Showing posts with label அரசு. Show all posts
Showing posts with label அரசு. Show all posts

Saturday, December 08, 2007

மோடி அரசை தூக்கி எறிய வேண்டும்.

மோடி அரசை தூக்கி எறிய வேண்டும்- பூரி சங்கராச்சாரியார்

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 7, 2007

டெல்லி: சிறுபான்மை சமூகத்தினர் மீது துவேசம் கொண்டு நடந்து வரும் நரேந்திர மோடி அரசால், இந்து சமுதாயத்திற்கே கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது. இனியும் மோடி அரசு தொடரக் கூடாது. மோடியை பதவியிலிருந்து தூக்கி எறிய மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என்று பூரி சங்கராச்சாரியார் அதோக்சானந்த் தேவ தீர்த்த சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளதால் பாஜக பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

சொராபுதீன் படுகொலை தொடர்பாக மோடி பேசிய பேச்சால் பாஜகவுக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் பாஜகவின் வெற்றியை இது பாதிக்குமோ என்ற பயம் பாஜகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், பாஜகவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில், பூரி மடாபதி கிளம்பியுள்ளார். மோடியை பதவியிலிருந்து தூக்கி எறிய அனைத்து மதவாசத சக்திகளும் ஒன்று சேர வேண்டும் என்று பூரி மடாதிபதி அதோக்சானந்த தேவ தீர்த்த சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோத்ரா சம்பவத்திற்குப் பின்னர் சிறுபான்மையினரை ஒடுக்கும் முயற்சியில் மோடி தீவிரமாக இறங்கி விட்டார்.

மோடி அரசின் நியாயமற்ற, இரக்கத்தனமர்ற செயல்கள், மத நல்லிணக்கத்தை கேள்விக்குறியாக்கி விட்டது. இந்து சமுதாயத்தினரை பெரும் அவமானத்தில் தள்ளி விட்டுள்ளது.

இந்துக்களின் நலம் விரும்பி, இந்துக்களைக் காக்க அவதரித்தவர் என்று கூறப்பட்ட மோடியால், இந்துக்கள் இன்று தலை குணிந்து நிற்கின்றனர்.

நந்திகிராம் போன்ற விவாகரங்களில் அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து நிற்கின்றனர். ஆனால் அதற்குப் பதிலாக, மோடிக்கு எதிராக அனைவரும் அணி திரள வேண்டும். மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து விட்டு கை கோர்க்க வேண்டும். மோடி அரசை தூக்கி எறிய அனைவரும் முன்வர வேண்டும். அவருக்கு எதிராக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்.

இந்து அமைப்புகள் மோடி விவகாரத்தில் இரட்டை நிலையை மேற்கொள்ளக் கூடாது. மோடி மீது அவர்களுக்கு அதிருப்தி இருந்தால் அதை வெளிப்படையாக தெரிவித்து அவருக்கு எதிராக செயல்பட முன்வர வேண்டும்.

பல்வேறு தீய செயல்களில் ஈடுபட்டும் கூட மோடி கடந்த ஐந்து ஆண்டுகளாக பதவியில் நீடித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் இப்போது குஜராத் மக்களுக்கு சரியான நேரம் வந்துள்ளது. மோடியை விரட்ட இதுதான் சரியான நேரம். அனைவரும் ஒருங்கிணைந்து மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பூரி சங்கராச்சாரியார்.

பாஜகவுக்கு தீவிர ஆதரவு தருபவர்களில் ஒருவரான பூரி சங்கராச்சாரியார் மோடிக்கு எதிராக இவ்வளவு கடுமையாக கருத்து தெரிவித்துள்ளதால் பாஜக தரப்பு ஆடிப் போயுள்ளது.

நன்றிங்க

இப்படி எல்லாரும் மூதியை போட்டு தாக்குனா அந்த ஆளு என்னதாஞ் செய்வாரு!

Wednesday, November 21, 2007

ஏழைக் குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை.

ஏழைக் குழந்தைகளுக்கு அரசு உதவியுடன் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை!

புதன்கிழமை, நவம்பர் 21, 2007

சென்னை: வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்த இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அரசு நிதியுதவியுடன் தனியார் மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை செய்யும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.

இதன்படி இருதய அறுவை சிகிச்சையின் தன்மையைப் பொறுத்து ரூ. 10,000 முதல் ரூ. 70,000 வரை தமிழக அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டு தனியார் மருத்துவமனைகள் இந்த குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்.

இதற்கான ஒப்பந்தத்தில் 17 தனியார் மருத்துவமனைகள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்திட்டன.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

மக்களின் வாழ்க்கையில் தற்போதைய மாறிவரும் சூழ்நிலைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், நடைமுறை வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் மாறுதல்கள் போன்றவை காரணமாக இதய நோயினால் பாதிக்கப்படுவோர் குறிப்பாக, இளம் சிறார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதய நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காகக் குழந்தைகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது முதல்வர் கருணாநிதியின் கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் அரிய உயிர்களைக் காக்கும் பொருட்டுத் தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சைகள் செய்வதற்காக, ஆண்டு வருவாய் ரூ. 50,000க்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்கான புதிய திட்டத்தை முதல்வர் அறிவித்தார்.

அதன்படி இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ரூ. 10,000மும், சாதாரண திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ரூ. 30,000மும், கடினமான இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ரூ. 70,000மும் நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்திற்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தலைமை செயலகத்தில் இன்று கையொழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் தமிழக அரசு சார்பில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குனரும், 17 தனியார் மருத்துவமனைகளின் பிரதிநிதிகளும் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சைக்காகப் பதிவு செய்து கொண்டு காத்திருக்கும் 20 குழந்தைகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள 10 தனியார் மருத்துவமனைகளுக்குத் தமிழக அரசின் சார்பில் அனுமதிகளை வழங்கி இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்திட தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள 17 தனியார் மருத்துவமனைகள் விவரம் வருமாறு:

1. ராமச்சந்திரா மருத்துவமனை, போரூர்

2. அப்பல்லோ மருத்துவமனை, சென்னை

3. பிராண்ட்டியர் லைப் லைன் மருத்துவமனை, சென்னை

4. ஆர்.வே ஹெல்த்கேர் லிமிடெட், சென்னை

5. மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், சென்னை

6. கே.ஜெ.மருத்துவமனை, சென்னை

7. சூரியா மருத்துவமனை, சென்னை

8. மியாட் மருத்துவமனை, மனப்பாக்கம், சென்னை

9. லைப்-லைன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சென்னை

10. செட்டிநாடு மருத்துவமனை, கேளம்பாக்கம், காஞ்சீபுரம்

11. வடமலையான் மருத்துவமனை, மதுரை

12. அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மதுரை

13. மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை

14. பி.எஸ்.ஜி. மருத்துவமனை, கோவை

15. ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை, கோவை

16. கே.ஜி. மருத்துவமனை, கோவை

17. ஜி. குப்புசாமிநாயுடு நினைவு மருத்துவமனை, கோவை.

நன்றிங்க

ஏழைக் குழந்தைகளை காக்கும் அரசின் இவ்வுதவிகள் முறையாக முழுதுமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு போய் சேர வேண்டும் என வாழ்த்துவோம்.

Thursday, August 23, 2007

ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியாவில் பணிபுரியலாம்

ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியாவில் பணிபுரியலாம்

மெல்போர்ன், ஆக. 23: டாக்டர் முகமது ஹனீப் ஆஸ்திரேலியாவில் பணிபுரிய விரும்பினால் மீண்டும் பதிவு செய்து கொள்ளலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்டீபன் ராபர்ட்சன் புதன்கிழமை தெரிவித்தார்.

ஹனீபின் விசா ரத்து செய்யப்பட்டது செல்லாது என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், சுகாதார அமைச்சரின் கருத்து ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியாவில் பணிபுரிவதற்கான வாய்ப்பை அதிகரித்திருக்கிறது.

லண்டன் தீவிரவாதச் சதிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி கடந்த மாதம் 2-ம் தேதி டாக்டர் ஹனீப் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியபோதும், அவரது விசா ரத்து செய்யப்பட்டதால், அவர் 25 நாள் தனிமைச் சிறையில் இருக்க நேர்ந்தது.

