Monday, March 31, 2008

கேள்வி, பதில் - நேருக்கு நேர்!

(இணையத்தில் கிடைக்கும் செய்திகளைப் பதிவேற்றி ஒப்பேற்றி வரும் முஸ்லிம் ஐயாவுடன் (நடக்காத) நேர்காணல்:)

கேள்வி: க்ளோபல் வாமிங் பத்தி என்ன நினைக்கிறீங்க?

பதில்: நான் என்னத்தை நெனைக்கிறது க்ளோபலைப் பத்திய கவலை எல்லாம் விஞ்ஞானிகளுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் இருக்க வேண்டும். உலக சூடேற்றத்தால் நாம ஏன் கவலைப்படணும். காத்தாடி, ராட்சஸ காத்தாடி, கூலர் கீலர், ஏசி கீசின்னு வைச்சு சூட்டை முறியடிச்சிருவோம்லா.

கேள்வி: நடிகர் மன்சூர் அலிகான் பற்றி ஒரு செய்தி போட்டிருந்தீங்களே?

பதில்: ஆமாம்! ரொம்பக் கஷ்டப்படுகிறாராம். கற்பழித்த குற்றம் நிரூபிக்கப் பட்டதால் ஈட்டுத் தொகையாக ஆறு இலட்சம் கட்டறதுக்கும் காசில்லையாம். நடிகர்கள் கலை நிகழ்ச்சி நடத்தி உதவலாம் அல்லது சினிமாத் துறையுடன் நெருங்கிய தொடர்புடைய அரசியல் பெருந் தலைகள் உதவலாம். கலைஞர்கள் கலைஞர்களுக்கு உதவிக்கிறதுல ஒண்ணும் தப்பில்ல.

கேள்வி: தொலைக்காட்சிகளுக்கு தணிக்கை கொண்டுவரப் போவதாகக் கேள்விப் பட்டீர்களா?

பதில்: பட்டேன்! A, U, U/A என்று தரம் பிரிப்பார்களாம். A வகையைச் சார்ந்த நிகழ்ச்சிகளை இரவு 11.00மணி முதல் அதிகாலை 04.00 மணி வரைக்கும் ஒளி பரப்பலாமாம்! அதாவது 'அந்த' நேரத்தில் மட்டும் கெட்டுப் போகலாமாம்.

கேள்வி: சாராய ரெய்டுக்கு வந்தபோது போலீசை விரட்டிய பெண்மணி பற்றிய செய்தி குறித்து சொல்லுங்களேன்.

பதில்: அட! அதச்சொல்றீங்களா? சங்க காலத்துல முறத்தால புலியை விரட்டிய வீரப்பெண்கள் மாதிரி இன்றும் இருக்கிறார்கள். இது நவீனப் பெண்கள்!

கேள்வி: தமிழ்பண்பாட்டு வளர்ச்சிக்கு தமிழக அரசு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறது?

பதில்: தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு லாஜிக் இல்லா மேஜிக் என்றும் மானாட மயிலாட என்றும் சுத்தத் தமிழில் பெயர் வைக்கிறார்களே அதுவே அதிகம்தான்! இதுக்கு மேலேயும் நாம எதிர்பார்க்கப்படாது என்னா நாஞ்சொல்றது?

கேள்வி: ஓவியர் ஹுசைனின் ஒரு ஓவியம் எதிர்பார்த்ததை விட அதிக விலை போயுள்ளதாமே

பதில்: ஆமாம்! இதுக்கு எல்லா பரிவாரங்களுக்கும் அவர் நன்றி சொல்லணும். விலை போக வேண்டுமென்றால் மத உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் என்ற கலாச்சாரம் பூமராங் ஆகத் திரும்பியுள்ளது.

கேள்வி: "டாடா" நிறுவனம் லேண்ட் ரோவர் மற்றும் ஜாக்குவார் கார் கம்பெனிகளை வாங்கியது பற்றி என்ன நினைக்கிறீங்க?

பதில்: "தாத்தா" நிறுவனம் வாங்கியிருந்தால் சந்தோஷமா இருந்திருக்கும்.

பேட்டி எடுத்தவருக்கு நன்றிங்க!

No comments: