Thursday, November 30, 2006

துரோகி எனும் சொல்.

முஸ்லிம்களில் சிலர் துரோகியென்ற சொல்லின் ஆழம் தெரியாமல் முஸ்லிம்களில் சிலரை 'இனத்துரோகிகள்' என்று குறிப்பிட்டுள்ளார்கள். இஸ்லாம் கண்டிக்கும் இந்த செயல் வெறுக்கதக்கது என்பதை இவர்கள் உணரவில்லை. அடுத்தவரை குறிவைத்து பேசப்படும் வார்த்தைகள் அந்தவார்த்தைக்கு அவர் தகுதியில்லாதவராயிருந்தால் குறிவைத்து பேசிய வார்த்தை மீண்டும் பேசியவரை நோக்கி திரும்பிவிடும் என்பதை இந்த இஸ்லாமியர்கள் அறிந்திருக்கிறார்களா?

அறிந்திருந்தால் இந்த அவதூறு சொல்லை சொல்லியிருக்கமாட்டார்கள். தனக்கு திட்டவட்டமான அறிவு இல்லாத ஒன்றை பற்றி எந்த முஸ்லிமும் பேசமாட்டான். அப்படி பேசியவன் வெறும் பெயர்தாங்கியாக இருப்பான். யார் நல்லறம் செய்கிறாரோ அது அவருக்குரியது. யார் தீமை செய்கிறாரோ அது அவருக்கே எதிரானது. 41:46 என்ற இறைவாக்கின்படி அடுத்தவருக்கு தீமை செய்பவர் தீமையை எண்ணுபவர் தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறார். தனக்கே தீமையை எண்ணுகிறார்.

அவதூறு பேச்சின் சுடு சொல் தாளாமல் கலங்கி நிற்பவர்களின் கலக்கத்துக்கும் மனஉளச்சலக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கும் புண்ணியவான்களே(!?) உங்கள் இறைவனிடம் இதற்கு என்ன சமாதானம் சொல்லப்போகிறீர்கள்? எவரும் செய்யாத ஒன்றை அவதூறாக சொல்லி அவரை நோவினைப்படுத்துபவர் வெளிப்படையான பாவத்தை சுமக்கிறார் 33:58 என்ற இறைவனின் எச்சரிக்கை உங்களுக்கு விளங்காமல் போய்விட்டதா?

யாரோ முகம் தெரியாதவர் கூறிய செய்தியை சிந்திக்காமல் தீர்க்க ஆராயமல் அதை அப்படியே மறு செய்தியாக அதனினும் (இனத்துரோகிகள் என) கடுஞ்சொல்லாக வார்த்து விட்டீர்களே இதை செவியேற்றபோது இது பற்றி பேச நமக்கு தகுதியில்லை என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா 24:16

சொல்வதற்கு நிறைய இருப்பினும் சிந்திப்பவர்களுக்கு இது போதும். அவதுறு சுமத்தியவர்களே அவதூறுக்கு பரிகாரமாக என்ன செய்யப்போகிறீர்கள்? கேட்டு விடைபெறுகிறேன்.

இப்படிக்கு
முஸ்லிம்களில் ஒருவன்.

Saturday, February 25, 2006

அவலம்.

சுய மரியாதை முன்னேற்றத்தில் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு மனித பண்பாடுகள் உயர்ந்திருக்கிறது. அதனால் என்ன? சமூகத்தில் பழைய பண்பாட்டு மரபு - கலாச்சாரத்தை!? கட்டிக் காப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள் எனும்போது பெருமையாக!? இருக்கிறது. 20ம் நூற்றாண்டில் - 1996ல் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட சமூக அவலம் செய்தியாக கீழே. அவலம் நிறைவேற தீர்ப்பு வழங்கிய புண்ணியவான்களில் பள்ளி ஆசிரியரும் ஒருவர், அடடா... வாழ்க (கட்டாய) காலில் விழ வைக்கும் கலாச்சாரம்.

செய்தி

விஜயகுமாரி(32) என்ற நர்ஸ் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி ஆரம்ப சுகாதர நிலையத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கும் தீரன் சின்னமலைப் போக்குவரத்துப் பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றிய திருமலைச்சாமி என்பவருக்கும் சென்ற ஆண்டில் திருமணம் நடந்தது.

விஜயகுமாரி கொண்டு வந்த வரதட்சணையில் திருமலைச்சாமி திருப்தி அடையவில்லை. ''இன்னும் 25 ஆயிரம் ரூபாய் கொண்டு வா'' என்று கொடுமைப்படுத்தினார். அந்த அளவு பணம் கொண்டு வர இயலாததால், அந்தப் பெண்ணை எரித்து விடவும் முயற்சி செய்தனர். 16.01.96ல் இந்த சம்பவம் நடந்தது. அதிலிருந்து தப்பி தனது பிறந்த வீடு சென்று வாழ்ந்து வந்தார் விஜயகுமாரி.

இதைத் தொடர்ந்து உச்சக்கட்டக் கொடுமை அரங்கேறியது.

அந்தக் கணவன் சார்பாக பச்சப் பெருமாள் கிராமத்தில் பஞ்சாயத்து கூடியது. அங்கு அப்பாவிப் பெண் விஜயகுமாரி வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டாள்.

விஜயகுமாரிதான் குற்றவாளி என்று ஒரு சார்பாக பஞ்சாயத்து முடிவு செய்து ''கணவனுடன் நீ சேர்ந்து வாழ வேண்டும், இல்லையென்றால் நீ ரூபாய் 45ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும்'' என்று 'தீர்ப்பு' கூறப்பட்டது. ''என்னால் அவருடன் சேர்ந்து வாழ முடியாது. அபராதப் பணம் கட்டுவதற்கும் எனக்கு வசதியில்லை'' என்று கூறி அழுதிருக்கிறார் அந்தப்பெண்.

''நீ அபராதம் கட்ட வேண்டும், இல்லையென்றால் ஒவ்வொருவர் காலிலும் விழுந்து வணங்க வேண்டும். நீ ஒவ்வொரு முறை விழும் போதும் அபராதத்தில் ரூபாய் 5 குறைப்போம்'' என்று இரக்கமில்லாமல் கூறினார்கள் பஞ்சாயத்து 'நீதிபதிகள்'

அந்தப் பெண் தொடர்ந்து 4 மணி நேரம் காலில் விழுந்து எழுந்தார். அப்படியும் 4800 தடவை காலில் விழுந்து 24 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையைத்தான் அவரால் கழிக்க முடிந்தது. ரூபாய் 21ஆயிரம் பாக்கி இருந்ததாம். அந்தத் தொகையைக் கட்டாயப்படுத்திப் பிடுங்கிக் னொண்டார்களாம்!

போலீசுக்குப் போனால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதால் பிப்ரவரியில் நடந்த இந்த சம்பவத்தைப் பற்றி விஜயகுமாரி போலீசிலும் புகார் செய்யவில்லை. அதையும் மீறி உப்பிலியாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தாராம். அவர்கள் வழக்குப் பதிவு செய்யாமல், பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி பஞ்சாயத்தாரிடம் கூறியிருக்கிறார்கள். அவர்கள் அப்படிச் செய்யாமல் நாட்களைக் கடத்திக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

இனி பொறுக்க முடியாது என்ற நிலையில் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் அனார்கலி பேகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். விஜயகுமாரியின் கணவன், நாத்தனார்கள், பஞ்சாயத்து தலைவர்களில் ஒருவரான பள்ளி ஆசிரியர் ரங்கராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் 8 பேர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Monday, February 20, 2006

கார்ட்டூன் விவகாரம்.

முகம்மது நபிகள் கார்ட்டூன் விவகாரம்: மன்னிப்பு கோரியது டென்மார்க் நாளிதழ்


துபை, பிப். 20: முகம்மது நபிகளின் கார்ட்டூனை வெளியிட்டதற்காக டென்மார்க்கைச் சேர்ந்த பத்திரிகையான 'ஜைலாண்ட்ஸ் - போஸ்டன்' ஞாயிற்றுக்கிழமை மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக, கொட்டை எழுத்துகளில் ஒருபக்க அளவில் மன்னிப்பு கோரும் விளம்பரத்தை அரபு நாடுகளில் வெளியாகும், 'அஷர்க் அல்-அவாசத்' என்னும் நாளிதழில் டென்மார்க் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

"அந்தப் படங்கள், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மனத்தைப் புண்படுத்திவிட்டது. நடந்துவிட்ட சம்பவங்களுக்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவ்வாறு நடக்க வேண்டும் என்பது எங்களது எண்ணமில்லை்"

"எந்த மதத்தையும் அவமானப்படுத்த வேண்டும் என்பதோ, அவமதிக்க வேண்டும் என்பதோ எங்களது நோக்கமல்ல. நாங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டோம். அதற்காக மன்னிப்பு கோருகிறோம். யாரையும் குறிவைத்து அந்தப் படங்களை வெளியிடவில்லை என்பதை வலியுறுத்தித் தெரிவித்துக்கொள்கிறோம். கருத்து வேறுபாட்டை அகற்றுவதற்கு இது உதவும் என நம்புகிறோம்; கடவுள் ஆசீர்வதிக்கட்டும்'' என்று அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் இறுதியில், ஜைலாண்ட்ஸ் - போஸ்டன் நாளிதழின் தலைமை ஆசிரியர் கார்ஸ்ட்டன் ஜஸ்ட் கையொப்பம் இட்டுள்ளார்.

ஜைலாண்ட்ஸ்-போஸ்டன்' இதழின் இணையப் பக்கத்திலும் அதே மன்னிப்புக் கடிதம் அரபி மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில் அந்த கார்ட்டூன்கள் முதன்முதலாக டென்மார்க் நாட்டு நாளிதழான 'ஜைலாண்ட்ஸ்-போஸ்டனி'ல் பிரசுரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியாகும் பல்வேறு இதழ்களும் அதை மறுபிரசுரம் செய்தன. அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அதற்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கினர். லிபியா, நைஜீரியா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் நடந்த போராட்டங்களில் இதுவரை 32 பேர் பலியாகி உள்ளனர். இந் நிலையில், அந்த கார்ட்டூன்களை வெளியிட்டதற்காக மன்னிப்பு கோரியுள்ளது, டென்மார்க் நாளிதழ்.

செய்தி - தினமணி