Saturday, August 18, 2007

பிரதமரின் உருக்கமான பேச்சு.

'சக்தி'யின் ஆதரவு எனக்கு உள்ளது
பிரதமராக நீடிப்பேன் - சொல்கிறார் மன்மோகன்


ஆகஸ்ட் 18, 2007

டெல்லி: உயர்ந்த சக்தியின் ஆதரவு எனக்கு உள்ளது. அந்த சக்தியின் விருப்பப்படி நான் பிரதமராக நீடிப்பேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், சமதாக் கட்சியின் தலைவருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரதமரை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். தனது பேச்சில், இதுவே சீனாவில் ஒரு பிரதமர் இப்படி நடந்திருந்தால் ஒரு தோட்டாவைக் கொண்டு நெற்றியில் சுட்டுக் கொன்றிருப்பார்கள் என்று கோபமாக கூறியிருந்தார் அவர்.

பெர்னாண்டஸின் பேச்சு நேற்று நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் எம்.பிக்கள், பெர்னாண்டஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று தொலைக்காட்சி ஒன்றுக்கு மன்மோகன் சிங் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் பிரதமராக நீடிப்பதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. சிலர் எனது சாவைக் கூட விரும்புகிறார்கள்.

ஆனால் உயர்ந்த சக்தியின் ஆதரவு எனக்கு உள்ளது. அந்த சக்தியின் விருப்பப்படி, எதிர்க்கட்சிகள் விரும்பாவிட்டாலும் நான் பிரதமர் பதவியில் நீடிப்பேன். அந்த தைரியமும், நம்பிக்கையும் எனக்கு உள்ளது.

எதிர்க்கட்சிகளின் போக்கும், மனோ பாவும் எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனது சாவுக்காக யாகம் கூட நடத்துகிறார்கள் என்றார் மன்மோகன் சிங்.

உயர்ந்த சக்தி என்று பிரதமர் குறிப்பிட்டிருப்பது சோனியா காந்தியைத்தான் என்று தெரிகிறது.

இதற்கிடையே, தனது சாவுக்காக எதிர்க்கட்சியினர் யாகம் நடத்தி வருவதாக பிரதமர் கூறியிருப்பது குறித்து பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி. வி.கே.மல்ஹோத்ரா கூறுகையில், இப்படிப்பட்ட பிரதமர் ஒருவரை இந்த நூற்றாண்டிலேயே பார்த்ததில்லை. யாகம் நடத்துவது என்பது ஒருவர் நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டித்தான். சாக வேண்டும் என்று கோரி யாரும் யாகம் நடத்த மாட்டார்கள்.

யாகம் நடத்த ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பதை பிரதமர் சொல்ல வேண்டும். அதை விடுத்து இப்படி அவதூறான, பொய்யான புகாரை அவர் சொல்லக் கூடாது என்றார்.

நன்றிங்க

:(((

No comments: