Sunday, August 19, 2007

கலாட்டா கல்யாணம்.

காதலித்து ஏமாற்றிய வக்கீலை நள்ளிரவில் நடுரோட்டில் மணம் முடித்தார் இளம்பெண், தேனியில் நடந்த "கலாட்டா கல்யாணம்'

தேனி: திருமணம் செய்வதாக கூறி காதலித்து ஏமாற்றிய வக்கீலை, நள்ளிரவில் நடுரோட்டில் இளம்பெண் திருமணம் செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த மொக்கையாதேவர் மகள் விமலா (27). வருஷநாடு வாலிப்பாறையை சேர்ந்த வக்கீல் கணேசன் (33) என்பவர் 6 மாதங்களுக்கு முன்பு பெண் பார்த்து நிச்சயம் செய்தார். அதன்பிறகு இருவரும் நெருங்கி பழகினார். கணவராக வரப்போகிறவர் என்பதால், இந்த பழக்கத்தை விமலா செல்போன் மற்றும் சி.டி.,யில் பதிவு செய்திருந்தார்.இந்நிலையில் கணேசன் திடீரென விமலா தொடர்பை துண்டித்து விட்டு, வேறு இடத்தில் பெண் பார்த்து நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்தார். இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் கணேசன் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டனர். கணேசன் உடனே சுதாகர் எஸ்.பி.,யிடம் புகார் செய்தார்.

இருவருக்கும் உள்ள தொடர்பு பற்றி செல்போன், சி.டி., ஆதாரத்துடன் பெண் வீட்டாரும் புகார் செய்தனர். தேனி போலீசாரை விசாரிக்குமாறு எஸ்.பி., உத்தரவிட்டார். தேனி ஸ்டேஷனில் இருவருக்கும் இடையே சமரச பேச்சு நடந்தது. முதலில் திருமணத்திற்கு மறுத்த வக்கீல், பின்னர் வெளியில் வைத்து பெரியவர்கள் சம்மதத்துடன் விமலாவை திருமணம் செய்வதாக ஒப்புக்கொண்டு போலீசாரிடம் எழுதிக் கொடுத்தார்.இதனை பெண் வீட்டார் ஏற்கவில்லை. உடனே திருமணம் முடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மாலை 5 மணிக்கு தேனி போலீஸ் ஸ்டேஷனில் துவங்கிய பஞ்சாயத்து இரவு 10.30 மணி வரை நீடித்தது. போலீசார் வெளியில் போய் திருமணம் முடித்துக் கொள்ளுங்கள் என அனுப்பி விட்டனர். 10.30க்கு வெளியே வந்த வக்கீல் மீண்டும் திருமணத்திற்கு மறுக்கவே, ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மாப்பிள்ளையை தாக்கினர். இந்த தள்ளுமுள்ளு குழப்பத்தில் மணப்பெண்ணுக்கும் அடி விழுந்தது.

அடிவாங்கிய மாப்பிள்ளை திருமணத்திற்கு சம்மதித்தார். பின்னர் ஸ்டேஷன் வாசலில் நடுரோட்டில் இரண்டு மாலை வாங்கி மாப்பிள்ளைக்கும், மணமகளுக்கும் அணிவித்தனர். நள்ளிரவு 10.45 மணிக்கு தேனி ஸ்டேஷன் வாசலில் நடுரோட்டில் விளக்கு வெளிச்சம் இல்லாத இருட்டு பகுதியில் வக்கீல், காதலித்த பெண்ணுக்கு தாலி கட்டினார்.மணம் முடிந்ததும் மீண்டும் மணப்பெண்ணை அழைத்துச் செல்வதில் பிரச்னை நடந்தது. சிறிது நேரம் மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் தகராறு செய்தனர். பின்னர் மாப்பிள்ளை தனது வீட்டிற்கும், பெண் தனது வீட்டிற்கும் புறப்பட்டுச் சென்றனர்.

நன்றிங்க DINAMALAR 19/08/07

வக்கீலு எப்ப வேணாலும் குறுக்காலே திரும்பி சட்டம் பேசுவார்னு தெரிஞ்சி, கேமராவும் சிடியுமா பழக்கத்தை பதிவு செஞ்சிருக்கே, இந்தப் பொண்ணு வெவரமான பொண்ணுதான்.

2 comments:

புதுச்சுவடி said...

//வக்கீலு எப்ப வேணாலும் குறுக்காலே திரும்பி சட்டம் பேசுவார்னு தெரிஞ்சி, கேமராவும் சிடியுமா பழக்கத்தை பதிவு செஞ்சிருக்கே, இந்தப் பொண்ணு வெவரமான பொண்ணுதான். //

என்னத்த சிடி எடுத்து என்னங்க?

