன்றாகப் படிக்கக்கூடிய ஏழை மாணாக்கர் வசதியின்றி தங்களின் படிப்பைப் பாதியில் நிறுத்தினால் அவர்களின் படிப்பைத் தொடர்வதற்கு வசதியாக ஆண்டு தோறும் ரூ. 6,000 உதவித் தொகையாக வழங்குகிறது. மேலும் கீழ்த்தட்டு வேலைகளில் பணியாற்றுபவர்களின் வாரிசுகளுக்கு ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்வியைத் தொடர வகை செய்யும் கல்வி உதவித் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வுதவிகள் மக்களைச் சென்று சேர வசதியாக இணையம் மூலம் கல்வி உதவித் தொகை பெறும் வசதியும் இக்கல்வியாண்டு முதல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இவை அனைத்தும் இவ்வாண்டில் ஆரம்பிக்கப்பட்டப் புதிய திட்டங்கள் அல்ல. இந்தியா விடுதலை அடைந்த காலம் தொட்டு கல்வி வளர்ச்சிக்காக மத்திய அரசும் மாநில அரசுகளும் இதுபோன்றப் பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்பட்டு வருகின்றன. ஏனெனில், நம் நாடு ஆங்கில ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்தபோது வகுக்கப் பட்ட அரசியல் நிர்ணயச் சட்டத்தில் 'வழிகாட்டு நெறிமுறை'யாக, "குடிமக்கள் அனைவருக்கும் கல்வி கொடுக்கப்பட வேண்டியது கட்டாயம்" என்பது இணைக்கப் பட்டது.

எனினும் இந்தியாவில் முஸ்லிம் சமுதாயம் மட்டும் கல்வியில் மிக மிகப் பின் தங்கியிருப்பதற்கு, அரசின் இத்தகையத் திட்டங்களைக் குறித்த அறிவோ, பிரக்ஞையோ அற்று இருப்பதும் ஒரு காரணம் ஆகும். பிரதிநிதித்துவம் இல்லை என அதனை மட்டுமே சமுதாய முன்னேற்றமின்மைக்குக் காரணமாக இன்னும் நாம் கூறிக் கொண்டு நடுரோட்டில் கொடி பிடிப்பதிலும் கோஷங்கள் எழுப்புவதிலும் காலம் கடத்திக் கொண்டிருப்பது சமுதாய முன்னேற்றத்திற்கு உகந்ததன்று.

இந்திய நாட்டின் குடிமக்கள் என்ற அடிப்படையில் இந்திய அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு முஸ்லிம் சமுதாயத்திற்கு எல்லா வகையான உரிமையும் உள்ளது. இவ்வுணர்வைச் சமுதாயத்திற்கு ஊட்டி, அரசின் நலத்திட்டங்களும் உதவியும் சமுதாய அடித்தட்டு மக்களைச் சென்று சேருவதற்கான முன்முயற்சிகளைப் போர்க்கால அவசரத்தில் எடுக்க வேண்டியது சமுதாய ஆர்வலர்களின் முக்கியக் கடமையாகும்.

சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக உழைப்பது மட்டுமே தங்களின் நோக்கம் என மார்தட்டும் அமைப்புகளும் இயக்கங்களும் அரசின் நலத்திட்டங்கள், உதவிகள் தொடர்பான உதவி வகுப்புகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மஹல்லா தோறும் நடத்துவது மிகப்பலன் தரும். இதனை ஏற்கெனவே உண்மையாகச் சமுதாய முன்னேற்றத்தில் ஆர்வமுள்ள பல்வேறு சமுதாய நலன்விரும்பிகள் அவரவர்களின் ஊர்களில் நடத்திக் கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முயற்சியை ஒவ்வொரு மஹல்லாவிலும் நடத்துவதற்கான ஒரு திட்டத்தை உடனடியாகப் போர்க்கால அவசரத்தில் அமைப்புகளும் கட்சிகளும் இயக்கங்களும் நடத்த முன்வர வேண்டும். ஒரு கல்வியாண்டு செல்வது ஒரு தலைமுறையின் எதிர்காலம் பின்செல்கிறது என்பதையும் மற்றொரு தலைமுறையின் எதிர்காலம் துவங்குகிறது என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. அதை நாம் உணந்து செயல்பட வேண்டியது காலத்தில் கட்டாயமாகும்.

அதேவேளை இந்திய அரசு அறிவிக்கும் வங்கிகள் மூலமான கல்விக் 'கடன்கள்' இஸ்லாத்தில் விலக்கப்பட்ட வட்டியின் அடிப்படையிலானது என்ற காரணத்தால் முஸ்லிம் சமூகம் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள இயலாமல் கடந்த 60 ஆண்டு காலமாகத் தவித்துக் கொண்டிருக்கிறது. தட்டில் உணவிருந்தும் உண்ண முடியாத - தடுக்கப் பட்ட நோன்புநிலை. இதைச் சுட்டிக்காட்டி, கல்விக் கடனை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வட்டியில்லாக் கடனாக வழங்குமாறு அரசுக்குக் கோரிக்கை வைக்க முன்வரவேண்டும்.

60 ஆண்டுகாலமாக அரசுக் கடன் வகையில் நோன்பிருக்கும் சமுதாயத்துக்கு, சமுதாயத்தின் பெயராலே பல கூறுகளாகப் பிரிந்து கிடக்கும் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் ஆகியவற்றுள் முதலாவதாகக் குரல் கொடுத்து நம் எதிர்காலச் சந்ததியினருக்காவது இஃப்தார் விருந்து ஏற்பாடு செய்யப் போவது யார்? என்று வேறென்ன செய்ய ...?

காத்திருப்போம்.

நன்றிங்க

Friday, May 23, 2008

பயங்கரவாதத்துக்கு எதிராக...

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் அமைப்பு!

வெள்ளி, 23 மே 2008

2002ஆம் ஆண்டு குஜராத் சபர்மதி எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியில் இராம பக்தர்களாக வந்த சங் பரிவார் தொண்டர்களையும் அப்பாவி இந்து மக்களையும் தீவைத்துக் கொளுத்திவிட்டு நிமிட நேரத்தில் அதனை 'முஸ்லிம் தீவிரவாத'மாகத் திசை திருப்பி, 3000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் காவுகொண்ட மோடியும் அவனது கொலைவெறிக் கூட்டமும் இன்றுவரை வெகு சுதந்திரமாக பவனி வரும் நாடு, நம் நாடு.

கடந்த 2006ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் நான்டட் நகரத்தில் சங்பரிவார் அமைப்பு உறுப்பினர் ஒருவரது வீட்டில் குண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது சக்தி வாய்ந்த குண்டு வெடித்த நிகழ்வின்போது அங்கு முஸ்லிம்கள் அணியும் தொப்பிகளும் ஒட்டுத் தாடிகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. இது போன்ற நிகழ்வுகளால் பலமுறை ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார குழுக்களின் பயங்கரவாத முகம் அம்பலப்பட்டாலும் பயங்கரவாதத்தை முஸ்லிம்கள் மட்டும் ஒட்டு மொத்தக் குத்தகை எடுத்துக் கொண்டு செயல்படுவதாகக் காட்டுக் கூச்சல் போடும் பேச்சுரிமைச் சுதந்திரம் மிளிரும் நாடு, நம் நாடு.

கடந்த 2007 ஜனவரி மாதம் 24ஆம் நாளிரவில் தென்காசி RSS அலுவலகத்திலும் பேருந்து நிலையத்திலும் நிறுத்தப் பட்டிருந்த ஆட்டோ ரிக்ஷாக்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. பேருந்து நிலையக் குண்டு வெடிப்பில் ஒரு வெற்றிலை வியாபாரி உள்பட இருவர் காயமடைந்தனர். இந்தக் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடிக்காத குண்டு, டெட்டனேட்டர்கள் உள்ளிட்டப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. என்றாலும், செய்வதையும் செய்துவிட்டு, "இந்தக் குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லிம் பயங்கரவாதிகளே காரணம்; அவர்களைக் கைது செய்ய வெண்டும்" என்று அறிக்கைகளை அள்ளி விடுவதற்கும் அவற்றைப் படித்துப் பார்க்காமலே பதிப்பதற்கும் பரபரப்புப் பத்திரிகைகள் நிறைந்த கருத்துச் சுதந்திரம் கொடி கட்டிப் பறக்கும் நாடு, நம் நாடு.

கேரளத்திலிருந்து வெளியாகும் "தேஜஸ்" என்ற தினசரியில், "நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் வெடிகுண்டு சம்பவங்களுக்குப் பின்னால் முஸ்லிம்களை மோசமானவர்களாகவும் தேச விரோதிகளாகவும் சித்தரிக்க ஹிந்துத்துவ இயக்கங்கள் நடத்தும் சதிகளே" என்று பிரபல தலித் சிந்தனைவாதியும் "தலித் வாய்ஸ்" பத்திரிக்கையின் ஆசிரியருமான V.T இராஜசேகர் உரக்க உண்மையைப் போட்டுடைத்த போதிலும் பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற இன்னபிற புண்ணாக்கு வாதங்களெல்லாம் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களின் கடமைகளாக நிறைவேற்றப் படுவதுபோல் உலகமுழுதும் உருவாக்கப்பட்டு வரும் மாயையை ஒழித்துக் கட்டுவதற்காகப் பல்வேறு முயற்சிகளை முஸ்லிம்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதிலொன்றாக, இந்திய முஸ்லிம் அறிஞர்களும் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டக் குழுவினரும் இணைந்து 'பயங்கரவாதத்துக்கு எதிரான இயக்கம்' Movement Against Terrorism (MAT) என்ற இயக்கத்தைத் தோற்றுவித்திருக்கின்றனர்.

"முஸ்லிம்களுக்குக் கல்வியூட்டும் கடமையோடு பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் இடமில்லை என்பதை ஊடகங்களுக்கும் பிறமதச் சகோதரர்களுக்கும் உரியவகையில் புரிய வைப்பதைக் கடமையாகக் கையிலெடுத்துள்ளோம்" என்று கூறுகிறார் ப.எ.இ.யின் ஒருங்கிணைப்பாளரும் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டக் குழுவின் செயற்குழு உறுப்பினருமான காலித் ரஷீத் ஃப்ராங்கி மஹல்லீ.

"அண்மையில் நடைபெற்ற ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதாக இந்திய முஜாஹிதீன் என்ற பெயரில் மின்னஞ்சல் அனுப்பியவரையும் அதைப்போன்ற பெயர் தாங்கிகளையும் எதிர்த்துப் போராடி முறியடிப்போம்" என்றும் அவர் சூளுரைத்தார்.

மேலும், கடந்த ஃபிப்ரவரி 2ஆம் நாள் லக்நவ்வில் இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் குழுமிய மாநாட்டில் இந்தத் தீர்மானம் எடுக்கப் பட்டு, இப்போது செயலுக்கு வருவதாகவும் IANS க்கு அளித்த தொலைபேசிப் பேட்டியின்போது ஆயிஷ்பக் ஈத்காவின் துணை இமாமான மஹல்லீ கூறினார்.

"நாட்டில் நிகழ்த்தப் படும் பயங்கரவாதச் செயல்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் தலையில் சுமத்தி வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரியதாகும்" என்று கூறிய மஹல்லீ, நாங்கள் தொடங்கியிருக்கும் இந்த 'பயங்கரவாதத்துக்கு எதிரான இயக்கம்' பற்றி, ஒவ்வொரு பள்ளியின் வெள்ளிமேடைகளிலும் அறிமுகப் படுத்தி, எங்கள் சமுதாயத்தவரைத் தவறான வழிகாட்டுதலின் பக்கம் செல்ல விடாது தடுத்து, வெற்றியின் இலக்கை நிச்சயம் அடைவோம்" என்று உறுதியோடு கூறும் மஹல்லீயின் அவாவும் இலட்சியமும்தான் கோடானு கோடி இந்திய முஸ்லிம்களின் அவாவும் இலட்சியமுமாகும்.

நாட்டின் அமைதியே நமது அவா!

நன்றிங்க

தொப்பியும், தாடியையும் காட்டி ஏமாற்றுபவர்களுக்கு பயங்கரவாதத்துக்கு எதிரான அமைப்பையும் பயங்கரவாத அமைப்பு என சாயம் பூசுவது மிக எளிது.

எப்படியோ நல்லது நடந்தால் சரிதான்.

Tuesday, April 29, 2008

நல்ல முன்னேற்றம் (!?)

தினமும் ஒரு கற்பழிப்பு: தலைகுனியும் தலைநகரம்

புதுடெல்லி (ஏஜென்சி), 29 ஏப்ரல் 2008 ( 16:29 IST )

நாளொன்றுக்கு ஒரு கற்பழிப்பு சம்பவம் நிகழ்வது, தலைநகர் புதுடெல்லியை தலைகுனியச் செய்ய வைத்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும், டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 330 கற்பழிப்பு மற்றும் பாலியல் கொடுமைகள் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளன.

மொத்தம் 121 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், பாலியல் கொடுமைகள் தொடர்பான 210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் 8 சிறுமிகள் உள்பட 14 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இது, டெல்லி போலீஸ் கமிஷ்னர் ஒய்.எஸ்.தத்வாலுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான பாராளுமன்றக் குழு நோட்டீஸ் அனுப்புவதற்கு தூண்டுகோலாய் அமைந்துள்ளது.

