Showing posts with label நீதி. Show all posts
Showing posts with label நீதி. Show all posts

Friday, April 03, 2009

நான் குதிருக்குள் இல்லை!


ஜனநாயகம், மதச்சார்பின்மை இவ்விரண்டும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரு பெரும் தூண்களாகும். "சட்டத்தின் முன் அனைவரும் சமம்; அனைவருக்கும் அவரவர்களின் மத நம்பிக்கைகளின்படி செயல்பட்டுக் கொள்வது நமது ஜனநாயகம் வழங்கும் அடிப்படை உரிமையாகும்" - உலக அளவில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்புடன் வைக்கும் சட்டத்தின் மிக முக்கிய நிபந்தனைகளான இவை இரண்டும் துரதிஷ்டவசத்தால் பெரும்பாலான சமயங்களில் வெறும் ஏட்டில் மட்டும் வைத்து அழகு பார்க்கும் வரிகளாக மாறிப்போகின்றன.

அனைவருக்கும் சமமான நீதி நடைமுறை உறுதிப் படுத்தப்படுவதே ஜனநாயகம் தழைப்பதற்கும் மக்கள் அமைதியாக வாழ்வதற்குமான அடிப்படை காரணிகளாகும். ஆனால், நம் நாட்டைப் பொருத்தவரை நீதி என்பது பணம், பதவியுடையவர்களுக்கு ஒரு விதமாகவும் ஏழைகளுக்கு வேறு விதமாகவுமே உள்ளது. அதனாலேயே காஞ்சி காம கோடி, அத்வானி, மோடி, ஜெயலலிதா, ஹர்ஷத் மேத்தா போன்ற இன்னபிற கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அராஜகம், மோசடி போன்றவற்றில் ஊறிப்போனவர்கள் உள்ளேயும் வெளியேயும் சுதந்திரமாக எவ்வித பயமும் இன்றி வலம்வருகின்றனர். அதேவேளை, சின்னஞ்சிறு குற்றச்செயல்களில் ஈடுபடும் சாதாரணமானவர்கள் மீது மட்டும் சட்டம் தனது முழுவலிமையைப் பிரயோகிக்கின்றது.

சமநீதி விஷயத்தில் வலியவன், எளியவன் என்ற பாரபட்சம் பார்க்கும் நீதி, முஸ்லிம்கள் என்று வரும் பொழுது அத்தகைய கருணை வாசலையும்கூட அடைத்து விடுகின்றது.
அநியாயம் செய்திருந்தாலும் வலியவனுக்குச் சாதகமாகவும் அநீதி இழைக்கப் பட்டிருந்தாலும் எளியவனுக்குப் பாதகமாகவும் வளைந்து கொடுக்கும் இத்தகையச் செயலைகளை "நீதி தேவன் மயக்கம்" என்ற பெயரில் அறிஞர் அண்ணா ஒரு நாடகம் எழுதினார். 1954ஆம் ஆண்டு மேடையில் அரங்கேறிய அவரது நாடகம் இப்போது(ம்) அரங்கேறிக் கொண்டிருப்பது நமது நீதிமன்றங்களில்!

இந்திய விமானப்படை ஊழியர் அன்ஸாரீ அஃப்தாப் அஹ்மது என்பவர் சீக்கிய ஊழியர்களுக்கு வழங்கப் பட்டு நடைமுறையிலிருக்கும் தாடி வளர்த்துக் கொள்ளும் மத உரிமையைத் தனக்கும் அளிக்க வேண்டும் எனக் கேட்டுத் தொடர்ந்த வழக்கில், இந்திய விமானப்படை வழிகாட்டு நெறிமுறைகள் 2003இன்படி "சீக்கியர்களுக்கு வழங்கும் உரிமையை 2002ஆம் ஆண்டுக்குப்பிறகு விமானப்படைக்குத் தேர்வு செய்யப் பட்ட முஸ்லிம்களுக்கு வழங்க முடியாது" என்று கடந்த ஆண்டு பஞ்சாப்/ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மற்றவர்க்கு வளைந்தும் முஸ்லிம் என்றால் நிமிர்ந்தும் நிற்கும் சட்டம் இந்திய விமானப்படைக்கு மட்டும் சொந்தமானதன்று.