அதன்பிறகு, ஹனீப் மீதான குற்றச்சாட்டை அரசு திரும்பப் பெற்றுக்கொண்டு, அவரை வலுக்கட்டாயமாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.

இதற்கிடையே, விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஹனீப் தொடர்ந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. ஹனீபின் விசாவை ரத்து செய்த குடியமர்வுத்துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸின் உத்தரவு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், "ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியாவில் பணிக்குத் திரும்பினால் மகிழ்ச்சியடைவேன். அவரை வரவேற்கத் தயாராக இருக்கிறோம்' என அமைச்சர் ஸ்டீபன் ராபர்ட்ஸ்ன் தெரிவித்துள்ளார்.

அடுத்தமாதம் இதற்காக ஆஸ்திரேலிய சுகாதாரத்துறையில் ஹனீப் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் ராபர்ட்ஸன் கூறியுள்ளார்.

விசாரணை விவரம் வெளியீடு:இதற்கிடையே, ஹனீபிடம் ஆஸ்திரேலிய போலீஸôர் நடத்திய விசாரணையின் விவரங்களை அவரது வழக்கறிஞர் பீட்டர் ரூசோ புதன்கிழமை வெளியிட்டார்.

ஹனீப் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த விசாரணையில் சில குறிப்பிட்ட தகவல்களை வெளியிட்டுள்ளதாக பீட்டர் ரூசோ கூறினார்.

"தன்மீது ஆஸ்திரேலிய போலீஸôர் சுமத்திய குற்றச்சாட்டுகளும் அதற்கு தான் அளித்த விளக்கங்களும் பொதுமக்களுக்குத் தெரிய வேண்டும் என ஹனீப் விரும்பினார். அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து நடக்கும் முயற்சிகளை முறியடிப்பதற்கு இது உதவும் என அவர் கருதுகிறார்.

தனது சகோதரருடன் இணைய அரட்டை அறை (சாட் ரூம்) வழியாக பேசியது குறித்து விசாரணை முடிவடையும் நிலையில்தான் ஹனீபிடம் கேட்கப்பட்டுள்ளது.

இணைய அரட்டையில் பேசிய தகவல்களின் மொழி மாற்றத்தை திருத்த முயன்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என போலீஸôரே ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த இணைய அரட்டை ஜூலை 2-ம் தேதி மாலை 4.13 மணிக்குத் தொடங்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அந்த நேரத்தில் ஹனீப் மருத்துவமனையில் இருந்திருக்கிறார்.

சபீல் அகமதுவிடம் கொடுத்த சிம் கார்டு குறித்து தெரிந்து கொள்வதற்காக லண்டனில் உள்ள துப்பறியும் நிபுணர் டோனி வெப்ஸ்டரிடம் ஹனீப் 3 முறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார். அவரைத் தொடர்பு கொள்ள முடியாததால் ஜூலை 2-ம் தேதி மாலை 4.32 மணிக்கு சபீலுடன் பேசும்போது இது பற்றிக் கேட்டிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் தன்னுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்பதால்தான இந்தத் தகவல்களையெல்லாம் போலீஸôரிடம் ஹனீப் கூறியிருக்கிறார். ஆனால் இணைய அரட்டையின் சில தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு போலீஸôர் ஹனீப் மீது குற்றம்சாட்ட முற்பட்டிருக்கின்றனர்.

உண்மையில் விசாரணையில் போலீஸாருக்கு உதவவே ஹனீப் எல்லா நேரத்திலும் முயற்சி செய்திருக்கிறார். இந்த விசாரணைத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதால், ஹனீப் எதையும் மறைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது' என்றார் ரூசோ.

நன்றிங்க

ஆஸ்திரேலியா அரசும், நீதிமன்றமும் எவ்வளவு துரிதமாக செயல்படுகின்றன. நம்மூரிலும் இருக்கே, ம்ஹும்...

Monday, August 13, 2007

தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் உதயம்!

தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் உதயம்!