அதில், அண்மைக்காலமாக பதிவாகிவரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று டெல்லி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக டெல்லியின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், '90 சதவிகித கற்பழிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்துள்ளோம். அவர்களில் பெரும்பாலானோர், பாதிக்கப்பட்டோருக்கு முன்கூட்டியே தெரிந்த நபர்களாகவே இருக்கிறார்கள்' என்றார்.

கடந்த ஆண்டு பதிவாகியுள்ள 581 கற்பழிப்பு வழக்குகளில், பாதிக்கப்பட்டோருக்குத் தெரிந்த, அவர்களுடன் நன்றாக பழகியிருந்தவர்கள் 98.28 சதவிகிதத்தினராவர்.

டெல்லி நகரில் கடந்த 2005-ல் 658 கற்பழிப்பு வழக்குகள் பதிவாயின; அதே ஆண்டில் 762 பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகள் பதிவாயின. 2006-ல் 713 பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகள் பதிவாயின. மீண்டும் இக்குற்றங்கள் அதிகரித்து, கடந்த ஆண்டில் இவ்வழக்குகள் 835 என்ற அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2007-ல் பதிவான கற்பழிப்பு வழக்குகளில், குற்றவாளிகளில் 68 சதவிகிதத்தினர் கல்வியறிவில்லாதவர்கள் என்பதும், 24 சதவிகிதத்தினர் பத்தாம் வகுப்பு வரை கற்றவர்கள் என்பதும் தெரியவருகிறது.

மேலும், 80 சதவிகிதத்தினர் பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் என்பதும் போலீசாரின் ஆய்வறிக்கை மூலம் தெரியவருகிறது.

நன்றிங்க

நல்ல முன்னேற்றம் :(((

Sunday, April 27, 2008

மீள் பதிவு

அன்னிய நாடுகளில் அயல்நாட்டினரின் நிலை!

வாழ்வதற்காகவும், வாழ்வின் மேம்பாட்டுக்காவும் தாயகத்தை விட்டு அன்னிய நாட்டில் உழைத்துப் பிழைப்பதற்காக வரும் அயல் நாட்டினர் பலரின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக ஆகிவிடுகின்றது.

இது போன்ற துன்பங்களில் சிக்கித் தவிக்கும் மக்களின் நிலையறிந்து மற்ற நாட்டின் தூதரகங்கள் ஓரளவுத் தட்டிக்கேட்கும். ஆனால், உழைக்க வரும் இந்தியர்களை நீ என்ன கொடுமையும் படுத்திக்கொள், சம்பளம் கொடுக்காமல் கஷ்டப்படுத்து, அவர்களுக்கு தங்கும் விடுதிகள் வழங்காதே என்றெல்லாம் ஏற்கெனவே இந்திய அரசு ரகசிய ஒப்பந்தம் ஏதேனும் செய்துள்ளதோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு இந்தியத் தூதரகம் மக்கள் குறைகளைக் கண்டுக்கொள்வதில்லை!

இந்தியர்களுக்கு என்ன அநீதிகள் இழைக்கப்பட்டும் அது பற்றியச் சான்றுகளுடன் புகார் கொடுத்தாலும் இந்தியத் தூதரகம் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஏனிந்த முதுகெலும்பற்ற நிலை?

தூதரகம் என்பது அந்நாட்டின் அரசுக்கு ஒப்பானது. உழைத்துப் பிழைக்க வரும் மக்கள் அநியாயமாக நசுக்கப்படுகிறார்கள் என்று நன்கு தெரிந்திருந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டாத அயல் நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத் தூதரகம் தேவைதானா?

(துன்பப்படுத்தும் மின்னஞ்சல் செய்தி, பகிர்ந்து கொள்கிறேன்)

அன்புடன்,
அபூ முஹை


*****

அனுப்புனர்:
சவூதி அரேபியாவில் பணிபுரியும் இந்திய பணியாளர்கள்.
ரியாத் சவூதி அரேபியா

பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை

மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களுக்கு!
உங்கள் மீது கடவுளின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!

நாங்கள் சவூதி அரேபியா ரியாத்தில் தனியார் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள் குறிப்பாக பல நூறு இந்தியர்கள் அதில் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள். AL-Wagaiah co, Ltd., AL-Omerini co, and AL-Faiq என்ற மூன்று பெயர்களில் செயல்படும் இந்த நிறுவனம் ஒவ்வொரு நிறுவனத்தின் பெயரில் மோசடிகளை செய்து விட்டு வெவ்வேறு பெயர்களில் உருவாக்கிக்கொண்டதுதான் இந்த 3 நிறுவனங்களும்.

நாங்கள் பணியாற்றிய நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக வேலை செய்யும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. நிறுவனம் மூடப்படும் மற்றும் சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் எங்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கிகளை கொடுத்து எங்களது தாய் நாடடிற்கு அனுப்பி வையுங்கள் என்று பல முறை கேட்டு வந்தோம் நிர்வாகம் எங்களது எந்த கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

பல மாதங்களாக உண்ண உணவின்றி இருக்க இடமின்றி சொல்லிலடங்கா துயரங்களை சந்தித்து வருகிறோம். இந் நிலையில் பாதிக்கப்பபட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த 28 பேர் கொண்ட குழுவாக கடந்த 24/01/2008 அன்று இந்திய தூதரகத்தில் எங்களது நிலைமையை விளக்கி மனுக் கொடுத்தோம் அதன் கோப்பு எண்: File No: riy/cw/235/6/2007(18)

அதற்கிடையில் நாங்கள் பல முறை நிறுவன நிர்வாகத்திடம் எங்களுக்கு சேரவேண்டிய எங்களது சம்பளத்தை கொடுத்து எங்களை தாயக்திற்கு அனுப்பி வைக்கும்படி கெஞ்சி மன்றாடி வந்தோம் கடந்த வாரம் 27ம் தேதி நிர்வாகத்தின் பதிலை கேட்கச் சென்றோம். எங்கள் குழுவில் நிறுவன நிர்வாகத்திடம் நீதி கேட்டு எங்களை வழி நடத்தி வந்த 5 பேரை சவுதி குடியுரிமை காவலாளிகளை வைத்து கைது செய்து சிறைக் கொட்டடியில் அடைத்து விட்டார்கள்.

மீதி உள்ள எங்களை மிரட்டி உங்களுக்கும் இதே கதி தான் என்று உங்களது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சவுதி குடியுரிமை அமைச்சகத்தில் ஒப்படைத்து விட்டோம் என்று மிரட்டி அனுப்பி விட்டார்கள் வேறு வழியின்றி மீண்டும் நேற்று 30 03 2008 அன்று இந்தியத் தூதரகம் சென்று எங்களுக்கு உதவிட கையேந்தினோம். தூதரகத்தில் எங்களுக்கு 6மாதம் செல்லத்தக்க அனுமதி பேப்பர் மட்டும் வழங்கி இதை வைத்து நீங்கள் நடமாடிக் கொள்ளுங்கள் என்று அனுப்பி விட்டார்கள்.

எந்தக் குற்றமும் செய்யாத நீதி கேட்ட ஒரே காரணத்திற்காக சிறைவாசம் அனுபவித்து வரும் எங்கள் நண்பர்களை விடுவிக்கவும் உண்ண உணவின்றி வேறு வழி தெரியாமல் பரிதவிக்கும் எங்களுக்கு உதவிடவும் மாண்புமிகு முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலையிட்டு எங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைத்து தாயகம் திரும்பி வர இந்தியத் தூதரகக்தின் மூலம் துரித ஏற்பாடு செய்ய ஆவண செய்யும் படி உங்களை பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Company Name & Address
AL-WAGAIAH CO, LTD.,
Sponsor Name: Osman Abdul Aziz Al-Omairini
CR No: - 66210, Post Box 91681, Riyadh 11643
Phone : +966 1 2415202, Fax +966 1 2422201
Sponsor Cell no: Mr. Ali Abdul Aziz 00966 504429661, Mr. Ashraf al jindi 00966 505848277

சிறைச்சாலையில் உள்ள நண்பர்களின் விபரம்.

காதர் மைதீன் பாஸ்போர்ட் நம்பர்: A 7844359
முஹம்மது ரைஸ் பாஸ்போர்ட் நம்பர்: E 5084212
அப்துல் ரஹ்மான் பாஸ்போர்ட் நம்பர்: B 3105343
சதீஸ் மலையில் பாஸ்போர்ட் நம்பர்: B 6853774
இக்பால் அஹ்மத் பாஸ்போர்ட் நம்பர்: F 2044105

எங்களை தொடர்பு கொள்ள:
கந்தசாமி +966 556282148, முகைதீன் +966 508623067, முஹம்மது மீரா 00966 557048978

இப்படிக்கு
உங்கள் உதவியை நாடி நிற்கும் பாதிக்கப்பட்ட இந்தியர்கள்.

Copy to: TMMK Head Quarters and all political parties' offices.
Kalainger Tv, Sun tv, Makkal tv, Wintv, and All Printed and Internet medias.
*Enclosed some of Prof Documents

குறிப்பு: இந்த நகல் பெறும் செய்தி ஊடகங்கள் தயவு செய்து பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண உதவிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நன்றிங்க

அவலம் :(