மத்தியப்பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்திலுள்ள சிரஞ்ச் நகரில் இயங்கி வரும் 'நிர்மலா கான்வெண்ட்' என்ற பள்ளியில் தொடக்கம் முதல் பத்தாம் வகுப்புவரை முஹம்மது ஸலீம் என்ற முஸ்லிம் மாணவர் கல்வி பயின்று வந்தார். பத்தாம் வகுப்புப் படிக்கும்போது அவருக்குத் தாடி வளர்ந்து விட்டது. "தாடியை மழிக்காமல் பள்ளிக்கு வருவதாக"க் கூறிப் பள்ளியின் நிர்வாகி ப்ரின்ஸிபால் தெரஸா மார்ட்டின், மாணவர் ஸலிமைப் பள்ளியிலிருந்து நீக்கினார். அதை எதிர்த்து, தன்னைத் "தாடி வளர்த்துக் கொள்ளப் பள்ளி அனுமதிக்க வேண்டும்" எனக் கோரி முதலில் பள்ளிக்கு முறைப்படி விண்ணப்பித்தார். பள்ளி நிர்வாகம் மறுதலித்துவிடவே, உயர்நீதி மன்றத்தில் மாணவர் ஸலீம் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார்.

"முழுமையாக மழித்துக் கொண்டு வரவேண்டும்" என்ற பள்ளிச் சட்ட - திட்டத்தினைத் தளர்த்தக் கோரி ஸலீம் சமர்ப்பித்த மனு உயர்நீதி மன்றத்தில் கடந்த 30.12.2008இல் தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து விடாப் பிடியாக, "தாடி வளர்ப்பது என்னுடைய மத உரிமை. மதசார்பற்ற இந்தியாவில் வாழும் குடிமகனுக்கு (சட்டப் பிரிவு 25இன்படி) தன் மத நம்பிக்கைப்படி வாழ்வதற்கான உரிமையை மறுக்கக் கூடாது. எனவே தாடி வளர்த்துக் கொண்டு பள்ளிக்கு வருவதற்கு எனக்கு அனுமதி வழங்க வேண்டும்" எனக் கோரி, உச்சநீதி மன்றத்துக்கு வழக்கைக் கொண்டு சென்றார்.

ஸலீம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி இரவீந்திரன் தலைமையிலான அமர்வு நீதிமன்றம் விசாரித்தது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு, மாணவர் ஸலிமுடைய கோரிக்கையை, அவர் பயிலும் பள்ளியின் சட்ட-திட்டங்களை மட்டும் காரணம் காட்டி மறுதலித்திருந்தால் பிரச்சினை பெரிதாகி இருக்காது.

ஆனால், சட்டம் கற்றுத் தேர்ந்ததாகச் சொல்லப் படும் ஒரு நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு என்பவர், "தாடி வைப்பதும் பர்தா அணிவதும் தாலிபானிசமாகும்" என்ற காரணம் கூறி கடந்த திங்கட்கிழமை (30.3.2009) வழக்கைத் தள்ளுபடி செய்து, தன் அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார். சுமார் 1400 ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கும் இஸ்லாமிய நடைமுறைக்கும் வெறும் 30 ஆண்டுகால வரலாறுடைய தாலிபானுக்கும் என்ன சம்பந்தம்? நீதிபதி மார்கண்டேய கட்ஜுவிற்கே வெளிச்சம்!

தாலிபான் என்ற பெயரே அறியப் படாத ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டில் முஸ்லிம் ஆண்கள் தாடி வளர்த்தும் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்தும் வருகின்றனர். தாடி இல்லாத ஆண் சீக்கியர் இல்லை என்னும் அளவுக்கு சீக்கிய ஆண்கள் தாடியோடுதான் இருப்பர். தாடி வளர்த்திருப்பவரெல்லாம் தாலிபான் அமைப்பின் உறுப்பினரா? நம் பிரதமரை நீதிபதி கட்ஜு ரொம்பத்தான் தாக்குகிறார்!

"தாலிபான்களை நம் நாட்டில் அனுமதிக்க முடியாது" என்று கூறியதோடு, "நாளைக்கு ஒரு (முஸ்லிம்) மாணவி, பர்தா அணிந்து கொண்டு பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கலாம். நாம் அதை அனுமதிக்க முடியுமா?" என்று நீதிபதி கட்ஜு அறிவு(?)ப்பூர்வமான ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

"நாட்டின் மதசார்பற்ற நிலைபாட்டைப் பயன் படுத்திக் கொண்டு இந்தியாவைத் தாலிபான் மயமாக்குவதை அனுமதிக்க இயலாது" எனவும் நீதிமன்றத்துக்குள்ளேயே நீதிபதி ஜோக்கடித்திருக்கிறார்.

