Monday, December 04, 2006

ஒரு படத்துக்கு எத்தனை கிளைமாக்ஸ்?

ஒரே படத்துக்கு எத்தனை முறை "கிளைமாக்ஸ்' காட்சிகள் வரும் என்று முதல்வர் கருணாநிதிக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புதான் கிளைமாக்ஸ். கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனும் இந்தப் படத்துக்கு இன்னொரு கிளைமாக்ஸ் எழுதியிருக்கிறார். ஆகவே ஒரே படத்துக்கு எத்தனை முறை கிளைமாக்ஸ் எழுத முடியும். ஒருவேளை கருணாநிதி சிறந்த திரைப்பட வசனகர்த்தா என்பதால் அவர், இதற்கு தனியாக ஒரு கிளைமாக்ஸ் வைத்திருக்கிறாரோ என்னவோ?

திரும்பத் திரும்ப ஆரம்பத்திலிருந்து படத்தைக் காட்டிக் கொண்டிருந்தால் எத்தனை பேர் பார்ப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசும், கேரள அரசும் விதம் விதமாக புதிய கதை ஆரம்பத்திலிருந்து எழுதிக் கொண்டேயிருக்கின்றன. தில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விவரத்தை இரு மாநில முதல்வர்களும் வேறு விதமாகக் கூறியிருப்பதே இதற்குச் சான்று.

தமிழக அரசு அதிநவீன மற்றொரு அணை கட்டிக்கொள்ளலாம், ஆனால் தண்ணீர் கிடைக்கும் அளவைப் பொருத்துத்தான் கேரளம் தமிழக்துக்குத் தண்ணீரைத் திறந்துவிடும் என்று கூறியதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியிருக்கிறார்.

தமிழக முதல்வரோ, அண்டை மாநிலங்களுடன் சுமுக உறவை விரும்புவதாகக் கூறுகிறார்.

கடந்த 29-ம் தேதி அறிவாலயத்தில் தில்லி பேச்சுவார்த்தை குறித்து பேட்டியளித்துவிட்டு, அதுகுறித்த விவரங்கள் 30-ம் தேதி பிற்பகலுக்குப் பிறகுதான் விளம்பரமாக வெளியிடப்பட்டன. ஆனால் இதன் விவரங்களை வெளியிட வேண்டும் என்று முன்பே நான் கேட்டேன். காக்கை உட்கார பனம்பழம் விழவில்லை. பனம்பழம் விழவேண்டும் என்று காக்கை உட்கார்ந்ததைப் போலாகிவிட்டது.

ஐடி அமைச்சரைக் கேட்டுப் பெறும்போது, நீர்வளத் துறை கேட்டுப் பெற முடியாதா?: சன் டி.வி., சூர்யா டி.வி., போன்ற டி.வி.க்களை நடத்தும் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பதவியைக் கேட்டுப்பெற முடிந்தது. ஆனால் நீர்வளத்துறை அமைச்சரைக் கேட்டுப் பெற முடியாதது ஏன்?. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஆந்திரத்தைச் சேர்ந்த ராவ் என்பவர் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது கர்நாடகம், ஆந்திரம் இடையே கிருஷ்ணா நதி நீர் பிரச்சினை இருந்தது. தற்போது கர்நாடகம், மகாராஷ்டிரம் இடையே பெல்காம் எல்லைப் பிரச்சினை உள்ள நிலையில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சிவராஜ் பாட்டீல் உள்துறை அமைச்சராக இல்லையா?

திருமண மண்டபம் இடிப்பு விவகாரம்: திருமண மண்டபத்தை எந்தப் பகுதியில் இடிக்கப் போகிறீர்கள் என்று வழக்கறிஞர் மூலமாக கேட்டாலும் அதற்கு இதுவரை உரிய பதில் இல்லை. முன்னுக்குப் பின் முரணாகவும், பொய் பேசும் மத்திய அமைச்சருக்கு பதில் கூற விரும்பவில்லை. மண்டபம் இடிப்பதைப் பற்றியும் கவலைப்படவில்லை.

மூன்றாவது அணியல்ல, முதல் அணி: மூன்றாவது அணி அமைப்பீர்களா என்கிறீர்கள்? என்னை மூன்றாவது அணியாக நினைக்கவில்லை. முதல் அணி என்றே கருதுகிறேன். மற்ற கட்சியிலிருந்து தேமுதிக-வில் பலர் சேர்கின்றனர். கடந்த காலத்தில் ஊழல் புகாரில் சிக்கியவர்கள் கட்சியில் சேர்ந்தது குறித்து கேட்கிறீர்கள், அவர்கள் திருந்த வாய்ப்பு உள்ளது. பல இடங்களிலிருந்து நீர் கடலில் கலந்தாலும், கடலின் தன்மை மாறாமலிருப்பதைப் போல் நான் மாறாமல் இருக்கிறேன்.