ஆகஸ்ட் 14, 2007

சென்னை: தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பை மேற்கொள்வதற்காக தமிழக அரசு அமைத்துள்ள தனி நிறுவனத்துக்கு தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

கேபிள் டிவி ஒளிபரப்பை அரசே மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரி வந்தார். இதையடுத்து கேபிள் டிவி ஒளிபரப்பை அரசே மேற்கொள்வது குறித்து முதல்வர் கருணாநிதியின் உத்தரவுப்படி எல்காட் (எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் தமிழ்நாடு) அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வின் அடிப்படையில் முதல்வரிடம் பரிந்துரைகள் கொடுக்கப்பட்டன. இதையடுத்து புதிய கேபிள் டிவி கட்டமைப்பு உருவாக்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தற்போது இந்த கட்டமைப்புக்கு உருவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு கம்பி வட தொலைக்காட்சி சேவையை வழங்குவது சம்பந்தமாக 11.8.2007 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் என்ற புதிய அரசு பொதுத்துறை நிறுவனம் தொடங்கப்படும்.

இந்த நிறுவனத்திற்கு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் இருப்பார். இவர் தவிர நான்கு இயக்குநர்களும் இருப்பார்கள். நிதித்துறைச் செயலாளர் ஞானதேசிகன், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் சந்திரமெளலி, எல்காட் நிர்வாக இயக்குநர் உமாசங்கர், தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோரே அவர்கள்.

இந்த பொதுத் துறை நிறுவனத்தில் தனியார் நிறுவனம் எதுவும் சேர்க்கப்பட மாட்டாது. முழுக்க முழுக்க அரசு பொதுத் துறை நிறுவனமாகவே இது செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிங்க

அப்படியே டாடா நிறுவனத்துக்கும் டாடா சொல்லிட்டு அந்தத் திட்டத்தை தமிழக அரசே செயல்படுத்தலாமே! என்ன நாஞ்சொல்றது...?

தேர்தலுக்கு ரெடியா...?

ஆட்சியில் தொடர்வதா, இல்லையா?-காங். முடிவு
செய்யட்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ


ஆகஸ்ட் 13, 2007

திருவனந்தபுரம்: அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசு ஆட்சியில் தொடர வேண்டுமா வேண்டாமா என்பதை காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும் என மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக எங்கள் கட்சியின் நிலையை ஏற்கனவே தெரிவித்து விட்டோம். இந்த ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.

ஆனால் மத்திய அரசு அதையும் மீறி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளது. இதை மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்கும்.

மத்திய அரசுக்கு ஆதரவு தரவேண்டும் என்பது எங்கள் கடமை கிடையாது. மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ், மைனாரிட்டி அரசு என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

இந்த அரசு தொடர வேண்டுமா வேண்டாமா என்பதை காங்கிரஸ் தான் தீர்மானிக்க வேண்டும்.

அணு ஒப்பந்தம் குறித்து இன்னும் இரண்டு நாட்களில் மார்க்சிஸ்ட் கட்சி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கும் என்றார் காரத்.

நன்றிங்க

தேர்தலுக்கு நீங்கள் ரெடியா...?

Wednesday, August 01, 2007

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு: மதானி விடுதலை

புதன், 01 ஆகஸ்ட் 2007

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அப்துல் நாசர் மதானி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா, அவரது மகன் சித்திக் அலி உட்பட 153 பேரை குற்றவாளிகளாக தனி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி உட்பட 167 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் முதல் கட்ட தீர்ப்பு, இன்று (1/8/2007) வழங்கப்பட்டது. கோவை தனி நீதிமன்ற நீதிபதி உத்ராபதி தீர்ப்பை அறிவித்தார்.

இந்த வழக்கில், அப்துல் நாசர் மதானி மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், ஒன்பது ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின் அவர் விடுதலை செய்யப்பட்டார். இவர் குற்றமற்றவர் என்று கேரள அரசு கடந்த 9 ஆண்டுகளில் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவும், கருணாநிதியும் கேரள அரசின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

மதானிக்குக் கடும் சர்க்கரை நோய் பாதித்ததால் காலில் கேங்ரீன் எனும் கட்டி வந்திருந்தது. அதற்கான சிகிச்சை பெற பிணையில் வெளியில் வர நீதிமன்றத்தை அவர் தரப்பினர் அணுகியபோது அவர் வெளிவருவதற்குத் தமிழக அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்து வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அல்-உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ. பாஷா, அவரது மகன் சித்திக் அலி உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிபதி உத்ராபதி அறிவித்தார்.

கேரள அரசு மட்டுமல்லாது பல்வேறு மனித உரிமைக் குழுக்களும் கோவை குண்டுவெடிப்பு தொடர்பான நீதி விசாரணையின் போது மதானியைக் குற்றமற்றவர் என்று வலியுறுத்தி வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிங்க

ஒரு நிரபராதி அநியாயமாக ஒன்பது வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்திருப்பது ரொம்ப ஜாஸ்தி தான். கிட்டதட்ட ஆயுள் தண்டனைக்கு நெருக்கமாக சிறை தண்டனையை அனுபவித்து விட்டார் மதானி.

நாம் என்ன குற்றங்கள் செய்தோம்? என்ன குற்றங்களுக்காக சிறை தண்டனை அனுபவிக்கிறோம்? என்பது கூட தெரியாமல் செய்யாத குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவிக்கும் - அனுபவித்த பலரில் மதானியும் ஒருவர்.

அரசு, நீதி, காவல் ஆகிய துறைகளின் பொடு போக்குத் தனத்தால் ஒருவரை குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்ய ஒன்பது ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

மதானிக்கு, வாழ்க்கையில் இழந்த அந்த ஒன்பது ஆண்டுகள் போனது போனதுதானே!

ஒரு நிரபராதியை ஒன்பது ஆண்டுகள் சிறையிலடைத்துப் பராமறிக்க தேவையான செலவுகள், வழக்குகள் நடந்ததற்கான செலவுகள் மககளின் வரிப்பணத்திலிருந்து எடுத்து வீண் விரயமாக்கப்பட்டிருக்கிறது.

சோம்பேறிகள்!

தென்கொரியர்களை மீட்க அமெரிக்காவிடம் வலியுறுத்தல்

தென்கொரியர்களை மீட்க அமெரிக்காவிடம் வலியுறுத்தல்

காஸ்னி : ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தென்கொரியர்களை மீட்க உதவுமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தென்கொரியாவை சேர்ந்த 23 பேர் கொண்ட உதவிக்குழு, ஆப்கனுக்கு சென்றிருந்தது. இவர்களில் 16 பேர் பெண்கள். இவர்கள் கடந்த மாதம் 19ம் தேதி காந்தகாரில் இருந்து காபூலுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்த போது, தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். அதற்கு முதல்நாள் ஜெர்மனி இன்ஜினியர் ஒருவரையும் பிணைக்கைதியாக தலிபான் பயங்கரவாதிகள் பிடித்து வைத்திருந்தனர்.

இவர்களை விடுவிக்க வேண்டுமானால், சிறையில் உள்ள தலிபான் பயங்கரவாதிகள் எட்டு பேரை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர். இதற்கு முன் இது போன்று தலிபான் பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டு இருந்தாலும், இம்முறை அவர்களை விடுவிப்பது இல்லை என்று ஆப்கன் அரசு உறுதியாக உள்ளது.

தலிபான் பயங்கரவாதிகளில் விடுவிக்க கோருவோரில் பெரும்பாலானோர் அமெரிக்காவின் முகாம் அமைக்கப்பட்டுள்ளள பக்ரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலிபான் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து கெடு விதித்து வருகின்றனர். முதல் இரண்டு கெடுக்கள் முடிந்த போது, தென்கொரியர்கள் இருவர் கொல்லப்பட்டனர். அடுத்து, இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் நாட்டு மக்களை மீட்க உதவ வேண்டும் என்று அமெரிக்காவை வலியுறுத்தி உள்ளது தென்கொரியா.

நன்றிங்க

தாலிபான் இயக்கம் பொது மக்களை பிடித்து வைத்துக்கொண்டு,அரசுக்கு கோரிக்கை வைப்பதும், கோரிக்கையை அரசு செவி மடுக்கவில்லையென்றால் பிடித்து வந்த பொதுமக்களைக் கொல்லும் இந்த ஈனச்செயல் முஸ்லிம்கள் வெட்கமும், வேதனையும் படவேண்டிய விஷயம்.

அட சண்டாளர்களா!