"சீக்கியர்களுக்குத் தாடி வளர்த்துக் கொள்ளவும் தலைப்பாகை அணியவும் அனுமதி இருக்கும்போது, என்னை மட்டும் தாடியை மழிக்க நிர்பந்திப்பது பள்ளி நிர்வாகத்தின் தெளிவான இரட்டை நிலைபாடு" என ஸலீம் வாதித்தார்.

ஆனால் பயனில்லை. "இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 30ஆம் பிரிவின்படி சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள், தனியாக சட்டம் உருவாக்கிக் கொள்வதற்கு அனுமதியுள்ளது. அவற்றைப் பின்பற்றுவதற்கு இயலாது எனில், ஸலீம் வேறு ஒரு பள்ளியைத் தேர்வு செய்து கொள்ளட்டும்" எனவும் நீதிபதி அறிவுரை கூறியுள்ளார்.

இந்நாட்டில் ஒரு சமுதாயத்திற்கு அனுமதிக்கப்படும் நீதி, அதே வடிவில் பின்பற்றுவதற்கு முஸ்லிம்கள் எனில் மறுக்கப்படுகிறது. இது "இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் மத அடிப்படைகளைப் பின்பற்றுவதற்கான உரிமைகளுக்கு" முரணான நிலைபாடு எனில், வழக்கிற்குத் தொடர்பில்லாத வகையில் இஸ்லாமிய அடிப்படைகளைச் சம்பந்தமில்லாத தனிப்பட்ட குழுக்களோடு தொடர்பு படுத்தி இழிவுபடுத்துவது இந்திய நீதித்துறைக்கு அவமானத்தைப் பெற்றுத்தரும் செயலாகும். அனைவரையும் சமமான கண்ணோட்டத்தோடு அணுகவேண்டிய, நாட்டின் உன்னத பீடத்தில் அமர்ந்திருக்கும் பொறுப்பான அதிகாரியின் சட்டமீறலுமாகும்.

"தாடி வளர்ப்பதும் பர்தா அணிவதும் தாலிபானிசமாகும்; இந்தியாவில் தாலிபானிஸம் வளர்வதை அனுமதிக்கமுடியாது" என்று உண்மையைப் பொய்களுடன் கலந்து உண்மையைப் பொய்யாக்குவதையும் பொய்யை உண்மையாக்குவதையும் அதனை வைத்து சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதையும் தங்களது பாணியாகக் கொண்டுள்ள ஹிந்துத்துவத்தின் ஒரு மோடி, அத்வானி வகையறாக்களின் வாயிலிருந்து இத்தகைய சொற்கள் உதிர்ந்திருந்தால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால், அதுவே நாட்டின் உன்னத பீடத்தை அலங்கரிக்கும் ஒரு நீதிபதியின் வாயிலிருந்து வருவதென்றால்.....?

நீதிபதி கட்ஜுவின் அறியாமைக் கருத்துகளுக்கு எதிராகவும் நீதியின் இரட்டைமுக நிலைபாட்டிற்கு எதிராகவும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்திய நீதித்துறையின் மீது இப்பொழுதும் நம்பிக்கை இழக்காத முஸ்லிம்கள் என்ன செய்யலாம்? என்று சிந்தித்தோமெனில், நமக்குக் கிடைக்கும் விடை, நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் 'தாலிபான்' பேச்சை எதிர்த்து வழக்குத் தொடுக்கலாம் என்பதே.

"நான் ஒரு மதசார்பற்றவன்" என்று நீதிபதி கட்ஜு கூறிய தன்னிலை விளக்கத்தில் ஓர் உண்மை பொதிந்திருக்கிறது.

தலைப்பை இன்னொரு முறை படித்துக் கொள்ளவும்!

நன்றிங்க

Wednesday, November 07, 2007

நீதிபதிகளின் நூதன போராட்டம் தற்காலிக வாபஸ்

நீதிபதிகளின் நூதன போராட்டம் தற்காலிக வாபஸ்

புதன்கிழமை, நவம்பர் 7, 2007

சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் மாஜிஸ்திரேட்டை தாக்கியதைக் கண்டித்து, மதிய உணவு இடைவேளை இல்லாமல், நூதனப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த நீதிபதிகள் அந்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.

எழும்பூர் 5வது பெருநகர நீதிபதி முருகானந்தம் சமீபத்தில் வக்கீல்களால் தாக்கப்பட்டார். இதை கண்டித்த தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம், நேற்று உணவு இடைவேளையின்றி பணியாற்றும் நூதனப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

ஆனால் இந்தப் போராட்டத்தை நீதிபதிகள் திரும்பப் பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக நீதிபதிகள் சங்கத் தலைவர் ராமலிங்கத்தைத் தொடர்பு கொண்டு பேசினார் ஷா.

அப்போது, தாக்கப்பட்ட சம்பவத்தில் மேல் நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி உறுதியளித்தார்.

இதையடுத்து நீதிபதிகளின் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்படுவதாக நீதிபதிகள் சங்கத் தலைவர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

நன்றிங்க

போராட்டங்களை தவிர்க்க ஆணையிடும் நீதியே போராட்டம் நடாத்தினால் என்னய்யா செய்ய முடியும்?

Thursday, November 01, 2007

சென்னை நீதிபதியைத் தாக்கிய வக்கீல் கைது

சென்னை நீதிபதியைத் தாக்கிய வக்கீல் கைது

வெள்ளிக்கிழமை, நவம்பர் 2, 2007

சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முருகானந்தத்தை தாக்கிய வழக்கறிஞர்களில் தங்கத்துரை என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாகி விட்ட இன்னொரு வழக்கறிஞரைத் தேடி வருகின்றனர்.

எழும்பூர் 5வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முருகானந்தம், திருட்டு வழக்கில் கைதான 4 பெண்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த பெண்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இளங்கோவன் மற்றும் தங்கத்துரை ஆகியோர் நீதிபதியை தாறுமாறாக திட்டினர்.

பின்னர் நீதிபதியின் அறைக்குச் சென்று அவரை சரமாரியாக அடித்தும், மிதித்தும், முகத்தில் எச்சிலை உமிழ்ந்தும், குடும்பத்தினர் குறித்து அசிங்கமாக பேசியும் அவமானப்படுத்தினர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து நீதிபதி முருகானந்தம், சென்னை எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிபதி ராமராஜிடம் புகார் கொடுத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவை சந்தித்து புகார் கொடுத்தனர்.

மேலும், எழும்பூர் காவல் நிலையத்தில் தங்கத்துரை, இளங்கோவன் உள்ளிட்ட 20 வக்கீல்கள் தன்னை தாக்கி அவமானப்படுத்தியதாக நீதிபதி முருகானந்தம் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் பேரில் மின்னல் வேகத்தில் போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர்.

நேற்று இரவு தங்கத்துரையைக் கைது செய்தனர். சைதாப்பேட்டையில் கைது செய்யப்பட்ட அவரை ரகசிய இடத்திற்குக் கூட்டிச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சிறையில் கொண்டு போய் அடைத்தனர்.

உயர்நீதிமன்றம் நோட்டீஸ்:

இதற்கிடையே, நீதிபதி முருகானந்தம் தாக்கப்பட்ட விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்காக இதை எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ராமசுப்பிரமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை நேற்று விசாரித்தது.

பின்னர் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு இரு வக்கீல்களுக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வருகிற 29ம் தேதி இரு வக்கீல்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள் அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவை சென்னை உயர்நீதிமன்றத்தின் பல்வேறு வக்கீல்கள் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேரில் சந்தித்து பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்று கோரினர்.

மன்னிப்பு கேட்ட வக்கீல்கள்:

இதற்கிடையே, நீதிபதி முருகானந்தத்தை எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று ஒன்றாக சென்று சந்தித்து நடந்த செயலுக்கு வருத்தமும், மன்னிப்பும் கேட்பதாக கூறினர். மேலும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் கோரினர்.

ஆனால் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு விட்டது. போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். என்னால் ஒன்றும் செய்ய முடியாது. தலைமை நீதிபதிதான் இதில் முடிவெடுக்க முடியும் என்று நீதிபதி முருகானந்தம் கூறி விட்டார்.

நீதிபதிகள் ஆலோசனை:

இந்த நிலையில், சென்னையில் உள்ள எழும்பூர், ஜார்ஜ்டவுன், சைதாப்பேட்டை ஆகிய நீதிமன்றங்களின் நீதிபதிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இதனால் நேற்று முழுவதும் பெரும்பாலான நீதிமன்றங்களில் நீதிபதிகள் பணிக்கு வரவில்லை.