பொன்னும் பணமும் இல்லேன்னா பொண்ணு வேண்டாம்..

இது தமிழ் நாடுங்கோ பாய்.


தேனி : காதலித்து ஏமாற்றிய வக்கீலை, உறவினர்கள் ஆதரவுடன் நள்ளிரவில் நடுரோட்டில் திருமணம் செய்த பெண், தன்னை கணவருடன் சேர்த்து வைக்குமாறு கலெக்டர் ஹர்சஹாய் மீனாவிடம் மனு கொடுத்துள்ளார். தேனி மாவட்டம், சின்னமனுõரை சேர்ந்த மொக்கையாதேவர் மகள் விமலா (27). இவரை வருஷநாடு வாலிப்பாறையை சேர்ந்த வக்கீல் கணேசன் (33) திருமணம் நிச்சயம் செய்து, பின்னர் "நெருங்கி பழகி' ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை மணம் முடிக்க ஏற்பாடு செய்தார். இருவரும் கொடுத்த புகார் அடிப்படையில் தேனி போலீசார் சமரச பேச்சு நடத்தினர். அதில் முடிவு ஏற்படாததால் ஆத்திரமடைந்த விமலாவின் உறவினர்கள் நள்ளிரவு 10.45 மணிக்கு மாப்பிள்ளையை நிர்பந்தப்படுத்தி நடுரோட்டில் வைத்து விமலாவிற்கு தாலி கட்ட வைத்தனர். பின்னர் மனைவியை மறுநாள் காலை அழைத்துச் செல்வதாக கூறி விட்டுச் சென்ற வக்கீல் கணேசன் வரவில்லை. பெண் வீட்டார் தரப்பில் மாப்பிள்ளை வீட்டாருடன் பேசினர். மாப்பிள்ளை வீட்டார், "நடுரோட்டில் திருமணம் செய்தவர், நடுரோட்டிலேயே குடும்பம் நடத்தட்டும், வீட்டில் சேர்க்க மாட்டோம்' என கூறி விட்டனர். திகைத்துப்போன விமலா வேறு வழியின்றி நேற்று கலெக்டர் ஹர்சஹாய் மீனாவிடம் மனு கொடுத்தார். அதில், தேனி போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விசாரணையில் என்னை திருமணம் செய்வதாக ஒப்புக்கொண்டு கடந்த சனிக்கிழமை இரவு திருமணம் செய்த வக்கீல் கணேசன், மறுநாள் என்னை அழைத்துச் செல்வதாக என் உறவினர்களிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் வரவில்லை. வக்கீல் கணேசன், அவரது மைத்துனர் ஈஸ்வரன், தம்பி இளங்கோ, தாய்மாமன் வனராசு ஆகியோர் போன் மூலம், "நடுரோட்டில் திருமணம் செய்தவர் நடுரோட்டிலே இருக்கட்டும், 100 பவுன் நகையும், ரூ.2 லட்சம் ரொக்கமும் கொடுத்தால் தான் உன்னை மருமகளாக ஏற்க முடியும்' என்று மிரட்டுகிறார்கள். எனக்கு அப்பா இல்லை. அம்மா வயதானவர். அண்ணன் மனநிலை பாதிக்கப் பட்டவர். திருமணமும் செய்து விட்டு இப்போது என்னை ஒதுக்கும் என் கணவருடன் சேர்ந்து வாழ எனக்கு உதவுங்கள். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். கலெக்டர் இந்த மனுமீது நடவடிக்கை எடுக்குமாறு, எஸ்.பி., சுதாகருக்கு பரிந்துரை செய்தார். விசாரணை நடத்த மகளிர் போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். வெள்ளிக் கிழமை மகளிர் ஸ்டேஷனில் சமரச பேச்சு நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

நன்றி தினமலர் 21/08/07

முஸ்லிம் said...

புதுச்சுவடி உங்கள் வரவுக்கும் தகவலுக்கும் நன்றி.

அப்ப சிடி இருந்தும் பிரயோஜனம் இல்லேன்னு சொல்லுங்க. பணம் இல்லைன்னா சிக்கல்தான்.

இப்படி பப்பளிக வரதட்சணை கேக்குறாங்களே இவங்கள வரதட்சணை தடுப்பு சட்டத்தில தூக்கி உள்ள போட முடியாதா...?

வக்கிலுக்கும் நடுரோடுதானா? என்னய்யா அநியாயம் இது!