தற்போது விலைவாசியும், வறுமையும் பூதாகர பிரச்சினை. இதை மறைக்கவே முல்லைப் பெரியாறு விவகாரத்தைப் பெரிதாகப் பேசுகின்றனர். தொடர் மழை பெய்ததால், அணையில் தண்ணீர் நிரம்பியுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் 136 அடியைக் கடந்து தண்ணீர் நிரம்பியதாக சரித்திரம் இல்லை.

ஆட்சியைப் பிடிப்பதே லட்சியம்: மலையுடன் மோதுவதாகக் கூறுகிறார்கள். காங்கிரஸ் என்ற மலையுடன் மோதி திமுக ஆட்சிக்கு வந்தது. திமுக என்ற மாபெரும் மலையுடன் மோதி அதிமுக ஆட்சியைப் பிடித்தது. எம்ஜிஆர் பதவியில் இருந்தவரை திமுக ஆட்சியைப் பிடிக்கவேயில்லை. அந்தவகையில் மலையுடன் மோதி ஆட்சியைப் பிடிப்பதே லட்சியம் என்றார் விஜயகாந்த்.

நன்றிங்க

விஜயகாந்த் சார் ஒரு படத்துக்கு எத்தனை கிளைமாக்ஸ் இருந்தால் என்ன? அத்தனை கிளைமாக்ஸிலும் நீங்க நடிக்கலாமே. எம்ஜிஆர் பதவியில் இருந்தவரை திமுக ஆட்சியைப் பிடிக்கவேயில்லை வாஸ்தவந்தான் அதுமாறி கருணாநிதி பதவியிலிருக்கம்வரை தேமுதிக ஆட்சியை பிடிக்க முடியாதுன்னு சொல்ல வர்றீங்களா?

7 comments:

கோவி.கண்ணன் [GK] said...

//எம்ஜிஆர் பதவியில் இருந்தவரை திமுக ஆட்சியைப் பிடிக்கவேயில்லை வாஸ்தவந்தான் அதுமாறி கருணாநிதி பதவியிலிருக்கம்வரை தேமுதிக ஆட்சியை பிடிக்க முடியாதுன்னு சொல்ல வர்றீங்களா//

நல்ல எள்ளல் !
:)

முஸ்லிம் said...

வாங்க Gk உங்கள் வரவுக்கு நன்றி.

எள்ளல் இல்லீங்க 'துளசி வாக்கு மாறினாலும் இந்த தவசி வாசம் மாறமாட்டான்' (என்ன மாத்தி சொல்லிட்டேனா? சரி விடுங்க) ங்குறது சரியாத்தான் இருக்கு என்றுதான் சொல்ல வந்தேன்.

//திரும்பத் திரும்ப ஆரம்பத்திலிருந்து படத்தைக் காட்டிக் கொண்டிருந்தால் எத்தனை பேர் பார்ப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.//

இவுக மட்டும் ஒவ்வொரு ஷோவுக்கும் ரீலை பின்னுக்கு சுத்தி திரும்ப திரும்ப முதல்லேயிருந்து படம் காட்டலாமா?

- முஸ்லிம்

முஸ்லிம் said...

வாங்க குபேரன் உங்கள் வரவுக்கு நன்றி.

//தேமுதிக ஆட்சியை பிடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.//

உடனே எதிர்மேடை போட்டு விட்டீர்களே? தேமுதிக நாளைக்கே ஆட்சியை பிடித்தாலும் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லீங்க. காங்கிரஸ் ஆண்டாலும் திமுக ஆண்டாலும் அதிமுக ஆண்டாலும் தேமுதிக ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை. எந்த ஆட்சி வந்தாலும் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடிவிடாது.

- முஸ்லிம்

மரைக்காயர் said...

//எந்த ஆட்சி வந்தாலும் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடிவிடாது.//

அ(த்)து...!
(அஜீத் ஸ்டைலில் படிக்கவும் :-))

முஸ்லிம் said...

வாங்க மரைக்காயர் வரவுக்கு நன்றி.

//அ(த்)து...!
(அஜீத் ஸ்டைலில் படிக்கவும் :-))//

அட நீங்க வேறே.. சட்டியிலிருந்தாத்தான் ஆப்பையில் வரும்னு சொல்ல வந்தேன். :)))

- முஸ்லிம்

Anonymous said...

\\தேமுதிக ஆட்சியை பிடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.\\

இதுக்கே இப்படின்னா எப்படி?. அடுத்து சிம்பு, விஜய், அ(த்)து அஜித், மாதவன். etc.. வுலாம் கட்சி ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுரத்துக்கில்லை.

முஸ்லிம் said...

ஸயீத் உங்கள் வரவுக்கு நன்றி.

நீங்க சொன்ன நடிகர்களெல்லாம் வெள்ளித்திரையிலிருந்து ரிடையர்டு ஆக இன்னும் நாள் இருக்கு அதுவரைக்கும் கட்சி ஆரம்பிக்க மாட்டாங்க.

-முஸ்லிம்