Thursday, July 19, 2007

அரை குறையாக விளங்கிய விமர்சனம்.

நான் எழுதிய ''வாழ்க பாரதம்'' என்ற பதிவைப் படித்துவிட்டு, இஸ்லாத்தையும் அரைகுறையாக விளங்கி, சற்று உணர்ச்சி வயப்பட்டு இஸ்லாத்தை விமர்சித்திருக்கிறார் மாற்றுமத அன்பர். அவர் புரிந்து கொள்ளவும் - அவரிடம் விளக்கம் கேட்டும்,

அன்பர் செந்தில் அழகு பெருமாள்,

அரசாங்கத்தில் சம்பளம் பெற்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு பணியாற்றும் காவல் துறையைத்தான் நான் விமர்சித்திருந்தேன். சாலை விபத்துக்கள் அதிகமாக நிகழ்கிறது என்றால் அதைக் குறைப்பதற்கான வழிகளை ஆலோசனை செய்து மேற்கொள்ள வேண்டும். அதற்காகவே காவல் துறையிலேயே போக்குவரத்துத் துறை என்ற பிரிவு இயக்கப்படுகிறது.

(சாலை விபத்துக்கள் அதிகமாக நிகழ்வதைத் தவிர்க்க என்னிடம் கேட்டாலும் அதற்கான சிறந்த ஆலோசனைகளை வழங்கத் தயாராக இருக்கிறேன்)

அதை விட்டு கிடாய் வெட்டி ரத்தத்தைத் தெளித்தால் விபத்துக்கள் இல்லாமல் போய்விடும் என்று அரசாங்க காவல்துறை ஊழியர்கள் எண்ணி செயல்படுவது பொறுப்பற்றத்தனம். இந்த செயல்களுக்கு காவல் துறை தேவையில்லை கிடாய் வெட்டினாலே போதும் என்று சொல்லியிருந்தேன்.

கொலைகள் குறைய வேண்டுமானால் உண்மையான குற்றவாளிகளைப் பிடித்துத் தண்டிக்க வேண்டும். அதை விடுத்து கிடாய் வெட்டி ரத்தத்தைத் தரையில் கொட்டி அதில் மண்ணைத் தூவினால் குற்றவாளிகள் தானாக வந்து சரணடைந்து விடுவார்கள் - குற்றங்கள் குறைந்துவிடும் என நம்புவதும் சோம்பேறித்தனம், மற்றும் காவல் துறையின் கையாலாகத்தனம்.

என்னுடைய விமர்சனத்தை அரைகுறையாக விளங்கிக்கொண்டு, நான் முஸ்லிம் என்பதால் இஸ்லாத்தைத் தாக்க துவங்கி விட்டீர்களே! உங்கள் கேள்விகளைப் பார்ப்போம்.

 //1, ஹஜ் யாத்திரை சென்றால் நாம் செய்த பாவங்கள் தீரும். சரி அப்படியென்றால் நாம் கொலை கற்பழிப்பு எல்லாம் செய்து விட்டு ஹஜ் யாத்திரை செல்வோம். நம் பாவம் தீர்ந்து விடும் தானே.//

4, உம்ரா செய்தால் புண்ணியம் கிட்டும். சரி கொலைகாரர்களை சிறையில் அடைப்பதற்கு பதில் உம்ரா செல்லச் சொல்வோம்.

யாரிடமிருந்தாவது ஒரு ரூபாய் கடன் பெற்றிருந்து அந்த ஒரு ரூபாய் கடனைத் திரும்ப செலுத்தாமல் கடன் பெற்றவர் மரணம் அடைந்து விட்டால் அதை இஸ்லாம் மன்னிப்பதில்லை. அவர் ஹஜ் செய்திருந்தாலும் அது மன்னிக்கப்படாது. அப்படி இருக்க கொலை, கற்பழிப்பு போன்ற பாவங்களை செய்து விட்டு ஹஜ், உம்ரா யாத்திரை சென்றால் அது மன்னிக்கப்படும் என்று இஸ்லாம் எங்கே குறிப்பிட்டுச் சொல்கிறது என்பதை தெரியப்படுத்துங்கள்!

2, கிடா வெட்டுவது உங்கள் மதத்திலும் தானே உள்ளது. ஹஜ் யாத்திரையின் போது நீங்களும் குர்பானி தருவீர்கள் தானே!!

கிடாய் வெட்டுவது இஸ்லாத்திலும் உண்டு. ஹஜ் கிரியைகளின் நினைவுகளாக இந்த குர்பானிகள் நிகழ்த்தப்படுகிறது. அப்படி கிடாய் வெட்டுவதால் மாங்காய் விழுந்து விடும் என்று எந்த முஸ்லிமும் நம்புவதில்லை. நம்புபவர் இஸ்லாத்தை அறியாதவராக இருப்பார்.

3, ஹஜ் யாத்திரையின் போது சாத்தான் வரும் அதை எதிர்க்க‌ கல் எறிவார்கள். சரி சாத்தான் வந்தால் அதைக் காட்டுங்கள். அதை ஏன் நீங்கள் எதிர்கிறீர்கள் அல்லாஹ் பார்த்துக் கொள்ளமாட்டாரா?

ஹஜ் யாத்திரையின் போது சாத்தான் வரும் என்று நீங்கள் புதிய இஸ்லாத்தை கற்பிக்கிறீர்கள். அப்படி எங்கும் இஸ்லாம் கூறவில்லை! இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் நினைவாக நிறைவேற்றப்படும் ஹஜ் செயல்பாடுகளில் அவர்கள் ஷைத்தானுக்குக் கல்லெறிந்த நிகழ்ச்சியின் நினைவாகவே அதே இடத்தில் ஹாஜிகள் கல்லெறிகிறார்கள்.

சத்தான் வரும் அதை எதிர்க்க கல் எறிவார்கள் என நீங்கள் சொல்வதை இஸ்லாத்தில் படித்திருந்தால் அதையும் எழுதுங்கள். சாத்தானை எதிர்க்க வேண்டும் என்றால் என்ன? என்பதை பிறகு எழுதுகிறேன். அல்லாஹ் எதிர்க்கமாட்டாரா? என்ற உங்கள் கேள்விக்கும் விளக்கம் எழுதுகிறேன்.

5, இந்தியாவில் உள்ள தர்கா சென்று வழிபடுவது. அந்த சமாதியில் இருப்பவன் எப்போதோ இறந்து விட்டான் அவன் எப்படி உங்களுக்கு அல்லாஹ்விடம் துவா கேட்பான்!!

தர்கா வழிபாடு இஸ்லாத்துக்கு எதிரானது. தர்காவுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதைக்கூட விளங்காமல் தர்காவை இஸ்லாத்தோடு சேர்த்து எழுதியிருக்கிறீர்களே!

சொல்லுங்கள் சமாதிஈ மண்ணறை வழிபாட்டை இஸ்லாம் எங்கு ஆதரிக்கிறது?

9 comments:

புலமாடன் said...

முஸ்லிம் ஐயா!

மிகப் பொறுமையாகவும் தெளிவாகவும் விளக்கமளித்துள்ளீர்கள்.

மேற்படி பின்னூட்டக்காரருக்கு நான் ஒரு பின்னூட்டம் இட எண்ணியிருந்தேன். உங்கள் அளவுக்கு என்னால் உங்கள் சமயம் சார்ந்த விளக்கம் அளிக்க இயலாது. எனினும் உங்கள் பதிவைச் சரியாக விளங்கி, புரிந்து எழுதப் பட்ட பின்னூட்டமில்லை அது என்பதால் அந்த அவசரப் பின்னூட்டக்காரருக்குத் ஒரே ஒரு வினா மட்டும் .

