Showing posts with label குழந்தைகள். Show all posts
Showing posts with label குழந்தைகள். Show all posts

Wednesday, November 21, 2007

ஏழைக் குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை.

ஏழைக் குழந்தைகளுக்கு அரசு உதவியுடன் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை!

புதன்கிழமை, நவம்பர் 21, 2007

சென்னை: வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்த இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அரசு நிதியுதவியுடன் தனியார் மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை செய்யும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.

இதன்படி இருதய அறுவை சிகிச்சையின் தன்மையைப் பொறுத்து ரூ. 10,000 முதல் ரூ. 70,000 வரை தமிழக அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டு தனியார் மருத்துவமனைகள் இந்த குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்.

இதற்கான ஒப்பந்தத்தில் 17 தனியார் மருத்துவமனைகள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்திட்டன.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

மக்களின் வாழ்க்கையில் தற்போதைய மாறிவரும் சூழ்நிலைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், நடைமுறை வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் மாறுதல்கள் போன்றவை காரணமாக இதய நோயினால் பாதிக்கப்படுவோர் குறிப்பாக, இளம் சிறார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதய நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காகக் குழந்தைகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது முதல்வர் கருணாநிதியின் கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் அரிய உயிர்களைக் காக்கும் பொருட்டுத் தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சைகள் செய்வதற்காக, ஆண்டு வருவாய் ரூ. 50,000க்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்கான புதிய திட்டத்தை முதல்வர் அறிவித்தார்.

அதன்படி இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ரூ. 10,000மும், சாதாரண திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ரூ. 30,000மும், கடினமான இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ரூ. 70,000மும் நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்திற்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தலைமை செயலகத்தில் இன்று கையொழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் தமிழக அரசு சார்பில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குனரும், 17 தனியார் மருத்துவமனைகளின் பிரதிநிதிகளும் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சைக்காகப் பதிவு செய்து கொண்டு காத்திருக்கும் 20 குழந்தைகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள 10 தனியார் மருத்துவமனைகளுக்குத் தமிழக அரசின் சார்பில் அனுமதிகளை வழங்கி இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்திட தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள 17 தனியார் மருத்துவமனைகள் விவரம் வருமாறு:

1. ராமச்சந்திரா மருத்துவமனை, போரூர்

2. அப்பல்லோ மருத்துவமனை, சென்னை

3. பிராண்ட்டியர் லைப் லைன் மருத்துவமனை, சென்னை

4. ஆர்.வே ஹெல்த்கேர் லிமிடெட், சென்னை

5. மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், சென்னை

6. கே.ஜெ.மருத்துவமனை, சென்னை

7. சூரியா மருத்துவமனை, சென்னை

8. மியாட் மருத்துவமனை, மனப்பாக்கம், சென்னை

9. லைப்-லைன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சென்னை

10. செட்டிநாடு மருத்துவமனை, கேளம்பாக்கம், காஞ்சீபுரம்

11. வடமலையான் மருத்துவமனை, மதுரை

12. அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மதுரை

13. மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை

14. பி.எஸ்.ஜி. மருத்துவமனை, கோவை

15. ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை, கோவை

16. கே.ஜி. மருத்துவமனை, கோவை

17. ஜி. குப்புசாமிநாயுடு நினைவு மருத்துவமனை, கோவை.

நன்றிங்க

ஏழைக் குழந்தைகளை காக்கும் அரசின் இவ்வுதவிகள் முறையாக முழுதுமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு போய் சேர வேண்டும் என வாழ்த்துவோம்.

Wednesday, September 05, 2007

வெளிநாடுகளுக்கு விற்கப்பட்ட குழந்தைகள்!

வெளிநாடுகளுக்கு விற்கப்பட்ட குழந்தைகள்:
சிபிஐ விசாரணைக்கு உத்தரவு


புதன்கிழமை, செப்டம்பர் 5, 2007

சென்னை:

ஆதரவற்றோர் இல்லங்களிலிருந்து கடத்தப்பட்டு வெளிநாடுளுக்கு 22 குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை செங்குன்றத்தை சேர்ந்த சாலியா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், சென்னையில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தி வந்த ஆதரவற்றோர் இல்லத்தில் எனது குழந்தையை சேர்த்திருந்தேன். பின்னர் நான் எனது குழந்தையை பார்க்க சென்றபோது அங்கிருந்த எனது குழந்தை உட்பட 3 குழந்தைகளை தனியார் நிறுவனம் ஒன்று கடத்தி சென்றது தெரிய வந்தது.

போலியான சான்றிதழ் தயாரித்து 3 குழந்தைளையும் அந்த நிறுவனம் வெளிநாட்டினருக்கு விற்று விட்டது. கடத்திச் சென்ற தனியார் நிறுவனத்திடம் குழந்தையை தத்து கொடுத்தது போல போலியான ஆவணம் தயாரித்து, பின்பு அந்த போலி ஆவணத்தை மத்திய அரசிடம் காட்டி தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள்.

பின்னர் தொண்டு நிறுவனம், அந்த 3 குழந்தைகளையும் வெளிநாட்டினருக்கு தத்து கொடுப்பது போல ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்துள்ளனர்.

இவ்வாறு கடத்தி செல்லப்பட்ட 3 குழந்தைகளையும் மீட்டு, இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடவேண்டும் என்று சாலியா தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் வக்கீல் இளங்கோ ஆஜராகி வாதாடினார்.

அப்போது அவர் கூறுகையில், 3 குழந்தைகள் மட்டும் கடத்தப்படவில்லை. தமிழகம் முழுவதும் இதுவரை 22 குழந்தைகள் கடத்தப்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. கடத்தப்பட்ட அனைத்து குழந்தைகளும் வெளிநாட்டில் விற்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு மட்டும் இதில் நடவடிக்கை எடுக்க இயலாது. மத்திய அரசு மற்றும் சிபிஐ ஒன்று சேர்ந்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வில்சன் வாதிடுகையில், சிபிஐ விசாரணை நடத்த அரசு தயாராக உள்ளது. தென் மண்டல சிபிஐ இணை இயக்குனர் அசோக்குமார் தலைமையில் விசாரணை நடத்தலாம். நீதிமன்றம் உத்தரவிட்டால் அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம் என்றார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், குழந்தைகள் கடத்தல் தொடர்பாக சிபிஐ, தனி அதிகாரியை நியமித்து விசாரிக்க வேண்டும். மூன்று மாதங்களில் ஆரம்பகட்ட அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

நன்றிங்க

தான் வசதியாக வாழ்வதற்கு அடுத்தவர் பிள்ளைகளை விலைபேசி விற்கும் அயோக்கியர்கள் தன் தாய், பிள்ளைகளையும் விற்றுத் தின்ன தயங்கிடமாட்டார்கள்!