நன்றிங்க

எல்லா துறைகளிலும் அடிதடி வெட்டு குத்து அளவுக்கு போய் விட்டது. தொழிலாளி அதிகாரிகளை அடிப்பதும் அதிகாரிகள் தொழிலாளிகளை பழி வாங்கவதும், அரசியல்வாதிகள் தெர்ணடர்களை சாத்துவதும் தொண்டர்கள் அரசியல்வாதிகளை போட்டு தாக்குவதும் என எல்லா துறையிலும் அடிதடிகள் இயங்கி வருகின்றன.

நீதி துறையிலும் வாய் சண்டை மாறி அடிதடி நுழைந்திருப்பதால் பெரிசா ஒன்றும் குடி முழுகிவிடாது. நீதிபதியை வழக்குரைஞர்கள் அடித்த மாதிரி நாளை வழக்குரைஞர்களை நீதிபதிகளும் தாக்கலாம். இதெல்லாம் உள்துறை குழப்பம்.

பார்க்கலாம், இந்த வழக்காவது சீக்கிரமா முடிகியுமா? என்று.

Thursday, August 30, 2007

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

பெண்ணின் சம்மதத்தோடு செக்ஸ் உறவு
வைப்பது கற்பழிப்பு ஆகாது: சுப்ரீம் கோர்ட்


ஆகஸ்ட் 30, 2007

டெல்லி: திருமணம் செய்து கொள்வதாக கூறிய பின்னர் அந்தப் பெண்ணின் சம்மதத்தோடு உடலுறவு வைத்துக் கொண்டு பின்னர் அந்தப் பெண்ணை ஏமாற்றுவோர் மீது கற்பழிப்பு வழக்கு தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீப்குமார். இவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி, அவருடன் நெருங்கிப் பழகி செக்ஸ் உறவும் வைத்துக் கொண்டு விட்டு பின்னர் கம்பி நீட்டி விட்டார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் பிரதீப் மீது கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம், கற்பழிப்பு மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் பிரதீப்குமார் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து பிரதீப் சார்பில் பீகார் மாநில உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இங்கும் அவரது தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகினார் பிரதீப்.

பிரதீப்குமார் தாக்கல் செய்த மனுவில், முழு சம்மதத்துடன் தான் அந்த பெண் என்னோடு செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார். இதில் நம்பிக்கை மோசடிக்கோ அல்லது கற்பழிப்புக்கோ இடமில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கே.ஜெயின், அரிஜித் பசாயத் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பில்,

ஒரு பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஒரு ஆண் உறுதி அளித்து அந்த பெண்ணின் முழு சம்மதத்துடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட பின்பு, அவர் திருமணம் செய்து கொள்ளாமல் கொடுத்த வாக்குறுதியை மீறினாலும் அவர் மீது கற்பழிப்பு குற்றம் சுமத்த முடியாது.

அதே நேரத்தில் பலவந்தப்படுத்தியோ அல்லது பயமுறுத்தியோ அந்த பெண்ணின் சம்மதத்தை பெற்றிருந்தால் அதை கற்பழிப்பாக கருத முடியும்.

மேஜர் ஆன பெண் ஒருவர், திருமண வாக்குறுதியை நம்பி, கர்ப்பமாகும்வரை செக்ஸ் உறவுக்கு சம்மதம் கொடுத்திருந்தால் அதை அஜாக்கிரதையாக கருத வேண்டுமே தவிர, அந்த பெண் உண்மையை தவறாக புரிந்து கொண்டதாக கருத முடியாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

பிரதீப்குமார் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நன்றிங்க

முதலில், நீதிமன்றங்களின் இந்த இரட்டை தீர்ப்பு ஒழிய வேண்டும்!

Monday, August 06, 2007

சங்கரராமன் கொலை வழக்கு...

சங்கரராமன் கொலை வழக்கு- வழக்கை வேறு
நீதிபதியிடம் மாற்ற தி.க கோரிக்கை


ஆகஸ்ட் 06, 2007

சென்னை: காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீதான வழக்கை விரைவாக நடத்தக் கோரி திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இன்னும் விசாரணையே ஆரம்பிக்கவில்லை.

