Tuesday, July 31, 2007

சிக்கலில் இன்னொரு இந்திய டாக்டர்.

ஆஸி.: சிக்கலில் இன்னொரு இந்திய டாக்டர்
ஹனீப்புடன் பணியாற்றியவர் சஸ்பெண்ட்


ஜூலை 31, 2007

மெல்போர்ன்: டாக்டர் ஹனீப் கைது செய்யப்பட்டபோது அவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட டாக்டர் முகம்மது அலி, பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக முகம்மது ஹனீப் கைது செய்யப்பட்டபோது, அவருடன் சேர்த்து டாக்டர் முகம்மது அலியும் கைது செய்யப்பட்டார். இருவரும் கோல்ட் கோஸ்ட் மருத்துவமனையில் டாக்டர்களாகப் பணியாற்றி வந்தனர்.

ஆனால் அலி மீதான புகார்களுக்கு எந்த ஆதாராமும் இல்லை என்பதால் உடனடியாக அவர் விடுவிக்கப்பட்டு விட்டார். அவர் சுதந்திரமாக நடமாடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் ஆஸ்திரேலிய காவல்துறை அறிவித்தது.

இந்த நிலையில், முகம்மது அலி பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஹனீப் உல்செஸ்ட்ன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை மாலை, அதே நேரத்தில், அலி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதுகுறித்து குயீன்ஸ்லாந்து மாநில சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், டாக்டர் முகம்மது அலிக்கு சம்பளத்துடன் கூடிய சஸ்பெண்ட் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குயீன்ஸ்லாந்து காவல்துறை வழங்கிய உத்தரவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கும் தீவிரவாத புகாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார் அவர்.

டாக்டர் ஹனீப்பும், அலியும் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, குயீன்ஸ்லாந்து மாநில சுகாதாரத் துறை அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு வரவழைத்து பணியில் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் 457 நாள் பணி விசாவின் கீழ் பணியாற்றி வந்தனர்.

அலி மீதான விசாரணை முழுமையாக நிறைவு பெறும் வரை அலி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹனீப்பை விட்டு விட்ட ஆஸ்திரேலிய காவல்துறை தற்போது முகம்மது அலியை குறி வைத்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

நன்றிங்க

இடியாப்ப சிக்கல்தான்!

சம்பளத்தோட தற்காலிக வேலை நீக்கமா..?

No comments: