பெண்ணின் சம்மதத்தோடு செக்ஸ் உறவு
வைப்பது கற்பழிப்பு ஆகாது: சுப்ரீம் கோர்ட்
ஆகஸ்ட் 30, 2007
டெல்லி: திருமணம் செய்து கொள்வதாக கூறிய பின்னர் அந்தப் பெண்ணின் சம்மதத்தோடு உடலுறவு வைத்துக் கொண்டு பின்னர் அந்தப் பெண்ணை ஏமாற்றுவோர் மீது கற்பழிப்பு வழக்கு தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீப்குமார். இவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி, அவருடன் நெருங்கிப் பழகி செக்ஸ் உறவும் வைத்துக் கொண்டு விட்டு பின்னர் கம்பி நீட்டி விட்டார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் பிரதீப் மீது கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம், கற்பழிப்பு மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் பிரதீப்குமார் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து பிரதீப் சார்பில் பீகார் மாநில உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இங்கும் அவரது தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகினார் பிரதீப்.
பிரதீப்குமார் தாக்கல் செய்த மனுவில், முழு சம்மதத்துடன் தான் அந்த பெண் என்னோடு செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார். இதில் நம்பிக்கை மோசடிக்கோ அல்லது கற்பழிப்புக்கோ இடமில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கே.ஜெயின், அரிஜித் பசாயத் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பில்,
ஒரு பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஒரு ஆண் உறுதி அளித்து அந்த பெண்ணின் முழு சம்மதத்துடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட பின்பு, அவர் திருமணம் செய்து கொள்ளாமல் கொடுத்த வாக்குறுதியை மீறினாலும் அவர் மீது கற்பழிப்பு குற்றம் சுமத்த முடியாது.
அதே நேரத்தில் பலவந்தப்படுத்தியோ அல்லது பயமுறுத்தியோ அந்த பெண்ணின் சம்மதத்தை பெற்றிருந்தால் அதை கற்பழிப்பாக கருத முடியும்.
மேஜர் ஆன பெண் ஒருவர், திருமண வாக்குறுதியை நம்பி, கர்ப்பமாகும்வரை செக்ஸ் உறவுக்கு சம்மதம் கொடுத்திருந்தால் அதை அஜாக்கிரதையாக கருத வேண்டுமே தவிர, அந்த பெண் உண்மையை தவறாக புரிந்து கொண்டதாக கருத முடியாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
பிரதீப்குமார் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நன்றிங்க
முதலில், நீதிமன்றங்களின் இந்த இரட்டை தீர்ப்பு ஒழிய வேண்டும்!