பதிவர் முஸ்லிம் இந்து சமய மூட நம்பிக்கையைத் தம் பதிவில் விமர்சிக்கவில்லை. காவல்துறையின் கையாலாகாத் தனத்தை மட்டுமே விமர்சித்திருந்தார். ஆனால் செந்தில் அழகு பெருமாள் என்ற இந்து, தம் சமயத்தின் மீது கொண்ட வெறியால் முஸ்லிம்களின் சமயச் சடங்குகளைச் சாடியிருக்கிறார்.

சமயங்களைப் பின்பற்றும் மக்களிடம் மூட நம்பிக்கைகளுக்குக் குறைவில்லை. அனால் அரசு தரும் ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு தம் கடமையை ஒழுங்காகச் செய்யாமல் மந்திர தந்திர நம்பிக்கைகளில் ஈடுபட்டதால்தான் உண்மையான குற்றவாளிகள் தப்பிக்கவும் அப்பாவிகள் மாட்டிக் கொள்ளவும் வழி ஏற்படுகிறது என்பதே பதிவர் முஸ்லிம் தரும் செய்தி.

விருதுநகர் பாண்டியம்மாள், உப்புக் கோட்டை சரோஜா வழக்குகளில் முறையாகத் துப்புத் துலக்காமல் அப்பாவிகளைக் கைது செய்த சம்பவங்களால் தமிழ்நாட்டுக் காவல்துறை கறுப்புச் சாயம் பூசிக் கொண்ட உண்மை இந்த அவசரப் பின்னூட்டக்காரருக்குத் தெரியுமா?

மரைக்காயர் said...

ஒரே ஒரு படம், ஒரு பத்தியில் ஒரு செய்தி போட்டு, ஒரே ஒரு வரியில் உங்களுடைய கமெண்டை சேர்த்திருந்தீர்கள். அது கூட இந்து மதத்தையோ முடநம்பிக்கையென்றோ குறை சொல்லாமல், காவல் துறையை சாடியிருந்தீர்கள். அதைக்கூட சரியாக படித்து புரிந்து கொள்ளாமல் அவசரக்குடுக்கையாக ஒருவர் எகிறி விழுந்திருந்தார். அவருக்கு விளக்கம் கொடுப்பதற்காகவே தனிப்பதிவு எழுதியிருக்கிறீர்களே..! முஸ்லிம் அய்யா, உங்களுக்கு அசாத்திய பொறுமை!

இந்த அ.கு. மாதிரி நபர்கள்தான் இஸ்லாமின் சகிப்புத்தன்மையை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். வாழ்க பாரதம்!

முஸ்லிம் said...

புலமாடன் அய்யா உங்கள் வரவுக்கும
உங்கள் அருமையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் நன்றிகள். என்ன செய்ய சிலபேர் அவசரத்தில் நிதானத்தை இழந்து விடுகிறார்கள்.

முஸ்லிம் said...

மரைக்காயர் அய்யா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

பாவம் ஒரு பக்கம், பழி இன்னொரு பக்கம் என்றாகிவிட்டது. என்ன செய்ய? சகித்துக்கொள்ள வேண்டியதுதான்.

Senthil Alagu Perumal said...

மன்னிக்க வேண்டும் முஸ்லீம் ஐய்யா. உங்கள் பதிவுக்கு இதோ எனது பதில்...

புலமாடன் ஐய்யா தனது பெயரிலேயே முஸ்லீம் என இட்டுள்ளவர் வெறியனா? நான் வெறியனா? வார்த்தையை கொஞ்சம் அளந்து பேசுங்கள். தேவையில்லாமல் வார்த்தையை விடாதீர். விட்ட வார்த்தையை திரும்பப் பெற இயலாது..

குறிப்பு: முந்தைய பின்னூட்டத்தில் பிழை விட்டதால், அதை தயவு செய்து வெளியிடாதீர்...

மரைக்காயர் said...

//புலமாடன் ஐய்யா தனது பெயரிலேயே முஸ்லீம் என இட்டுள்ளவர் வெறியனா? நான் வெறியனா? வார்த்தையை கொஞ்சம் அளந்து பேசுங்கள்.//

என்னாங்கையா இது? முஸ்லிம் என ஒருவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டால் அவர் வெறியரா? முஸ்லிம் அய்யா இந்து மதத்தைப் பற்றி கருத்து ஒன்றும் சொல்லாமல் இருக்கும்போது, மதசார்பு இல்லாமல் பொதுவாக செயல்பட வேண்டிய காவல்துறை கிடா வெட்டி பூஜை செய்தால் குற்றம் குறைந்து போகும் என்று செயல்பட்டதை சுட்டிக்காட்டிய போது தேவையில்லாமல் இஸ்லாம் பற்றி உளறிக்கொட்டும் நீர் மத வெறியரா?

குலதெய்வத்திற்கு பூசை பண்ணுவதெல்லாம் அவர்கள் வீட்டிலோ கோவிலிலோ வைத்துக் கொண்டால் அவர்களை யாரும் குறை சொல்லப் போவதில்லை. அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு! காவல்துறை போன்ற ஒரு அரசுத்துறையில் இதை கொண்டு வந்து நுழைத்தால் இது போன்ற கேள்விகள் வரத்தான் செய்யும்!

கிடா பூசையோடு ஏன் நிறுத்தி விட்டார்கள்? அப்படியே காவல் நிலைய வாசலில் ஒரு சிலுவையை நிறுவி, திருட்டுக் குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களின் கைகளை வெட்டி எல்லா தரப்பினரையும் திருப்தி படுத்தலாமே. என்ன நாஞ்சொல்றது?

புலமாடன் said...

//புலமாடன் ஐய்யா தனது பெயரிலேயே முஸ்லீம் என இட்டுள்ளவர் வெறியனா? நான் வெறியனா? வார்த்தையை கொஞ்சம் அளந்து பேசுங்கள். தேவையில்லாமல் வார்த்தையை விடாதீர். விட்ட வார்த்தையை திரும்பப் பெற இயலாது.. //


செந்தில் அழகு பெருமாள் ஐயா!


எனது பின்னூட்டத்தை மீண்டும் ஒரு முறை பொறுமையாகப் படித்தபின் அதற்கு மறு(ப்புப்)பின்னூட்டம் இடுங்கள். நான் என் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி நீங்கள் அவசரப் பின்னூட்டக்காரர் என்பதில் ஐயமில்லை.

//மேற்படி பின்னூட்டக்காரருக்கு நான் ஒரு பின்னூட்டம் இட எண்ணியிருந்தேன். உங்கள் அளவுக்கு என்னால் உங்கள் சமயம் சார்ந்த விளக்கம் அளிக்க இயலாது. எனினும் உங்கள் பதிவைச் சரியாக விளங்கி, புரிந்து எழுதப் பட்ட பின்னூட்டமில்லை அது என்பதால் அந்த அவசரப் பின்னூட்டக்காரருக்குத் ஒரே ஒரு வினா மட்டும் .//


என் வினா அப்படியே விடை தேடி நிற்கிறது.

முஸ்லிம் said...

புலமாடன் அய்யா, மற்றும் மரைக்காயர் உங்கள் மீள் வரவுக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

முஸ்லிம் said...

செந்தில் அழகு பெருமாள் அய்யா

அளவில்லாமல் வார்த்தைகளை அள்ளிக்கொட்டிய நீங்கள், ''வார்த்தையை அளந்து பேசுங்கள்'' என்று பிறருக்கு அறிவுரை கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. ஒருவேளை வார்த்தையை அளந்து பேச வேண்டும் என்ற அளவுகோல் பிறருக்குத்தான், உங்களுக்கில்லை என்று வகுத்துக் கொண்டீரோ?

இஸ்லாத்தின் மீதான அளவிட முடியாத வார்த்தைகளை பேசிய நீங்கள் அதைத் திரும்பப் பெறுவீரா?

உங்கள் பதிவுக்கான பதில் தனிப்பதிவில்.