சென்னை : பள்ளி, கல்லூரியை "கட்' அடித்து விட்டு மெரீனாவில் கும்மாளமிட்ட 80க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகளை போலீசார் சுற்றி வளைத்தனர்.
கொளுத்தும் வெயிலாக இருந்தாலும், கொட்டும் மழையாக இருந்தாலும் சென்னை மெரீனா கடற்கரையில் காதலர்களின் வரவுக்கு பஞ்சமிருக்காது. மனம் விட்டு பேச வரும் உண்மையான காதலர்களும் உண்டு. கால நேரம் பார்க்காமல் கட்டியணைத்துக் கொண்டு காமக் களியாட்டங்களில் ஈடுபடும் "கள்ள' காதலர்களைத் தான் கடற்கரையில் அதிகமாக பார்க்க முடியும். அவர்களை போலீசார் பிடித்து கடுமையாக எச்சரித்து அனுப்புவர்.
* கடந்த வாரம் சுனாமி பீதி ஏற்பட்டதற்கு, மறுநாள் காலையில் மெரீனாவில் அதிகமாக மக்களை பார்க்க முடியவில்லை. ஆனால், காதலர்கள் மட்டும் தொடர்ந்து வந்த வண்ணமிருந்தனர். கடற்கரை மணலில் அமர்ந்து கட்டியணைத்துக் கொண்டும், கடல் நீரில் விளையாடியும் இருந்ததைக் கண்டு பொதுமக்கள் எரிச்சலாக பார்த்தனர். "சுனாமி பயம் போயே போச்சு; காதலர்கள் இச்சோ இச்' என்ற பெயரில் தினமலர் இதழில் செய்தி வெளியிடப்பட்டது.
* இதையடுத்து, கடற்கரையில் காமக் களியாட்டங்கள் நடத்துபவர்களை விரட்டியடிக்கும்படி மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் மவுரியா உத்தரவிட்டிருந்தார். மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் சாந்தி, ராயப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையில் நேற்று பெண் போலீசார் மெரீனாவில் கண்காணித்தனர். மப்டியிலும் பெண் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். கடற்கரையில் நேற்று 80க்கும் மேற்பட்ட காதலர்களைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். பல இளம்பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர். தங்கள் வீட்டாருக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்று கெஞ்சினர். பலரும் பள்ளி மற்றும் கல்லுõரிக்கு "கட்' அடித்து விட்டு கடற்கரைக்கு வந்திருந்தனர்.
* இன்ஸ்பெக்டர் சாந்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, 17 வயது கூட நிரம்பாத, பள்ளி சீருடை அணிந்திருந்த மாணவன், 15 வயது கூட நிரம்பாத சிறுமியுடன் கடற்கரைக்கு வந்தான். அவனைப் பிடித்து விசாரித்ததில், சாப்பிட வந்ததாக தெரிவித்தான்.
* போலீசார் வீட்டு முகவரியைக் கேட்க, அவன் அழ ஆரம்பித்தான். "மேடம், ப்ளீஸ் எங்கள் வீட்டிற்கு தெரியப்படுத்தாதீர்கள்' என்று கெஞ்சினான். திடீரென போலீசாரின் காலில் விழ முயற்சித்தான். அவனைத் தடுத்த போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.
* ஒரே மாதிரியாக "ரோஸ்' கலர் உடையணிந்த இருவர், மடி மீது தலை வைத்திருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். சென்னையில் உள்ள பிரபல கல்லுõரியின் பெயரைச் சொன்ன மாணவி, உடன் வந்த இளைஞர் குறித்து பெயர் தவிர வேறொன்றும் தெரியாது என்று கூற போலீசார் அதிர்ந்தனர். வீட்டிற்கு காஸ் சிலிண்டர் கொடுக்க வந்தவர் என்றும் அதனால் பழக்கம் ஏற்பட்டது என்றும் வீட்டிற்கு தெரியாது என்றும் கூறி அழுதார். அவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
* கடற்கரைக்கு வந்த கணவன்மனைவி: போலீசாரிடம் சிக்கிய ஜோடிகளில் ஒன்று ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருமணமான ஜோடி. அவர்களை போலீசார் விசாரிக்கையில், "ஐந்து மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் ஆனது. இரு வீட்டாருக்கும் சண்டை ஏற்பட்டதால் எங்களைப் பிரித்து வைத்து விட்டனர். நாங்கள் யாருக்கும் தெரியாமல் கடற்கரையில் சந்தித்துக் கொண்டோம்' என்றனர். இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி அவர்களிடம், "உங்கள் பெற்றோரை அழைத்துக் கொண்டு ராயப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வாருங்கள், பிரச்னைகளை பேசித் தீர்த்து வைக்கிறோம்,' என்று கூறி அனுப்பி வைத்தார்.
* ஒரு புறம் விரட்டியடிப்பு, மறுபுறம் கட்டியணைப்பு : காதல் ஜோடிகளைப் பிடித்து போலீசார் எச்சரித்தும் அறிவுரை கூறியும் அனுப்பி வைப்பது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க , உழைப்பாளர் சிலை பின்புறம் காதலர்கள் உட்கார்ந்து காதல் லீலைகளில் ஈடுபட்டனர். கடற்கரை பரப்பு முழுவதும் கண்காணிக்க போதுமான போலீசார் இல்லை என்கின்றனர் பெண் போலீசார். பரந்து விரிந்த மெரீனா கடற்கரையில் தினமும் காதலர்களை விரட்டும் பணியில் போலீசாரால் ஈடுபட முடியாது. எனவே காதலர்களை கண்காணிக்கவும், அவர்களுக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பவும் மாற்று ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.
நன்றிங்க, DINAMALAR 18/09/2007
பேசாமல், ''காதலர்கள் கண்காணிப்புத் துறை'' என்று ஒன்று தொடங்கலாமே!