இந் நிலையில், சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை விரைந்து நடத்த வேண்டும் என்று கோரி தமிழகம் மற்றும் புதுவையில், திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.க. தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வீரமணி பேசுகையில்,

காஞ்சி சங்கர மட ஊழியர்களின் ஊழல்கள் குறித்து சங்கரராமன் புகார் அனுப்பியதால் அவரைக் கோவிலுக்குள்ளேயே வைத்து கொன்றனர்.

இந்தத் கொலையைத் திட்டமிட்டு நடத்த நடந்த சதியின் பின்னணியில் ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் இருந்துள்ளனர்.

இந்த வழக்கில் இன்னும் எதுவும் நடைபெறாமல் உள்ளது. சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதாக காரணம் கூறப்படுகிறது.

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீதான கொலை முயற்சி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு ஜெயேந்திரர் வந்தபோது, வக்கீல்களுக்கு அருகே அமர இருக்கை போடுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் அந்த நீதிபதிபை நம்ப முடியாது.

எனவே அந்த நீதிபதியிடமிருந்து வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்றுமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.

எங்களுக்கும், சங்கராச்சாரியார்களுக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. இடைக்காலத் தடையை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் டெல்லி வரை சென்று போராடுவோம்.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும் என்றார் வீரமணி.

நன்றிங்க

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டம், கூண்டில் நிற்க வைத்து விசாரிக்க வேண்டும். மாறாக வழக்குரைஞர் பக்கத்தில் அமர வைத்து விசாரிக்கக் கூடாதுங்க!

Wednesday, August 01, 2007

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு: மதானி விடுதலை

புதன், 01 ஆகஸ்ட் 2007

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அப்துல் நாசர் மதானி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா, அவரது மகன் சித்திக் அலி உட்பட 153 பேரை குற்றவாளிகளாக தனி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி உட்பட 167 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் முதல் கட்ட தீர்ப்பு, இன்று (1/8/2007) வழங்கப்பட்டது. கோவை தனி நீதிமன்ற நீதிபதி உத்ராபதி தீர்ப்பை அறிவித்தார்.

இந்த வழக்கில், அப்துல் நாசர் மதானி மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், ஒன்பது ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின் அவர் விடுதலை செய்யப்பட்டார். இவர் குற்றமற்றவர் என்று கேரள அரசு கடந்த 9 ஆண்டுகளில் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவும், கருணாநிதியும் கேரள அரசின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

மதானிக்குக் கடும் சர்க்கரை நோய் பாதித்ததால் காலில் கேங்ரீன் எனும் கட்டி வந்திருந்தது. அதற்கான சிகிச்சை பெற பிணையில் வெளியில் வர நீதிமன்றத்தை அவர் தரப்பினர் அணுகியபோது அவர் வெளிவருவதற்குத் தமிழக அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்து வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அல்-உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ. பாஷா, அவரது மகன் சித்திக் அலி உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிபதி உத்ராபதி அறிவித்தார்.

கேரள அரசு மட்டுமல்லாது பல்வேறு மனித உரிமைக் குழுக்களும் கோவை குண்டுவெடிப்பு தொடர்பான நீதி விசாரணையின் போது மதானியைக் குற்றமற்றவர் என்று வலியுறுத்தி வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிங்க

ஒரு நிரபராதி அநியாயமாக ஒன்பது வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்திருப்பது ரொம்ப ஜாஸ்தி தான். கிட்டதட்ட ஆயுள் தண்டனைக்கு நெருக்கமாக சிறை தண்டனையை அனுபவித்து விட்டார் மதானி.

நாம் என்ன குற்றங்கள் செய்தோம்? என்ன குற்றங்களுக்காக சிறை தண்டனை அனுபவிக்கிறோம்? என்பது கூட தெரியாமல் செய்யாத குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவிக்கும் - அனுபவித்த பலரில் மதானியும் ஒருவர்.

அரசு, நீதி, காவல் ஆகிய துறைகளின் பொடு போக்குத் தனத்தால் ஒருவரை குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்ய ஒன்பது ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

மதானிக்கு, வாழ்க்கையில் இழந்த அந்த ஒன்பது ஆண்டுகள் போனது போனதுதானே!

ஒரு நிரபராதியை ஒன்பது ஆண்டுகள் சிறையிலடைத்துப் பராமறிக்க தேவையான செலவுகள், வழக்குகள் நடந்ததற்கான செலவுகள் மககளின் வரிப்பணத்திலிருந்து எடுத்து வீண் விரயமாக்கப்பட்டிருக்கிறது.

சோம்பேறிகள்!